2010

2010

தமிழ் நாட்டில் தொங்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் : விமல் குழந்தைவேல்

Vimal_Kulanthaivelஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் தனது நாவல்கள் மூலம் அறியப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். இவர் 2002 யூனில் தேசம் சஞ்சிகையின் இதழ் 8ல் எழுதிய இக்கட்டுரையை மீள்பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை மீள்பிரசுரம் செய்கிறோம். கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக தமிழக எழுத்துலகின் இலக்கியத் தசைகளாகத் தொங்கும்  புலம்பெயர் எழுத்தாளர்களின் கையெழுத்துப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பொருத்தம் கருதி இக்கட்டுரை மீள்பதிவிடப்படுகிறது.

._._._._._.

Vimal_Kulanthaivelமருத்துவர்களாகவும் பொறியியலாளராகவும் இன்னும் பல துறை படிப்பாளிகளாகவும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுள் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூறியவர் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

ஈழத்திலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எப்படிப்பட்ட திறமையான எழுத்தாளனையும் அங்கீகரிக்கவோ முன்மொழியவோ தமிழ்நாட்டு இலக்கிய வாதிகளையே அன்றிலிருந்து இன்றுவரை நம்பி இருக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே ஈழத்து இலக்கியம் இருக்கின்றது. எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நம் இலக்கியச் சிங்கங்களிடம் இன்னும் இல்லாததே இதற்குக் காரணம்.

டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்றோர் கூடத்தங்களை அங்கீகரித்துக் கொள்ள தமிழ் நாட்டைத் தான் நாடியிருக்கின்றார்கள். அந்த நாடல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி, பாலுமகேந்திரா, சுந்தரராமசாமி, அனுராதா ரமணன், வைரமுத்து, மேத்தா ரகுமான், சிவசங்கரி இன்னும் இவர்களைப் போன்ற தமிழ் நாட்டில் பிரபல்யம் ஆனவர்களின் முன்னுரைகளைப் பெற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இன்று வரை அறியப்படாமலும் அறிமுகப்படுத்தப்படாமலும் அங்கீகாரம் பெறாமலும் இருக்கும் புலம் பெயர் எழுத்தாளர்களை தமிழ்நாட்டு இலக்கியம் அறியத் தேவை இல்லை. தாய் நாட்டுச் சகோதரர்களாவது கண்டு கொள்ளலாமே.

தமிழ் நாட்டில் அரசியலும், இலக்கியமும், சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிக் கொள்ளாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல. எழுத்தாளனாகப் பெயர் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு தானும் ஆதரவாளனென்று ஆட்டுமந்தை பின்னால் ஓடும் குட்டி ஆடு போல ஓட வேண்டி இருக்கின்றது. வேற்று மொழி எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களை இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு வதை கண்டு ரசிக்க வேண்டி இருக்கின்றது. ஈழத்து இலக்கியத்தைக் கட்டிக்காக்க வந்த இந்த இலக்கி யக் காவலர்களை எத்தனை நாளைக்குத் தான்  ஒத்தூதிச் செல்ல முடியும்.

இலக்கியவாதிகள் போகட்டும் புலம்பெயர் சஞ்சிகைகள் மட்டுமென்ன. அவர்களுக்கும் இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தான் தேவைப்படுகின்றன. அல்லது மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் தான் தேவைப்படுகின்றன. இல்லையெனில் தங்களுக்குப் போட்டியான இன்னொரு சஞ்சிகையினரின் வாழ்க்கை அந்தரங்கங்களை கொஞ்சக் காலத்துக்கு விமர்சனம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம்  செய்து அவர்களை சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதை கொழும்புப் பத்திரி கைகள் (தமிழ்) விரும்புவதில்லையாம் என்பதே தனிச்சோகமான செய்தி. என்ன செய்வது அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அப்படி. தமிழ்நாட்டு சினிமா பற்றிய கவலையைத் தவிர அந்த வாசகனுக்கு வேறென்ன கவலை?

