2010

2010

இராணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றை நாடத் தீர்மானம்

 sf.jpgஇராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி நிலை, பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பனவற்றை நீக்க இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவிருப்பதாக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.அநுரகுமார திசாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இராணுவ தளபதியாகவும் அதனைத் தொடர்ந்து கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்து பின்னர் ஓய்வு பெற்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினரின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள (தற்போதையை) இராணுவ தளபதியின் பரிந்துரையின் பேரில் முப்படைத் தளபதி என்றவகையில் ஜனாதிபதியினால் இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டன.

இதில் இராணுவ சேவையில் இருந்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்த 3 குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முதலாவது இராணுவ நீதிமன்றமும் இராணுவ சட்டத்தை மீறி மோசடியான முறையில் இராணுவ உபகரண கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதான 4 குற்றச்சாட்டுகள் பற்றிவிசாரிக்க இரண்டாவது இராணுவ நீதிமன்றமும் நியமிக்கப்பட்டன.

இதன் பிரகாரம் முதலாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகா குற்றவாளியென கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. இதன்மூலம் அவர் 40 வருட இராணுவ சேவையில் பெற்றிருந்த பதவிநிலை, பதக்கங்கள், விருதுகள் போன்றவற்றையும் அவற்றுடன் அரசாங்கத்தின் ஓய்வூதியம் ஜெனரல் பட்டத்தை பயன்படுத்துவதற்கான உரிமையையும் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுநாள் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தார்.

ஜே.வி.பி. எம்.பிகள் பிணையில் விடுதலை

jvp2.jpgஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினரான நளின்ஹேவகே ஆகியோர் இன்று தலா 200,000 ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனையில் அபூர்வ ஓர்கிட் மலர்

orkit.jpgபேராதனைப் பூங்காவில் பெரியதொரு ஓர்கிட் மலர் பூத்துள்ளது. மிக நீண்டகாலத்திற்கு ஒருமுறைதான் இது மலர்வதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இம்மலர் சுமார் ஒருமாதகாலம் வாடாது இருக்கும். பின்னர் மறைந்துவிடும்.

சிலவேளை அடுத்து மலர்வதற்கு 50 வருடங்கள் வரை போகலாம் என அவர்கள் கூறினர். ஆனால் இதன் பூர்வீகமான மலேசியாவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மலர்வதாக அவர்கள் கூறுகின்றனர். இது “ஜயன்ட் ஓர்கிட் கிரமட்டோபி லுனா இஸ்பிசிசம் மலயா%27 என்ற விஞ்ஞானப் பெயர் கொண்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தொடரும் என தெரிவிப்பு!

நிறைவெற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியைத் தவிர்த்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதிவியை ஏற்படுத்தவதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் எதிர்கட்சித்தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தொடர்ந்தும் நிறைவெற்று ஜனாதிபதி முறையே தொடரும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை எற்படுத்துவதற்கு இரு தலைவர்ளும் ஓரளவிற்கு இணங்கியிருந்தனர். எனினும், சட்டமாஅதிபர் இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை ஏற்படுத்த வேண்டுமானால். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமாஅதிபர் தெரிவத்ததால் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவ தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் மீள்குடியேறிய மக்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அழிவடைந்த வீடுகளை அமைத்துக் கொள்வதிலும், சேதமுற்ற விடுகளை திருத்திக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு; வருகின்றனர்.

வீடுகள் முற்றாக அழிவுற்ற மக்களுக்கு  வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகள் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றரை இலட்ச ரூபா செலவில் சிறிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான பணம் கட்டம் கட்டமாக வழஙகப்படுகின்றன. வீட்டு அத்திவாரம் இடுவதற்காக முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட கொடுப்பனவிற்காக சம்பந்தப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் வீடமைப்புப் பணிகள் முற்றாக நிறைவடைய வேண்டுமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதன்படி தாங்கள் வீட்டு அத்திவார வேலைகள் முடித்து ஒரு மாதமாகியும் அடுத்த கட்ட வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, வீட்டின் சுவர்கள் எஞ்சியுள்ள நிலையில், கூரைகள் கதவு, யன்னல்களற்ற விடுகளுக்கு திருத்த வேலைகளுக்காக ஒன்றரை இலட்ச ரூபா வழங்குவதாக இன்னொரு நிறுவனம் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் அதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில் பருவமழை பெய்ய விருப்பதால் தங்களின் சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்தினரோடு எவ்வாறு தங்கள் காணிகளில் தங்கியிருப்பது என்கிற கவலைகள் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி பஸ்களில் பயணிக்கும் பெண்கள் படையினரால் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்

