2010

2010

மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpg‘மஸ்ஜி துகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என  நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ‘மஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL

இன்று ஹைட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgநில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

haitibuidling-pd.jpgஅதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன் – ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

sampanthar.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

election_box.jpgஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களுக்கு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு மிக நீளமானதாகிக் காணப்படலாம். வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவசரப்படாமல் வாக்குச்சீட்டை நன்கு வாசித்த பின்னர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தமது புள்ளடியை அல்லது ஒன்று (1) இலக்கமிடலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு அவசியமெனக் கருதுமிடத்து இரண்டாவது, மூன்றாவது தெரிவையும் அடையாளமிட முடியும்.

ஒருவரை மட்டும் தெரிவு செய்வதானால் X புள்ளடியை இடமுடியும்.

மூவருக்கு அடையாளமிட விரும்பினால் முதலாவது தெரிவுக்கு (1) என்று அடையாளமிட்ட பின்னர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளுக்கு முறையே 2,3 என அடையாளமிடமுடியும்.ஒரு வாக்குச்சீட்டில் ஒருவரைத் தெரிவு செய்து X புள்ளடி அல்லது (1) ஒன்று என அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு செல்லுபடியானதாகும்.

முதலாவது தெரிவைத் தேர்ந்தெடுக்காமல் 2,3 என மட்டும் அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டொன்றை அடையாளமிட வேண்டிய நடைமுறை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

3:1) “1” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளிக்க முடியும்.

3:2 )”2”என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது இரண்டாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

3:3 ) “3” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது மூன்றாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

04: வாக்காளர் ஒருவர் தமது வாக்கை ஒரு வேட்பாளருக்கு மட்டும் அளிக்க விரும்பினால். “1”  என்பதற்குப் பதிலாக “புள்ளடி X இடப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகும்.

04:1 முதலாவது தெரிவுக்குப் பின்னர் 2,3 அடையாளமிட்டு இரண்டாம், மூன்றாம் தெரிவை அடையாளமிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

04:2 எவருக்கும் வாக்களிக்கப்படாத வாக்குச்சீட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட X புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டும் முதலாவது தெரிவில்லாத 2 ஆம் 3 ஆம் தெரிவை அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டும் முற்றாக நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள் முதலாவது தெரிவை அறிவித்த பின்னர் தாம் விரும்பினால் 2 ஆம், 3 ஆம் தெரிவை அடையாளமிடமுடியும். அது கட்டாயமாக 2,3 என்று குறிப்பிடப்படவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஓஷியானிக் கப்பல் அகதிகள்; 13 இலங்கையரை ஏற்க நியூசிலாந்து இணக்கம்

இந்தோனேசியாவின் தனஜங் பினாங் துறைமுகத்தில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேரில் 13 பேரை ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் ஜொனாத்தன் கோலமனின் செயலகம் இதை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓஷியானிக் வைக்கிங் கப்பலை இந்தோனேசியா வழிமறித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 78 இலங்கை தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்காவும், 13 பேரை கனடாவும் 3 பேரை நோர்வேயும் ஏற்பதற்கு இணங்கியிருந்தன. அவுஸ்திரேலியா 22 பேரை அகதிகளாக தமது நாட்டில் குடியமர அனுமதிக்கவுள்ளது. இந்த நிலையில் எஞ்சியிருந்த 13 பேரையும் ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

இன்று இந்த 13 பேரும் நியூசிலாந்தில் குடியேறுவது பற்றிய விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் புறப்படவுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை – சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை – அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச் சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படு கின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம். பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீள்குடியேற்றங் கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப் பட்டு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர். சட்ட விரோதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றிருந்தால் அது குறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம். தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

யாருக்குப் போடலாம் வாக்கு : ஈழமாறன்

Sarath_Fonseka_Posterதமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் நாசமாய்ப் போன காலகட்டமாக கடந்த 35 ஆண்டுகள் கடந்தோடியது நாங்கள் அறிந்தது. தமிழரசுக் கட்சியும் தலைவர் செல்வநாயகமும் பொறுப்பில்லாமல் தமிழீழம் என்று சொல்லி விட்டு மேலுலகம் சென்றதும், அதைத் தூக்கி வைச்சு குறுக்கால போன கூட்டணி புலுடா விட்டதும் தம்பிமாரை உசுப்பி விட்டதும் கடந்தகால கசப்பான  விடயங்கள்.