சரி இவைகள் தான் இப்படியென்றால் புலம்பெயர் எழுத்தாளனின் இன்னொரு புலம்பல் தன்னை சக புலம்பெயர் எழுத்தாளனே கண்டு கொள்வதில்லை என்பது தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுள் மூத்த எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கம் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கென்றொரு வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார்கள். தாங்கள் எழுதுவதையும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதுவதையும் தவிர இவர்கள் வேறு எதுவுமே வாசிப்பதில்லை. ஜனரஞ்சக பத்திரிகைகள் வாசிப்பதில்லை என்பார்கள். தங்கள் வீட்டுமேசையில் எப்போதும் அந்தப் பத்திரிகைகள் இருக்கும். குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தங்களின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கும். கேட்டால் தாங்கள் அனுப்பவேயில்லை எப்படியோ வந்திருக்கின்றது என்பார்கள். இந்தப் பின்கதவு கௌரவ இலக்கியவாதிகள் புதிய எழுத்தாளர்களிடம் நெருங்கிப் பழகுவதை கௌரவக் குறைவாக எண்ணுகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் புதிய எழுத்தாளனின் ஆக்கத்தை இன்னொரு புதிய புலம்பெயர் எழுத்தாளன் கண்டும் காணவில்லை என்று கூறினால் இதை யாரிடம் சொல்லி அழுவது.

 ‘உன்னுடைய கதையொன்று பத்திரிகையில் வந்திருக்கே தெரியுமோ?’
 ‘ஆ……அப்பிடியே எப்பிடிக் கதை’
 ‘நேரமில்லை நான் வாசிக்கவில்லை’
 இது தான் புலம்பெயர் எழுத்தாளனுக்குரிய பண்பு.

இவைகள் எதுவும் தேவையில்லை. ஒரு எழுத்தாளன் அறியப்பட நல்ல விமர்சனம் ஒன்றே போதுமானது. அதற்குக் கூட ஆளில்லை. விமர்சனம் என்று அழைத்தால் மேடைச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவும் முகஸ்துதிக்காகவும் எழுத்தாளனை புகழ்ந்து தள்ளிவிட்டு மேடையில் இருந்து இறங்கி கூட்டம் சேர்த்து குறைசொல்வதற்கு என்றே நமது விமர்சகர்கள் பலர் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் பயம்.

குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்தால் விளம்பரமாகி சல்மான் ரூஷ்டியாகி விடுவானோ என்ற காழ்ப்புணர்ச்சிப் பயம். இந்த விதிகளைத் தாண்டியும் துணிந்து விமர்சனம் செய்பவர்கள் என்றால் லண்டனில் ஜமுனா ராஜேந்திரனையும், மு.நித்தியானந்தனையும் மட்டுமே குறிப்பிட வேண்டும். ராஜேந்திரனைப் பொறுத்தவரை சத்தியஜித்ரேயையும், பத்மா சுப்பிரமணியத்தையும் தவிர வேறு யாரையும் படைப்பாளிகள் என்றே சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஆனாலும் அவரின் விமர்சனம் காத்திரமானதும், தேவையானதும் என்பது உண்மை. மு.நித்தியானந்தன் அப்படியல்ல. நல்ல படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களிடத்தில் உள்ள குறைகளை நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் சுட்டிக்காட்டிவிட்டே செல்வார். என்ன பயமோ பயமுறுத்தலோ தெரியாது. எந்தக் குளிரிலும் முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட உணர்ச்சிவசப்பட்டு இவர் குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதே ஒரு தனி அழகு தான்.

ஒரு விமர்சனம் படைப்பாளியை வெளிக்கொணரும் விளம்பரம் என்பது உண்மையே. அதற்காக அது புகழ்ச்சி விமர்சனமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. புகழ்ச்சியை விட படைப்பாளியின் படைப்பில் உள்ள குறைகளைக் குற்றம் கூறியும் கருத்துக் கட்டுடைப்புச் செய்தும் செய்யும் விமர்சனத்துக்கு வலு அதிகம். அந்த சம்பிரதாயங்கள் கூட ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தில் மிகமிகக் குறைவு.