வடபகுதிகளில் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் படையினரால் பெரும் சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இளம்பெண்களுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்யும் படையினர் சிலர் அப்பெண்களுடன் அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். சீருடையில் பயணம் செய்கின்ற படையினர் பெரும்பாலும் மக்களுடன் இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வதில்லை. ஆனால், சிவில் உடைகளில் பயணம் செய்யும் படையினர் மக்களோடு மக்களாக அவர்களின் அருகில் இருக்கைகளில் அமர்ந்து பிரயாணம் செய்கின்றனர். இவ்வாறான வேளைகளில் அருகில் இளம் பெண்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் மீது அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கெதிராக பாதிக்கப்படும் பெண்ணோ அல்லது. அதனைக் கவனிக்கின்ற ஏனையொரோ எதுவும் செய்ய முடியாத நிலையிலுள்ளனர். படையினர் என்பதால் அவர்கள் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக யாழப்பாணத்திலிருந்து கிளிநொச்சி. வவுனியா செல்லும் பஸ்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

‘உலக நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது’ – ஜனாதிபதி

h-tota03.jpgமேட் இன் ஸ்ரீலங்கா எனும் மகுடத்தின் கீழ் உலகம் வியக்கும் உற்பத்தி கேந்திர மையமாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் கழிவுகளை குவிக்கும் நாடகவன்றி இனி இலங்கையை உலக முன்னிலையில் மாபெரும் உற்பத்தி நாடாகத் திகழ வைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகிலேயே கடலல்லாத பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் முதல் துறைமுகமென வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கடல் நீர் நிரப்பும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி :

இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட மிக மிக பின்னடைவாகவிருந்த நாடுகள் இன்று பெரும் முன்னேற்றமடைந்துள்ளன. அதனைப் பார்த்து ஆதங்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல. தாய்நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி உற்பத்தியின் கேந்திர நிலையமாக மாற்றும் எமது இலக் கினை வெற்றி கொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அம்பாந் தோட்டைத் துறைமுகத்தைப் பொறுத்தவரை பல தடைகள் சவால்கள் விமர்சனங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக தற்போது நடைமுறைப் படுத்தப்படுகிது. எமது நாட்டின் வரலாற்றில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. எனினும் இந்த துறைமுகமானது உலக வரைபடத்தில் இலங்கையைக் குறித்துக் காட்டும் ஒன்றாகத் திகழ்கிறது. சர்வதேசத்துக்கும் இலங்கைக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது அமைகிறது.

நாட்டுக்கான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ள எமக்கு அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் நம் நாட்டை சுதந்திரமாக்கினோம். நாம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரப்பும் கடல் நீர் சகல பலவீன சிந்தனைகளையும் கழுவிவிடும் என்பது உறுதி.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் வர்த்தக கேந்திர நிலையமாகவே இலங்கை இருந்து வந்துள்ளது. எனினும் இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதனால் எமது தாய்நாடு உலகளாவிய ரீதியில் பிரசித்தமடைகிறது. எமது நாட்டில் சுதந்திர பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பஞ்சமகா திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஐந்து முக்கிய துறைமுகங்களையும் நிர்மாணித்து வருகிறோம்.

உலக நாடுகளின் குப்பைகளைக் கொட்டுகின்ற இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது. ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ என்ற பெயருடன் சர்வதேசமெங்கும் புகழ்பெறும் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கின்ற பொருளாதார மையமாக இந்நாடு இனி திகழ வேண்டும். வரட்சியான மாவட்டமாக வர்ணிக்கப்பட்ட அம்பாந்தோட்டையில் தற்போது சர்வதேச துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டரங்கு, அதிவேக பாதைகள் புதிய ரயில் பாதைகள் என பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இந்த துறைமுகம் மூலம் முழு நாட்டினதும் பொருளாதார மையமாக இது திகழும்.

