2010

2010

நல்லிணக்க ஆணைக்குழு முறைப்பாடுகளை முன்வைக்க ஓகஸ்ட் 18 வரை கால அவகாசம்

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பும் பொதுமக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாகாண மட்டத்தில் விசாரணைகளை நடத்தவும் நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவால் 2010 ஜுன் மாதத்தில் கிரமமாக கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

ஆணைக்குழுவின் தற்போதைய வேலைகளில் நிறுவனம்சார்ந்த விடயங்கள் மீது முதற்கட்டமாக கவனம் செலுத்தப் பட்டது. எதிர்காலத்தில் இடம்பெறும் பகிரங்க சாட்சி விசாரணைகளுக்கு வசதியாக அமையும் பொருட்டே அவ்வேலைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆணைப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான எழுத்திலான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அறிவித்தலொன்று செய்தி தாள்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2010 ஓகஸ்ட் மாதம் 18 ஆந் திகதி வரையில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக பொதுமக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு தமது பணிகள் தொடர்பில் வசதியாக அமையக் கூடிய விதத்தில் தாமதமின்றி தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும் பொருட்டு ஆணைக்குழுவுக்கு எளிதாக வரக்கூடிய வகையில் அந்தந்த மாகாணங்களில் குறிப்பாக தொடர்புபட்ட நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது பகிரங்க கூட்டங்களை நடாத்துவதற்கு ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாக நிகழ்வுகள் மீது தாக்கம் செலுத்தியுள்ள பிரதேசங்களிலிருந்து ஆணைக்குழுவினால் நேரடியாகவே விடயங்களைத் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக ஆணைக்குழு தற்போது வேலைத்திட்ட மொன்றை வகுப்பதில் ஈடுபட்டுள்ளது.

ஆணைக்குழு அதற்கு வசதி அளிப்பதற்காகவும் துணைபுரிவதற்காகவும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்குமாறு ஆணைப்பத்திரத்தின் வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் முனைப்பாக ஈடுபட்டிருந்தவர்களும் பரந்தளவிலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களான ஆட்களுக்கு அதன் சொந்த விருப்பத்தின் மீது அழைப்பு விடுக்கும்.

ஆணைக்குழு 2010 ஓகஸ்ட் மாதத்தில் பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.

தற்காலிக குடியிருப்புகளில் வாழும் தோட்ட தொழிலாளருக்கு நிரந்தர வீடுகள் பட்ஜட் விவாதம் முடிந்ததும் பணிகள் ஆரம்பம்

muttu.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரக் குடியிருப்பின்றித் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

வரவு- செலவுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டதும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

தற்காலிகக் குடியிருப்பில் உள்ளவர்களுக்குக் காணிகள்

பெற்றுக்கொடுக்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு பிரிவு, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், நிர்வாக ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதில் முன்பு முறைகேடுகள் இடம்பெற்றதாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நிரந்தரமாகக் குடியிருப்பு வசதிகள் இருப்பவர்கள் காணிகளைப் பெற்றுக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து சரியானவர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாகக் குழுவை அமைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

திருமலை மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாதுகாப்பு செயலர் நேற்று விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திருகோணமலையிலுள்ள மொரவெவ திவுல்வெவ மீள்குடியேற்ற பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் மொரவெவவில் மீள்குடியமர்த்தப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்திற்கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலையையும் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

மயோன் முஸ்தபாவிற்கு பிடிவிராந்து உத்தரவு

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மலிற்கு, மயோன் முஸ்தபா 4200000 ரூபா லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குறித்த விடயம் தொடர்பாக கல்கிசை நீதிமன்றத்தில் விசானைக்கு எடுத்துக் கொண்ட போது மயோன் முஸ்தபா நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா தற்போது வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேர் விளக்கமறியலில்

candana.jpg1996 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் பிலியந்தலையில் சி.டி.சந்திரரத்ன என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னால் பிரதி அமைச்சர் சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேரை இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை ஒரு ஜூரி சபையின் கீழ் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளவும் கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து ‌காலிறுதி போட்டி: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

neda.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி‌ ஆட்டத்தில் நெதர்லாந்து-பிரேசில் அணிகள் மோதின. இதில் ஹாலந்துஅணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

neda.jpg

பயங்கரவாத ஒழிப்பு அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ஜனாதிபதி

ugrain.jpgநாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் சென்றிருக்கும் ஜனாதிபதி நேற்று மாலை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவமானது பயங்கரவாத செயற்பாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், எமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பயனாகவே எமது நாட்டுக்கு இந்த பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். குரூர பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் எமக்கு கிடைத்த அனுபவத்தை பயங்கரவாதத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு நாம் தயாரெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டின்போது உக்ரேன் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்தார்.

500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்

salman.jpgவடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் முன்வந்துள்ளார்.

இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.  இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண்சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இக் கண்சத்திர சிகிச்சை கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெறும். அதேநேரம் கண் நோயாளர்களுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கே.பி.யை நம்பவேண்டாம் அரசை எச்சரிக்கிறார் பொன்சேகா

கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை நம்பவேண்டாம் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. பயங்கரவாதியெனவும் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை அவர் தவறான விதத்தில் வழிநடத்திச் செல்லக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

கே.பி. கைதாகி பல மாதங்கள் கடந்திருக்கும் நிலையில்அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னாள் புலித்தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கான அரசின் ஆர்வமானது பாதுகாப்பு படைகளின் மனநிலையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கை என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.

அத்துடன், கே.பி.யை சிறை வைக்கத் தவறியமை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதர் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கிறார். இதனால், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை அல்லது அவரை சிறைவைக்காமல் அரசாங்கம் சில சமயங்களில் இருக்கலாம். இது வெட்கக்கேடான விடயமாகும்.

ஏனென்றால் பிரிகேடியர்கள், ஜெனரல்கள் போன்ற யுத்த கதாநாயகர்கள் பலர் இன்று சிறையில் உள்ளனர். அதேசமயம் பயங்கரவாதிகள் உல்லாசமாக உள்ளனர் என்று பொன்சேகா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்

காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

ftfa.jpgஉலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய சுற்று இன்று 2 ஆம் திகதி தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் உருகுவேயும் கானாவும் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பிரேசிலும் நெதர்லாந்தும் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா ஜேர்மனி ஒரு போட்டியிலும் ஸ்பெயின் பராகுவே இன்னொரு போட்டியிலும் மோதவுள்ளன.

இந்த அணிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை ஆர்ஜென்ரீனா, பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவைதான். இவை எப்படியும் வென்று விடுமென்ற பொதுவான எதிர்பார்ப்புள்ளது.

இருப்பினும் ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் வென்றாலும் கால்பந்து ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனாலும் ஒரு வலுவான அணி வெளியேறுகிறதே என்ற வருத்தமும் கூடவே இருக்கும்.அதேபோல பிரேசில், நெதர்லாந்து போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து இந்தத் தொடரில் அசத்தி விட்டது. எனவே, இந்த முறை பிரேசிலுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அணியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பராகுவேயும் சும்மா இல்லை. எனவே இந்த அணிகளின் மோதலும் தீப்பறக்கும்.முக்கியமாக சொல்ல வேண்டிய அணி கானா. இந்தக் குட்டி அணி சுற்றுப் போட்டிகளிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அசத்திவிட்டது. எனவே உருகுவேயையும் கானா வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் உள்ளது.

காலிறுதிக்கு வந்துள்ள அணிகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரே அணி கானா மட்டுமே. ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவை. மற்ற நான்கு அணிகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். காலிறுதிப் போட்டிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.