ஒரு தலைமை என்பது தனது கட்சிக்கும், இருப்புக்கும் எது சாதகமாய் இருக்கும் என்று முடிவெடுப்பதல்ல. தான் எடுக்கப் போகும் முடிவால் உடனடியாகவும் எதிர்காலத்திலும் எப்படிப்பட்ட விளைவுகளை அது உண்டு பண்ணும், இது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை என்ன பாடுபடுத்தும் என்று சிந்தித்து, ஆய்வு செய்து முடிவெடுப்பதே ஒரு நல்ல தலைமைக்கு உரிய பண்பியில் இயல்பு. இதன் அடிப்படையில் பார்த்தால் “இனி கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாத்த வேணும்” என்று சொல்வதற்கு எதுக்கு ஒரு தலைவர். அட இழவு விழுவாரே கடவுள்தான் காப்பாத்த வேணுமெண்டால் அது எந்தக் கடவுள் எண்டு சொல்லி விட்டு செத்திருந்தால் தமிழ் மக்கள் தேசியத் தலைவருக்கு அபிசேகம் செய்தது போலவோ அல்லது பிறந்த நாள் பூசை புனர்த்தானங்கள் செய்தது போலவோ அந்தக் கோயிலுக்குச் சென்று ஆண்டவா எங்களைக் காப்பாத்து. எங்களுக்கு உரிமை பெற்றுக் கொடு என்று ஒரு அபிசேகம் செய்திருப்பார்கள். வேணுமென்றால் சில நூறு பலிகளும் கொடுதத்திருக்கலாம். இத்தனை ஆயிரம் அப்பாவி மக்களைப் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை.

இனவாத அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவதற்காக அதுகாறும் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் எதுவும் பலனளிக்காது போனதால் மாற்றுத்திட்டங்களை தீட்டி போராட்டத்தை வேறுவழியில் பொறுப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என மாற்று வழியை அல்லவா சொல்லியிருக்க வேண்டும். கடவுள்தான் காப்பாத்த வேண்டும் என்று சொல்ல என்னத்துக்கு தலைவர். ஒரு கட்சி. அதுக்கு வக்காலத்து வாங்க அடங்காமண் புடுங்கா மண் என்று சாதிவெறி பிடித்த ஒத்தூதிகள்.
 
அதை விடுத்து தமிழீழம், பெடரல், கிடறல் என்று சா வாக்கு மூலம் கொடுப்பது எதிர்காலத்தில் தமிழ் மக்களை எங்கே கொண்டுபோய் விடும் என்று கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? சரி வயது போன நேரத்திலை மனுசன் அறளை பேந்து போய் கதைச்சிட்டாக்கும் என்று விட்டு விட்டு சற்று பிரக்ஞை பூர்வமாக இந்தக் கூட்டணி சிந்தித்திருந்தால் நாம் பாரிய அழிவை நிறுத்தியிருக்கலாம். இந்த கூட்டணி நாடகக் குழு போட்டு முடித்த நாடகங்களின் விளைவாக நாம் புது மாத்தளன் வரை கொடுத்த விலை மானிடமே மௌனித்துபோன வரலாறு. ஆனால் என்ன நடந்தது.

ஒரு தொழிற் சங்கம் வேலை பகிஸ்கரிப்பு பற்றி முடிவெடுக்க நினைக்கிறபோது அந்த முடிவு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப் போகும் சாதக பாதகங்களை ஆய்வு செய்து விவாதங்கள் நடாத்தி பெரும்பாலானவர்களின் ஒப்புதலை ஏற்ற பின்னரே முடிவெடுப்பார்கள். இங்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பாரிய முடிவைப் பற்றி கிஞ்சிற்றேனும் சிந்திக்காமல் தமிழீழம் என்று முழங்கிய துலைவார் கூட்டணியின் முடிவைக் கேட்டு கோதாரி விழுவாருக்கு கீறி வைச்ச பொட்டு இண்டைக்கு யாருக்கு வோட்டுப் போடுறது என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்தை அறிவிக்கும் போது இது சாத்தியமா? அவ்வாறு சாத்தியம் எனின் மாங்காய் புடுங்குவது போல் சுலபமாக புடுங்கி எடுக்கலாமா இல்லை பனங்கிழங்கு கிண்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டி எடுக்கலாமா, இல்லையா என்று சுடலையிலை போவார் குறைஞ்சது ஒரு பத்து நிமிசமாவது யோசித்திருக்க வேணும். அப்படி சிந்தித்திருந்தால் இப்பிடி நாம் ஆகியிருக்கத் தேவையில்லை என்பதை நடிகர் விவேக் பாணியிலை நான் எழுத வேண்டி வந்திருக்காது. வெளவால் வரும். துவக்கோடை வரும். தமிழனுக்கு எருமை மாட்டுத் தோல். சுட்டமண்ணும் பச்சமண்ணும் இனி ஒட்டாது என்று விட்டதெல்லாத்தையும் நம்பி அப்பாவி இளைஞர்கள் கொதிச்சு எழ குளிர்காய்ந்த இந்தக் கூட்டணி தமிழ் மக்கள் யாருக்கு வாக்குப் போட வேணும் என்று முடிவெடுத்திருக்கிறர்களாம்.

