01

01

அழகான பனைமரமும் எரியூட்டப்பட்ட ஈழமும்!! : அழகி

Palmyra_Treeகடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு எமது ஈழம் எப்படி இருந்தது? கொள்ளை அழகோடு மக்களின் மகிழ்ச்சியோடு தான் இருந்தது என நான் நினைக்கிறேன். வயல் வெளிகள், வெங்காயத் தோட்டங்கள், தேயிலை பயிர்கள் போல் பசுமையாய் காட்சியளித்த புகையிலை, மிளகாய்கன்றுகள் இன்னும் சொல்லப் போனால், ஐம்பது வயது தாண்டிய கிழடுகளுடன் ஒரு சக நண்பனைப் போல ஒற்றை மாட்டு வண்டி நீர் இறைக்கச் செல்லும் காட்சி, தான் விளைவிக்கும் பயிர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் விவசாயி, மாணவர்கள் பள்ளி செல்லும் காட்சி என எல்லாம் நினைவில் வந்து மனதை வாட்டுகின்றது. இந்தியாவில் உள்ளவர்களை விட நாம் சுதந்திரமாக இருந்ததாகவே எனக்கு தோன்றுகின்றது. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் எனில் எமது சுதந்திரங்களை நாம் ஏன் இழந்தோம். பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோவணத்தையும் இழந்தவர்களாகி விட்டோம். இதை ஏற்படுத்தியவர்கள் யார்?

இந்த அவலத்தை எமக்கு தந்தவர்கள் யார்? அவர்களை மக்களாகிய நாம் எப்படி அனுமதித்தோம். சுதந்திரம் என்பது என்ன? அது யாருக்கு தேவைப்பட்டது? இப்பொழுதாகிலும் புலம்பெயர் தமிழர் புரிந்து கொள்கிறார்களா? சுதந்திரத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா?
1) தற்கொலை போராளிகளை அனுப்பி வாங்க முடியுமா?
2) ராணுவ தளத்தை ஐம்பது தற்கொலை தாக்குதல் நடத்தி எல்லாளனைக் காட்டினால் அடைய முடியுமா?
3) அரசியல் சாணக்கியம் அற்ற ஆயுததாரிகளால் முடியுமா?
4) எந்த விதமான கேள்விக்கும் இடமின்றி எமது இனத்தில் இரண்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்களே இப்போதாவது சுதந்திரம் கிடைத்ததா?
5) வெறும் மாக்ஸியம் , லெனிஸிஸம் , ரொக்ஸிஸம் பேசிக் கொண்டு இவ்வளவு அழிவுகளுக்கிடையிலும் சிங்களவர்கள் எமது உடன்பிறப்புக்கள் என கூறிக் கொண்டு மேதாவித்தனத்துடன் உலா வந்து கொண்டிருந்தால் சுதந்திரம் கிடைத்து விடுமா?

கடந்த காலங்களில் பல சம்பவங்களை கேள்வியுற்று இருந்தேன். தமிழ் இளைஞர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? படித்த பட்டதாரிகளுக்கு வேலையில்லை – சிங்கள அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். என்னை பொறுத்தவரை எமது ஊரில் பல்கலைக்கழகம் சென்று படித்து முடித்தவர்கள் எல்லோரும் வேலையில் தான் இருந்தார்கள். தரப்படுத்தல் என்ற பிரச்சனை இருந்தது என்பது உண்மையே. இதனால் சில மாணவர்கள் பாதிப்படைந்து கவலைப்பட்டார்கள். ஆனால் பலர் நன்கு படித்து பல்கலைக்கழகம் வரை சென்றார்கள். என்னைப் பொறுத்தவரை எமது இன விடுதலை என்றால் என்னவென்று தெரியாமல் – கல்வியறிவு குறைந்தவர்களால், ஆதிக்க வெறியர்கள் சிலரால் ஆங்காங்கே சில இன உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை சேர்த்து குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? எமது தமிழினத்தின் குறைபாடு என்னவெனில் சமுதாயத்தை நேசிப்பதில்லை. மாறாக எது நடந்தாலும் தன்னை பாதிக்காத வகையில் மௌனமாக இருக்கும். இந்த குணத்தினாலேயே கடத்தல்காரனான குட்டிமணி அரச சொத்துக்களை கொள்ளையடித்த போது மௌனமாக இருந்தார்கள். மேலும் குட்டிமணியை சிலர் பொலிசிடம் பிடித்து கொடுக்க முற்பட்டபோது குட்டிமணியால் கொல்லப்பட்டார்கள். ஆனால் மக்கள் அங்கு பேசிக் கொண்டது என்னவெனில் அரசாங்கத்தின் சொத்தை கொள்ளையடித்தால் இவர்களுக்கென்ன? இதை வாய்ப்பாக பயன்படுத்தி குட்டிமணி, பிரபாகரன், உமாமகேஸ்வரன், சபாரட்னம் இன்னும் ஏனைய குழுக்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து கேள்வி கேட்க ஆளில்லாமல் கண்மூடித்தனமாக எமது மக்களுக்கெதிராக காட்டுத் தர்பார் நடத்தினார்கள்.

