2010

2010

வெலிக்கடைச் சிறையிலுள்ள புலிகளால் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் கரு ஜயசூரிய

Karu_Jeyasuriyaசிறைச் சாலையில் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ள நிலையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்க புலிகளால் அச்சறுத்தல் உள்ளதெனவும், அவ்வாறு எதுவும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தவைருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை நேற்று திஙகள் கிழமை கரு ஜயசூரிய சென்று பார்வையிட்டார் அதன் பிறககு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சரத்பொன்சேகாவின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாத த்தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரத்பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே சரத்பொன்சேகா இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோதச் செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

தேசம்நெற் இணையத்தில் தடங்கல்

இன்று காலை முதல் தேசம்நெற் இணையத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். இணையத்தில் செய்திகளைப் பதிவிடும் போது தவறான இணைப்புக் காரணமாக இணையம் முற்றாகச் செயலிழந்து போனதால் இத்தடங்கல் ஏற்பட்டது.

இதனை சிலரின் நாசகார வேலையா எனக் கேட்டும் சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவ்வாறு எதுவும் அல்ல. இது முற்றிலும் தொழில்நுட்பத்தவறால் ஏற்பட்ட தடங்கலே. அதனை உடனடியாகச் சரிசெய்கின்ற தொழில்நுட்ப அறிவின்மையால் சீர் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

உடனடியாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தொடர்பு கொண்ட தேசம்நெற் வாசகர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எமது நன்றிகள்.

தேசம்நெற்.

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

Thinamurasu_01Oct10யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 06ல்  நடைபெறுகிறது. நான்கு அமர்வுகளில் நடைபெறும் இந்த விழாவின் மூலம் 1075 பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ் பேசும் சமூகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

இன்று தமிழ் மக்கள் வாழ்வுக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சுய அடையாளங்களுக்காகவும் உரிமைக்காகவும் வாழ் நிலத்திற்காகவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எங்களிடம் இருக்கும் கருவியாகவும் கருத்தாகவும் இறுதிச் சொத்தாகவும் கல்விதான் இருக்கிறது. இந்தப் பட்டத்தினைப் பெற்றுச் செல்லும் நாம் நமது சமூகத்திற்காய் உழைக்க வேண்டிய பெருங்கடமையில் இருக்கிறோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் மூலம் மூவாயிரம் பேர் பட்டம் பெற்றிருந்தார்கள். உலகத்தில் வெறு எங்கேனும் அப்படி ஒரு பட்டமளிப்பு விழா இடம்பெற்றிருக்காது என்றே நினைக்கிறேன். 2005ஆம் ஆண்டின் பிறகு ஏற்பட்ட யுத்தம் காரணமாக வருடா வருடம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நான்கு வருடங்களாக நடைபெறாமலிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குரிய மாணவர்களும் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 அமர்வுகளில் 3328 பேர் பட்டங்களைப் பெற்றார்கள்.

இந்தப் பல்கலைக்கழகம் யுத்தத்தின் விளைவுகளுக்கு அதிகம் முகம் கொடுத்து வந்திருக்கிறது. தமிழ் தேசிய இனத்தின் மீதான ஓடுக்கு முறைக்கு எதிரான ஆழமான கருத்தியலை தெளிவாக அறிவுரீதியாக உருவாக்கியதில் யாழ் பல்கலைக்கழக சூழல் பங்காற்றியிருக்கிறது. ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் விரிந்த உரையாடலை முன்னெடுத்த களமாக இந்த வளாகம் இருந்திருக்கிறது. இன்று பட்டம் பெறும் நிலையில் இந்த மாணவர்கள் கடந்த காலத்தை எப்படி கடந்து வந்தார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றைப் பொறுத்த வரையில் 2006 ன் பின்னர் ஒரு இடர்மிக்க காலத்தை கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பொழுது யுத்தம் எமது இனத்தை வதைத்துக் கொண்டிருந்த பொழுது அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் எதையும் செய்ய முடியாத கையறு நிலைச் சூழலுக்குள் பல்கலைக்கழக சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

