02

02

நான்கு வருடங்களில் 73 பாதாள உலக தலைவர்கள் உயிரிழப்பு – பொலிஸ் மாஅதிபர் தகவல்

mahinda_balasooriya.jpgகடந்த நான்கு ஆண்டுகாலப்பகுதியில் பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் 73பேர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவினர்களின் நடவடிக்கைகளுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது பாதாள உலகக்குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதற்கு விஷேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களை தடுப்பதற்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். கடந்த யுத்தகாலத்தில் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளை பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பாரிய கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக திவயின உட்பட சில சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச பொலிஸ்துறையான இன்டர்போலின் உதவியுடன் சர்வதேச கடற்பரப்பிலிருந்து குறித்த கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்கும் திட்டத்தின் முதல் படியாக இந்தக் கப்பல்கள் தருவிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்று கப்பல்களின் பெறுமதி இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் மூன்று கப்பல்கள் இருக்கக் கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் இல்லாதொழித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதன் இந்தக் கப்பல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத் தேர்தல் பணிகளும் ஆரம்பம்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் சகலரினதும் பார்வை திரும்பியுள்ள அதேசமயம், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் அடுத்த ஏப்ரலுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு இந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

வட மாகாணத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையை தொடர்ந்து வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆயினும் 2006 அக்டோபரில் இந்த இணைப்பு சட்டரீதியற்றது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆகும். புதிய பாராளுமன்றத்திலும் அந்த எண்ணிக்கை இதே விதமானதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும் வன்னி மாவட்டத்துக்கு 5 ஆசனங்களும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 6 ஆசனங்களும் திருகோணமலை மாவட்டத்துக்கு 4 ஆசனங்களும் திகாமடுல்லவுக்கு 7 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தரம்-1 முதல் 5 வரையான மாணவருக்கு கல்வியமைச்சினால் லப்ரொப்

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு கணனி மையங்களை பெற்றுத்தரும் திட்டத்தின்கீழ் ஹோமாகம கல்வி வலயத்தில் உள்ள 6 பாடசாலைகளுக்கு கணனி மையங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஹோமாகம ஜலதர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2009ஆம் வருடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப வருடமாக அறிவித்ததையடுத்து கல்வி அமைச்சு செயற்படுத்தும் வேலைத் திட்டங்களும் சமகாலத்தில் இடம்பெற்று வருகின்றன. ஆரம்ப வகுப்புகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணனி ஒன்றை பெற்றுத்தரும் திட்டமும் இதில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தில் கஷ்டப் பிரதேசத்தில் உள்ள 13 பாடசாலைகளில் உள்ள 1500 மாணவருக்கு அடுத்த மாதம் முதல் கணனிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

வவுனியா முகாம்வாசிகளுக்கு நடமாட்ட சுதந்திரம்

lankaidsleavingcamp.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தால் 6 மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் அதிகாரிகளிடம் அவர்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதலாம் திகதி மாத்திரம் சுமார் பத்து ஆயிரம் பேர் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்றதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தவர்கள் நேற்றுக் காலை 6 மணி முதல் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தமது பெயர், விவரங்களை உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்ட பின்னர் விசேட அனுமதிப் பத்திரத்துடன் இவர்கள் சுதந்திரமாக வெளியேறியதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

சுதந்திரமாக வெளியேறியவர்கள் தமக்கு வேண்டிய இடங்களுக்கு சென்று வருவதற்காக நிவாரணக் கிராம வளாகத்திலேயே நேற்று 14 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று சுதந்திரமாக வெளியேறியோருள் பலர் நண்பகல் 12 மணிக்குள் நிவாரணக் கிராமத்துக்கு மீண்டும் வந்துவிட்டதாகவும் ஏனையோர் நான்கைந்து நாட்கள் கழித்தே வருவதாகக் கூறிச் சென்றிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இவர்கள் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி யாழ்ப்பாணம் உள்ளிட்ட தூர இடங்களுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் நேற்று வரை மீளக் குடியமர்த்தப்படாத நிலையில் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சுமார் 700 தொடக்கம் 800 பேர் வரை நேற்று சுதந்திரமாக தாம் விரும்பிய இடங்களுக்கு சென்றதாகவும் அவர் கூறினார். வெளியேறியவர்கள் மீண்டும் நிவாரணக் கிராமத்துக்கு வரும்போது தமக்கு வழங்கப்பட்ட நுழைவுப் பத்திரத்தை தம்முடனே எடுத்து வருவது அவசியமெனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மார் மீனவர் 12 பேர் கடற்படையினரால் மீட்பு

கிழக்கு ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் நாட்டு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு மீட்டெடுத்துள்ளனர்.

