2010

2010

ஊடகவியளாளர், தொடர்பு ஊடகங்கள் மற்றும் அவர்களின் அரசியல்: மீராபாரதி

மனிதர்கள் மட்டுமல்ல காட்டில் வாழும் மிருகங்களும் சமுத்திரங்களும் அதில் வாழும் மீன்களும், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட வானவெளியும் பிரபஞ்சமும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதனை இன்றைய அதிநவீன தொழில்நுட்ப மற்றும் செய்தி பரிவர்த்தனை புரட்சி உலகில் காண்கின்றோம். ஏனெனில் மனிதர்களின் அரசியல் செயற்பாடுகள், இவை ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு வகையில் நேர்மறையாகவே எதிர்மறையாகவோ பாதிக்கின்றது. இப்படியிருக்கும்பொழுது ஊடகவியளார்கள் மட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது அல்லது அவ்வாறு கற்பிக்க முனைவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல நகைச்சுவையானதும் கூட. மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும் என வரையறுப்பது வரட்டுத்தனமான வாதமாகும்.

அண்மையில் நடந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் ஊடகங்களில் பணிபுரிபர்களாக இருந்துள்ளனர். இவ்வாறு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவது ஏதோ ஊடகத்துறையின் கற்புத்தன்மையை களங்கப்படுத்தி விட்டது அல்லது களங்கப்படுத்திவிடும் என்ற தொனியில் கருத்துக்கள் வெளிவந்தன. இதன்மூலம் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் இந்த ஊடகங்களை வெளீயிடும் நிர்வாகிகள் அல்லது முதலீட்டாளர்கள் ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லது நடுநிலையானவர்கள் என நம்புவது, வாதிடுபது அல்லது கற்பிதம் செய்வது உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு வாதிட முனைபவர்கள் ஒன்று ஊடகவியலிலிருக்கும் அரசியலை புரியாமல் எழுதுகின்றார்கள். அல்லது புரிந்தும் அந்த உண்மையை திட்டமிட்டு மறைக்க முயல்கின்றார்கள் என எண்ணவேண்டியுள்ளது. மறுபுறம் அரசியல் செயற்பாட்டில் தீவிரமாக இருந்த பலர் ஊடகத்துறையைத் தேர்தெடுத்து ஊடகவியலாளர்களாக சிறந்த பங்களிப்பை ஆற்றி ஊடகத்துறைக்கு பங்களிப்பும் செய்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. அதேவேளை ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கும் பலர் வந்துள்ளனர்.

ஒரு மனிதர் தனக்கென ஒரு அரசியல் கருத்தொன்றை கொண்டிருப்பது வரலாற்றில் என்றுமே தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவசியமான ஒன்றும் கூட. அதேவேளை, பொதுசன ஊடகம் போன்ற பலமுனைக் கருத்துகளை வெளியிடக் கூடிய சாத்தியம் கொண்ட ஒரு தொழிலில் தமக்கு எதிரான கருத்துக்களையும் மதிக்கவும் கேட்கவும் கூடிய தன்மையை ஒவ்வொரு ஊடகவியளாலரும் பிரக்ஞைபூர்வமாக கொண்டிருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஊடக நிறுவனங்களும் தமது சொந்த சமூக அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு விதமான அரசியல் சமூக கருத்துக்களை அது தொடர்பான விவாதங்களை விமர்சனங்களை நேர்மையாக வெளியிடுபவர்களாக இருக்கும் பொழுதே ஒரு ஊடகமானது ஒரு சமூகத்தின் காலக்கண்ணாடியாக செயற்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கும். அதாவது நாம் ஒரு கருத்துடன் உடன்படவில்லையாயினும் அக் கருத்தை குறிப்பிட்ட நபர் சொல்லுவதற்கும் அதை வெளியிடுவதற்குமான உரிமையை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும் அதேவேளை அக் கருத்தை பிரசுரிக்கவும் வேண்டியது பொதுசன ஊடகங்களின் கடமையும் பொறுப்புமாகும். அப்பொழுதுதான் ஊடக தர்மம் பக்கச்சார்பின்றிப் பேணப்படுகின்றது எனக் கூறலாம். இதற்குமாறாக ஒரு ஊடக செய்தியாளராக அல்லது அதன் நிறுவனராக தனக்கிருக்கும் அதிகாரத்தினால் தனது கருத்துக்கு எதிரான கருத்தை வெளியிடாது புறக்கணித்து இருட்டடிப்பு செய்யும் பொழுது ஒரு ஊடகவியளாளராக, பொதுசன ஊடகமாக இத் தொழிலின் நடுநிலை தர்மத்தை மதிக்காது மீறுகின்றார் அல்லது மீறுகின்றது எனக் கூறலாம்.

இக் கட்டுரையின் நோக்கம் ஊடகவியளர்கள், மற்றும் தொடர்பூடக நிறுவனங்கள் என்பன அரசியலுடன் நேரடியாகவோ அதாவது வெளிப்படையாவோ அல்லது மறைமுகமாகவோ உறவைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதே. இந்த உறவு தொடர்பாக நாம் ஆழமானதும் விரிவானதுமான பார்வையைக் கொண்டிருக்கவேண்டிய தேவையிருக்கின்றது. இது தொடர்பாக குளோபல் தமிழ் நயூஸ் மின்வலை செய்தி ஊடகத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. துரதிஸ்டவசமாக அக் கட்டுரையாளரையும் வெளிவந்த திகதியையும் மீளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக் கட்டுரையை வாசித்ததன் விளைவே இக் கட்டுரை.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதாவது மனிதர்கள் அரசியல் மிருகம் என பொதுவாக கூறுவார்கள். பெரும்பான்மையான மனிதர்கள் தமது அரசியலை பொது இடங்களில் வெளிக்காட்ட மாட்டார்கள். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் தமது பங்களிப்பைச் செய்து அதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். இவர்களது அரசியல் (நிலைப்பாடு) தனிப்பட்டளவில் மறைமுகமானதாகவும் பொதுவானளவில் வெளித்தெரிவதானதாகவும் இருக்கும். மனிதர்களில் சிலர் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது ஆற்றலுக்கமைய தமது அரசியலை முன்னெடுத்துச் செயற்படுவதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர். இந்த வரையறைகள் பொதுசன ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பொதுவானதாக பொருந்துவதாக இருக்கின்றது எனலாம்.

பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் தமது அரசியலை வெளிப்படுத்தாது தம்மை நடுநிலையானவர்களாக வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய தேவை தொடர்பூடகத்துறையைப் பொறுத்தவரை இருக்கின்றது. ஏனெனில் “பொதுசன ஊடகங்கள் நடுநிலையானவை” என்ற ஊடகத் தர்மத்தை முன்னிலைப்படுத்தியே தம்மை நியாயமானவர்களாக நேர்மையானவர்களாக நிலைநிறுத்த முயல்கின்றனர். இதனால் நடுநிலையான ஊடகவியலாளர் என்ற ஊடக தர்மத்தைக் காப்பதற்கும் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்துவதற்கும்; தமது தனிப்பட்ட அரசியலை மறைக்கவேண்டியோ அல்லது தள்ளிவைக்க வேண்டிய தேவை தம் ஊடகத் தொழில்துறை சார்ந்து ஊடகங்களுக்கும் ஊடகவியளாளர்களாக பணிபுரிபவர்களுக்கு இருக்கின்றது. இதனால் இவர்களுக்கு தனிப்பட்ட அரசியலோ அல்லது அரசியல் பார்வையோ இல்லை என்பது உண்மைக்குப் புறம்பான ஒரு கூற்றும் சற்று மிகைப்படுத்தலுமாகும். ஏனனில் இவர்கள் எந்த கருத்துக்களின் அடிப்படையில் தமது செய்திகளை மற்றும் கட்டுரைகளை எழுதுகின்றனர் அல்லது சேகரிக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் மற்றும் தமது கேள்விக்கனைகளை எவ்வாறு தொகுக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் ஒரு ஊடகவியலாளர்களது அரசியல் வெளிப்படும். மேலும் இவ்வாறான ஆக்கங்களில் எப்படியானவற்றை எவ்வாறு முன்னிலைப்படுத்துகின்றனர் அல்லது பின்னிலைப்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து ஊடக நிறுவனங்களின் அரசியல் வெளிப்படும்.

இதற்கு மாறாக சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவர்களுக்கு ஊடகத்துறை என்பது தமது அரசியலை பொது மனிதர்களிடம் முன்வைப்பதற்கானதும் இதனடிப்படையிலான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கானதுமான ஒரு சாதனமே. ஆகவே ஒரு பொதுசன ஊடகமானது அதைச் செயற்படுத்தும் நிர்வாகிகளைப் பொறுத்தும் பணியாற்றுகின்ற ஊடகவியளாலர்களைப் பொறுத்தும், ஒரு வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ அல்லது ஒரு அரசியல் செயற்பாடாகவோ பரிணாமம் பெறுகின்றது.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் மறைவாகவே வெளிப்படையாகவே இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகவியளாருக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் மறுக்க முடியாத ஒரு உண்மையுமாகும். ஒரு மனிதர் தனது வாழ்க்கைக்கான ஆதராமாக தனது திறன்களுக்கமைய ஊடகவியலாளர் என்ற தொழிலை தேர்தெடுக்கலாம். சில மனிதர்கள் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவும் சூழல் நிலைமைகளுக்காகவும் ஊடகவியளாளர்கள் என்ற புதிய அல்லது இன்னுமொரு அடையாளத்தை தேர்தெடுக்கின்றனர். இவ்வாறன தேர்வுக்கு தமது கருத்துக்களை வெளிக்கொண்டு வரவும் மற்றும் தொடர்ந்தும் சமூகத்தில் செயற்படுவதற்கான ஒரு வழி எனப் பல காரணங்கள் இவர்களுக்கு இருக்கலாம். மறுபுறம் ஒரு ஊடகவியளாலராக நடுநிலையானவராக முடிந்தளவு தனது ஊடக்துறைப் பணியை சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளலாம். இதற்காக தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றோ அல்லது தனக்கென ஒரு அரசியல் இல்லை என வாதிடுவதோ உண்மைக்குப் புற்ம்பானதாகவும் அவசியமற்றதாகவுமே இருக்கும். அல்லது இதன் மறுதலை, இவ்வாறு ஒருவர் கூறுவதே அவரது அரசியலை வெளிப்படுத்துகின்றது எனலாம். அதாவது ஒருவர் தனக்கு அரசியல் இல்லை என மறுப்பதும் ஒரு அரசியல் நிலைப்பாடே.

ஊடகவியளார்க்கு அரசியல் ஒன்று இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதவாது வியாபார மற்றும் இலாப நோக்கத்தையே பிரதானமாகவும் அடிப்படையாகவும் கொண்டு வெளிவரும் ஊடகங்களுக்கும் அரசியல் இருக்கின்றது. ஆனால் இதன் அரசியல் நேரிடையானதல்ல மாறாக மறைமுகமானது. இந்த ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை ஆக்கங்களை வெளிவிடுகின்றது என்பதிலும் அதாவது வடிவமைப்பில் இவற்றிக்கு அளிக்கப்படும் முக்கியத்தும் மற்றும் அவற்றுக்குள் மறைந்திருக்கும் உட்கருத்துக்களின் ஊடாக அதன் அரசியல் வெளிவருகின்றது எனலாம். இவ்வாறான ஊடகங்களின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இதன் ஆக்கங்களையும் செய்திகளையும் அதன் வடிவமைப்பையும் பல்முனைகளில் கட்டுடைப்பு செய்து ஆய்வு செய்வதன் மூலம் சாத்தியமானது. மறுபுறம் சமூக அக்கறையுடன் சமூக மாற்றத்திற்கான நோக்கத்துடனும்; அரசியல் கட்சிகள் சார்ந்தும் சாராமலும் ஆனால் வெளிப்படையாக தமது அரசியல் நோக்கங்களை முன்வைத்தும் சில பொதுசன ஊடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுக்கு வியாபாரம் மற்றும் இலாபம் பெறுவதற்கு அப்பால் தமது கருத்துக்களையும் பல்வேறு புதிய கருத்துக்களையும் பொது மனிதர்களிடம் கொண்டு செல்வதும் அது தொடர்பான உரையாடலை ஊக்குவிப்பதையும் மற்றும் புதிய கருத்து மேலாதிக்கத்தை நிறுவுவதையுமே நோக்கமாக கொண்டிருக்கும்.

உதாரணமாக தினகரன் போன்ற தமிழ் பத்திரிகைகள் அராசாங்க நிறுவனங்களே வெளியிடுவதால் இது எப்பொழுதும் எந்த கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ இது சார்ந்த அரசியலையே வெளிக்கொண்டு வருவதாக இருக்கின்றது. வீரகேசரி போன்ற பத்திரிகைககள் நீண்ட காலமாக நடுநிலையான பத்திரிகையாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட ஒரு பொதுசன ஊடக வரலாறு இதற்கு இருந்தபோதும் போதும் இதற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாதது. இதன் அரசியல் குறிப்பாக மிதவாத தமிழ் தேசிய அரசியல் எனக் குறிப்பிடலாம். இப்பத்திரிகை பொதுவாக மலையக மற்றும் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மனிதர்களின் மிதவாத அரசியலை பொதுவாக பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் கூறலாம்.