தினமும் நிமிடத்திற்கு நிமிடம் மரணத் தொகை பற்றிய செய்திகளுக்குள் தங்கள் உறவுகளை நினைத்து இந்த வளாகத்திலும் விடுதியிலும் மாணவர்கள் துடித்தபடி இருந்திருக்கிறார்கள். கடுமையான உயிர் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்குள்ளும் அப்பொழுது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தன் பணியை செய்து கொண்டிருந்தது. விரிவுரைகள் புறக்கணிப்பட்டும் தமிழ் மக்களின் நிலமை எடுத்துச் சொல்லப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான கொடும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி சமாதான வழிகளுக்கு சென்று வன்னி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சமூகத்தால் தொடர்ந்தும் குரல் கொடுக்கப்பட்ட பொழுதும் யுத்தம் நீடிக்கப்பட்டு மக்கள் அழிவு நீடிக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலைகளால் கல்வி கற்கும் மாணவர்களது நிலைமை பாதிப்பிற்கு உள்ளான பொழுது இந்த மாணவர்களை உளவியல் ரிதியாக அணுகி கல்வி கற்பித்து வந்த விரிவுரையாளர்களின் பணி முக்கியமானது. பல விரிவுரையாளர்கள் மாணவர்களது எதிர்காலத்திற்காய் அந்நாட்களில் அக்கறையுடன் கவனித்து செப்பனிட்டிருக்கிறார்கள். யுத்தக் கனவு கண்டு மாணவர்கள் துடிக்கும் விடுதிகளும் உறவுகளின் நினைவுகளால் பேசித் துடிக்கும் வளாகமும் அந்நாட்களில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட துயர்கொண்ட கதைகள் மிகத்துயரமானவை. எங்களைப் பற்றி நாங்களே பேசும் நிலை மறுக்கப்பட்டு அபாய வலை கொண்ட சூழலாக பல்கலைக்கழகம் காண்காணிக்கப்பட்டது.

Thinamurasu_01Oct10பெற்றோர்களது தொடர்பற்று துடித்த பல்கலைக்கழக மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை கவனித்து அவற்றை பூர்த்தி செய்வதில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் நிர்வாகமும் அன்று முழுமையாக இயங்க வேண்டியிருந்தது. பெற்றோர்களிடமிருந்து நிதி வந்தால்தான் படிக்கலாம் என்ற வன்னி மாணவர்களின் நிலை 2009 அக்டோபர் மாதத்திலேயே முற்றாக பாதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான முழு நேர உணவு, நிதி உதவிகளை பல்கலைக்கழகம் மேற்கொள்ளுவதற்கு பலரது பங்களிப்பு கிடைத்திருந்தது.

துயர்க்கால மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் முழு அக்கறை கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் பணி காலத்தால் மேன்மையானது. அகில இலங்கை இந்துமாமன்றம், போஸ்டோ, மனித உரிமைகள் இல்லம், கரிதாஸ் நிறுவனம் போன்றவை இந்தப் பணியில் பங்கெடுத்தன. சில புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடாக தமது உதவிகளை செய்து வந்தார்கள்.

பெற்றோர்கள். உறவுகளை இழந்து பல மாணவர்கள் துடித்தார்கள். யுத்தம் முடியும் தருணத்தில் நிறைய மாணவர்களின் பெற்றோர்கள், உறவுகள் கொல்லப்பட்டதாக அறிய நேர்ந்தது. சிலர் குடும்பத்துடன்கூட உறவுகளை இழந்தார்கள். இதே காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு விசாரணைகளும் தேடுதல்களும் நுழைவுகளும் நடந்தன. பல்கலைக்கழகத்தில் எல்லா வகையிலும் மேலும் மேலும் கல்விக்கு மாறான சூழலே நிர்ப்பந்திக்கப்பட்டது. கல்வியை தொடர முடியாத இடர்காலத்திலும் எப்படி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் மூலம் மாணவர்களது மனநிலைகளை பாதுகாக்க வேண்டியிருந்தது.