அரவிந்தனின் கவிதைத் தொகுதி வெளியீட்டுக் கூட்டத்தில் அரவிந்தன் கழுத்தில் விழுந்து கொண்டிருந்த புகழ்ச்சி மாலையை தடுத்தாட்கொணரவும் கவிதைத் தொகுதியின் கருத்தைக் கட்டுடைப்புச் செய்யவும் சபையிலிருந்து எழுந்த சேனன் அருகிலிருந்தவர்களால் தடுத்தாட் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் விமர்சனச் சுதந்திரம் இல்லை. சபைப்பேச்சுச் சுதந்திரம் இல்லை. தப்பித்தவறி சேனன் போன்றவர்கள் எழுந்தால் சபைகுழப்பி, தறுதலை என்ற பெயர்களுடன் தான் உட்காருகிறார்கள். தமிழ் இலக்கியம் என்ற வகையில் தமிழ் நாட்டைத்தான் நாம் உதாரணத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கு இலக்கிய விமர்சனச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது. எழுத்தாளனின் படைப்பை எரிக்கவும் எதிர்க்கவும் அவனை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் கூட விமர்சனம் என்ற வழிமுறை உதவுகின்றது. புலம்பெயர் இலக்கியத்தில் அப்படியல்ல. இருந்தும் விதிவிலக்காக பிரான்ஸில் மட்டும் வருடத்துக்கு ஒரு தடவை நான்கு பெண்களாவது சந்தித்து குய்யோ முய்யோ என்று விமர்சனக் கத்தல் செய்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோசம்.

ஈழத்திலிருந்து அடிக்கடி எழுத்தாளர்களென்றும் இலக்கியவாதிகளென்றும் பலர் வருகின்றார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களை அவர்கள் அறிந்தவர்களும் இல்லை. அவர்களை புலம்பெயர் எழுத்தாளர் பலர் அறிந்திருப்பதும் இல்லை. அவர்கள் கூட வந்ததும் வராததுமாக

நீங்கள் எல்லாம் ஏன் இந்தியாவுக்குப் போய் எங்கள் இலக்கியத்தை விற்கின்றீர்கள் என்கிறார்கள். சரி உங்களிடமே வருகிறோம் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்டு எங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அவர்களிடத்தில் அறியப்படவில்லை. அறியப்படாததற்கு காரணம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் காழ்ப்புணர்ச்சி.

விமர்சனம் எழுத்தையும் எழுத்தாளனையும் வெளிப்படுத்தும், தெரியப்படுத்தும். அதற்குரிய ஆட்கள் தான் நம்மிடத்தில் இல்லை. விமர்சனமும் ஓர் இலக்கியம் தான். அந்த இலக்கியம் ஈழத்தில் குறைவு. தன்னை அங்கீகரிக்காத ஒருவரை மேடையேறி பூதம் என்று சொல்லி அவரின் உருவ அமைப்பை கேலி செய்யும் விமர்சனப்பாணியை கைவிட்டுவிட்டு நல்ல விமர்சனம் மூலம் புதிய புலம்பெயர் எழுத்தாளர்களை வெளிப்படுத்தும் பரந்த மனம் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் நாட்டின் பிரபல்யமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டு தான் அலைய வேண்டும்.

”தமிழ் மக்கள் மீதான பாரபட்சங்கள் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு நோக்குவதையே காட்டுகிறது.” புளொட் தலைவர்

sitharthan.jpgஅரச தொழில்துறைகளில் தமிழ்பேசும் மக்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதிகள், பாரபட்சத் தன்மைகள் என்பன விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே அரசாங்கம் நோக்குகிறது என்பதையே காட்டுகின்றன. இதனை அரசாங்கமே உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகக் கூடாது என்ற நோக்கில்தான் அரசு செயற்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த செயற்பாடுகள் எழுப்புகின்றன. அரசாங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யுத்தத்தை வெற்றி கொண்ட மனோபாவத்தில் மமதையில்தான் அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயற்படுவதாகத் தமிழ்மக்கள் இன்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்மக்கள் தாம் இந்நாட்டின் ஒரு பிரிவினர் அல்லர் என்பதனை அரசாங்கமே அந்த மக்களுக்கு இன்று உணர்த்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், சிறைக்கைதிகளின் விடுதலை மற்றும், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், இச்நதிப்பின் பொது ஜனாதிபதியிடம் சமாப்பிக்கப்படவிருக்கும் மகஜரைத் தயாரிக்க முவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அந்தக்குழு தயாரிக்கும் மகஜருக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கம் கூடவுள்ளதாகவும் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கான திட்டமொன்று டிசெம்பர் இறுதியில் தயாரிக்கப்படும் எனவும், அது தயாரிக்கும் போது தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுவிடும் என தான் நம்புவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்பு மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதால் அதன் காலஎல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதாக கோரியிருப்பதால் அதன் அமர்வுகளை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிக்கும்படி ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி சில்வா ஜனாதிபதி செயலகத்திடம் கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மெனிக்பாம் அகதிமுகாம் மக்கள் வேறு முகாமிற்கு மாற்றப்படுகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் நேற்று சனிக்கிழமை வேறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். ‘வலயம்-4’ முகாமில் தங்கியிருந்த மக்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு இடமாற்றப்பட்டவுள்ளனர். இவ்வாறு தாங்கள் இடமாற்றப்படுவதை அங்கிருந்த மக்கள் விரும்பவில்லை எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நேற்று அம்முகாமிற்குச் சென்ற வவுனியா அரசாங்கஅதிபர், படைத்தளபதி, அதிகாரிகள் ஆகியோர் குறித்த முகாம் மக்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி உடனடியாக அவர்களை கதிர்காமர் முகாமிற்கு செல்லுமாறு கூறினர். அத்துடமன் பஸ்களில் அவர்களை ஏற்றி கதிர்காமர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