இவர்கள் கடந்த காலங்களில் எடுத்த எந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன? தமிழீழம் முடிந்த முடிவு என்ற இந்த நரிக் கூட்டம் முடிவெடுக்கும் போது இவர்களுக்கே இதன் பொருள் விளங்கியிருக்கவில்லை. அதற்கான திட்டமோ அன்றி அந்த இலக்கை அடைவதற்கான குறைந்தபட்ச வரைபடம் கூட இல்லாத இந்தக் காவாலிக் கூட்டணி பின்னர், வட்டமேசை மாநாடு போட்டபோது கூட கிட்டத் தட்ட என்ன வேணும் என்றதில் ஒரு வீதமேனும் தெளிவிருக்கவில்லை. அதன்பின் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இவர்கள் எடுத்த முடிவென்று அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு தலைமையின் முடிவு என்ன என்று எதிர்பாப்பதும் அந்தத் தலைமை என்ன சொல்கிறது என்பதை கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் சாதாரணமாக நடக்கிற ஒரு விசயம் தான். அதற்கான காரணங்களும் இருக்கின்றன. ரோனிபிளயர் என்கிற முன்னாள் பிரித்தானியப் பிரதம மந்திரி மக்களுக்கு ஈராக் தொடர்பாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டி இருந்தது. அது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருந்த முடிவாக இருந்தபோதிலும் ரோனிபிளயருக்கு இதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே அவர் யாரோ எழுதிய கட்டுரையை எடுத்து ஒரு சொல்லைக் கூட மாத்தாமல் பிரித்தானிய மக்களுக்கு பெருப்பிச்சுக் காட்டினார். நாட்டின் தலைமை மக்களின் நலன் கருதி முடிவெடுக்கும் என்று நம்பிய பிரித்தானிய மக்களும் சடாம் குசையின் மீது படையெடுப்பதை ஒப்புக் கொண்டார்கள். அதற்காக பிரித்தானிய மக்கள் கொடுத்திருக்கும் விலையும் அளப்பரியது.
 
நாமும் துப்பாக்கி தூக்கி போரடுவதற்கு தயாராகினோம். இதே கூட்டணிதான் துரையப்பாவை சுட்டிக் காட்டி சுட்டுக்காட்டுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டதும் அன்றைய அப்பாவிப் பிரபாகரங்கள் சுட்டுத் தள்ளியதும் நடந்தேறின. இதன் பின் போராளிக் குழுக்கள். எந்தத் தலைமையும் தகுதி மட்டும் இல்லாத தலைமையாகவே உருவெடுத்தன. புரட்சி வெடிக்கிறபோது நாம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பொருளாதாரத் திட்டம் வைத்திருக்க வேண்டும் என்று தோழர்கள் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது கீரை தின்னலாம் என்ற அளவுக்கு அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருந்திருக்கிறது.

கிளின்ற் ஈஸ்ற்வூட்டின் படத்தைப் பார்த்துதான் திட்டங்கள் தீட்டுவேன் என்று சொன்ன மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையும் என்று ஒவ்வொரு இயக்கமும் தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையினால் எத்தினை ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பாதிப்படையப் போகிறார்கள். வளங்கள் சொத்துக்கள் உயிர்கள் என்று எவ்வளவு நாசகாரம் நடக்கப் போகிறது என்று சிந்திக்காத, சிந்திக்க முடியாத, திராணியற்ற 50க்கு மேற்பட்ட இயக்கங்களும் இதனின்றும் முளையெடுத்த பாராளுமன்றக் கட்சிகளும் எங்கே, எப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்கள்? அப்படியாயின் தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கு நிஜத்தைச் சொல்லி அதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சாதக பாதகங்களை புரிய வைப்பதற்காக அரசியல் வேலையை செய்து விட்டு மக்களை முடிவெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கேல்லை. ரோட்டுப் போடுவதும் இடிந்த கட்டடங்களைக் கட்டுவதும் அபிவிருத்தி கிடையாது. அவை மீள் கட்டுமானப் பணிகளே. மகிந்தவுடனேயே நின்று ஒன்றும் செய்ய முடியாத பிள்ளையான் தலைமை எடுத்திருக்கும் முடிவுக்கும் கிழக்கு மாகாண மக்களின் எதிர் காலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. அம்மானின் கூத்து அதைவிடக் கேலியானது.
 
