17

17

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

முதல் வெற்றியைப் போன்று இரண்டாவதையும் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி

presi_election.jpgமுதல் வெற்றியைப் போன்று இரண்டாவது வெற்றியையும் நிச்சயம்  பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலகத்தில் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முதல் வெற்றியாக யுத்தத்தை வெற்றிகொண்டென். அதேபோன்று இரண்டாவது வெற்றியாக பொருளாதார வெற்றியையும் நிச்சயமாகப் பெறுவேன். நாட்டின் முன்னேற்றத்தக்காவே பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மெலும் தெரிவித்தார்.

அர்ஜூனா ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.

arjuna-ranatunga.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

‘டெலோ’விலிருந்து சிவாஜி, ஸ்ரீகாந்தா விலகல்

sivajilingam.jpgநாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது.

நேற்றிரவு டெலோ முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூடி, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ் பெறுமாறு சிவாஜிலிங்கத்திடம் வலியுறுத்திக் கேட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் நாளை நாடு திரும்புகின்றார்.

நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு கூடி, தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
 
வீரகேசரி இணையம் 12/17/2009

குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்து – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

dayananda_disanayake.jpgநடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.

இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரம் புலிகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது – ராஜபக்ஷ

mahinda0.jpgநிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தியதாக எவரும் கூற முடியாது.  புலிகளைத் தடை செய்தமை, புலிகளுடனான உடன்படிக்கையை இல்லாதொழித்தமை போன்றவற்றிற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, நாம் திறைசேரியிலிருந்து பெருமளவு நிதியைச் செலவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கே இந்த நிதியைச் செலவிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எந்த முறைமையின் கீழாவது இலவசக் கல்வியையோ, சுகாதாரத்தையோ இல்லாதொழிக்க முற்படவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்று கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திருமதி பேரியல் அஷ்ரப், ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரத்ன ஹேரத், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது, மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட படைவீரர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூற்றுக்கள் சர்வதேச அளவில் பெரும் அசெளகரியங்களுக்கு நாடு முகங்கொடுக்க காரணமாகியுள்ளன.

இதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மட்டுமன்றி முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் ஒரு தவறான கூற்றின் மூலம் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சிலர் முனைகின்றனர்.

இந்தவறான கூற்று காரணமாக 58வது படையணியினர் வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வெளிநாட்டு விசாவும் மறுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் புலிகளுடனான உடன்படிக்கையை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தபோதும், பாராளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரம சிங்கவே புலிகளுடன் உடன்படிக்கையை மேற்கொண்டார். நிறைவேற்று ஜனாதி பதியால் முடியாததை ரணில் விக்கிரமசிங்க செய்தார், ஜனாதிபதியால் வெறுமனே அதனைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடல் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்கும் வகையில் ஐந்து துறைமுகங்கள் ஒரே சமயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எந்தகைய அபிவிருத்தி முன்னேற்றங்களை நாம் எட்ட முடிந்தாலும், நல்லொழுக்க முள்ள இளைய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப முடியாமற் போனால் எதிலும் பயனில்லை.

அதனைக் கருத்திற்கொண்டே நாம் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். எமது கலா சாரத்தை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். சமூகத்தையும், பிள்ளைகளையும் பாது காத்து புதிய யுகமொன்றை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நாம் எந்தளவு நிதியைச் செலவிட்டும் பயனில்லை. தொழில் வாய்ப்புக்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் பயனில்லை. எமது எதிர்கால தலை முறையினர் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கம் மிகுந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான ஒரு வழிமுறையாகவே பொது இடங்களில் புகை பிடித்தல், போதை ஒழிப்பு போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அத்துடன் இவ்வருடத்தை ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப வருடமாகவும் பிரகடனப் படுத்தியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேறுவோரின் வாழ்க்கைத் தரத்ததை உயாத்த அரசு நடவடிக்கை – அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் அறிவிப்பு

gl_pereis.jpgபயங்கர வாதம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும்போது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்துக்கு கொண்டுவர அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் மீள்குடியமர்த்தப்படுவோரின் நன்மை கருதி அப்பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளையும் கடற்றொழில் நடவடிக்கைகளையும் முன்னெப்போதுமில்லாத அளவில் அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாட்டில் பொருளாதாரத்திலும் ஏற்றுமதி வர்த்தகத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் சமூக கலாசாரத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலிலும் ஒரு ஸ்திரமான நிலைக்கு நாம் வந்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.

உலகில் பயங்கரவாத ஒழிப்புக்கு வளைகுடா ஒத்துழைப்பு மாநாடு ஆதரவு. பிராந்தியத்தில் பொது நாணயத்திற்கும் இணக்கம்.

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட் டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதென வளை குடா நாடுகளின் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை க்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதெனவும் குவைத்தில் நடைபெற்ற 30 ஆவது உச்சி மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நிறைவின் பின்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் குவைத் பிரதி பிரதமரும் வெளிநாட்டு அமைச்சருமான ஷேக் கலாநிதி மொகமட் சபா அல்-சலீம் அல்-சபா தெரிவித்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல்-அட்டியாவும் கலந்துகொண்டு கூட்டாக நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் தகவல் தருகையில் :-

உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் அனைத்து எதிர்பார்ப்புகளையும் விஞ்சி நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்தனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கிடையில் கூட்டு மின்சார இணைப்பை ஆரம்பிக்க முடிந்தமை பாரிய வெற்றியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இந்த நாடுகளுக்கிடையில் ரயில்வே போக்குவரத்தை ஆரம்பிக்கவும், பொதுவான நாணயமொன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையைத் தயாரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

குவைத், சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரெய்ன், துபாய், ஓமான் ஆகிய ஆறு நாடுகளின் கூட்டமைப்பான ஜீசிசி உச்சி மாநாடு குவைத் மன்னர் சபா அல்-அஹ்மட் அல்-சபீர் அல்-சபாவின் தலைமையில் பயான் மாளிகையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பிற மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு புதிய ஏற்பாடுகள்

buss.jpgயாழ். குடாநாட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஏ-9 தரைப்பாதை மூலம் பேருந்துகளில் பயணஞ் செய்கின்ற பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற சிரமங்களை நிவர்த்திக்கும் முகமாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை (14) அதிகாலை யாழ். புகையிரத நிலையக் கட்டிடப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்கள் காலை 6.00 மணிக்கு யாழ். சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும் இவர்கள் பயணஞ் செய்யும் பேருந்துகள் காலை 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

இதேநேரம் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இருந்து கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்களை அப்பகுதிகளில் வைத்து பேருந்துகளில் ஏற்றிச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு வருகை தர வேண்டும். பின்னர் 7.00 மணிக்கு இப்பயணிகள் சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனைக் கடமைகள் முடிவுற்றதன் பின்னர் இவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் காலை 8.30 க்கும் 9 மணிக்கும் இடையில் கொழும்பு நோக்கிப் புறப்படும்.

அதே நேரம் தனியார் பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.30 மணிக்கு நேரே சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகளும் 8.30 க்கும் 9.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும் முதலாவது வாகனத் தொடரணியில் கொழும்பு நோக்கிப் புறப்பட இயலும்.

இதனிடையே வவுனியா செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். புகையிரத நிலையக் கட்டிடத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகள் அங்கிருந்து நேரே வவுனியா செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவ்வேற்பாடுகள் நிறைவுறும் வரையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் முறைமை சில நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வாகனத் தொடரணி காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும்.