வலயம்-4 முகாமிலுள்ள 35 நிலையங்களில் முவாயிரம் மக்கள் தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நேற்று இடமாற்றப்பட்டனர். மீதமுள்ள மக்களை இடமாற்றும் நடவடிக்கை இன்றும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் இன்னொரு முகாமிற்கு மாற்றப்படுதை அம்மக்கள் விரும்பவில்லை எனவும் தாங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அழைத்துச் செல்லப்படுவதையே விரும்பாவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மெனிக்பாம் முகாமிலுள்ள மக்கள் அவர்களைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் கதிர்காமர் முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீக்கப்படமுடியாத அதிஉயர் பாதுகாப்பு வலயங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும்.

சாத்தியப்படக்கூடிய பகுதிகளில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அப்பகுதிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஆதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இடங்கள் பல பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதிகளிலிருந்த படையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், சில இடங்களிலுள்ள பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது. அவ்வாறான பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக திருகோணமலையில் சம்பூர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாவுள்ளது. அதனை நீக்குவது தற்போது சாத்தியமற்ற விடயம். ஆகவே அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன,; யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக் காண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த மக்கள் முன்னர் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்து வந்தனர் என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேசசபை உறுப்பினர் விபத்தில் பலி.

வாகரை பிரதேசசபை உறுப்பினரான 26 வயதுடைய நவரட்ணம் ருவேந்திரன் என்பவர் நேற்று சனிக்கிழமை இரவு வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் புதூர் கதிரவெளி எனுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லொறியொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து நடந்த இடத்திலேயே பிரதேசசபை உறுப்பினரான ருவேந்திரன் கொல்லபட்டார். இவருடன் சென்ற இருவர் படுகாயங்களுக்குள்ளாகி வாகரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து நடைபெற்றதும் ஆத்திரமுற்ற அப்பிரதேசவாசிகள் குறிப்பிட்ட லொறியினை தீவைத்துக் கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரு சட்டமே நடைமுறையில் உள்ளது – ஜனாதிபதி

president.jpgசட்டம் சகலருக்கும் சமமானது அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களுக்காக சட்டத்தைக் கையிலெடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்குச் சகலரும் தலைவணங்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டில் சகலருக்கும் பொதுவான ஒரே சட்டமே உள்ளது. பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை அதுவே நடைமுறையிலுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்லையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, சட்டம் சகலருக்கும் பொதுவானது. நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குச் சகலரும் தலைவணங்க வேண்டும். எனது மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நான் மதிப்பளித்தேன். அதற்குத் தலைவணங்கினேன். அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்யவில்லை.

எமது நாடு சுதந்திரமடைந்து கெளரவமான சமாதானம் உருவாகியுள்ளது. சுதந்திரமும் சமாதானமும் கிடைத்துள்ளதால் நாம் திருப்திப்பட முடியாது. நீதியும் நியாயமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றங்கள் வணக்கஸ்தலங்கள் போன்றவை மக்கள் நம்பிக்கைமிக்கதாக அவை அமைய வேண்டும். நீதி நியாயத்திற்கான உந்துசக்தியாக நீதிமன்றங்கள் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதே எம் அனைவரினதும் பொறுப்பாக வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் அளவுக்கதிகமாக தாமதமாகியுள்ளன. பல வழக்குகள் 25 வருடங்களுக்கு மேல் நீள்கின்றன. இதில் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் தங்கையின் வழக்கும் 25 வருடங்கள் பழமை வாய்ந்ததாகியது. இத்தகைய நிலை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. இதனால் நாடளாவிய ரீதியில் 74 மேன் முறையீட்டு நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடும் நீதியரசர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

நீதியை நிலைநாட்டுவதற்கு சகலரும் முன்வர வேண்டும். நீதிமன்றங்கள் நீதி நியாயத்தை நிலைநாட்டும் மக்கள் சேவையை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் வவுனியாவிற்கு அப்பால் நீதிமன்றங்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமே எமது நீதிமன்றம் இருந்தது. வவுனியாவிற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் நீதிமன்றங்களும் சட்ட நிறுவனங்களும் புலிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இயங்கின.