யுத்தம் பேரழிவுடன் முடிந்த பொழுது ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையம் எனப்படுகின்ற தடுப்பு முகாங்களில் இருந்தார்கள். முன்னாள் போராளிகளாகவும் தடுக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தின் அடுத்த பிரச்சினையாக அதுவே உருவெடுத்தது. நாளும் பொழுதுமாக தடுப்பு முகாங்களில் உள்ள மாணவர்களது கடிதங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து கொண்டிருந்தன. தங்களை மீட்க வேண்டும். தாங்கள் படிக்க வேண்டும். அவர்கள் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் காரணமாக சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக கல்வியை தொடராதவர்கள் கூட முகாங்களில் இருந்தார்கள்.

முகாமில் உள்ள மாணவர்கள் பல்வேறு கட்டங்களில் பலதரப்புக்களின் ஊடாக கோரியதற்கிணங்க கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டார்கள். முதலில் ஐம்பது மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய மாணவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடயத்திலும் துணைவேந்தரது அயராத முயற்சியும் உழைப்பும் இருந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அதற்காக சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அப்படி மீட்கப்பட்டு வந்த பல மாணவர்கள் நாளைய பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகிறார்கள். யுத்தத்தின் காயங்களும் அங்க இழப்புக்களுக்கும் உள்ளான மாணவர்கள் பலர் நாளை பட்டம் பெறுகிறார்கள். இதைப்போலவே முன்னாள் போராளி மாணவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடருகிறார்கள். அவர்களில் சிலரும் பட்டம் பெறுகிறார்கள்.

யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களும் இடர்களும் பல்கலைக்கழகத்தை இப்படியே கடுமையாக பாதித்தது. இன்று பட்டம் பெறுகிற மாணவர்கள் இத்தகைய நிலையிலேயே தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களது கல்வி, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான தேவைகள், உளவியல் ரீதியாக சூழலுக்கு ஏற்ப அணுகுவது என்பவற்றின் ஊடாக நமது சமூகத்திற்கு வலுவான சந்ததியை உருவாக்கும் முக்கியமான பணியாகவே இந்த பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

Sigaram_Mag_Launch_02Oct10கலை ரீதியாகவும் மனிதாபிமான ரீதியுயாவும் கடந்த காலத்தில் பணி செய்த சிலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப் பட்டங்களை பெறுகிறார்கள். சத்திரசிகிச்சை நிபுணராகவும் யாழ் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் முக்கியமானவரும் நெருக்கடி மிக்க காலத்தில் தாய்நிலத்தில் பணியாற்றியவருமான வைத்தியக்கலாநிதி கணேசரத்தினம், பாரம்பரிய கலைகளிற்கு மதிப்பளிக்கும் முகமாக நாதஸ்வர வித்துவான் பஞ்சாபிகேசன், திருமறைக் கலாமன்ற இயக்குனரும் நாடக்கலை என்ற பண்பாட்டு தொடர்பாலுக்கு பங்காற்றியவரும் கலைமுகம் இதழின் ஆசிரியருமான வணக்கத்திற்குரிய மரிய சேவியர் அடிகளாரும் பட்டம் பெறுகிறார்.

அத்துடன் விழிப்புலனற்ற பிள்ளைகளை கல்வி கற்பித்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வாழ்வில் ஒளியேற்றிய பணியை ஆற்றியவரும் ‘வாழ்வகம்’ என்ற விழிப்புலனற்ற பிள்ளைகளுக்கான இல்லத்தை உருவாக்கியவருமான அமரர் செல்வி சின்னத்தம்பி தேகாந்திர நிலையில் (அமரத்துவமடைந்த நிலையில்) பட்டமளித்து கௌரவிக்கப்படுகிறார். இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களும் முதன் முதலில் பட்டம் பெறுகிறார்கள்.

இன்று அவலம் மிகுந்து போயிருக்கிற எங்கள் சமூகத்திற்காய் பட்டம் பெறும் மாணவர்களாகிய நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பரந்த நிலமெங்குமிருந்து வந்த நாம் ஓவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சமூக அக்கறையுடன் வினைத்திறனாக செயற்பட வேண்டும்.

சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக வாழ வேண்டும். பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த காலத்தை கடந்து கல்வி கற்று பட்டம் பெறும் நாங்கள் சிதைந்து தவித்துக் கொண்டிருக்கிற நமது சமூகத்திற்காய் நமது தேசத்திற்காய் உழைக்க வேண்டிய இன்றைய காலத்தின் பொறுப்புடையவர்கள். இருண்டிருக்கிற நமது காலத்திற்கு ஒளி ஏற்றுவோம்.

பாலேந்திரன் பிரதீபன்.B.A (Hons) Tamil SPL
முன்னாள் செயலாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

கிளிநொச்சியில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து தற்போது பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடியதான தற்காலிக கூரைத்தகடுகளுடனான வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது கூரைக் தகரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனும் தெரிவித்துள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் தற்போது உதவிகளை வழங்கி வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உட்பட வன்னியில் மீள்டியமர்ந்துள்ள மக்களின் வீடுகள் பல முற்றாக அழிந்துள்ள நிலையிலும் சேதமுற்றுள்ள நிலையிலும் தற்பொது பெய்து வரும் கடும் மழையினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் நாம் கலந்து கொண்டிருப்போம்”: பா.அரியநேத்திரன்.

இன்று திங்கள்கிழமை நடைபெறும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு இக்கூட்டத்தில் தாங்கள் பங்கு பற்றியிருப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆராயும் இக்கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எம்மால் சுட்டிக்காட்டியிருக்க முடியும் என அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் வரை உயிரிழப்பு! வெள்ளப் பெருக்கினால் பலரைக் காணவில்லை!

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் ஐந்து பேர்வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதால் இவ்வுயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய இணைப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் தொடாச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவம் இதனால், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்சரிவினால் மலையகத்தில் பதுளைக்கும் அப்புத்தளைக்குமிடையிலான வீதி முடப்பட்டு போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மறுப்பு.

கடந்த யூன் மாதம் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டு அதன் மேயராக பதவி வகித்த முகமட் உவைஸ் இம்தியாஸை மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அங்கு வசித்து வரும் இம்தியாஸ் அங்கிருந்து வெளியேறுவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் ஜனாதிபதியிடம் தனது வீட்டுப்பிரச்சினை குறித்து கூறியிருப்பதாகவும், வீடமைப்பு அதிகாரசபை ஊடாக விரைவில் தனக்கு வீடொன்றைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாகவும், அது வரை மேயர் இல்லத்தில் இருக்குமாறு அவர் கூறியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவிக்கையில், இம்தியாஸ் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மூன்று மாதங்கள் கால அவகாசம் கோரியதாகவும் அது வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மேயர் இல்லத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், இதனால், மேயர் வாசஸ்தளத்திற்கு நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்துவதை கொழும்பு மாநகரசபை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவிற்காக நூறு பிக்குகளுடன் தானும் சிறைசெல்லத் தயார் என மாதுலுவாவே தேரர் தெரிவிப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்கோவிற்கு பதிலாக தாம் சிறையிலிருக்கத் தயார் என கோட்டை நாகவிகாரையின் விகாராபதி வண. மாதுலுவாவே தேரர் தெரிவித்துள்ளார்.

போன்சேகாவிற்குப் பதிலாக நூறு பிக்குகளுடன் தானும் சிறைச்சாலையில் இருப்பதற்குத் தயாரெனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் நன்றிகெட்ட விதமாக நடந்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு அதை ஒன்று படுத்திய பொன்சேகாவிற்காக தாம் எதனையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் மாதுலுவ தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Prof_Hooleகடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இருந்து இலங்கைத் தமிழ் மக்கள் சுமுகமான வாழ்நிலைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் கல்விச் சமூகத்தின் கல்விநிலையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சமூகத்தின் அதி உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக மோசமான சீரழிவை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது. தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் பல்கலைக்கழகத்தை இலங்கையின் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றக் கூடிய தகுதியும் ஆளுமையும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கூடிய சமூகப் பொறுப்பு இருப்பதால் அவரை நோக்கி இக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களும் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்மடலின் இறுதியில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பில் பெயர்களைப் பதிவு செய்து இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கவும். இம்முயற்சிக்கு உங்கள் நண்பர்கள் உறகளின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
._._._._._.

