23

23

ஐ.நா விளக்கம் கோரிய விவகாரம்: அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய முக்கியத்துவமான பிரச்சினை

pm.jpg‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. விளக்கம் கோரியிருப்பதை நாட்டுப் பிரச்சினையாக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார். ‘இதனையொரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை விசேட செய்தியாளர் மாநாடு நடந்தது. பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய பேட்டி தொடர்பாக ஐ.நா. விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிய அவர் மேலும் கூறியதாவது; ஐ.நா. சபை டிசம்பர் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மே 17ம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில் மூன்று புலி முக்கியஸ்தர்களின் பெயர்களினதும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் பூரண விளக்கம் தருமாறு ஐ.நா. கோரியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

‘இவ்வாறான சம்பவமொன்று நடக்காத நிலையில் விளக்கமளிக்குமாறு ஐ.நா. கேட்டிருக்கிறது. இதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது’ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தனிநபர் எவரையும் நான் குறை கூறவில்லையெனத் தெரிவித்த பிரதமர், முன்னாள் அதிகாரியான பொன்சேகா, சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியை அடிப்படையாகக் கொண்டே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

“யார் இதனைக் கூறியிருந்தாலும் ஒரு தனிநபர் பிரச்சினையாக இதனைக் கருத முடியாது. நாடு என்ற ரீதியிலேயே நாம் இதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நடக்காத ஒரு பிரச்சினைக்கு நாம் எந்த வகையில் விளக்கம் கொடுக்க முடியுமெனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். “சர்வதேச அழுத்தங்கள்” வந்த வண்ணமே இருக்கின்றன. அவை ஒவ்வொரு வடிவத்தில் வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். நாடு என்ற ரீதியில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

கப்பல் உண்மையில் புலிகளுக்குச் சொந்தமானதா? உறுதிப்படுத்துமாறு ஐ.தே.க. சவால்

ltte-ship.jpgபின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள  ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

புலிகளுக்குச் சொந்தமான பின்ஸஸ் கிரிஸ்டினா என்ற கப்பலைக் கைப்பற்றி, இலங்கைக்கு இழுத்து வந்துள்ளதாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பிரசாரம் அரசியல் இலாபத்திற்காகவும், ஜனாதிபதித் தேர்தலின் சுலோகம் என்பதனையும் நாம் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.  இந்தக் கப்பல், புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியுடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம்.

அது மட்டுமன்றி, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகல் இலங்கை கடற்படை அதிகாயின் தலையீட்டுடன் இந்தக் கப்பல் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.  புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான விசாலமான 20 கப்பல்களும், 10 சிறிய கப்பல்களும் இருந்தமைக்கான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அதில் மிகபெரிய கப்பலொன்று எமது படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின், எஞ்சியிருக்கும் கப்பல்கள் மூலமாக பெறப்படும் ஆதாயத்தை யார் பெற்றுக்கொள்கின்றனர் என்பது எம்முன் இருக்கின்ற பிரச்சினையாகும்.

அதுபோல, புலிகளுக்குச் சொந்தமான 300 எரிபொருள் நிலையங்கள், உலகம் பூராவும் இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக, பல்வேறு நாடுகளில் வங்கிக் கணக்குகளும் இருக்கின்றன. அவற்றிலிருந்து கிடைக்கின்ற மற்றும் கிடைத்த இலாபங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை அரசாங்கத்தின் கணக்கு வழக்கில் பேணப்பட்டதா? அப்படி இல்லையாயின், வேறு நிறுவனத்தின் கணக்கில் பேணப்பட்டதா என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ (எச்1 என்1): குளிர்கால நிலையுடன் தீவிரமடையும் அபாயம் – இது ஒரு தொற்று நோய்

swine-flu-2.jpgபுதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) குளிர் கால நிலையுடன் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் டாக்டர் லசந்த கொடித்துவக்கு தெரிவித்தார்.

இந் நோய் மேற்கு நாடுகளில் குளிர்கால நிலையோடு சேர்த்துத் தான் தீவிரமடைகின்றது. ஆகவே தற்போது நாட்டிலும் குளிர்கால நிலை ஆரம்பமாகி இருப்பதால் இங்கும் இந்நோய் தீவிரமடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உங்களுக்குச் சிறந்த பாதுகாப்பு நீங்களே என்ற தொனிப்பொருளிலான இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மக்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டலில் இடம்பெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) நோய் உலகளாவிய நோயாக மாறியுள்ளது.