மியன்மார் மீனவர்கள் 12 பேர் சென்றுகொண்டிருந்த இரண்டு படகுகளும் ஆழ்கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான நிலையில் இலங்கை கிழக்கு கடற்பரப்பிலிருந்து 300 மீற்றர் ஆழ்கடலை நோக்கி வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இங்கு தத்தளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு இவர்களை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட 12 மீனவர்களும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு

mu-siva.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதென அதன் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நேற்றுத் தெரிவித்தார். இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. கா.வின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இவ் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. காங்கிரஸின் நிலைப்பாட்டை பற்றி பல விதமான ஊகங்களை பலர் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பெருந்தோட்டப் பகுதி வைத்தியசாலைகள் அரச வைத்திய சாலைகளாக மாற்றம்பெற்றன.

3179 பேருக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 500 பேருக்கு தொடர்பாடல் உத்தியோகமும் 300 பேருக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வித் துறையிலும் பாரிய வெற்றியை பெற உதவியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் பத்து வருட வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டப் பகுதியில் அமுல்படுத்த உள்ளோம். இதற்கு வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்படும். இதற்கான தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி வழங்கி, அனுமதி வழங்கி உள்ளார்.

200 வருட பின்புல சரித்திரத்தைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் இ. தொ கா. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று இந்த அரசாங்கத்தில் இணைந்தமையின் பயனாகவே லயன்முறை அழிக்கப்பட்டு தனி வீடுகள் பெருந்தோட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

பாதைகள் திருத்தப்பட்டு காபட் போடப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி மலையக பகுதியில் செயல்படுத்த உள்ளார். எமது மக்களின் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டம் என அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மலையகத்தில் பெரும் வாக்குகளால் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.

அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே! : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)

Eachchilampatai_Studentsஆரம்ப காலங்களில் இருந்து நடந்தது என்னவென்றால் எமது மக்களுக்காக போராட புறப்பட்ட எல்லோரும் நாம் எதைநோக்கி புறப்பட்டோம் என்பதற்கு கொடுத்த நேரத்தைவிட உட்கட்சிப் போராட்டத்திற்கு கொடுத்த நேரம் அதிகம். இது அமிர் – இராசதுரை, உமா – பிரபா, உமா –மாணிக்கதாசன், ரட்ணா – சங்கர்ராஜி, வரதர் – டக்ளஸ், பொபி – தாஸ், பிரபா – கருணா, கருணா – பிள்ளையான், சம்பந்தர் – சங்கரி, உருத்திரகுமார் – நெடியவன் இப்படியே நீண்டு செல்கிறது.
 
இவர்கள்தான் இப்படியென்றால் இவர்கள் கட்சிகள் அதையும்மீறி TELO – சிறீTELO, EROS – EROS (பிரபா), EPRLF – EPRLF(நாபா) எனப் பிரிந்துள்ளது. இது EPRLF(நா),  EPRLF(பா) என்று முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. கொஞ்சம் நிறுத்துங்கள்.
 
தீர்வுவை தீர்வுவை இல்லாட்டி வோட்டு போட மாட்டோம் என்று 50 வருடமாக தீர்வு கேட்கிறோம் அவர்களும் தாற மாதிரித் தெரியவில்லை. நாங்களும் விட்டமாதிரித் தெரியவில்லை. தந்தை செல்வா தொடங்கி தனயன் பல்லி வரை தீர்வு கேட்கிறோம் என்னய்யா தீர்வு.. வட்டுக்கோட்டையா? ஈழமா? தமிழ்ஈழமா? நாடுகடந்த தமிழ் ஈழமா? தேசியமா? சுயநிர்ணய உரிமையா?……

இப்போது 50 வருடம் கழித்து இவ்வளவு உயிர்களையும் சொத்துக்களையும் பறிகொடுத்தபின் ஆரம்பித்த வட்டுக்கோட்டைக்கே வந்து நிற்கிறோம். வெட்கமாக இல்லையா? நோர்வேயில் வோட்டுப் போட்டால் நீர்வேலியில் வாழை குலை போடாது.
 
உண்மையான தீர்வு வந்த நேரத்தை நழுவ விட்டுவிட்டு இப்ப ‘தீர்வுவை தீர்வுவை. இல்லாட்டி வோட்டு போடமாட்டம்’ என்றால் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு பெரிய நாட்டின் மத்தியஸ்தத்தோடு இலங்கை – இந்திய ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையையும் தமிழ்த் தாயகமாக இணைத்து அதிகார பரவாலாக்கல் மூலம் என்று  தீர்வு வந்ததே அதை கோட்டை விட்டுவிட்டு இப்ப வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைத்துக்கொண்டு ‘தீர்வுவை’ என்றால் என்ன நிலை.

சங்கரியார் மாதிரி கடிதம் எழுதி எழுதியா தீர்வு காணப்போகிறோம். இலங்கையில் இப்போது ஒரு காந்தியோ ஒரு நெல்சன் மண்டேலாவையோ ஒரு பிடல் கஸ்ரோவையோ தேடி கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சமாவது அப்படி இருந்தவர்களையும் தொலைச்சுப்போட்டு நிற்கிறோம். அப்படியாயின் இப்போது இருக்கிற பேய்க்குள்ளே கொஞ்சம் நல்ல பேயை கண்டுபிடிச்சு அவங்கள் மூலமாக (நல்ல பேய்கள் கூட்டு சேர்ந்தாலும் நல்லது.) அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப் பரவலாக்கல் மூலம் எமது மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை முதலில் செய்வோம். இதைவிட்டுவிட்டு அமெரிக்காவும் இந்தியாவும் எங்களோடை விளையாடுகின்றது என்று அதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை வேற எழுதுவானேன்.

