December

December

நாட்டை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் – ஜனாதிபதி

elc-2010.jpgநாற்ப தாண்டு கால அரசியல் அனுபவமும் நாற்பது நாள் அரசியல் அனுபவமும் எத்தகைய இடைவெளியைக் கொண்டதோ அதேபோலவே தேர்தல் முடிவுகளும் அமையும் என்பதை மக்கள் ஏலவே தீர்மானித்துவிட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

கண்டி- ஜனாதிபதி மாளிகையில் நேற்று (22) காலை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சு.க. தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் 2010 ஆம் ஆண்டின் வளமான எதிர்கால நடவடிக்கை குறித்தும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,

1936ஆம் ஆண்டு முதல் அரசியல் செய்து வருகின்றோம். எமது அரசியலை மக்கள் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. இது குறித்து எதிர்காலத்தில் நாம் எந்த வித அச்சம் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு இந்த நாட்டையும் மக்களையும் நாம் பாதுகாத்துள்ளோம். எம் நாட்டு மக்களை பாதுகாக்க அரசியலுக்கு அப்பாலும் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய பொறுப்பும் உணர்வும் நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

ஐ. தே. கட்சி மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளிலிருந்து அரசுக்கும் எமது கட்சிக்கும் ஆதரவு வழங்கும் பொருட்டு எம்முடன் பலர் தொடர்ச்சியாக இணைந்துகொண்டு வருகின்றனர். இவ்வாறு எமது கட்சிகளுடன் இணையும் உள்ளூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல்வாதிகள் ஆகியோர்கள் என்னுடன் நாட்டு மக்களை பாதுகாக்கும் படியான ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தே இணைந்த வண்ணம் உள்ளனர்.

பொய் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி எமது தாய் நாட்டை இரண்டாகப் பிரித்த நிலைமையிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றது உலகமே பொருளாதார சிக்கல்களில் மூழ்கிய போதிலும் நாம் மேற்கொண்ட பல்வேறு பிரயத்தனத்தின் விளைவாக மக்களையும் நாட்டையும் பாதுகாத்துள்ளோம்.

யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த பொருட்களும் ஆயுதங்களும் இல்லாத நிலையில் நம் ஆயுதங்களையும் மற்றும் ஏனைய அவசிய பொருட்களையும் கொள்வனவு செய்தோம். மேலும் யுத்த நிலைமையில் மக்களுக்குத் தேவையான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து மஹிந்த சிந்தனை மூலம் அதனை நடைமுறைப்படுத்தினோம். எமது அபிவிருத்திப் பணியில் யாரும் குறைகூறுவதற்கு இல்லை.மேலும் என்னையும் எனது குடும்பத்தையும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு சேறு பூச நினைத்த ஒரு ஐ.தே.க. எம்.பி. வீடு தேடிவந்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆகவே ஆதாரமற்ற வகையில் தொடர்ந்து என் மீதும் எனது குடும்பம் மீதும் சேறு பூசுவோருக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் எனவும் ஜனாதிபதி அங்கு உரையாற்றினார்.

வவுனியா- யாழ்ப்பாணம் புகையிரத பாதையை புனரமைக்க இந்தியா நிதியுதவி

railway.jpgவவுனியா வுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு பகுதியின் புகையிரத சேவையை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இந்த நிதியுதவி குறித்து அறிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள  இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிதியுதவியின் கீழ் ஓமந்தை முதல் பலாலி வரையிலான புகையிரத பாதையில், வரையறுக்கப்பட்ட  இந்திய ரெயில்வே கொன்ஸ்டக்சன் நிறுவனம், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்தியா,வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில்; தமது முதலீடுகளையும் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கைதிகளின் விடுதலை; முக்கிய அறிவிப்பு அடுத்தவாரம்

வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம், மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தப் பின்னணியில், நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைக ளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்க, கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவு ள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல சட்டமா அதிபர் இணக்கம்

tissa.jpgஊடக வியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்கப்படுமிடத்து அதயை தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜே.எஸ் திஸ்ஸநாயகத்து 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியமை தெரிந்ததே.

நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டார்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங் களில் முடிவுறுவதற்காகவுள்ள உள் ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு ள்ளதாக மாகாண சபைகள், உள்ளூ ராட்சி சபைகள் அமைச்சு அறிவித்து ள்ளது.

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள் சிலவற்றின் பதவிக் காலம் 2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் முடிவுறுகிறது. இதன்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் அமைச்சருக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அமைச்சர் ஜனக பண்டார தென்ன கோன் நீடித்துள்ளார்.