தினக்குரல் பத்திரிகையானது வீரகேசரி பத்திரிகைக்கு மாற்றீடாக நடாளாவிய ரீதியில் வெளிவந்தபோதும், வடக்கு கிழக்கு தமிழ் தேசியத்தை குறிப்பாக யாழ் மையவாதத்தையும் மற்றும் மிதவாதமும் தீவிரவாதமும் கொண்ட கலவையாக தனது அரசியலை பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் குறிப்பிடலாம். இதுபோன்று பல பத்திரிகைகள் நாடாளாவிய ரீதியில் வெளிவராமல் பிரதேச அடிப்படையில் வெளிவருவதுடன் அப் பிரதேச அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாக இருக்கின்றன. இந்தடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீண்ட காலம் வெளிவந்த ஈழநாடு பத்திரிகை முக்கியமானதும் ஒரளவு “நடுநிலை” போக்குடனும் ஊடக தர்மத்தை பேணி வெளிவந்ததது எனக் கூறலாம். இருப்பினும் இப் பத்திரிகையும் யாழ் மையவாத தமிழ் தேசிய அரசியலையே தனது அடிநாதமாக கொண்டிருந்தது எனக் கூறினால் தவறல்ல. இதேபோல் (யாழ்.) உதயன் ஆரம்ப காலங்களில் வியாபார நோக்கதையே பிரதானமாக கொண்டு வெளிவந்தபோதும் இதுவும் யாழ் மையவாத மிதவாத அரசியலிலிருந்து விலகவில்லை எனலாம். மேலும் யுத்த காலங்களிலும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் குறிப்பாக யாழிலிருந்து வெளிவருதால் அரசியல் முக்கியத்துவம் கொண்ட பத்திரிகையாக மாற்றம் கொண்டது என்றால் தவறல்ல.

இது போன்று ஈழமுரசு ஈழநாதம் என்ற பத்தரிகைகளும் யாழிலிருந்து வெளிவந்தன. இப் பத்திரிகைகள் தமது அரசியலை நேரடியாக வெளிப்படையாக கூறியோ முன்வைக்காதபோதும் யாழ். மையவாத தமிழ் தேசிய அரசியலை முதன்மைப்படுத்தி வெளிவந்தன எனக் கூறலாம். இதற்கு அன்றிருந்த சுழலா அல்லது பத்திரிகை நிர்வாகமாக அல்லது அதில் பணியாற்றி ஊடகவியளாலர்களா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏற்கனவே கூறியது போல் தமது செய்திகளையும் ஆக்கங்களையும் எவ்வாறு எதனப்படையில் எழுதுகின்றனர் என்பதைப் பொறுத்தும் எதற்கு முக்கியத்துவமளித்தன என்பதைப் பொருத்தும் இவர்களது அரசியல் வெளிப்படுகின்றது. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிறுபிக்கலாம். இதனால் இந்த ஊடகங்களுக்கு என சொந்தமாக ஒரு அரசியல் இருக்கவில்லை என கூறி நிராகரிக்க முடியாது. மேலும் இந்த ஊடக நிறுவனங்களுக்கு பொசுசன ஊடகம் என்பது வியாபாரம் என்பதும் இத் தொழில் மூலம் இலாபம் பெறுவதும் முக்கியமானதும் பிரதானமாதுமான ஒரு நோக்கமாக இருக்கின்றது என்பதையும் குறித்துக்கொள்வது அவசியமானது. வடக்கிலிருந்து வெளிவந்த இப்பத்திரிகைகள் போன்று கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்தும் இவ்வாறன பிரதேச பத்திரிகைகள் வெளிவந்தனவா என்ற தகவல்களை அறியாமையினால் இங்கு குறிப்பிடாது தவிர்க்கின்றேன்.

தினமுரசு போன்ற பத்திரிகைகள் முற்று முழுதான ஜனரஞ்சக அடிப்படையில் வெளிவந்த போதும் தமிழ் தேசிய அரசியலையே பிரதானமாக கொண்டு வெளிவந்தது என்பதற்கு அரசியல் நோக்கம் மட்டுமல்ல வியாபார நோக்கமும் ஒரு காரணம் என்றால் பொய்யல்ல. திசை போன்ற பத்திரிகைகள் குறுகிய காலம் வெளிவந்தாலும் கலை இலக்கிய பார்வையை பிரதானமாக முன்வைத்தாலும் இதற்கும் தமிழ் தேசிய வாத அரசியல் இருந்தது என்பதை நிராகரிக்க முடியாது. இவற்றுக்கு மாறாக சரிநிகர் போன்ற பத்திரிகைகள் மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளிலிருந்து வேறுபடுவது அதனது வெளிப்படையான அரசியலாலும்; மற்றும் வியாபார நோக்கமற்ற அதன் தன்மையாலும் எனக் கூறுவது மிகையானதல்ல. இப் பத்திரிகையானது தமிழ் தேசிய அரசியலை பிரதானமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்தாலும் குறிப்பாக தமிழ் மிதவாத அரசியலிலிருந்தும் மற்றும் புலி தலைமையின் ஏகபோக அரசியலிலிருந்தும் புலி எதிர்ப்பு இயக்கங்களின் அரசியலிலிருந்தும் தம்மை வேறுபடுத்தி ஒரளவாவது “முற்போக்கானதும்” ஆரோக்கியமானதுமான அரசியலுக்கான உரையாடல் களத்தை உருவாக்கி வெளிவந்த ஒரு பத்திரிகை எனக் குறிப்பிடலாம். இப்படி ஒவ்வொரு ஊடகங்களும் தமது அரசியலை ஏதோர ஒரு வகையில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வந்துதுள்ளன, வருகின்றன.

இதுபோலவே இன்றைய தொழில்நுட்ப தொடர்பூடக தகவல் பரிமாற்றப் புரட்சி காலத்தில் வலை சஞ்சிகைகள் முக்கியத்தும் பெற்றுவருகின்றன என்பது நாமறிந்ததே. மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள் போன்று இந்த சஞ்சிகைகளுக்கும் அவர்களுக்கான ஒரு அரசியலை கொண்டுள்ளன. உதாரணமாக “தேனீ” போன்றன அரசாங்க சார்பு அல்லது அரசாங்கத்துடன் சமரச போக்கு கொண்ட அரசியலை வெளிப்படுத்தியும் புலி எதிர்ப்பும் மட்டுமல்ல தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலையும் முன்வைத்து தமது செய்திகளை ஆக்கங்களை வெளியிடுகின்றன என்றால் தவறல்ல.