மதிப்பிற்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு,

பல்கலைக்கழகங்களே தெளிவான பார்வையையும் தலைமைத்துவத்தையும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் தலைமைத்துவம் இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை புதிய திசைவழி முன்னேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என நாங்கள் நினைக்கின்றோம். மேலும் தமிழ் கல்விச் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வழங்கவும் இது வாய்ப்பாகி உள்ளது.

இதன் கீழ் கையெழுத்திட்ட எங்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களினது நல்வாழ்விலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மிகுந்த அக்கறையுண்டு. பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தேர்வில் போட்டியிட உள்ளார். நீங்கள் அவரை அப்பதவிக்கு கொண்டுவருவதற்கு வேண்டியனவற்றை செய்ய வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வரவேண்டும் என்று கோருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இலங்கையில் கூடிய தேர்ச்சியுடைய கல்வியியலாளர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்பித்த அனுபவம் உடையவர். இவரினால் உபவேந்தர் பதவி மதிப்படையும்.

2. University Grand Commissionஇல் 15 பல்கலைக்கழகங்களை நிர்வகித்தமை அவருக்கு இந்த பல்கலைக்கழகங்கள் இயக்கப்படுகின்ற முறை அதனை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சட்டங்கள் என்பனவற்றில் மிகுந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதனால் இவரினால் உயர்ந்த அளவு தரத்தில் நிர்வாகத்தை திறம்படச் செயற்படுத்த முடியும்.

3. இவர் இலங்கையின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவராதலால், பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத்தர முடியும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தை அமைக்க உள்ள நிலையில் பொறியிலாளரான இவரின் தனிப்பட்ட தொடர்புகள் பொறியியல்துறையை அமைப்பதற்கு மிக அவசியமானது. மேலும் இவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபம்மா ராவோ உடன் பணியாற்றியவர் என்பதால் இந்தியவில் இருந்து நிதி உதவிகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அமெரிக்காவில் தனக்கு இருந்த பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் வந்ததன் மூலம் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் தனது பொறுப்புணர்வை வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டி உள்ளார்.

மேலுள்ள ஐந்து விடயங்களிலும் போராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு சமனான தகுதியுடைய ஒருவரை காண்பது கடினமாகவே உள்ளது. இவர் முன்னர் 2006ல் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் சில அரசியற் சக்திகளால் தனது கடமையைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். அப்போது முடியாமற் போன பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு இப்போது சந்தர்ப்பம் வழங்கப்படுவதே நியாயமானது.

நீங்கள் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்பும் ஒருவர் என்பதாலும் அமைச்சராக இந்த விடயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஒரு இடம் இருப்பதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களுக்கு வெளிப்படையான உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பு:

http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm

திரு ராரின் கொன்ஸ்ரன்ரைன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் – நீங்காத நினைவுகள் : இணுவையூர் நவேந்திரன்

Kutralam_Nagarajanமிகக் கனத்த மனத்துடன் இக்கடினமான செய்தியை எழுதும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். குற்றாலம் என்றவுடன் எமக்கெல்லாம் மனதில் குதித்தோடும் எண்ணம் – இந்தியாவில் உள்ள குளுமையான இடமான குற்றாலமும் அதில் சில்லென்று ஓடும் அருவியும் மலையும் அதன் சூழலும். ஆனால் அதே குளுமையுடனும் அதே பெயரில் வாஞ்சையுடனும் எம்மிடையே ஒரு மாமனிதன் நேற்றுவரை நடமாடினான். ஆனால் அம்மாமனிதன் இன்று எம்முடன் இல்லை. (தோற்றம் 16 05 1966 – மறைவு 28 09 2010)

நாட்டியப்பாடலில் “இமயம்” என்று அழைக்கப்படக்கூடிய குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் செவ்வாய் (28 09 10) 6.30 மாலையில் தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.