தற்போது பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரே நீதி ஒரே சட்டம் என நடைமுறையிலுள்ளது. அதற்கேதுவாக நாடு உருவாக்கப்பட்டு விட்டது. அரசியல் தேவைகளுக்காக எவரும் சட்டத்தில் கைவைக்க முடியாது. சட்டத்தை எவரும் கையிலெடுக்கவும் இடமளிக்க முடியாது. சகல மக்களுக்கும் சட்டம் பொதுவானது. சுயாதீனத்தில் கைவைப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக பேசுகின்றனர். நானும் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி அதே நேரம் ஒரு வழக்காளியாக இருந்தவன். எனினும் நான் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலை வணங்கினேன். மூன்று தடவை சிறையிலிருந்த அனுபவமும் எனக்குண்டு. எனது மனித உரிமை மீறல் தொடர்பாக நான் ஜெனீவாவுக்குச் சென்றேன். எனது ஆவணங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் என்னுடன் வந்த பொலிஸ் அதிகாரி எனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தினார்.

எவ்வாறெனினும் நீதிமன்றமானது எனக்கு எவ்வித மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லையென தீர்ப்பளித்தது. அதற்கு நான் தலை வணங்கினேன். நான் மட்டுமல்ல நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தலைவணங்க நாம் அனைவரும் கட்டுப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. தங்கல்ல தற்போது அபிவிருத்தியில் வளர்ச்சி காணும் ஒரு பிரதேசமாகும் இத்தருணத்தில் இங்கு நீதிமன்றம் அமைவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இப்பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் எப்பிரதேசத்திலும் மக்கள் தேவையை நிறைவேற்ற நாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளோம்.

மக்கள் நம்பிக்கைக்குரியதாக நீதிமன்றங்கள் மாற்றப்பட வேண்டும். அவை, மக்களுக்கு பிரச்சினைகளிலிருந்து நிவாரணமளிப்ப தாகவும் தமைய வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறைக்கு முன் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள்

sri-lankan.jpgபாடசாலை 3 ஆம் தவணை விடுமுறைக்கு முன்னர் க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். டிசம்பர் 9 இல் பாடசாலை விடுமுறை ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முடியுமென ஆணையாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.கடந்த ஆகஸ்ட் 9 முதல் செப்டெம்பர் 3 வரை உயர்தரப் பரீட்சை இடம்பெற்றது. 268,933 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.  பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. 2 ஆவது கட்ட மதிப்பீடு செம்டெம்பர் 24 வரை இடம்பெற்றது.

பிரபாகரனின் தாயாரைப் பிள்ளைகள் பார்க்க வாய்ப்பளிக்குமாறு அரசைக் கோரவில்லை சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை அவரின் பிள்ளைகள் வந்து பார்ப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாளை அவரின் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் வந்து பார்ப்பதற்கு சிவாஜிலிங்கம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்ததாகவும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் பல நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தன. அத்துடன்,  தனது பிள்ளைகளை பார்க்க பார்வதி அம்மாள் விரும்பியிருந்ததாகவும் ஆயினும் அவரும் பிள்ளைகளும் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் கொண்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இதுதொடர்பாக தான் அரசிடம் எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை யென்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். அத்தகைய கோரிக்கையை அரசுக்கு நான் விடுப்பதாயின் பார்வதி அம்மாளின் பிள்ளைகள் தாங்கள் தாயாரை பார்வையிட வருகை தர விரும்புவதாக முதலில் அறிவித்திருக்கவேண்டும்.ஆனால், அவர்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அவர்கள் இலங்கைக்கு வருகைதருவது தொடர்பான பாதுகாப்பு விடயமும் உள்ளது என்று சிவாஜிலிங்கம் அததெரணவுக்கு தெரிவித்துள்ளார்.

அதேசமயம் வல்வெட்டித்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதி அம்மாளின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.