மூன்றாவது அணியை நோக்கி : ச அரவிந்தன்

Aravinthan_S_TULFஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இத்தேர்தல் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான ஒரு தேர்தலாகவே அமைந்துள்ளது. காரணம் கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நிலவிவந்த அரசியல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இத்தேர்தலை நடாத்தத் திட்டமிடப் பட்டிருப்பதுவே.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு ஆட்சிக்கு வந்த பச்சை மற்றும் நீலக்கட்சிகள் தத்தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தைப் பேசிப்பேசி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியமைத்ததன் விளைவுதான் இலங்கையில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தியமையே நாட்டில் ஏற்பட்ட பேரவலங்களுக்குக் காரணமாக அமைந்தது. பதவிவெறி பிடித்த ஆட்சியாகையில் குரோதத்தனமான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கைவாழ் சகல தரப்பினருமே. இருப்பினும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது சிறுபான்மைச் சமூகம்தான் என்பதை நாம் மிகுந்த தேவதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை அரசியல்த் தலைமைகள் இதுவரை காலமும் காத்திரமான பங்கு வகித்ததாகச் சரித்திரமே கிடையாது. காரணம் இத்தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அதிலும் ஆட்சியமைக்கக் கூடிய பச்சை அல்லது நீலக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்புக்கள் அதிகம் என்பதனால் அந்தந்தக் காலங்களில் எந்தெந்தப் பக்கம் காற்று வீசுகின்றதோ அந்தந்தப் பக்கங்களில் சாய்வதை வழமையான ஒரு செயற்பாடாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் நாட்டில் மக்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவது தொடர்பில் எந்தவொரு சக்தியும் சிந்தித்தது கிடையாது. அதுபற்றி சிந்திப்பதற்கு நாட்டில் இருந்த சூழலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் இனியாவது இதுதொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடமை சிறுபான்மைத் தலைமைகளுக்கு உண்டு.

இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கௌரவமான அரசியல்த் தீர்வினை முன்வைக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழுல் உருவாக வாய்ப்புண்டு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கம் முன்னணி வேட்பாளர்களில் யாரை சிறுபான்மை இன மக்கள் ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விக்கு முடிவு காணவேண்டிய காலமும் தேவையும் வந்துள்ளது. இவ்விடயத்தில்தான் சிறுபான்மை இன மக்களுக்கு மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் நிதானத்துடனும் அவதானத்துடனும் அற்ப சொற்ப சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது சிறுபான்மை இன மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை முன்வைத்து அதனை முன்கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் மகிந்தாவோ அல்லது பொன்சேகாவோ சிறுபான்மை இனத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எத்தனையோ இளைஞர் யுவதிகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொண்றுகுவித்து அவர்களின் உடலத்தின்மேல் மேடை போட்டு அரசியல் பேச நினைக்கின்றனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதி முகாம்களில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டு உறவுகளைப் பிரிந்தும், இழந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நடத்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் வடுக்களை எமது சமூகம் இன்னமும் 60, 70 ஆண்டுகளுக்கு சுமக்கப் போகின்றனர் என்பதை நாம் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் மறந்து நாம் எவ்வாறு இவர்கள் இருவரையும் ஆதரிக்க முடியும். இத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெல்வதற்குரிய வாய்ப்புக்கள் மகிந்தாவுக்கு அல்லது பொன்சேகாவுக்கேதான் அதிகம் உள்ளது. என்றாலும் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாவற்றுக்கும் இவ்விருவருக்கும் சமமான பங்குண்டு.

எம்மில் சிலர் சிந்திக்கக் கூடும் எய்தவன் இருக்க நாம் ஏன் அம்பை நோக வேண்டும் என. யுத்தத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட காலம்முதல் இந்த யுத்தத்தை வென்றே தீருவேன் எனக் கங்கணங் கட்டிக்கொண்டு நின்றது சரத் பொன்சேகாதான் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அது மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை வாழ் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக மிகவும் கேவலமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்கருத்துக்களுக்கு எந்தவொரு சிறுபான்மை இனத் தலைவர்களும் கண்டனத்தை வெளியிடவில்லை. ஆனால் அண்ணன் ஹக்கீம் மட்டும் அதற்கான கண்டனத்தை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி யுத்தப் பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கு UNHCR, ICRC போன்ற நிறுவனங்களின் உதவியைப் பயன்படுத்தி அந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுங்கள் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதை செவிமடுக்காதது எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது அரச தலைவர் மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும்தான்.