இது ஒரு புதிய வைரஸ் ஆகும். இவ் வைரஸின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கக் கூடிய சக்தியை பெரும்பாலானவர்கள் கொண்டவர்களாக இல்லை. அதனால் தான் இந் நோய் சிலருக்கு உயிராபத்து மிக்க தாக்கத் திகழ்கின்றது. இது ஒரு தொற்று நோயாக விளங்குவதால் இந்நோயிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் விசேட கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பு – ஐ. நா. அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்

uno.jpgஇராணுவத் தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்ப துடன் சரத் பொன்சேகாவின் கூற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ. நா. சபையின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது நேரடி அவதானத்தைச் செலுத்தியுள்ளதுடன் ஐ. நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளாரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் தெரிவித்ததாவது:-

இவ்விவகாரத்தை எவரும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. இது தாய் நாட்டையும் தாய் நாட்டை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினரையும் களங்கப்படுத்தும் விடயமாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு முழு உலகத்தின் பாராட்டுக்கும் உரித்தான எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள இக் குற்றச்சாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றில்லாமல் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

இது சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான போராட்டமல்ல, படையினரையும் நாட்டையும் அபகீர்த்திக்குள்ளாக்கவே பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக வந்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் – ஜனாதிபதி

elc-2010.jpgநாற்ப தாண்டு கால அரசியல் அனுபவமும் நாற்பது நாள் அரசியல் அனுபவமும் எத்தகைய இடைவெளியைக் கொண்டதோ அதேபோலவே தேர்தல் முடிவுகளும் அமையும் என்பதை மக்கள் ஏலவே தீர்மானித்துவிட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

கண்டி- ஜனாதிபதி மாளிகையில் நேற்று (22) காலை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சு.க. தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் 2010 ஆம் ஆண்டின் வளமான எதிர்கால நடவடிக்கை குறித்தும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,

1936ஆம் ஆண்டு முதல் அரசியல் செய்து வருகின்றோம். எமது அரசியலை மக்கள் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. இது குறித்து எதிர்காலத்தில் நாம் எந்த வித அச்சம் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு இந்த நாட்டையும் மக்களையும் நாம் பாதுகாத்துள்ளோம். எம் நாட்டு மக்களை பாதுகாக்க அரசியலுக்கு அப்பாலும் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய பொறுப்பும் உணர்வும் நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

ஐ. தே. கட்சி மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளிலிருந்து அரசுக்கும் எமது கட்சிக்கும் ஆதரவு வழங்கும் பொருட்டு எம்முடன் பலர் தொடர்ச்சியாக இணைந்துகொண்டு வருகின்றனர். இவ்வாறு எமது கட்சிகளுடன் இணையும் உள்ளூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல்வாதிகள் ஆகியோர்கள் என்னுடன் நாட்டு மக்களை பாதுகாக்கும் படியான ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தே இணைந்த வண்ணம் உள்ளனர்.

பொய் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி எமது தாய் நாட்டை இரண்டாகப் பிரித்த நிலைமையிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றது உலகமே பொருளாதார சிக்கல்களில் மூழ்கிய போதிலும் நாம் மேற்கொண்ட பல்வேறு பிரயத்தனத்தின் விளைவாக மக்களையும் நாட்டையும் பாதுகாத்துள்ளோம்.

யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த பொருட்களும் ஆயுதங்களும் இல்லாத நிலையில் நம் ஆயுதங்களையும் மற்றும் ஏனைய அவசிய பொருட்களையும் கொள்வனவு செய்தோம். மேலும் யுத்த நிலைமையில் மக்களுக்குத் தேவையான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து மஹிந்த சிந்தனை மூலம் அதனை நடைமுறைப்படுத்தினோம். எமது அபிவிருத்திப் பணியில் யாரும் குறைகூறுவதற்கு இல்லை.மேலும் என்னையும் எனது குடும்பத்தையும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு சேறு பூச நினைத்த ஒரு ஐ.தே.க. எம்.பி. வீடு தேடிவந்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆகவே ஆதாரமற்ற வகையில் தொடர்ந்து என் மீதும் எனது குடும்பம் மீதும் சேறு பூசுவோருக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் எனவும் ஜனாதிபதி அங்கு உரையாற்றினார்.

வவுனியா- யாழ்ப்பாணம் புகையிரத பாதையை புனரமைக்க இந்தியா நிதியுதவி

railway.jpgவவுனியா வுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு பகுதியின் புகையிரத சேவையை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இந்த நிதியுதவி குறித்து அறிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள  இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிதியுதவியின் கீழ் ஓமந்தை முதல் பலாலி வரையிலான புகையிரத பாதையில், வரையறுக்கப்பட்ட  இந்திய ரெயில்வே கொன்ஸ்டக்சன் நிறுவனம், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்தியா,வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில்; தமது முதலீடுகளையும் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கைதிகளின் விடுதலை; முக்கிய அறிவிப்பு அடுத்தவாரம்

வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம், மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தப் பின்னணியில், நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைக ளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்க, கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவு ள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல சட்டமா அதிபர் இணக்கம்

tissa.jpgஊடக வியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்கப்படுமிடத்து அதயை தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜே.எஸ் திஸ்ஸநாயகத்து 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியமை தெரிந்ததே.

நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டார்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங் களில் முடிவுறுவதற்காகவுள்ள உள் ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு ள்ளதாக மாகாண சபைகள், உள்ளூ ராட்சி சபைகள் அமைச்சு அறிவித்து ள்ளது.

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள் சிலவற்றின் பதவிக் காலம் 2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் முடிவுறுகிறது. இதன்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் அமைச்சருக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அமைச்சர் ஜனக பண்டார தென்ன கோன் நீடித்துள்ளார்.