மகிந்தவுக்குப் போடுங்கோ என்று பிள்ளையான் கட்சி எடுத்திருக்கும் முடிவுக்கான அடித்தளம் எதுவுமே கிடையாது. 13ம் திருத்தமோ மேலையோ கீழையோ மகிந்த எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படுகிறேன் என்று சொல்ல  ஒரு தலைமை. அந்தத் தலைமையின் முடிவைக் கேட்டு மக்கள் வாக்குப் போட வேணுமெண்டால் “கடவுள் தான் காப்பாத்தவேணும்” (நானும் ஒரு அரசியல் கட்சி தொடங்கலாம் போல இருக்கு. எனது அரசியல் ஞானத்தைப் பார்க்க தந்தை செல்வாவே பிச்சை வாங்க வேணும் போல இருக்கு.)

புளட் தலைவர் என்ன சொல்கிறார். அவரும் மகிந்த மாத்தையாதான் நல்லவராம். தமிழர்கள் என்ன மாப்பிளையா பாக்கிறார்கள்? அவர் குடும்பம் எப்பிடி? மாப்பிழை சிகரட் குடிப்பாரா? தண்ணி அடிப்பாரா என்று சான்றிதழ் முத்திரை குத்துவதற்கு. சித்தாத்தன் ஜயா சின்னத்திலை இருக்கிற உமாமகேஸ்வரன் அந்த இயக்கப் போராளிகளைத் தூக்கி போரணையில் போட்டு கொலை புரிவதற்க்கு காரணமாக இருந்தவர். பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மாரிடம் ஒரு மன்னிப்புக் கேட்கக் கூட திராணியில்லாத சித்தன் மகிந்தவுக்குச் சேட்டிபிக்கேற் குடுக்கிறார். ஆடு நனையிதெண்டு…. ஏதொ ஒரு மிருகம் அழுதமாதிரி இல்லையா இந்தக் கதை.

மகிந்த ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமராக இருந்த அமைச்சராக இருந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார். இனி என்ன செய்வதாக உறுதி கொடுத்துள்ளார்? அதை நிறைவேற்றுவார் என்பதற்கான அத்தாட்சி என்ன எந்த இழவும் சொல்லாமல் முறுகண்டி பிள்ளையார் கோயிலுக்கு கும்பாவிசேகம் செய்யப் போயிருக்கும் சித்தனின் முடிவை தமிழ் மக்கள் ஏற்று வாக்குப் போடலாமா?

டக்கிளசை விட்டிடுங்கோ. கோடி எந்தப் பக்கம் அவர் பாட்டும் அந்தப்பக்கம் என்பது மகிந்த சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஆதலால் அவரால் பெரிய ஆபத்தும் இல்லை. அவர் சொல்லை யாரும் கேட்கப் போவதுமில்லை. என்ன மீறினால் குடும்பத்தோடை சுட்டுப் பொசுக்கிப் போட்டு உத்தரத்திலை தொங்க விடும் உத்தரவாதத்தை மட்டும் அவரால் உறுதியாகக் கொடுக்க முடியும்.