சமூக விரோதிகள் என்ற பெயரில் தமிழ் மக்களை மின்கம்பங்களில் கட்டி நெற்றியில் வெடிவைத்து கொன்றார்கள். இதையும் மக்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோடு நிறுத்தாமல் ‘பெடியள் வெடி வைத்தால் நெற்றி வெடிதான்” என கேவலமாக குரூரமாக வர்ணித்தார்கள். பக்கத்தில் இருந்து ரிவோல்வரை நெற்றியில் வைத்துதானே சுட்டார்கள் – இதில் கிலாகித்து பேச வீரம் எங்கே இருக்கிறது. மக்கள் இதை சொல்வதிலே பெருமை கொண்டார்கள். அது இந்த பயங்கர குழுக்களுக்கு வலுவூட்டுவதாய் அமைந்தது. இதில் சில குழுத்தலைவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சில தலைவர்கள் விபச்சாரப் பெண்களிடம் சென்று வந்தார்கள். சிலர் ஒவ்வொரு இரவும் குடிபோதையில் மிதந்தார்கள். இப்படியே கொள்ளையடித்த பணம், மக்கள் கொடுத்த பணம் எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இவர்களுடைய ராஜபோக வாழ்விற்கு இடைஞ்சலாக இருப்பவர்களை தேசதுரோகி என்ற பட்டத்துடன் கொலையும் செய்தார்கள். கேட்பதற்கு யாரும் இல்லை. இவர்கள் செய்த எல்லா துரோகங்களையும் புலம்பெயர்ந்த தமிழர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள். இப்பொழுது ஈழத்தில் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புலிகளின் அதிகாரவெறியினால் கேட்பதற்கு நாதியில்லா நிலையில் பலரின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு தமது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் புலம்பெயர் தமிழீழம் என்று பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள். இப்பொழுதும் மக்கள் மௌனிகளாகவே இருக்கின்றார்கள்.

