06

06

தரிசனம்! : நோர்வே நக்கீரா

criticsதரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)

உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.

முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.

கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!

அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?

அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி

கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி

நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.

சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்

உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.

யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்

உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.

ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.

நோர்வே நக்கீரா
4.12.2009

ஐ.தே.க.வின் சுயரூபம் அம்பலம்: அமைச்சர் யாப்பா கண்டனம்

anura.jpgஐ.தே.க. மாநாட்டில் நேற்று ஊடகவி யலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலின், மூலம் ஐ.தே.க.வின் ஊடக சுதந்திரம் தொடர்பான நிர்வாணம் மீண்டும் முழு உலகிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாடு நடந்த போதும் ஏனைய அனைத்து சந்திப்புகளின் போதும் தாம் விரும்பியவாறு செய்திகளை வெளியிடுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்நாட்டில் ஊடக சுதந்திரமில்லையெ னக் கூறி ஐ.தே.க. தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிரசாரம் இன்று அவர்களிடமே சுற்றி வந்துள்ளதோடு, உண்மையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் யார் என்பது நேற்றைய தாக்குதல் மூலம் தெரியவந்து ள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு ள்ளார்.

ஜனநாயகம் பற்றிப் பெரிதாகப் பேசும் ஐ.தே.க. தமது மாநாட்டு வளாகத்திலேயே ஊடகவியலாளர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதையும் அவர்கள் உபகரணங்களை சேதப்படுத்தி யதையும் ஜனநாயகத்தை விரும்பும் எவரும் விரும்பமாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் பிரசார ஆரம்பத்தின் போது வன்மமாகவும், மிலேச்சத்தனமாகவும் செயற்பட்டு ஐ.தே.க. மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தேர்தலில் ஈடுபட முயல்கிறார்கள் என்பது புலனாகின்றது. இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் குரல் எழுப்ப வேண்டுமெனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

செலியூலர் தொலைபேசியூடாக ரயில்களில் ஆசன முன்பதிவு – எதிர்வரும் 9 இல் ஆரம்பம்

handphone.jpgசெலியூலர் தொலைபேசிகளூடாக ‘365’ என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக ரயில்களில் உங்கள் இருக்கைகளைப் பதிவு செய்யும் புதிய நடைமுறை எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

முதற்கட்டமாக கொழும்புக் கோட்டை முதல் கண்டி வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையுமான கடுகதி ரயில் சேவையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கோட்டை நிலையத்தில் ஆசனப்பதிவு பிரிவு கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கக் கூடியது. முன் ஆசனப்பதிவு பகுதி இயங்கவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றங்களை வரவேற்கிறோம் – ஈ.பி.டி.பி. அறிக்கை

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும், நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்கின்றோம்” என ஈ. பி. டி. பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எமது மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பது என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும். அதை எந்த வழிமுறையில் அவர்கள் பெற்றிருந்தாலும் தமிழ் பேசும் மக்களை இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்பதற்காக அதைப் பயன்படுத்தியிருந்தால் நாம் அதனை மனமகிழ்ச்சியோடு ஏற்றிருப்போம். ஆனாலும், அந்த அரசியல் பலத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்ற மனத்துயரங்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாம் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தோம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான தீர்விற்காக கனிந்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டெடுக்க முடிந்த அரசியல் தந்திரோபாய திட்டங்கள் குறித்தும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆனாலும், அவர்களில் பலரும் அந்த நியாயமான வழிமுறைகளை ஏற்று வந்திருக்கவில்லை. இன்று அவர்கள் மனந்திருந்தி வந்திருப்பது போல் அன்றே அவ்வாறு வந்திருந்தால் எமது மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி வருவதோடு எமது கட்சியாகிய ஈ. பி. டி. பி. வலியுறுத்தி வரும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களில் சிலர் மனந்திறந்து கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது.

அதேவேளை, ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால அனைத்து தவறுகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வரும் பட்சத்தில் அவர்களோடு தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் பயணம்

ranil.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈரோஸ் முடிவு

ஈரோஸ் (ஈழவர் ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஈரோஸ் தலைவர் ‘தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரினாலேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் என்பது பூஜ்யம். இத்தகைய ஒருவரினால் ஒரு ஜனநாயக நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும். முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வட கிழக்கு மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

சந்திரிக்காவின் புதல்வர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தேர்தலில் களமிறக்கப்படக் கூடிய சாத்தியம்?

vimukthi.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விமுக்தி குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமுக்தி குமாரதுங்க தற்போது இங்கிலாந்தில் மிருக வைத்தியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் வெடி விபத்து; 102 பேர் பலி; 135 காயம்

ரஷ்யாவின் பெர்ம் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர், 135 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 85 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேளிக்கை விடுதியின் 8வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிபொருட்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மனைவியின் எலும்புகளோடு உறங்கிவருபவர்: வியட்நாமில் வியப்பு தகவல்

வியட்நாமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இறந்த தனது மனைவியின் எலும்புக்கூட்டோடு படுத்து உறங்கி வருகிறார் என்ற தகவல் அந்நாட்டில் பரவலாக அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.  ஐம்பது வயதைத் தாண்டிய வான் என்ற இந்நபர், தனது மனைவியின் சடலத்தை சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து தனது மனைவியைப் போன்ற ஒரு மெழுகு பொம்மை செய்து, அதனுள் அவரது எலும்புகளை வைத்து, அந்த பொம்மைக்கு ஒப்பனை எல்லாம் செய்து உடன் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளளார்.

மனைவியின் உருவத்தின் அருகே லி வானும் அத்தம்பதியருடைய 12 வயது மகனும் உடலை அனைத்துக்கொண்டு படுத்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ, இப்படியான சம்பவங்களைத் தடுப்பதற்கோ தங்களிடம் அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.