புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) குளிர் கால நிலையுடன் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் டாக்டர் லசந்த கொடித்துவக்கு தெரிவித்தார்.
இந் நோய் மேற்கு நாடுகளில் குளிர்கால நிலையோடு சேர்த்துத் தான் தீவிரமடைகின்றது. ஆகவே தற்போது நாட்டிலும் குளிர்கால நிலை ஆரம்பமாகி இருப்பதால் இங்கும் இந்நோய் தீவிரமடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உங்களுக்குச் சிறந்த பாதுகாப்பு நீங்களே என்ற தொனிப்பொருளிலான இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மக்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டலில் இடம்பெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) நோய் உலகளாவிய நோயாக மாறியுள்ளது.
இது ஒரு புதிய வைரஸ் ஆகும். இவ் வைரஸின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கக் கூடிய சக்தியை பெரும்பாலானவர்கள் கொண்டவர்களாக இல்லை. அதனால் தான் இந் நோய் சிலருக்கு உயிராபத்து மிக்க தாக்கத் திகழ்கின்றது. இது ஒரு தொற்று நோயாக விளங்குவதால் இந்நோயிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் விசேட கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.