மே 17ம் திகதி 2009ல் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி என்று புகழ்ந்து தள்ளிய சம்பந்தர் ஜயா 19ம் திகதி உந்தக் குறுக்கால போனவன்தான் எல்லா அழிவுக்கும் காரணம் என்று சொல்லும் இந்த ஜயா, பொன்சேகாவுக்குப் போடுங்கோ என்று சொல்லுறார். இதற்கான காரணங்களில் முக்கியமானது என்ன தெரியுமோ? நாலு வருசமா மகிந்த ஒண்டும் செய்யேல்லையாம். உங்கட தேசியத் தலைவரை மண்டியிட வைச்சது. பொன்சேகா தலைமையிலை போட்டுத் தள்ளியது. குறைஞ்சது வன்னிக்குப் போய் கதிர்காமக் கோயில் பூசாரி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு சொல்லிற எல்லாத்தையும் செக்கு மாடுகள் மாதிரி கேட்டுக் கொண்டு வந்து வெளிநாடுகளிலை விளையாட்டுக் காட்டின உங்களை அக்கம் பக்கம் பாத்து பாராமல் அறிக்கை விடுற அளவுக்குச் செய்தது மகிந்த எண்டு அவிட்டு விட ஆயிரம் இருக்கய்யா. உங்களை இன்றைக்கு அரசியல்வாதி என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதே மகிந்த மாத்தையா தானே. இல்லாட்டி உங்களுக்குப் பெயர் பினாமிகள் எல்லோ? அது மட்டுமே வெளிநாடுகளில உள்ள கனபேர் இப்ப ஊருக்குப் போய் பொம்பிளை தேடுகினம். ஏதோ மகிந்தவின்ர புண்ணியத்தில அவர்களுக்கு கலியாணம் காட்சி என்று நடக்குது.

திருமலை தந்த புலிச் சிங்கமே சம்பந்தர் ஜயா! நாலு வருசமா மகிந்த ஒண்டும் புடுங்கேல்லை எண்டு மட்டுமில்லை இப்ப நீங்கள் வாக்குப் போடச் சொல்லியிருக்கும் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்க வேண்டாம் என்ற சுதந்திரக் கட்சியும் 62 வருசமா எதையும் உமக்கு நட்டு வைக்கேல்லை என்பது தெரியாமல் போச்சுதோ? 62 வருடங்களாக ஒப்பந்தம் இடுவதும், பின்னதைக் கிழிப்பதும் பிறகு வாக்குறுதி அளிப்பதும், நீங்கள் மறப்பதும் என்று நடந்த நாடகத்தில் மகிந்தவின் நாலு வருட ஆட்சியிலை ஒன்றும் நடக்காமல் போனது உங்களுக்கு கோவம் பொத்திக்கொண்டு வரக் காரணம் என்கிறீர்களே இதென்ன விளையாட்டு?

பொன்சேகா யார்? மே 18 வரை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து நாற்பதாயிரத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொன்று குவிப்பபதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு பெருந்துணையாக இருந்தவர். புலிகளுடனான யுத்த வெற்றிக்கு பின் தமிழர்கள் தொடர்பாகவும் தழிழ்நாடு தொடர்பாகவும் மிக மோசமான துவேச அறிக்ககைளை விட்டவர். அமெரிக்கா சென்று தமிழர்கள் ஒரு மூலையில் இருக்க வேணும் என்றால் இருக்கட்டும். உரிமைக் கதை கதைக்கக் கூடாது என்று கூறியவர்.

எப்படி தேர்தல் களம் வரை வந்தார்? மகிந்த அரசில் ஏற்பட்ட சிறிய முறுகல் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் இறுக்கம், யுஎன்பி கட்சிக்குள் முத்தியிருக்கும் தலைமைப் போட்டி, அமெரிக்காவுக்கு தலையாட்டுவதற்கு ஆள் பிடிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒன்று சேர்ந்து பொன்சேகாவுக்கு முடி சூட்டியதே, தவிர பொன்சேகா நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் எடுத்த நல்லெண்ணம் கிடையாது. பிரபாகரனை முடித்த கையோடு சீனாவின் பக்கம் கூடுதலாக சாய்ந்து கொண்ட மகிந்தவைக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு விருப்பம் குறைந்து விட்டாலும் மேற்குலகுடன் எப்பவும் சாயும் யுஎன்பியை ஆதரிக்கவும் இந்தியா தயங்கியது.

சீனாவுடனான வர்த்தக இராணுவ அரசியல் முறுகல் மோசமடைந்து வருகிற இந்த நேரத்தில் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் ஏற்பட்டு வரும் உறவைப் பயன்படுத்தி சீனாவை ஓரம் தள்ளி இந்தியா தன்னை இலங்கையில் முன்னிறுத்தலாம் என்று எடுத்துக் கொண்ட முடிவே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவு. சம்பந்தனுக்கு உருத்திரகுமார் வியன்னாவிலை வைச்சு சொன்னதும் இதைத்தான். இந்தியா தொலைபேசியில் சம்பந்தனுக்கு சொன்னதும் இதுதான்.