இப்படியாயின் சுதந்திரம் என்பதுதான் என்ன? அதை மக்கள் மக்களுக்காக தாமே கட்டியெழுப்ப வேண்டும். எப்படி? முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பின்பு பலருடன் விவாதம் செய்து ஆராய வேண்டும். மக்களை நேசிக்க வேண்டும். மக்களை நேசிப்பது என்பது என்ன? வாய்ப்பில்லாதவன், வசதியற்றவன், மென்மனம் கொண்டவன், துணையற்றவன், அமுக்கப்பட்டவன் என பலவகைப்பட்ட சமுதாயப் பிரஜைகளையும் மரியாதையாகவும் இரக்கமுடனும் எதிர்கொண்டு அவனுக்காக செயல் புரிதலே மக்களை நேசிப்பதாகும். போராட்டத்தை அந்த மக்களுடையதாக உருவெடுக்க வைத்தல் வேண்டும். போராட்டம் மக்களுடையதாக உருவாகி வரும் போதுதான் நல்ல அரசியல், இராஜதந்திர அனுபவங்களுடன் ஆயுதம் ஏந்த வேண்டும். உயிர்களின் மீது நேசமும் அவற்றின் அருமையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய மண்ணில் நல்ல வசதி வாய்ப்புக்கயோடு மிகவும் சுதந்திரமாக இருந்து கொண்டு போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் வேண்டும். தவிர்க்க முடியாது எனவும், மக்கள் வெளியேற தவித்தபோது வன்னி மண் உங்கள் பூர்வீகம் அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும், நீங்கள் செத்தால்தான் வெள்ளைக்காரன் மனங்கசிந்து ஓடோடி வருவான் என்றெல்லாம் கூறிய ஈவு இரக்கமில்லா புலிப் பினாமிகளே!! உங்களுடைய ஒரு பிள்ளையை என்றாலும் யுத்தத்திற்கு அனுப்ப முடியுமா?

நாட்டில் நிலவிய பசி, பட்டினி – வறுமை என்ற நிலைகளைப் பயன்படுத்தி ஒன்றுமறியாக் குழந்தைகளுக்கு குண்டுகளைக் கட்டி அனுப்பி கொலை செய்து அதை கண்டு களித்ததீர்கள். இரக்கமில்லாத மனித முண்டங்களே, எத்தனை விலைமதிப்பற்ற போராளிகளை எல்லாம் கொன்றொழித்து விட்டு கிட்டு, குமரப்பா, நடேசன், சங்கர், பால்ராஜ் போன்றவர்களை கொண்டாடுகிறீர்கள்? யார் இவர்கள்? இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? புலி ஆதரவாளர்களே! இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

எனது இளம்பருவத்தில் கல்வி கற்கும்போது எமது ஆசிரியர் அடிக்கடி நல்ல மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுவார். அதை கீழே குறிப்பிடுகின்றேன். ஒரு பகுதி மக்களை அவர் வாழைக்கு ஒப்பிடுவார். வாழைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் கொடுக்கிறீர்களோ அதற்கு தகுந்த பலனை தரும். இரண்டாவதாக தென்னைக்கு ஒப்பிடுவார். தென்னைக்கு கொஞ்ச தண்ணீர் கொடுத்தால் போதும் பலன் தரும். ஆனால் பனை மரம் மனிதர்கள் எந்த உதவியும் செய்யாமலே மனிதர்களுக்கு உதவி செய்யும்.

இப்படித்தான் போராளிகளும், அல்லது இனிவரும் காலத்தில் நடக்கும் போராட்டங்களாக இருந்தாலும் பனை போன்ற குணமுடையவர்களால் தான் வழிகாட்டப்பட வேண்டும். இப்பொழுது இவ்வளவு வரட்சிக்கும் அழிவுக்கும் மத்தியிலும் பனை கம்பீரமாக காட்சி தருகிறது. பனைக்கு கற்பகதரு என்ற பெயரும் உண்டு.

நாம் கேணல், லெப்டினட், மாமனிதன், தேசப்பற்றாளன் என்றெல்லாம் பெயர்கள் வைக்கிறோம். ஆனால் இன்று பெயர் வாங்கினவனும் இல்லை. பெயர் வைத்தவனும் இல்லை. இத்தனை அட்டூழியங்கள் இந்த புலிகளால் செய்யப்பட்டும், அழிந்தும் திருந்தவில்லை. இவர்கள் எப்போதுதான் திருந்தப் போகின்றார்கள்? ஜிரிவியும், புலிகளும் முதலில் அகதிகள் முகாமில் இருக்கும் இளைஞர் யுவதிகளை தயவு செய்து ஒரு ஆயிரம் பேரையாவது இந்த ஐரோப்பாவிற்கு அழைத்து தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்களானால் புண்ணியமாதல் கிடைக்கும். நன்றிகெட்ட மனிதர்களே, இப்பொழுதாவது திருந்தப் பாருங்கள். மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு மன்னிப்பே கிடைக்காது போய்விடும்!!