“தேசம்நெட்” தனக்கென ஒரு அரசியலை கொண்டிருந்தபோதும் தனது அரசியல் நிலைப்பாட்டில் இரு எல்லைகளுக்குள் மாறி மாறி பயணிக்கின்றதா என்ற சந்தேகத்தை அல்லது கேள்வியை எழுப்புகின்றது. அதாவது அரச சார்பு மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் தேசிய அரசியல் என்ற இரு எல்லைகளுக்குள் பயணிக்கின்றதா அல்லது பல் முனைக் கருத்துக்களுக்கு இடமளிப்பதன் மூலம் தனது நடுநிலையைப் பேணுகின்றதா என்பது ஆய்வுக்குரிய வியடம். இதற்கு மாறாக “இனியொரு” போன்றன குறிப்பாக இடதுசாரி அல்லது சமூக மாற்றத்திற்கான அரசியலை நேரடியாக முன்வைக்கின்றன. “குளோபல் தமிழ் நியூஸ்” வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாகவும், பிரதானமாகவும் கொண்டு ஒரு வலை ஊடகத்திற்குரிய தன்மையுடன் வெளிவருகின்றது எனக் கூறலாம். “தமிழ் நெட்” “தமிழ்வின்”, “சங்கப்பலகை” என்பன யாழ்மையவாத குறிப்பாக புலிகளின் தமிழ்தேசிய அரசியலை முன்வைக்கும் அதேவேளை தமக்கு எதிரானவர்களுக்கான எதிர்ப்பு அரசியலையும் முன்வைக்கின்றது எனக் குறிப்பிடுவது மிகையானதல்ல. இதேபோல “நெருப்பு” “அதிரடி” போன்ற வலை சஞ்சிகைகள் தாம் சார்ந்த இயக்கங்களின் அரசியலை முன்னிலைப்படுத்தியும் புலி எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்கின்றன எனக் கூறலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்காவில் தீவிரமாக செயற்பட்ட ஊடகங்களினதும் ஊடகவியளாலார்களினதும் பங்களிப்பை குறித்துச் செல்வது நல்லது. சிறிலங்காவில் 1970 ஆண்டிலும் பின் 1987ம் ஆண்லும் ஜே.வி.பி யின் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் பின் ஊடகவியாளராக பரிணமித்திருந்தனர். இதில் குறிப்பிடக் கூடியவர்கள் “ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், “யுக்திய” பத்திரிகையின் ஆசிரியர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் இன்றைய முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான வீமல் வீரவன்ச பணியாற்றிய “ஹிரு” மற்றும் “லக்திவ” பத்தரிகைகள். இதில் விக்டரும் சுனந்தவும் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் பொதுவான மனித உரிமைகள் தொடர்பாகவும் அக்கறை கொண்டு மிகவும் தீவிரமாக ஊடகத்துறையில் தென்னிலங்கையில் செயற்பட்டவர்கள் எனக் கூறலாம். மேலும் தமது முழு அரசியற் செயற்பாட்டையும் ஊடகத்துறைககூடாகவே பெரும்பாலும் மேற்கொண்டது மட்டுமல்ல இச் செயற்பாடுகளும் இவர்களது ஊடகங்களும் குறிப்பான ஒரு தாக்கத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சந்திரிகாவின் ஆடம்பரமான சமாதானப்புறா வருகையானது இருவரையும் இவர்கள் சார்ந்த ஊடகங்களையும் தடுமாறவைத்தது. அன்று விழுந்த விக்டர் ஐவன் இன்னும் அதன் அரசியலிருந்து எழுப்பவில்லை. இப்பொழுதும் மகிந்தவிற்கு சார்பாக இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

சுனந்த அறியமுடியாத சில காரணங்களால் இவ்வாறன அரசியலிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதாக தெரிகின்றது. இவர்கள் இருவரிலுமிருந்து வேறுபட்டது விமல் வீரவன்ச(வின்) சார்ந்த ஊடகத்துறை செயற்பாடு. ஏனெனில் இவர்கள் தாம் சார்ந்த ஊடகத்தை ஒரு இயக்கமாக தொலைநோக்குப் பார்வையுடனே தமது அரசியலின் அடிப்படையில் வழிநடாத்தினர் என்றால் மிகையான கூற்றல்ல. இதற்கு காரணம் இவர்கள் சார்ந்த அரசியல் கட்சி இயக்கமான ஜே.வி.பி அன்று தடைசெய்யப் பட்டிருந்தமையே. ஆகவே ஊடக செயற்பாட்டினுடாக தமது இயக்கத்தை இயங்கு நிலையில் தொடர்ந்தும் வைத்திருந்தனர். தம் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட பின் தம் ஊடகத்துறை செயற்பாட்டை, கட்சி சார்ந்த செயற்பாடாக சாதகமாக இலகுவாக மாற்றிக் கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடியளவிற்கு தம் தொடர்புகளை வலைப்பின்னல்களை ஊடகத் துறையுடாக உருவாக்கியிருந்தனர். சிங்கள தீவிரவாத “இடதுசாரி” அரசியலைப் பொறுத்தவரை இவர்களது ஊடத்துறை செயற்பாடு சாதகமானதே. ஆனால் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் வீமல் வீரவன்ச சார்ந்தவர்களின் ஊடகத்துறை மற்றும் கட்சி அரசியல் முன்னைய இருவரையும் விட தமிழ் பேசும் மனிதர்களது விடுதலைக்கு எதிரானதாகவும் இனவாத அரசியலாகவுமே இருக்கின்றது. வீமல் வீரவன்ச இன்றும் தனது கருத்துக்கள் செயற்பாடுகள் மூலம் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் தமிழ் பேசும் அரசியற் செற்பாட்டாளர்கள் சமூகத்தில் தாக்கம் நிகழ்த்தக் கூடியவாறு ஊடத்துறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இவர்களிடமிருந்து கற்பதில் தவறில்லை.

தமிழ் பேசும் சூழலில் இந்தளவிற்கு ஒரு ஊடகத்துறை அல்லது ஊடகவியலாளர்கள் இவ்வாறன ஒரு தாக்கத்தை செலுத்தியிருந்ததா அல்லது செலுத்தியிருந்தார்களா என்பது கேள்விக்குரியது. பல முன்னால் இயக்க அங்கத்தவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டினாலும் அதனுடன் இருந்த ஈடுபாட்டினாலும் மேற்கொண்டு தாம் விரும்பும் அரசியலை முன்னெடுத்து செயற்பட முடியாத சூழல்நிலையாலும் பொதுசன தொடர்பூடகங்களில் இணைந்து பங்காற்றுவதனூடாக தமது அரசியலை முன்னெடு(த்தனர்)க்கின்றனர். இவர்கள் எந்தளவு பொறுப்புடன் தமது அரசியலை முன்வைத்து ஊடகத்துறையை பயன்படுத்தினர் என்பது தொடர்பாக நாம் பார்ப்பது அவசியமானது. ஏனனில் இதுவே ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதோ அல்லது அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வருவதையோ மேற்குறிப்பட்ட ஜீ.டி.என். கட்டுரையில் கேள்விக்குட்படுத்தியதற்கான பதிலைத் தரும்.