இன்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் இருந்துவந்த கரிசனை அன்று இருந்திருந்தால், யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் இருக்கும்வரை என்னால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அரச தலைவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் மறந்து நாம் இவர்களை ஆதரித்தால் விலை மதிப்பற்ற உயிர்களையும் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு இன்னும் பல ஆண்டுகள் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழப் போகும் எமதினிய உறவுகளுக்கு நாம் செய்யப்போகும் வரலாற்றுத் துரோகமாகும். அதுமட்டுமல்ல வடகிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கண்டதுண்டமாக வெட்டி சந்திகளில் போடப்பட்டவர்கள் எத்தனையோ பேர். குற்றங்கள் ஏதும் செய்யாது சந்தேகத்தின் பேரில் சிறைகளில் வாடுகின்ற அப்பாவிகள் எத்தனையோ. இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பான இந்தக் கொடூர அரசியல் சாம்ராஜ்யத்துக்கும் இந்த சாம்ராஜ்யத்துக்கு விலை போகும் சிலருக்கம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்படியாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் போன்றதோர் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தி இலங்கையில் வாழும் சகல தரப்பு மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதற்கான அரசியல் சூழ்நிலையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை இலங்கைவாழ் மக்கள் அனைவரும் வழங்க வேண்டும். இத்தேர்தல் தொடர்பில் நாம் நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தியோக பூர்வமான முடிவினை வெளியிடும்.

ச அரவிந்தன் (மத்திய குழு உறுப்பினர், தமிழர் விடுதலைக் கூட்டணி)

வெளிநாட்டு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட புலிகளின் பாரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ltte-ship.jpgதேசிய புலனாய்வு துறையினரின் தகவலுக்கமைய வெளிநாட்டு கடற் பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான ‘பிரின்ஸஸ் கிரிஸான்டா’ என்ற பாரிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடற்படை கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்தக் கப்பலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸரசமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆயிரக் கணக்கான கடல் மைல்களுக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட இந்தக் கப்பல் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் இலகுரக விமானம் இறங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடையுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும்.

புலிகளிடமிருந்த பல கப்பல்கள், கடற்படையினரால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டன. புலிகளிடமிருந்த மிகப் பெரிய கப்பல் இது என்று கடற்படைத் தளபதி சுட்டிக் காட்டி னார். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த ஆழ்கடலில் தரித்து நின்ற கப்பலை பார்வையிடுவதற்கென கொழும்பு துறைகத்திலிருந்து இரண்டு டோராக்களில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி தலைமையில் ஊடகவியலாளர் குழுவினர் கப்பலை சென்று பார்வையிட்டனர். வெற்றிகரமாக கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வந்ததை பாராட்டும் வகையில் கப்டன் தஸநாயக்கவிடம் கடற்படைத் தளபதி நற்சான்று பத்திரத்தை சமர்ப்பித்தார்.

இந்தக் கப்பல் ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுக ளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் கடற்படையினர் வெற்றிகரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்ததுடன் புலிகளின் கப்பல்களை இதுபோன்று கொழும்புக்கு கொண்டுவரவும் முடிந்தது என்று கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். இலங்கை கடற்படையினரின் பாவனைக்கு இந்த கப்பல் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா

_philipalston.jpgமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசாரணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார்.

பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது.

தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற்குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார்.

அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள் இனிமேல் பொலிஸில் பதிவு செய்ய வேண்டியதில்லை – பசில் ராஜபக்ஷ

basil.jpgதமிழர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். பொலிஸ் மா அதிபர் இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஹட்டனில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் தலைமையில் நேற்று முன்தினம் ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விசேட விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட சந்திரசேகரன் மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும், மலையக மக்களின் இனத்துவ, தனித்துவத்தை நிலைநாட்டுவதிலும், தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

அமைச்சரவையில் இருந்து கொண்டு சந்திரசேகரனும், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவசரகால சட்டத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இவர்களை விசாரிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

இப்படி ஒரு சங்கடமான நிலைமை எமக்கு ஏற்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பாக சந்திரசேகரனுடன் பேசினார். அமைச்சர் தனது நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். மனசாட்சியின்படி நடக்க இடமளித்து மஹிந்த சிந்தனையில் மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உங்கள் தலைவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

அரசில் பங்குவகித்து அமைச்சராக இருந்தாலும் தமது நிலைப்பாட்டில் நின்று மனசாட்சியின்படி நடப்பதையிட்டு பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். உங்கள் தலைவர் மலையக மக்களின் மேம்பாடு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்தும் உரத்து குரல் எழுப்புபவர். கடந்த காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டு அரசாங்கம் என்றவகையில் உங்கள் கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களை உருவாக்குவதைப் பற்றி வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றி நடவடிக்கை எடுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து சட்டப்படியான தீர்மானங்களை எடுக்க செயற்பட்டு வருகின்றது.