இன்று மக்கள் முன் உள்ள கடமை இதுதான். காலத்துக்காலம் சோரம்போன இந்த அரசியல் கட்சிகள் மக்கள் நன்மை தொடர்பாக என்றுமே சிந்தித்து முடி எடுத்ததில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்கு இருக்கிற அறிவு கூட இந்த தலைமைகளுக்கு இருந்தது கிடையாது. ஆகவே இந்தக் கட்சிகளின் காசுழைக்கும் விஞ்ஞாபனங்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு இன்றைய அரசியல் பொருளாதார சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மே 18 2009 வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் உறை குளிரில் உலகமெங்கும் கூக்குரல் இட்டதமிழ் மக்களின் கோரிக்கைகளில் முதன்மையாக ஒலித்தது போர்க் குற்றம் என்பது. இதனை நிரூபிப்பதற்க்கு சனல்4 போன்ற ஊடகங்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். மே 18 வரை போர்க் குற்றம் புரியும்படி கட்டளையிட்டவர் மகிந்த. அதை நிறைவேற்றியவர் பொன்சேகா. இன்று யாரை முதல் எதிரி என்று வாய் கிழியக் கத்தினோமோ அவரை ஆதரியுங்கள் என்று வந்து நிக்கிறது தங்களைத் தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக்கொள்ளும் இந்தக் கூட்டம். காலா காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டே நசுக்கிவந்த சிங்களத் தலைமையும் பௌத்த பீடமும் புதுமாத்தளனுக்குப் பின் ஞானம் பிறந்து தமிழ் பேசும் மக்களை காப்பாத்த அவதாரம் எடுத்திருக்கறார்கள் என்று விசுக்கோத்துத் தனமாக சொல்லும் இந்த தமிழ் அரசில் கட்சிகளின் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவை எண்ணிச் சிரிக்கக் கூட முடியவில்லை.

யுத்தம் நடந்து பேரவலம் கட்டவிழ்த்து விடப்பட்ட அப்பாவி மக்கள் இன்றும் தங்கள் இழப்புக்களில் இருந்து விடுப.டாத நிலையில் ஒரு தேர்தல். அதில் கொன்றவனுக்கும் கொல்லச் சொன்னவனுக்கும் வாக்குப் போடுங்கள் என்று கூட்டம்  போடும் இந்தக் கூட்டமைப்புக்கும் இதர கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டவேண்டிய தருணம் இது.

விக்கிரமபாகு என்று ஒரு வேட்பாளர். தமிழர்கள் அழிக்கப் பட்டபோது ஓங்கி குரல் கொடுத்த ஒரு இடதுசாரி அரசியல்வாதி. தமிழர்களின் பிரச்சனை நியாயமானது என்று குரல் கொடுப்பவர். புலி கெலி கொண்டு ஓடும்வரை சம்பந்தர் கூட்டமும் விக்கிரபாகு பற்றி பெரிதாகவே பேசினார். இப்போது என்ன நடக்கிறது. பொன்சேகாவுக்கு மாலை சூட்டுகிறார்.

தமிழர்கள் இந்த இருவரில் யாருக்குப் போடாவிட்டாலும் ஒருவர் வெல்வது உறுதி. ஆனால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருங்கிணைந்து வெளிக்காட்ட எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதன் மூலம் சர்வதேசத்தின் முன்னால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்ல, மே 18 முன் நடந்ததெல்லாம் வெறும் வாண வேடிக்கை களியாட்டம் என்று நாமே அவர்களுக்காக நிரூபணம் கொடுத்துவிடுவோம். 

இதுவரை காலமும் இந்தத் தமிழ்கட்சிகள் ஒரு முடிவை ஆராய்ந்து சாதக பாதகங்களை கணக்கெடுத்து எமது எதிர்காலம் பற்றிச் சிந்தித்து செயலாற்றியது கிடையாது. இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தலையாட்டிப் பிழைத்த கூட்டம் தான் இந்தக் கூட்டமைப்பும் கட்சிகளும். இந்தத் தேர்தலில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை இம்முறை நீங்களே சிந்தித்து எடுங்கள். விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் குறைந்தபட்சம் இவர்களது போர்க்குற்றத்தையாவது நாம் அறைந்து சொல்ல முடியும்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை 500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்து, அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும், வவுனியாவில் 5 இடங்களும், வெலிக்கந்தையில் 3 இடங்களும், திருகோணமலையில் 3 இடங்களும், மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறை, விவசாயத் துறை, கணனிசார் துறை, மிருகவளர்ப்பு, தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறை, விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசை, நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10, 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2,500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2,500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும், 2,000க்கும் அதிகமானவர்கள் முல்லைத்தீவையும், சுமார் 1,000 பேர் வவுனியாவையும், சுமார் 500 பேர் மட்டக்களப்பையும், 500க்கும் அதிகமானவர்கள் மன்னாரையும், சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகா இன்று புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகிறார்