உதாரணமாக அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வந்த சிவராம் இலங்கையின் ஊடகத்துறையில் குறிப்பிட்ட தாக்கத்தை செலுத்தியவராக கருதப்படுகின்றார். இவரது சிந்தனைத் திறன் மொழியாற்றல் எழுத்தாற்றல் மற்றும் ஊடகத்துறை குறிப்பாக அவரது செய்தி சேகரிக்கும் திறன் தொடர்பாக யாரும் கேள்வி கேட்க முடியாது. இவரது இந்த ஆற்றல்கைளை அனைவரும் வியப்புடனும் மதிப்புடனும் மட்டும் பார்க்கவில்லை சந்தேகத்துடனும் பார்த்தனர் என்பது மறுப்பதற்கில்லை. ஒரு ஊடகவியலாளரா சிறந்தும் பிரபல்யமாகவும் விளங்கியபோதும் இவர் ஊடகத்துறையூடாக முன்வைத்த அரசியல் நேர்மையானதா என்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதல்ல. இவர் அரசியலிலிருந்து விலகிய ஒரு பத்திரிகையாளராக, ஆரம்பத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலை அடிப்படையாக முன்வைத்ததுடன் குறிப்பாக புலிகளின் அரசியலை ஒரு புறமும் சிறிலங்கா அரசினதும் மற்றும் அவர்களுடன் செயற்பட்ட தமிழ் இயக்கங்களின் அரசியலை மறுபுறமும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தவர் எனக் குறிப்பிடலாம். இவ்வாறன ஒரு போக்கை தொடர்ந்தும் பினன்பற்றியிருப்பாரேயானால் ஊடகத்துறையூடாக தமிழ் தேசிய அரசியலில் குறிப்பிட்ட தாக்கத்தை இவரால் ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால் காலோட்டத்தில் இவ்வாறன ஒரு நிலையிலிருந்து விடுபட்டு சிறிது சிறிதாக மாறி, இறுதிக் காலங்களில் புலிகள் சார்ந்த தமிழ் தேசியவாத அரசியலை எந்த விமர்சனமுமின்றி ஊடகத்துறையூடாக பிரதிநிதித்துவப்படுத்தியவர் எனக் கூறலாம். இதை நியாயப்படுத்தி அல்லது தன் பக்க நியாயத்தை இவர் உயிருடன் இருந்தபோது தன் நண்பர்கள் பலரிடம் முன்வைத்திருப்பார்.

இன்றும் இவரது பல நண்பர்கள் அவர் இறுதிக் காலங்களில் முன்வைத்த அரசியலை நியாயப்படுத்தி வாதிக்கலாம். ஆனால் தனது தொடர்பூடக ஆற்றல்கள் அனைத்தையும் புலிகளை நியாயப்டுத்துவதிலும், அவர்களது இராணுவ தந்திரங்களையும் ஆற்றல்களையும், புகழ்பாடுவதற்கு மட்டும் பயன்படுத்தியமையால் புலிகள் தொடர்பான ஒரு மாயை தமிழ் பேசும் மனிதர்களிடமும் குறிப்பாக புகலிட மனிதர்களிடமும் மற்றும் சிங்கள பேசும் மனிதர்களிடமும் ஏற்படுத்தினார் என்றால் தவறல்ல. அதாவது புலிகளின் இராணுவ ஆய்வாளராக இவரும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ ஆய்வாளராக இக்பால் அத்தாஸம் இருந்தார்கள் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன். இதற்கு மாறாக புலிகள் முன்னெடுத்த குறுகிய நோக்கிலான ஆயுதப் போராட்டம் மற்றும் அது செல்லும் திசை தொடர்பாக தனது எழுத்தை ஆரோக்கியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்திருந்தால் சிலவேளைகளில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் நிலையைத் தவிர்த்திருக்காலாமா என உணர்கின்றேன்.

இவர் 2005 ஆண்டு இறந்தபொழுது, இவர் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருந்தேன். தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அறிகின்றேன். இதில் ஒரு விடயம் குறிப்பிட்டிருந்தேன். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது எனக் கருதுகின்றேன். அதாவது ஒருவரது அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்து ஊடகங்களும் ஊடகவியளாலர்களும் அவரை எவ்வாறு விளிக்கின்றனர் என்பது தொடர்பானதே அது. அதாவது தமது கருத்துக்கு சார்பானவராக இருந்தால் “அவர்” என மதிப்புடனும் மரியாதையுடனும் எழுதுவார்கள். இதற்கு மாறாக தமது கருத்துக்கு எதிரானவராக இருந்தால் “அவன்” என எழுதுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறன சொற்கள் எழுதியவரது அரசியலை மட்டும் வெளிப்படுத்தவில்லை மாறாகா ஒரு ஊடகவியளாலராக அவரது நடுநிலையாளராக இருக்கவேண்டிய ஊடக தருமத்தை கேள்விக்குட்படுத்துகின்றது என குறிப்பிட்டிருந்தேன். பல ஊடகவியளாளர்கள் எழுத்தாளர்கள் தமது சமூகத்தின் பிரதானமானதும் பொதுவானதுமான நீரோட்டத்துடன் இணைந்தே தமது ஊடக செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது எந்தவகையிலும் பிரயோசனமானதல்ல. பொதுவான மனிதர்களிடம் இருக்கின்றன அல்லது அவர்கள் மேல் நிலைநாட்டப்பட்ட கருத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதுவதன் மூலம் குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது ஊடகவியளாலர் அக் குறிப்பிட்ட காலத்தில் பிரபல்யமடையலாம். ஏனனில் தம்மை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை பொது மனிதர்கள் எப்பொழுதும் கொண்டாடுவார்கள். இதற்கு மாறாக ஒரு பொது கருத்துக்கு எதிரான அல்லது அதை விமர்சனபூர்வமாக முன்வைக்கும் கருத்துக்கு பரவலான வரவேற்பு இருக்காது.

இந்த நிலைமையானது இலங்கையில் மட்டுமல்ல பொதுவாக உலக வரலாற்றில் காணப்படுகின்ற ஒரு பொதுவான தன்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றது. இதனால்தான் சமூக கருத்துக்களை சம்பவங்களை ஆரோக்கியமான விமர்சன கண்ணோட்டத்துடன் பார்த்து முன்னெடுத்து செல்லுகின்ற ஒரு கலாசாரமோ அல்லது இந்த நிலையில் செயற்படுகின்ற ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தமிழ் சுழலில் இன்று இல்லை இல்லது மிகவும் குறைவாக இருக்கின்றது என்பது கவலைக்கிடமானதும் துர்ப்பாக்கியமானதுமான ஒரு நிலையுமாகும். இதற்கு இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலிருக்கும் சுழலும் ஒரு காரணம் என்பது நாமறிந்ததே.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒன்பது ஊடகவியளாலர்கள் அல்லது ஊடக நிறுவனர்கள் தேர்தலில் பங்குபற்றியிருந்தனர் என பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்காவில் ரூபவாகினியின் பணிப்பாளராக இருந்த பரணவித்தான மகிந்தவின் கட்சி சார்பா பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இதில் பரணவித்தான தனது மாணவப் பருவ காலத்திலிருந்தே ஜாதிக்க சிந்தனையை பின்பற்றுபவராகவும் அந்த இயக்கத்தின் முக்கிய பிரச்சாரராகவும் இருந்துள்ளார். இவருக்கு அரசியல் புதியதல்ல. சிறிரங்கா என்பவரும் ஊடகத்துறையிலிருந்து வந்து ஐ.தே. கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் குறிப்பிட்ட அரசியல் கருத்து சார்ந்து தன்னை வெளிப்படுத்தியவர் அல்ல இவர். வடக்கு கிழக்க பகுதியில் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் த.தே. கூ சார்பாக தேர்தலில் பங்குபற்றி வென்றுள்ளார். இது போன்று பலர் ஊடகத்திலிருந்து அரசியலுக்கும் அரசியலிருந்து ஊடகத்துறைக்கு மாறி மாறி பயணிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கும் ஊடகங்கத்துறைக்குமான உறவுகள் சிக்கலானதாக இருந்தபோதும் எந்தளவு ஊடக தர்மத்தை மதித்து அதனது சுயாதீனத்தை காப்பாற்றுவார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களும், இவர்கள் சார்ந்த ஊடகங்களும் வரலாற்றில் மதிப்பிடப்படும்.