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் இன்று முதல் சுதந்திர நடமாட்டம்

srilanka_displaced.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து இவ்வனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வோர் தாம் தங்கியுள்ள கிராமத்தின் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியே சென்றுவர முடியும் என வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது. இதன் மூலம் இடைத்தங்கல் கிராமங்களில் தங்கியிருந்தோரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதுடன், அவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடவும் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசுந்தரம் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தோருக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வட்டைகளை அவர்கள் நிவாரணக் கிராமங்களின் பொறுப்பாளர்களிடம் காட்டிவிட்டுத் தாம் திரும்பி வரும் தினத்தையும் குறிப்பிட முடியும்.  அவர்கள் எந்தவிதப் பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் பல்வேறு மாவட்டங்களிலுமி ருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியிருந்தோரில் பெருமளவிலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலு முள்ளவர்கள் ஏற்கனவே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அத்துடன் வயோதிபர்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் தமது உறவினர்களுடன் போய் இணைந்துகொள்ளும் வகையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேறியவர்களைத் தவிர வவுனியா நலன்புரிக் கிராமங்களில் மேலும் 1,20,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கே இன்றுமுதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  இதேவேளை, மேற்படி 1,20,000 பேரையும் எதிர்வரும் 2010 ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை அமைத்து, அவர்களும் வாக்களிக்க உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்; மேற்படி விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை யொன்றுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதுடன், அதனையடுத்து அவரது வழிகாட்டல்களுக் கமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 325 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு நேற்று அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவர்களுக்கான சைக்கிள்களை வழங்கினார். மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கை சிறுவர் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட ராதிகா

மியன்மார் அரசாங்கம் தனது பாரிய இராணுவத்துக்கு தொடர்ந்தும் சிறுவர்களை சேர்த்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ள சிறுவர் போராளிகள் தொடர்பான விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா.நிபுணர் ராதிகா குமாரசாமி, அதேசமயம்  இலங்கையில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ. நா. தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது மியன்மாரில் தான் ஸ்வேயின் அரசாங்கம் தொடர்ந்தும் படைக்கு சிறுவர்களைத் திரட்டி வருவது தொடர்பாகவும் இலங்கை முகாம்களிலிருந்து சிறுவர்கள் உட்பட இடம்பெயர்ந்த மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ராதிகா குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மியன்மாரில் பிராந்திய மட்டத்தில் ஆட்திரட்டல் இடம்பெறுவதாக தென்படுவதை ராதிகா குறிப்பிட்டிருப்பதாக இணையத்தள செய்தி சேவை தெரிவித்தது.  இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் டிசம்பர் இல் இலங்கைக்கு செல்வதற்கு பற்றிக் கம்மெயார்ட்டை தான் நியமித்திருப்பதாகவும் அதன்பின் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்தி இலங்கை தொடர்பான சகல கேள்விகளுக்கும் பதிலளிப்பாரெனவும் கூறியுள்ளார்.

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வேளை வந்துவிட்டது. மகாநாயக்கர்களை சந்தித்த பின் ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgயுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இப்போது வழிபிறந்துள்ளது என்று தெரிவித்த எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா வட, கிழக்கு மக்களின் உரிமைகளை கவனிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று தலதாமாளிகையில் வழிபட்டபின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற சரத்பொன்சேகா பின்னர் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண இப்பொழுது வழி ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்றதால் மக்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாழும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றாலும் அகதி முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தாமதம் காட்டப்படுகிறது. அவர்கள் சொந்த இடத்திற்கு உடனே அனுப்பப்படவேண்டும்.