எமது கண்ணுக்குப் புலப்படும் வகையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் எமது பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. மத்திய கிழக்கு ஆபிரிக்க வலயங்களைப் போன்று ஆசிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இதிலடங்குகின்றன. இவற்றுக்கான எரிபொருள் சேவைகளை வழங்குவதுடன் பெரும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் மையமாகவும் இத்துறைமுகம் விளங்குகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

லக்ஷபானா கெனியன் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வதைத் தவிர்ப்பதற்காக அவற்றின் வான்கதவுகள் நேற்று திறந்துவிடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்றுவான் கதவுகள் ஒரு அடி வீதமும், கெனியன் நீருத்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலப்படியும் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று காலை 10.00 மணியளவிலும் கெனியன் நீர்த்தேக்க வான் கதவுகள் முற்பகல் 10.50 மணியளவிலும் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 கோடி டொலருக்கு மேல் கொடுத்து ஸன் ஸீ அகதிகள் கனடா வந்துள்ளனர்’

son-k.jpgஸன் ஸீ கப்பலில் கனடாவை சென்றடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலுத்தியதன் பின்னரே தமது 3மாத கடற்பிரயாணத்தை தாய்லாந்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோஸ் கூறியுள்ளார். இந்தக் கப்பலில் பயணித்த பெண்கள் மற்றும் சிறார்களுக்கு கட்டண சலுகை ஏதாவது கடத்தல்காரர்களால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்படியான ஆட்கடத்தல்கள் மூலம் கடத்தல்காரர்கள் பெருந்தொகையான பணத்தை இலகுவாகப் பெறுவதற்கு ஸன் ஸீ கப்பல் ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 3 மாதங்கள் கடினமான கடற்பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பிராந்தியத்திற்கு சென்ற இந்தக் கப்பலை கனேடிய அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் தற்போது 490 அகதிகளில் பலரை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கப்பலில் பயணித்த இலங்கையர்களின் பெயர் விபரங்கள் எதுவும் கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ¤க்கும் ஜப்பானுக்கும் இடையிலான தாய்லாந்து வளைகுடாவில் இருந்து இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 10 மாதங்களுக்கு முன்னர் கனடாவை வந்தடைந்த ஓசியன் லேடி கப்பல் பயணித்த வழியாக ஆனால் சிறிது மாறுபட்ட பாதையில் ஸன் ஸீ கப்பல் பயணித்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் தாய்லாந்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்தது என்ற விடயம் கப்பல் பயணிகளின் அகதி அந்தஸ்து பரிசீலனையின் போது கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

இரத்தினபுரி மின்சாரம் தாக்கிய சம்பவம்; மூன்றாவது யுவதியும் உயிரிழப்பு

இரத்தினபுரி, பத்துல்ஹத்தவில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது யுவதியும் உயிரிழந்துள்ளார். சந்தமாலி ஆட்டிக்கல எனும் 15வயது யுவதி மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அவரது சகோதரன் மதுக சாரங்க ஆட்டிகலயும் ஒன்று விட்ட சகோதரியான சந்துனி உபேக்க ஆட்டிகலயும் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பத்து வயதுடையவர்களாவர்.

இரத்தினபுரி பத்துல்ஹத்தயில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகே இருந்த ரம்புட்டான் மரத்தில் ரம்புட்டான் பழங்களை பறிக்க கம்பியொன்றை பயன்படுத்திய சமயம் அந்தக் கம்பி ரம்புட்டான் மரத்துடன் சென்று கொண்டிருந்த அதிக மின்சார ஓட்டத்துடன் கூடிய மின்சாரக் கம்பியில் பட்டதால் அவர்கள் மூவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகினர். சந்தமாலியின் மற்றொரு சகோதரர் டியூசன் வகுப்புக்கு சென்றிருந்ததால் சம்பவம் இடம்பெற்ற சமயம் வீட்டில் இருக்கவில்லை.