dalas_alahapperuma.jpgஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மையாகிவிட்டார். எனவே, எதிர்வரும் 26 ஆம் திகதியை இந்த நாட்டு மக்கள் தீர்க்கமானதும் உணர்வுபூர்வமானதுமான தினமாகக் கருதி செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும், போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பு மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார்.  எதிர்வரும் 27 ஆம் திகதி வரப்போகின்ற தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எமது ஜனாதிபதி பாரிய வெற்றியை ஈட்டுவார். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக சுயாதீன மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களால் செய்யப்பட்டுவரும் கருத்து கணிப்புக்களில் ஜனாதிபதி முன்னிலையில் இருக்கின்றார். இரண்டாவது காரணமாக ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிக கூடிய மக்கள் வெள்ளத்தை பாருங்கள். நாளுக்குநாள் மணிக்கு மணி மக்கள் திரண்டுவருகின்றனர். மூன்றாவதாக இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கைப் பிரடகனங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்.

உதாரணமாக எதிரணி வேட்பாளர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்ததும் எமது கொள்கை பிரகடனத்திலும் அதிகரித்த சம்பள உயர்வை அறிவிக்கவேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் 2500 ரூபாவே வழங்க முடியும் என்றும் அதுவே யதார்த்தமானது என்றும் ஜனாதிபதி கூறிவிட்டார். மறுநாள் தபால் மூல வாக்களிப்பை வைத்துக்கொண்டு இவ்வாறு கூறி ஜனாதிபதி தனது சிறந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டினார்.

நான்காவது விடயமாக தொழில்சார் நிபுணர்கள் எமது தூண்டுதல் இல்லாமல் ஜனாதிபதிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஐந்தாவது விடயமாக இரண்டு வேட்பாளர்களினதும் வார்த்தை பிரயோகங்களை பார்க்கவேண்டும்.

எதிரணி வேட்பாளர் தகுதியற்ற வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து வருகின்றார். கடந்த காலங்களில் ஐந்து ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றன. ஆனால் தற்போது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அதிகாரத்தை எடுப்பதற்கு முயற்சிக்கும்போதே இவ்வாறு நடந்துகொள்ளும் ஒருவர் அதிகாரத்தை எடுத்தால் என்ன நடக்கும்?

கடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட தனது கட்சியை மிகவும் ஒழுக்கமான முறையில் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்.

ஆறாவது விடயமாக அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை அவதானிக்கவேண்டும். எமது ஜனாதிபதியிடம் தெளிவான கொள்கைகள் இருக்கின்றன. ஆனால் எதிரணிடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இன்று எதிரணி வேட்பாளர் ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் பொம்மையாக மாறிவிட்டார்.

ஒருகாலத்தில் ஈழம் குறித்து எண்ணங்களுடன் இருந்தவர்கள் கடந்த மே 19 ஆம் திகதியுடன் அதனை கைவிட்டனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த எண்ணங்களை மீட்டுகின்றனர்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று தமிழ்த் தலைமைகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளன. இது ஆரோக்கியமான நிலைமையாகும். சேறுபூசும் கலாசாரத்தை இரண்டு தரப்பினரும் கைவிடவேண்டும்.

எந்த அடிப்படையுமின்றி சில இணையதளங்கள் இன்று ஜனாதிபதி மீது சேறுபூசுகின்றன. ஏன் அவர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறையிடவில்லை? பாராளுமன்றத்தில் ஏன் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவில்லை?

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. ரயிலில் செல்ல முடியாது. அனைவரும் சந்தேகக்கண்டுகொண்டு பார்த்தனர். அரசியல்வாதிளாகிய நாங்களும் ஊடகங்கள் முன் வந்து பொதிகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு கோரினோம். எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார். அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெரியும். தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள்.

எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கனடா பத்திரிகை ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு தெரியும். மேலும் யுத்தம் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு தேவையில்லை என்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.