வட,கிழக்கு யுத்தம் முடிவுற்று மக்கள் அமைதியாக வாழும் வேளையில் அவர்களது உரிமை பற்றி நாம் கவனிக்கவேண்டும்.கவனிக்க வேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளோம். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தச்சட்டம் இருந்தபோதும் இன்று நிலைமை வேறாக உள்ளது. அதற்கு மேலாக உரிமைகள் உள்ள சரத்துகள் அடங்கிய தீர்வை பாராளுமன்றில் பெறப்படும் அதிகாரம் மூலம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.சிங்களவர்,முஸ்லிம்கள்,தமிழர்கள் எல்லோரும் இந்த நாட்டு பிரஜைகள்,அவர்கள் மத்தியில் ஒற்றுமை ,புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது இன்றைய தேவையாகும். 13 ஆவது அரசியலமைப்பு சட்டத்தினை ஜே. வி.பி. எதிர்த்தபோதிலும் இப்பொழுது எம்முடன் இணைந்துள்ள அவர்கள் அதற்கு ஆதரவளிக்கிறார்கள். இதற்காக அதிகாரத்தை பரவலாக்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படும். என்றார்.

பொன்சேகா ஆதரவுக்கு எதிரொலி – மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராஜினாமா

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் சோஷலிச மகளிர் அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளருமான பிரியங்கா கொத்தலாவல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி கூட்டாக செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதுடன் வகித்து வந்துள்ள அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு கடும் தொனியில் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ள தையிட்டு தான் கிலேசமுற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எயிட்ஸ் குறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை

aids-ribbon.jpgஇன்று டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாகும். உலகில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1981இல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதனையடுத்து இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை 33 மில்லியன் பேர் HIV/AIDS தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அபிவிருத்தி அடையும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1987 இல் இனங்காணப்பட்டார். 2009 செப்டெம்பர் மாதமளவில் எமது நாட்டில் 1161 HIV+ நோயாளர்கள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் AIDS நிலைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 302 ஆகும். இந்த வைரஸினால் உயிரிழந்தவர்கள் 197 பேர். இதில் 41 பேர் சிறுவர்கள். எங்கள் நாட்டில் தற்போது 3800 – 4000 HIV + நோயாளர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் மூலமே எங்கள் நாட்டில் HIV தொற்று ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதேவேளை HIV தொற்றுக்கு உள்ளாகிய 184 நோயாளிகள் ARV எனும் எதிர்ப்பு மருந்து வகைகளை பாவிக்கின்றனர்.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு, தேசிய நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

இலங்கை எயிட்ஸ் நோயாளிகள் குறைந்தவொரு நாடாக கருதப்படுவதாகவும் அதற்கு எங்கள் நாட்டு மக்களின் கல்வியறிவும், கலாசாரம் சக்தி மிக்கதாகவும் அமைந்துள்ளதே காரணம் என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்திய அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் இதற்கு பிரதான காரணமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ரகசியம் பேணப்படும் வகையில் பாலியல் நோய் சோதனை, இலவச சிக்சிசை மற்றும் ஆலோசனை, இரத்தப் பரிசோதனை மற்றும் வைரஸ் பாதிப்பு, மருந்து வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்துதல் இலக்காகக் கொள்ளப்படும் குழுக்களுக்கு நடத்தை முறை பற்றி விளக்கம் ஆகியவை தேசிய நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தினால் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சுகாதார பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளின் பேரில் AIDS, காச நோய் மற்றும் மலேரியாவுக்கான உலகளாவிய நிதியம் (G F A T M) மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கை யில் எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்கான நிதி உதவியை வழங்குகின்றன.

ஒசாமாவை தப்ப விட்டது புஷ் நிர்வாகமே; அமெரிக்க செனட் உறுப்பினர் புகார்

ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை இராணுவ அதிகாரி உத்தரவால் பிடிக்க முடியாமல் போனது, என அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட்டின் வெளி விவகாரக் குழு தலைவர் ஜோன் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது :-அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலை பகுதிகளில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தன. அப்போதே ஒசாமாவை உயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி பிடித்திருக்கலாம்.

ஆனால், இராணுவ தலைமை அதிகாரியின் உத்தரவின் காரணமாக, அப்போது அமெரிக்க படைகளில் அங்கிருந்து வெளியேறி விட்டன.

