யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்று பிரித்தானியாவின் நியூஹாம் மாநகர உதவி மேயர் போல் சத்தியநேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு சென்றுள்ள இவர் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள்ளார். இவருக்கு யாழ்.மாநகரசபை 09.09.10 மகத்தான வரவேற்பு வழங்கி விழா எடுத்தது. யாழ்.மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார்.
இவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சீனப் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்றும் சிங்களப் பெண்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்றும் தமிழ்ப் பெண்களை இராணுவம் கற்பழிக்கின்றது என்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ”
யாழில் நவமங்கை இல்லத்தின் திறப்பு விழா நிகழ்விலும் கலந்துகொண்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் தான் கற்ற பள்ளியான சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் சிலரையும் தனது பயணத்தின் போது சந்தித்துள்ளார்.