பின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
புலிகளுக்குச் சொந்தமான பின்ஸஸ் கிரிஸ்டினா என்ற கப்பலைக் கைப்பற்றி, இலங்கைக்கு இழுத்து வந்துள்ளதாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பிரசாரம் அரசியல் இலாபத்திற்காகவும், ஜனாதிபதித் தேர்தலின் சுலோகம் என்பதனையும் நாம் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தக் கப்பல், புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியுடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம்.
அது மட்டுமன்றி, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகல் இலங்கை கடற்படை அதிகாயின் தலையீட்டுடன் இந்தக் கப்பல் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான விசாலமான 20 கப்பல்களும், 10 சிறிய கப்பல்களும் இருந்தமைக்கான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அதில் மிகபெரிய கப்பலொன்று எமது படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின், எஞ்சியிருக்கும் கப்பல்கள் மூலமாக பெறப்படும் ஆதாயத்தை யார் பெற்றுக்கொள்கின்றனர் என்பது எம்முன் இருக்கின்ற பிரச்சினையாகும்.
அதுபோல, புலிகளுக்குச் சொந்தமான 300 எரிபொருள் நிலையங்கள், உலகம் பூராவும் இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக, பல்வேறு நாடுகளில் வங்கிக் கணக்குகளும் இருக்கின்றன. அவற்றிலிருந்து கிடைக்கின்ற மற்றும் கிடைத்த இலாபங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை அரசாங்கத்தின் கணக்கு வழக்கில் பேணப்பட்டதா? அப்படி இல்லையாயின், வேறு நிறுவனத்தின் கணக்கில் பேணப்பட்டதா என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.