இதனடிப்படையில் நாம் கற்க வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தனது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஊடகத்துறை சுதந்திரத்தையும் சுயாதீன தன்மையையும் மதித்து தமக்கு அல்லது தனக்கு எதிரான சம்பவங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது ஊடக தர்மத்தை பொருத்தவரை முக்கியமானது என்பதே. அப்பொழுதுதான் ஒரு ஊடகவியலாளர் அரசியலில் ஈடுபட்டபோதும் தான் சார்ந்த ஊடகத்தின் சுயாதீன தன்மை பாதிக்காது செயற்படலாம். இதேபோல் அரசியல் செயற்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஊடகத்துறையை எவ்வாறு ஒரு அரசியற் செயற்பாட்டிற்காவும் பொது மனிதர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் ஒரு கருவியாக ஆரோக்கியமாக பயன்படுத்துவது என்பதை பற்றி சிந்திப்பதே. இவ்வாறான ஒரு வழிமுறையே இனிவரும் (சில) காலங்களுக்கான முக்கியமான ஆராக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக இருக்கும் என நம்புகின்றேன். இதை செய்ய நாம் தயாராக இருக்கின்றோமா? தமிழ் பேசும் மனிதர்களுக்கான உலகளாவியளவில் ஒரு ஆரோக்கியமான பத்திரிகையை கொண்டுவரமுடியுமா? இதை இன்று செய்யத தவறுவோமாயின் பிற்போக்காளர்களதும் இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகளினது பலம் மட்டுமல்ல அவர்களது கருத்துக்களே என்று சமூகத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பனவாக இருக்கும். இது எந்தவகையிலும் சமூக மாற்றத்திற்கு வழிகோலாது என்பது நாம் அறிந்துள்ள கசப்பான ஒரு உண்மை.

வடக்கில் மீளக்குடியமர்வோருக்கு புலம்பெயர்ந்தோர் உதவ முன்வர வேண்டும் – பிரதியமைச்சர் முரளிதரன்

karuna.jpgவடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கவும் வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர்ந்துள்ள மக்கள் முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

2003 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலகட்டத்தில் இறுதியாக பிரபாகரனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியை விட்டுவந்த பின்னர் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகருக்கு பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சென்றிருந்தார்.

குறிப்பாக மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற் காகவே அவர் இந்த விஜயத்தை மேற் கொண்டார். மீளக்குடியமர்த்தப்பட்ட 10 குடும்பங்களுள் ஏழு குடும்பத்தில் குடும்பத்தலைவன் இல்லாத அவல நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கணவனை இழந்து பிள்ளைகளுடன் நிற்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் விதத்தில் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயம் செய்பவர்களாயின் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் பிள் ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிகள் பெற்றுக்கொடுக் கப்படல் வேண்டும். முதலில் இவர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதே எனது அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை விட்டு தான் இறுதியாக வரும் போது கண்ட வளமுள்ள நவீன கட்டடங்கள் நிறைந்த நகராக மீண்டும் மாற்றப்பட வேண்டும். இப்போது சோபை இழந்து போன கட்டடங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். புலம்பெயர்ந்துள்ள மக்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து அந்த மக்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் சளைக்காது நாட்டை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

president.jpgஎத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்கு சளைக்காது ஈடுகொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லுவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். இந்த நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவுமென எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ‘வேலைத் தளத்திற்குச் சக்தி, தொழிற்சாலைக்குப் பலம், தாய் மண்ணுக்கு சமாதானம்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று பின்னேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று தொழிலாளர் தினத்தை நாம் பெருமையுடனும், கெளரவமாகவும் கொண்டாடுகின்றோம். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பலனே இது. யுத்தம் நிலவிய காலத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதனை நாமறிவோம்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இந்தப் பாரிய வெற்றியைப் பெற அடித்தளமிட்டவர்கள் தொழிலாளர்கள் தான். மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் வேலைத் தளத்தில் என்ன தான் பிரச்சினைகள் இருந்த போதிலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தொழிலாளர்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசாங்கம் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வுகளையும் வழங்கியது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் தொழிலாளர்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு உடன்படிக்கை மூலம் இணங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நாம் பதவிக்கு வந்ததும் அதனைச் செய்யவில்லை. அரசாங்கத் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்து அரச துறையை வலுப்படுத்தினோம். அரச சொத்துக்கள் எதனையும் நாம் தனியார் மயப்படுத்தவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கானோர் தொழில்களை இழந்தனர். வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன. இருந்தும், எமது எந்தவொரு வங்கியும் வீழ்ச்சி அடையவோ, எவரும் தொழில் இழக்கவோ இடமளிக்கவில்லை. நிதி நெருக்கடிகளிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் நிறுவனங்களையும் வங்கிகளையும் நாம் பாதுகாத்தோம். நாம் நீண்ட காலம் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்ததன் பயனாகவே இதனைச் செய்துகொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தது போல் பிரிந்துள்ள உள்ளங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நான் எதிர்பார்க்கின்றேன். பொருளாதார அபிவிருத்திப் போராட்டத்தின் வீரர்கள் தொழிலாளர்கள் தான். இதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தொழிலாளர்கள் பலம் மிக்க சக்தி கொண்டவர்கள். அவர்களால் எந்தச் சக்தியையும் இறங்கி வரச் செய்ய முடியும். அதனால் தொழிலாளர்கள் தங்கள் பலத்தை பிழையான வழியில் பயன்படுத்தி அதனை வீணடித்து விடாது பாதுகாக்க வேண்டியது தொழிற்சங்க தலைவர்களின் பொறுப்பாகும்.

நாம் ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களை அபிவிருத்தி செய்கின்றோம். இதேபோல், உட்கட்டமைப்பு துறைகளையும் மேம்படுத்தி வருகின்றோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். இந்நாட்டில் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது பொறுப்பு. அமைச்சர்கள் தம்மை விடவும் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எதிரணியினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாட்டைக் கேலி செய்யாதீர்கள் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்நாட்டின் அபிவிருத்திக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறுகிறேன். நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்.