அப்போதே சுட்டு வீழ்த்தியிருந்தால், தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தடுத்திருக்கலாம். அப்போது செய்த தவறால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இன்று பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது.

எதிரியை ஒழிப்பதற்காக படையோடு ஆப்கானுக்கு சென்றாகி விட்டது. அங்கு சென்றபின் எதிரியை கொல்வதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது? பாகிஸ்தானுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை பகுதிகளை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு, பாகிஸ்தான் வழியை அடைத்திருந்தால், ஒசாமாவின் கதை முடிந்திருக்கும்.

அதை புஷ் நிர்வாகத்தில் இருந்த ரம்ஸ்பீல்டு போன்றவர்கள் செய்ய தவறி விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறினால் இன்று பல நாடுகளிலும் அல்-கொய்தா ஆதரவுடன் பயங்கரவாதிகள் கொடி கட்டி பறக்கின்றனர். இவ்வாறு ஜான் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

செரீனா வில்லியம்ஸுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடை

serena-williams.jpgஉலக மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸுக்கு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபெற மூன்று ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தின் போது பெல்ஜியம் நாட்டின் கிம் கிளைஸ்டருக்கு ஆதரவான ஒரு முடிவை போட்டியின் ஒரு நடுவர் தெரிவித்ததற்காக, அவரை ஆடுகளத்திலேயே ஏசிய குற்றத்துக்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதே போன்று ஒரு பெரிய தவறை மீண்டும் செய்வாராக இருந்தால் இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வரும்.

புலி நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்ததால் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து – அமைச்சர் டலஸ் கூறுகிறார்

இராணுவச் சீருடையை தற்கொலை அங்கியாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அவரது உயிருக்கு கூடியிருக்கும் கூட்டாளிகளிடமிருந்தே ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.  நேற்று கொழும்பில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தனது பாதுகாப்பு மக்களிடமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். இது உண்மைதான் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அது வெளியே இருந்து வரப்போவதில்லை. இன்று ஜெனரல் பொன்சேகா விடுதலைப்புலிகளின் நண்பர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ளார். அவர்களிடமிருந்து தான் எந்த நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.  எதிரணியினர் அமைத்துள்ள கூட்டமைப்பு புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும். புலிகளுக்காக குரல் கொடுத்தவர்களும், பிரபாகரன் கொல்லப்பட்ட போது கண்ணீர் வடித்தவர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்புக்குள் சரத் பொன்சேகா சிக்கியுள்ளார். அங்குதான் அவரது உயிருக்கு ஆபத்து காணப்படுகிறது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றது. : புன்னியாமீன்

images.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் 06 மாதிரி வினாத்தாள்களை வழங்கியுள்ளதுடன்,  தனது இவ்வருடத்துக்கான நிவாரண செயற்றிட்டத்தை நிறைவு செய்து கொண்டது. 

வன்னி மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்ற நீண்டகால அடிப்படையைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்ட செயற்பாடுகளை முன்னேடுக்கத் திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய எமது கல்வி நிவாரண செயற்றிட்ட உதவிகளைப் பெற்ற 507 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை எமக்கு மன நிறைவினையளித்தது. அதேநேரம்,  தரம் 5 மாணவர்களின் செயற்றிட்டத்தை ஆரம்பித்த வேளையில் 300 மாணவர்களை சித்தியடையச் செய்ய வைக்கும் இலக்கோடு தான் நாம் செயற்பட்டோம்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால்,  மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் எமது கல்வி நிவாரண செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்த அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள்,  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள்,  ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினைத் வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்திற் கொண்டோம்.

01.  நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02.  யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03.  சாதாரண தர பரீட்சை தரம் 10,  11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே,  பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாட அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04.  நிவாரணக் கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ, வசதிகளோ இல்லாதிருந்தமை.
 
05.  புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட,

யுத்த சுழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக்கூடிய கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக்கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம்.

எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் 5 ஐயும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.

