2010

2010

” யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே” யாழில் நியூஹாம் உதவி மேயர் போல் சத்தியநேசன்

Paul_Sathyanesan_Cllrயாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்று பிரித்தானியாவின் நியூஹாம் மாநகர உதவி மேயர் போல் சத்தியநேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு சென்றுள்ள இவர் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள்ளார். இவருக்கு யாழ்.மாநகரசபை 09.09.10 மகத்தான வரவேற்பு வழங்கி விழா எடுத்தது. யாழ்.மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சீனப் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்றும் சிங்களப் பெண்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்றும் தமிழ்ப் பெண்களை இராணுவம் கற்பழிக்கின்றது என்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ”

யாழில் நவமங்கை இல்லத்தின் திறப்பு விழா நிகழ்விலும் கலந்துகொண்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் தான் கற்ற பள்ளியான சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் சிலரையும் தனது பயணத்தின் போது சந்தித்துள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய வேலைத் திட்டம் – அமைச்சரவை உபகுழு அமைக்க அங்கீகாரம்

mahinda-samarasinghe.jpgமனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவுமென தேசிய வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பாக வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கையில்,

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து 2006ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். இதற்கேற்ப 2008ம் ஆண்டில் இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக நாம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறினோம். அதன்படி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வகையில் அரசாங்க நிறுவனங்கள், அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பொதுநல முக்கியஸ்தர்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் திரட்டி, மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச அமைப்புக்களின் தகவல்களையும் கவனத்தில் கொண்டு தான் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கான முதலாவது வரைவொன்றை நாம் ஏற்கனவே தயாரித்துள்ளோம்.

நான் மனித உரிமைகள் அமைச்சராக இருக்கும் போது இவ் வரைவு தயாரிக்கப்பட்டது. இதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் ஜனாதிபதி வழங்கினார். இந்த வரைவு சட்டமா அதிபரின் பரிசீலனைக்கும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவை அடிப்படையாக வைத்து இறுதி வரைவைத் தயாரிப்பதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது என்றார்.

நல்லிணக்க ஆணைக்குழு; முல்லை, கிளிநொச்சியில் அமர்வுகள்; யாழ், மட்டக்களப்பிலும் நடத்த ஏற்பாடு

நல்லிணக்க ஆணைக்குழுவானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதன் பொது அமர்வுகளை நடத்தவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை அமர்வுகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்திலும் அமர்வுகளை நடத்த நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் நேரடி விஜயங்களை மேற்கொண்டு பொது அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் காட்டும் ஆர்வத்தைக் கருத்திற்கொண்டு ஆணைக் குழுவானது தொடர்ந்தும் பொதுமக்களிடம் இருந்து மேலும் சமர்ப்பணங்களை வரவேற்கின்றது.

எவரேனும் நபரொருவர் ஆணைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பணங்களைச் செய்ய விரும்பினால் அதனை கொழும்பு 7, ஹோர்ட்டன் பிளேஸ், இல. 24, லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கலாம்.

புனித நோன்பு பெருநாள் இன்று

friday-of-ramadan-2010.jpgஹிஜ்ரி 1431 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இன்று (10) வெள்ளிக்கிழமை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஆகியன இணைந்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

மூதூர், கிண்ணியா, சிலாவத்துறை, புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் தலைப்பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைவர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

0010.jpgபுனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகராவின் ஆலோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 1000 கைதிகள் தங்கக் கூடிய வசதி கொண்ட புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறையில்…

athaulla.jpgஉள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பழைய முறை உட்படுத்தப்பட்ட கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் இயற்றுவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி மூன்றில் ஒரு வீதம் விருப்பு வாக்கு அடிப்படையிலும் மூன்றில் இரண்டு பழைய முறைப்படியும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

கொம்யூனிஸ்ட் கார்திகேயன் நினைவுகள்

Karthikeyan_Communistஇலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களது மறைவின் 33வது வருட நினைவுகூரல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனில் நீண்டகாலமாக வாழ்ந்து தற்போது யாழ் சென்று பணிபுரிகின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் மூன்று சமூகங்களில் இருந்தும் பேச்சாளர்கள் கொம்யுனிஸ்ற் கார்த்திகேயனின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வை கொம்யுனிஸ்ற் கார்த்திகேயன் அறக்கட்டளை நிதியம்,  இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், யாழ் ஆய்வறிவாளர் அணியம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

காலம்:
19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணி.

இடம்:
யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடம்,
(யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்)
கே.கே.எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.

தலைமை:
திரு ரெங்கன் தேவராஜன், வழக்கறிஞர்.

பேச்சாளர்கள்:
திரு எஸ்.ஜி.புஞ்சிகேவா, வழக்கறிஞர்.
திரு எம்.ஜி.பசீர், ஜே.பி, யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர்.
கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர்.
திரு வீ.சின்னத்தம்பி, இளைப்பாறிய ஆசிரியர்.

ஏற்பாட்டாளர்கள்:
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியம்
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
யாழ் ஆய்வறிவாளர் அணியம்,
த.பெ.இலக்கம் 165,
யாழ்ப்பாணம்

தகவல்: ஆர் குகதாசன்

18வது திருத்தம்

logo.jpg* எந்த ஒரு நபரும் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பதை நீக்குதல்

* ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு வரும் வகையில் வழி செய்தல்

* அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக “பாராளுமன்ற சபை” ஒன்றை உருவாக்குதலும் அதன் செயற்பாடுகளை இலகுவாக்குவதும்

* அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரங்கள் செயற்பாடுகள், பொறுப்புக்கள் மீளமைக்கப்பட்டு அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படும்.

* பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸார் ‘அரச சேவைகள்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.

* தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் மீளமைக்கப்படும்.

6 உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

unp_logo.jpgஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதவிர அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உபேக்சா சுவர்ணமாலி, நிமல் விஜேசிங்க, லக்ஷ்மன் செனவிரட்ன,  அப்துல் காதர், மனுஷ நாணயக்கார ஏர்ல் குணசேகர ஆகிய அறுவரையுமே இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

மக்கள் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணிலுக்கு கிடையாது – லக்ஷ்மன் செனவிரட்ன

laxman0000.jpgமக்களின் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் அவ்வாறென்றால் தாம் நேரடியாக ஆதரவளிப்பதில் என்ன தவறிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

18 ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட லக்ஷ்மன் செனவிரட்ன, ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அழிவைத் தேடிக்கொண்டது என்றார். 18 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐ. தே. க. வெளிநடப்புச் செய்துள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் நேற்று சபையில் அமர்ந்திருந்தனர்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய செனவிரட்ன எம்.பி., மக்களின் நலனைச் சிந்தித்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் உருப்படாது. அதிபர் இல்லாத பாடசாலை, தலைவர் இல்லாத கட்சி எதுவும் சரிவரப் போவதில்லை. தலைவர்கள் அதிகம் இருந்தாலும் சிக்கல்தான் ஏற்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனை இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர். ஜனாதிபதியுடன் அவர் எதனைப் பேசி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை. விவாதத்திலிருந்து விலகியது எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறைமுகமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார். அதனால் நாம் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தால், அவரும் இந்தத் திருத்தத்தை நிச்சயம் மேற்கொண்டிருப்பார். அவரது தனிப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி அழிந்துவிட்டது. இந்தத் திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.  போர் நிறுத்த உடன்படிக்கையை ரகசியமாக செய்த எமக்கு இன்று அவ்வாறு கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க வெல்லமுடியும். இதனை எல்லாம் அவருக்குச் சொல்லிப் புரியப் போவதில்லை’ என்றார்.