இம்மேதினக் கூட்டத்தில் ஐந்து யோசனைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இ.தொ.கா. மேதின கூட்டத்தில் இரு முக்கிய பிரகடனங்கள் – மலையக பிரதிநிதித்துவம் பாதிக்காத தேர்தல் முறை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று தலவாக்கலையில் நடத்திய மேதினக் கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்களைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்கிற போது தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக இருந்தால், மலையகப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக நுவரெலியாவில் நான்கு தொகுதிகளும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் தலா 2 ஆசனங்களும், இரத்தினபுரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதாகக் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டாவது முக்கிய தீர்மானமாக, பெருந்தோட்டங்களை சீரற்ற நிர்வாகப் போக்கிலிருந்து பாதுகாத் துப் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பைத் தமக்கு வழங்க வேண்டு மெனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

காங்கிரஸின் மேதினக் கூட்டம் அதன் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பீ. தலைமையில் தலவாக்கலையில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.

இடி, மின்னல் தாக்கம்; 12 பேர் உயிரிழப்பு

lightning-01.jpgஇடி,  மின்னல் தாக்கம் காரணமாக ஒரு மாத காலத்தில் பன்னி ரெண்டு (12) பேர் உயிரிழந்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டிஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதியில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இம் மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நேற்று முன்தினம் நொச்சியாகமவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களி லிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ் வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மீண்டும் ஒரு தேர்தல்- மே 2010 : முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

tgta.jpgஏப்ரல் 8ல் தானே இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது, பிறகு என்ன “மே தேர்தல்” என குழம்ப வேண்டாம். இது நம் நாட்டு தேர்தல் அல்ல, ஐ.இ (UK)தில் மே 6ல் நடக்கும் பொதுத் தேர்தலும் அல்ல. இது ஒரு விசித்திரமான தேர்தல். உலகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ள தேர்தல், அதுவும் புலம் பெயர் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் தேர்தல்.

மே 2ம் திகதி முக்கிய மூன்று கண்டங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா வின் முக்கிய நகரங்களில் ஒரே நாளில் “தமிழ் புலி” (Tamil tigers)களின் ஆதரவாளர்கள் இலங்கையின் இறையாண்மையில் (Sovereignty) இருந்து பிரிந்து சென்று தனியான ஒரு ஆட்சியை இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நிறுவி “தமிழ் ஈழம்” (Tamil Ealam) என்ற தனி இறைமை கொண்ட நாடொன்றை (State) பிறசவிப்பதே இத் தேர்தலின் நோக்கு.

இத் தேர்தலுக்கு “நாடு கடந்த தமிழீழ அரசு(Transnational government of Tamil Ealam)” சுக்கான தேர்தல் என்ற பெயரும் சூடப்பட்டுள்ளது. இந்த நா.க.த.அ சின் இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை/அமெரிக்க சட்டத்தரணி திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.

சர்வதேச சட்டத்தில் (International Law) இந்த நாடுகடந்த அரசை தஞ்ச அரசு (Government in Exile) என்றும் அழைப்பர். இந்த தஞ்ச அரசிற்கான சர்வதேச சட்டத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகின்றது:

“இறைமையுள்ள நாட்டின் (அரசொன்றின்) அரசாங்கம் அந்நிய நாடொன்றின் இரானுவத்தால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு, அப்பிரதேசம் அந்நிய நாட்டின் ஆதிக்கதில் இருக்கும் போது அதிகாரம் இழந்த அரசாங்கம் மூன்றாம் நாடொன்றில், அந் நாட்டின் அனுசரணையுடன் தற்காலிகமாக ஒரு அரசாங்கத்தை நிறுவுவது” என்பதாகும்.

இந்த வரைவிலக்கணத்தை இலங்கையுடன், குறிப்பாக இலங்கையின் தமிழ் பிரதேசத்துடன் (வடக்கு, கிழக்கு) பொருத்தி பார்க்கும் போது இது முற்றும் பொருந்துவதாகவில்லை. ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது. இந்த மே 2 தேர்தலில் போட்டி இட்டு நா.க.த.அ சின் உறுப்பினராக வர இருப்போரும் பதவி இழக்கச் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அல்லர். எனவே இந்த நா.க.த.அ என்பது ஒரு தஞ்ச அரசாங்கம் என்ற வரைவிலக்கணத்துக்குள் வரவில்லை. ஆகவே இந்த நா.க.த.அ என்பது சர்வதேச சட்டவரம்பில் ஒரு பரிசோதனை (Experiment) மட்டுமே. பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.

இந்த நா.க.த.அ தேர்தலுக்காக ஐ. இரா (UK) தில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான தனி நாடொன்றை மிக விரைவில் (மூன்று ஆண்டுக்குள்) அமைத்து தமிழரின் சுதந்திர வாழ்வை உறுதிபடுத்துதல், மற்றையது இனஅழிப்பு, போர்குற்றம் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் சகோதரர், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லல் என்பவையாகும். இவை இரண்டும் நடந்தேறுவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் வேட்பாளர்கள் வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றனர். இதை விடவும் ஐ.இரா வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேட்பாளர் ஒருபடி மேலே சென்று இந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் ஆயுத வழிக்குச் செல்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இவர்கள் புலிகள் முடித்த இடத்திலிருந்து தொடங்க எத்தனிக்கின்றனர் எனலாம்.

நிற்க, தமிழர்களுக்குகான தனி நாடென்பது “வட்டுக்கோட்டை தீர்மான (VaddukKodai Resolution)” த்தின் அடிப்படையை கொண்டது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானமானது இலங்கையின் பல்லினத்துவ (Multi Ethnic) தன்மையை குறுக்கி அதை இருவின நாடாக காண முற்படுவது. அதாவது இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இரண்டு இனங்களே உள்ளனர் என்றும், இந்த இனங்களுக்கே அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை (Right to self determination) உள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்கும், கிழக்கும் சேர்ந்த தமிழரின் பூர்வீக நிலத்தில் தமக்கான தனி அரசை நிறுவ தமக்கு தார்மிக ரீதியிலான அரசியல் அதிகாரம் உள்ளதாகவும். அதை சிங்கள அரசு முற்றாக நிராகரிக்கிறது என்பதுமே இந்த வேற்பாளர்களின் ஒட்டுமொத்த அரசியல் ஞானமாகின்றது. இந்த அடிப்படையிலேயே தமது நா.க.த.அ சுக்கான கோரிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த நியாயப்படுத்தலை தான் சர்வதேசத்திடமும் கொண்டு செல்லவுமுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் (Sri Lankan Moors) நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே அப்பிரதேசம் தமிழரைவிட சோனகர்களுக்கே அதிகம் உரித்துடையது. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு தொடர்பாக பேசும் போது அல்லது அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது இலங்கை சோனகர் புறந்தள்ளபட முடியாதுள்ளனர். எனவே அவர்களின் விருப்பு இல்லாமல் அந்த பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் அதிகாரம் இல்லை. மேலும் இந்த இலங்கை சோனகர் தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கும் போது அத்தகைய சூழ்நிலையை எப்படி இந்த நா.க.த.அ எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.

அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர். இதைவிடவும் 2010 ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறமுடியாதுள்ளனர். ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம். ஆக இந்த நா.க.த.அ யாருக்கு என்ற கேள்விற்கு முகங்கொடுக்க வேண்டியவர் இந்த வேற்பாளர்களே. இதை விடவும் இலங்கையின் கடந்த பொதுத் தேர்தலில் புலிகளுடன் ஒட்டி நின்று பிரிவினையை ஆதரித்த முக்கிய போட்டியாளர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளதையும், இந்த நா.க.த.அ ஏற்பாட்டாளர்களுடன் அரசியல் ரீதியாக ஒத்து போகாத ஒருவகை மிதவாத தமிழர்களே மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.

இருந்த போதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழும் (புலி) தமிழர்கள் ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் தமிழ் இனத்தின் விருப்பு வெறுப்புகளையோ, இந்த நா.க.த.அ தொடர்பான அவர்களின்அபிப்பிராயத்தையோ கருத்தில் எடுக்காமல் ஒருதலை பட்சமாக இந்த முடிவுக்கு சென்றுள்ளதென்பது நா.க.த.அ சுக்கான ஏற்பாட்டாளர்களின் அரசியல் மதியீனத்தையும், தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில் அக்கறை இல்லா தன்மையும், சர்வதேச அரசியல் நகர்வுகளை மதிப்பிட திராணியில்லா நிலையையும் தெளிவாக காட்டி நிற்கின்றது.

இந்த உத்தேச நா.க.த.அ க்கு மொத்தமாக 135 பிரதிநிதிகள் உலகளாவிய ரீதியில், இலங்கை நீங்கலாக, தெரிந்தெடுக்கப்படப் போகிறார்கள். இதில் 115 பேர் தேர்தல் மூலமும், 20 பேர் நியமன பிரதிநிதிகளாகவும் உள்வாங்கப்படுவர். ஐ.இ (UK) தில் போட்டியிடும் 38 பேரில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நடைமுறையில் இந்த 135 பேரும் தமிழ் புலிகளின் மே18க்கு பின்னான முகவர்களே. புலிகள் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடித்த அன்றைய த.தே.கூ (TNA) அங்கத்தவலும் பார்க்க இவர்கள் அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாதவர்கள். இவர்களுக்கு இருக்கும் அதி கூடிய தகைமை, ஐ.இ (UK) நா.க.த.அரசுக்கான தேர்தல் வேற்பாளர்களின் ஒப்புதல்படி, 2009ம் ஆண்டு தை முதல் வைகாசி மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அரச எதிர்ப்பு/புலி ஆதரவு ஊர்வலங்களில் கலந்து கொண்டமை. அதே நேரத்தில் இவர்களின் கல்வி தகைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அனேகமாக எல்லோரும் படித்தவர்கள். ஆனாலும் கனடாவில் போட்டியிடுவோரில் அனேகர் பண விவகாரங்களில் கறுப்பு புள்ளி பெற்றவர்களாம். இந்நிலையில் இவர்களின் தகைமை, தகுதி என்பவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக இந்த நா.க.த.அ சை நிறுவுவதற்கான சாத்தியபாட்டையும் அது சுதந்திரமாக வளர்ந்து செல்லும் சாத்தியத்தையும் (Viability) பார்த்தால் அது ஆரம்பிக்கும் வேகத்திலேயே அதன் முடிவையும் சந்திக்கும் என்பதை எதிர்வு கூர்வதில் சிரமம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆக, இந்த நா.க.த.அ என்பது ஒரு பொழுது போக்குக்கான விடயம், புலம்பெயர் அப்பாவி தமிழர் இந்த கனவரசின் நடைமுறை செலவினத்தை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவர். புலம்பெயர் நாட்டின் தேசிய அரசியலில் இருந்து தமிழர்கள் அப்புறப்படுத்தப்படுவர். சர்வதேச ரீதியில் தமிழர் பிரச்சினைக்குரியவர் என்ற நிரந்தர பட்டத்தையும் பெறுவர். எஜமானார்களோ இலங்கையின் முன்னைய புலித் தலைவர்கள் போல் தம் சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பர். ஆகவே இந்த அரசியல் நகர்வு என்பது தமிழ் அரசியலில் அத்தியாயம் 2. புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.

நன்றி, Mohamed SR. Nisthar.(from London)

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

president.jpgசர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது : பயங்கர வாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்துகொண்ட ஒரு தலைவன் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது முன்னேற்றப் பாதையில் தடையாகவிருக்கும் எல்லா சவால்களையும் வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையுடன் அடையப்பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

உழைக்கும் மக்களுக்கு வெற்றி கிட்டுமாகுக.

எதிர்கால சவாலை வெற்றிக்கொள்ள இத்தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் – பிரதமர் மேதினச் செய்தி

deemu.jpgமூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்திலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரமானதும் அடிமையற்றதுமான நாட்டில் கொண்டாடப்படும் இந்த உலகத் தொழிலாளர் தினத்தை, எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான திடசங்கற்பத்தை உழைக்கும் மக்களின் மனங்களில் பதியச் செய்யும் தினமாகக் கருதுவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சாலையிலும் விவசாய மண்ணிலும் மற்றம் கடலிலும் உழைத்து வியர்வை சிந்தும் சகல ஊழியர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்கும் சவாலே இன்று எம்முன் உள்ளது.

இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களுடன் பங்களிப்புச் செய்வது எனது எதிர்பார்ப்பாகும். நமது நாடு நெருக்கடியைச் சந்தித்த சகல சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியும், சகல இடையூறுகளையும் சகித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் உலகுக்கு வெளிப்படுத்திய முன்மாதிரிக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்”, என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், உழைக்கும் மக்களின் ஆதரவு முன்னரைவிட தற்போது கூடுதலாக அவசியமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைஞர் விவகார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் குழுத் தலைவருமான டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில், மேதினத்தில் உள்ள வரலாற்றைப் போன்று சமூக, அரசியல் முக்கியத்துவமான மே முத லாந்திகதியொன்று இலங்கை மக்களுக்குக் கிட்டியுள்ளதென்றும் 30 வருடங்களின் பின்னர் முழு இலங்கையிலும் உழைக்கும் வர்க்கம் இந்தத் தடவையே உண்மையான கெளரவத்துடன் அனுஷ்டிக்கிறார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை – ஆணையிறவில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்

gotabaya.jpgபுலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும்,  இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும்,  இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை தொழில் உரிமையை பாதுகாக்கவும் ஏற்பாடு – அமைச்சர் லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.  தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.  அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.