அதேநேரம்,  மாதிரிவினாத்தாள்கள்,  அரசாங்க வினாத்தாள்கள், கையேடுகள் என 77 அலகுகளாக வகுத்து இவற்றின் அச்சீட்டுக்கான தனித்தனி அச்சீட்டு செலவு விபரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம்.

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்களல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களில் ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால்,  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

எமது இத்திட்டத்துக்கு உதவிகள் வழங்கியவர்கள்

அகிலன் பவுண்டேஷன் (லண்டன்) 500 பவுண்கள்
கரன் சேவிர்ஸ் ஸ்ரேசன்ஸ்  (லண்டன்) 500 பவுண்கள்
திரு பொன் சிவசுப்ரமணியம் (லண்டன்) 500 பவுண்கள்
தேசம்நெற் (லண்டன்) 500 பவுண்கள்

லண்டனிலிருந்து மொத்தம் 2000 பவுண்கள் கிடைத்தன.

கனடாவிலிருந்து (கனடாவில் திரு. Ahilan Navaratnam   அவர்கள் எமது திட்டத்திற்கு தானாக முன்வந்து பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.)                
Ahilan Navaratnam                   500.00.  CDN
Vijayakaran Thuraisingam       200.00. CDN
Jeyanandan Sinniah                  100.00   CDN
Seenivasagam Navaratnam     100.00. CDN
N.Visuvalingam                            50.00. CDN
Sriskandarajah Anandarajah      50.00.  CDN    
Velupillai Pramsothy                   50.00.  CDN
Aiyadurai Shanmuganathan       50.00.  CDN
P.Arunasalam                               50.00.  CDN
R.Chandrarajan                            20.00.  CDN
V.Joganathan                                20.00.  CDN
                               Total –          1190.00. CDN
அனுப்புதல் செலவு               10.00   CDN
இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகை 1180.00 CDN
இலங்கை நாணயப்படி 129, 210.00 ரூபாய்களாகும்.
பிரித்தானிய நாணய அலகுப்படி 680 பவுண்களாகும்.

இத்திட்டத்திற்கு லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் கிடைத்த மொத்தத் தொகை 2680 பவுண்களாகும்.

இப்பணத்தொகையைக் கொண்டே நாம் 6290 மாணவர்களுக்குமான அச்சீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எம்மால் அனுப்பப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களுக்கும் மொத்த அச்சீட்டுச் செலவு 2847 பவுண்கள்.

மீதமான 167 பவுண்களை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செலவீனங்களுக்கு மேலாக போக்குவரத்து, பொதியிடல் போன்ற செலவுகளையும் சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இது குறித்த பூரணமான கணக்கறிக்கை எமது செயற்றிட்டத்துக்கு பங்களிப்பு செய்தோருக்கு புத்தக வடிவில் அனுப்பப்படும். அக்கணக்கறிக்கையைப் பெற விரும்புவோர்கள் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு தங்களது முகவரிகளை அனுப்புமிடத்து தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 40
எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் நிறை 761 கிலோகிராம்கள். 

அதேநேரம்,  இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதங்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும், இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும்,  கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால், வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இதனால் பேராதனைப் பல்கலைக்கழக மற்றும்  கண்டி பிரதேச புகழ்பெற்ற ஆசிரியர்களிடமிருந்து மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் பெற்றுக் கொண்டோம். குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை சிந்தனைவட்டமே பொறுப்பேற்றுக் கொண்டது.

இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த எம்மவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. விசேடமாக பணமாகவன்றி தாம் ஏற்கனவே தயாரித்த மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகளையும்கூட தருவதற்கு இவர்கள் முன்வராமை இவ்விடத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமே.