தன்னிகரற்ற ஒரு பாடகன் பாடலாசிரியன் இசையமைப்பாளன். இம்மூன்றும் ஒருசேர அமைவது மிக அபூர்வம். ஆனால் இவை அனைத்தின் சொந்தக்காரன் கற்றாலம் நாகராஜன். இவரது பாடலில் மயங்காதவரே இலர். சிறுவர்களில் இருந்து முதியோர்வரை இவரது இசைப் பிரியர்கள்.

ஒருமுறை பழகினால் காந்தம் மாதிரி இழுக்கும் அதீத மனோபாவம் இவரது உன்னத மனித குணத்தால் இவரது குறைகளை எல்வாம் மறந்து மீண்டும் மீண்டும் இவரை நாடி ஓடும் அகஅழகு கொண்டவர்.

1992ம் ஆண்டளவில் திரு கணேசனால் லண்டனிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். நுhற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான என்றுகூடச் சொல்லக்கூடிய நாட்டிய அரங்கேற்றங்களில் பாடிய முடிசூடா மன்னன். பாடல் வடிவமைப்பதிலும் இசையமைப்பதிலும் ஈடு இணையற்ற தனித்திறன் கொண்டவர்.

Kutralam_Nagarajanராஜாவின் “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலுக்கமைய யாரையும் குறை கூற மாட்டார். எல்லோரிலும் ஒரு நிறைவுகாணும் ஒரு உன்னத மனிதப்பிறவி. இவரது குழந்தை உள்ளத்தால் யாராலும் வெறுக்கப்பட முடியாதவர்.

இசைப்பரம்பரையில் தோன்றிய காரணத்தால் சிறுவயதில் இருந்தே இயற்கைஞானம் கொண்டவர். ஆனாலும் 20 வயதுவரை சங்கீதத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் சங்கீதமேதை வி ஆர் கிருஷ்ணன் என்பவரிடம் இசையை பயிலும் அரிய வாய்ப்பைப் பெற்றார்

இவரது குரு வி ஆர் கிருஷ்ணன் தியாகராஜா சுவாமிகள் இசைப்பரம்பரையில் வந்த செம்மங்குடி சீனிவாச ஜயர் அவர்களின் மாணவர் எனடபது குறிப்பிடத்தக்கது. காலம் தாழ்த்தி 20 வயதில் இசையைப் பயின்றாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டியப் பாடலுக்கு குற்றாலம் நாகராஜன் என முத்திரை பதித்து தனக்கென்று ஒரு அசையா இடத்தை சென்னை மக்களிடம் பிடித்துக் கொண்டார்.

இவரது இசைத்திறன்கண்டு தனது சரித்திரத்தில் முதன்முறையாக “சிறந்த பரதநாட்டிய பாடகன் ” என்று பட்டமளித்து Music Academy madras கெளரவித்தது.

இசையின் உச்சத்தைத் தொட்ட இவர் நினைத்திருந்தால் பணத்தின் உச்சத்தையும் தொட்டிருக்கலாம். மூன்று தலைமுறைக்குத் தேவையான சொத்தை இவரால் தேடியிருக்க முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான இளம் இசைப்பயிர்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டிய இவர் பணத்தின் பக்கம் கவனம் செலுத்தாதது இவரது மகனும் மனைவியும் செய்த துர்ப்பாக்கியமே.

வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது இயற்கை நியதி. இருப்பினும் காலத்திற்குக் காலம் நல்லவர்களும் தோன்றத்தான் செய்கிறார்கள். வல்லவர்களை காலம் மறந்துவிடும் வரலாறு இருக்காது. ஆனால் நல்லவர்களிற்கு வரலாறு உண்டு. இவர்களை காலம் மறக்காது.

குற்றாலம் நாகராஜனின் இசைச்சேவை சாதனை மிகப்பெரியது. அவரது வெற்றிடம் இலகுவில் நிரப்ப முடியாதது.

அவரது பிரிவால் வாடும் மகன் சங்கீத்திற்கும் துணைவி கோமதிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது பூதவுடல் ஈமக்கிரியைகளுக்காக சென்னைக்கு அனுப்பப்பட இருக்கிறது. லண்டனில் இறுதி மரியாதை இன்று (03Oct 2010) காலை இடம்பெற்றது.

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்:( 07916 134 976 – pandkassociates@aol.com)