தமிழர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். இனி பொலிஸ் பதிவினை தமிழர்கள் செய்யத் தேவையில்லை. பொலிஸ் மா அதிபர் இந்த பேச்சு முடிந்த பின்னர் உத்தியோகபூர்வமாக உங்களுக்கு இதனை அறிவிப்பார். 1988, 1989 கால கட்டத்தில் சிங்கள மக்களுக்கும் இந்த தொல்லை இருந்தது.

சிங்கள மக்களும் வெகுவாக சிரமப்பட்டார்கள். அப்போது மறித்து சோதனை செய்யும் போது கிளிநொச்சி அடையாள அட்டை அல்லது தமிழர்கள் என்றால் எவ்வித தடங்கலோ சோதனையோ இன்றி பயணித்தார்கள். பின்னர் இந்நிலைமை மாறி அன்று சிங்கள மக்கள் அனுபவித்த சங்கடங்களை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. அம்பாந்தோட்டை அடையாள அட்டை என்றால் இன்முகத்துடனான புன்சிரிப்பும் மேலதிகமாகவே கிடைத்தன.

ஒரு சிலர் ஜனாதிபதியின் ஊரா, உறவினரா? என்று ஒரு மரியாதையும் செலுத்தினர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பட்டியல் கிடைத்தவுடன் நீதியான விசாரணை இடம்பெற்று விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். மலையக மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் மலையக மக்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.

எத்தகைய தடைகள் நேரிடினும் உலகின் முன்னணி நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – ஜனாதிபதி மஹிந்த

எத்தகைய தடைகள் வந்தாலும் உலகின் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்க ளில் பாரிய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது என தெரி வித்த ஜனாதிபதி, எம்மை முன்னுதார ணமாகக் கொண்டு உலக நாடுகள் செயற்பட ஆரம்பித்துள்ளன எனவும் தெரிவித்தார்.

எமது மக்களைப் பற்றிய பெரும் நம்பிக்கை எனக்குண்டு. அவர்கள் இன, மத மொழி, பேதங்களுக்கப்பால் தாய் நாட்டைப் பெரிதும் நேசிப்பவர்கள் என் பதும் எனக்குத் தெரியும் எனவும் ஜனா திபதி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் விருதுகளைப் பெற்ற இலங்கையின் புத்தாக்குனர்களைக் கெளரவிக்கும் நிகழ்வொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரத்ன ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த நான்கு வருடகாலமானது முக்கியமான காலகட்டமாகும். பயங்கரவாத த்தை முற்றாக ஒழிந்த எம்மை முன்னு தாரணமாகக் கொண்டு முழு உலகமும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. நாம் எம் தாய் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது நாடு முழு உலகிலும் முன்னணி நாடாகத் திகழ வேண்டும். எத்தகையத் தடைகள் வந்தாலும் நாம் எமது இலக்கை அடைய வேண்டும்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் கிராமத்து இளைஞர், யுவதிகளே. புதியதைச் செய்ய புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். இலங்கையை உலகின் முன் அடையாளப்படுத்த அவர்கள் தயாராகியுள்ளனர்.

எமது நாட்டை மிகவும் நேசித்த குமாரதுங்க முனிதாச என்பவர் “புதியதைக் கண்டுபிடிக்காதவர்களை உலகம் கண்டு கொள்ளாது” என்று கடந்த காலங்களில் பட்டத்தைக்கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த யுகமொன்றிருந்தது. புதிய கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக எவரும் சிந்திக்கவில்லை.

வாடகை வீட்டில் வாழ்வது போலவே எம்மக்கள் அப்போது வாழ்ந்துள்ளனர். முடிவில்லாத பயங்கரவாத யுத்தத்தைப் போன்றே நாட்டிற்கும் எதிர்காலமில்லை என எண்ணிய புத்தாக்குனர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டனர். இத்தகைய நிலையை கடந்த நான்கு வருடங்களில் எம்மால் மாற்ற முடிந்துள்ளது.