நாம் வழங்கிய மாதிரிவினாத்தாள்களை பின்வரும் பெருந்தகைகள் எமக்குத் தயாரித்துத் தந்தனர்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர் – வரலாறு ஆசிரிய ஆலோசகர்
திருமதி மஸீதா புன்னியாமீன் – பயிற்றப்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர்
ஜனாப் ஏ.எம். பாயிஸ் – பயிற்றப்பட்ட கணித ஆசிரியர்
செல்வி தஸ்மின் ரியால் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

மேலும், எம்மால் வழங்காமல் கைவசமுள்ள மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் தயாரித்துத் தந்த பெருந்தகைகள்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர்;
திருமதி மஸீதா புன்னியாமீன்;
செல்வி தஸ்மின் ரியால
ஜனாப் ஏ.எம். பாயிஸ்
திரு. சிவநாதன் (கல்விப் பணிப்பாளர்)
திருமதி. எம்.ஐ. நளீமா
திருமதி. எம்.ஐ.எஸ்.மும்தாஜ்
திருமதி. சாபிரா நஸார்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

இவர்களுக்கு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் வன்னி முகாம் அகதிகள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

எமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்:

1. ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாத இறுதியில் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போனமை (இதற்கு மூல காரணம் ஆரம்பத்தில் எமக்கு நிதியுதவிகள் கிடைக்காமையே)

2. ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் முகாம்களில் இருந்த மாணவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டமை (இம்மாணவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டாலும்கூட எம்மால் அனுப்பப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் மீள்குடியேறிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.)

3. பிரதான காரணம் மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு எவ்விதமான நிதியுதவிகளும் எமக்குக் கிடைக்காமை.

எவ்வாறாயினும் ஓரளவுக்காகவது ஒரு சிறிய உதவியாவது வன்னி மாணவர்களுக்கு  செய்யக் கிடைத்தமையை ஒரு பேறாகவே கருதுகின்றோம். இத்திட்டத்திற்கு எம்மால் ஒரு மாணவனுக்கு வழங்க முடியுமாக இருந்த தொகை 45 பென்ஸ்கள் மாத்திரமே.

எதிர்கால ஆலோசனைகள்:

தற்போது அரசாங்கம் செயற்பட்டுவரும் முறையில் அரசாங்கம் 2010 ஜனவரி 31க்கு முன்பு முகாம்களிலுள்ள அனைத்து அகதிகளையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. (டிசம்பர் விடுமுறைக்கு முன்பாக கிளிநொச்சி முல்லைத் தீவு பிரதேசங்களில் மேலும் பல பாடசாலைகள் திறக்கப்படலாம்)

பாடசாலைகளைத் திறப்பதால் மாத்திரம் அல்லது திறந்த பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மாத்திரம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துவிட மாட்டாது. விசேடமாக புலம்பெயர் தமிழர்களும்,  இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களும் வன்னி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவற்றையும் தமது செயற்றிட்டங்களில் சேர்த்துக்  கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகவுள்ளன. போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய வளங்கள் இல்லை. உள்ள வளங்களைக் கொண்டே தற்போதைய கல்வி நிலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இத்தகைய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம். எமது அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து அகதிமுகாம்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு தரம் 05 பாடப்பரப்பை மையப்படுத்தி எம்மால் ஒரு நிறைவான வழிகாட்டலைக் காட்ட முடிந்தது. இதன் விளைவாக 507 மாணவர்கள் சித்தியடைந்தனர். 2010ஆம் ஆண்டில் நிவாரணக் கிராம மாணவர்கள் என்பதை விட மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்கள் என்றடிப்படையில் தரம் 05 புலமைப்பரிசில்,  க.பொ.த.சாதாரண தரம்,  க.பொ.த. உயர்தரம் போன்ற மூன்று அரசாங்கப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும். இது உங்கள் பொறுப்பு.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு. இது யதார்த்தம். எனவே பேசிப்பேசிக் காலத்தைக் கழிக்காமல் நிலையான திட்டமொன்றின் கீழ் இணையுமிடத்து வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியில்லாவிடில் அம்மாணவர்களின் கல்விநிலை இன்னும் சில ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததே.

அவ்வாறு ஏற்பட்டால் என்றோ ஒரு நாள் நாம் கைசேதப்பட வேண்டிய நிலை உருவாகும்.