ஏன் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவோடும் சிங்கப்பூரோடும் விளையாடுகிறாங்கள் இல்லை. இருக்கிற நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்களும் ஒழுங்காக இருப்பாங்கள் தானே. முதலில் நாங்கள் தமிழர்கள் தான் எங்கள் நாடு இலங்கை என்பதை ஒத்துக்கொள்வோம்.
 
நாங்கள் முன்புவிட்ட பிழையே இதுதான். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ‘மட்ச்’ நடந்தால் நாம் இந்தியாவின் பக்கம் எனென்றால் அவன் சிங்களவன். இந்தியாவுக்கும் தென்ஆபிரிக்காவிற்கும் ‘மட்ச்’ நடந்தால் நாங்கள் தென் ஆபிரிக்காவின் பக்கம் ஏனென்றால் வடக்கத்தையன் ஏமாத்திட்டான். நமீதாவும் நயன்தாராவும் ஆடினால் அழகாக ரசிப்போம். மாலினியும் ரூபகலாவும் வந்து ஆடினால் யாழ்ப்பாணத்தை கெடுக்கிறாங்கள் என்போம். முதலில் இந்தத் துவேசத்தை நிற்பாட்ட வேண்டும்.
வெளிநாட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழி மூன்றாம் மொழி எல்லாம் படிப்பிப்போம் ஆனால் இலங்கையில் சிங்களம் படித்தால் குற்றமா? அவர்களும் தமிழ் படிக்கட்டும் நாங்களும் சிங்களம் படிப்போமே. இதை பள்ளிக்கூடங்களில் கட்டாயக்கல்வி என்று கொண்டுவந்தால்தான் என்ன குற்றம். இந்தியாவிலேயே தமிழ் அரசகரும மொழியல்ல. ஆனால் இலங்கையில் தமிழ் அரசகரும மொழி எனினும் இது சரியாக அமுல்படுத்தப் படவில்லை ஒத்துக் கொள்வோம்.

எல்லாவற்றுக்கும் விமர்சனம் செய்ய மட்டும்தான் விளைந்தவர்கள் என்றில்லாமல் நடந்த நன்மைகளையும் தட்டிக்கொடுத்து எழுதலாமே. என்னதான் சொன்னாலும்  கடந்த ஆறு மாதமாக குண்டுவெடிப்பு இல்லை கரும்புலித் தாக்குதல் இல்லை. விமானம் வந்து குண்டு போடவில்லை. கிபீர் வந்து சனத்தை வெருட்டவில்லை. ரிவியில் கொடூரமான இறந்த கோரக் காட்சிகளைக் காணவில்லை இது தொடர வேண்டாமா. இந்த 6மாத காலத்திற்குள் அப்துல்கலாமாக வரக்கூடிய எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தப்பியிருக்கிறார்கள் இது தொடர வேண்டாமா.

வடக்கு வழமைக்குத் திரும்புகிற யதார்த்தத்தை புரிந்து கொள்ளத்தானே வேணும். இதுதானே தொடர வேணும். இதோ நாடு சுபீட்சம் அடைந்துவிட்டது என்று சொல்லவில்லை. படிப்படியாகத்தானே சாதனைகளைப் படைக்க முடியும். இது நாங்கள் இங்கிருந்து செய்த சாதனை அல்ல. அவர்கள் செய்த சாதனை. அதைப் பாராட்டித்தானே ஆகவேண்டும். அதை விட்டுவிட்டு மகிந்தா அடிக்கிறான். கோத்தபாய சுருட்டுறான் டக்ளஸ் வெருட்டுறான் என்றதை மட்டும் எழுதாமல் மற்றைய பக்கத்தையும் எழுதலாமே. அதற்காக மகிந்தாவுக்கு ஆலவட்டமும் டக்ளஸ்ற்கு சாமரமும் வீசுவது என்பதல்ல அர்த்தம்.

ஜனநாயக சூழல் உருவாகி ஒழுங்கான எதிர்க்கட்சிகள் உருவானால் இவர்கள் பிழையென்றால் இவர்களையும் தூக்கி எறியும் அதற்கான சூழலை உருவாக்குமே. கையிலே தேன் வடிந்தால் யாரெண்டாலும் நக்கத்தான் பார்ப்பார்கள். அதை மட்டுமே எழுதாமல் அந்த மக்களும் நிம்மதியாக வாழ வழி எழுதுவமே.

சுவிஸ்சிற்கு வந்து சுயநிர்ணயம் கதைத்தால் சுன்னாகச் சந்தை கொடிகட்டிப் பறக்காது. வயலுக்குள் அவன் இறங்குவதற்கு தேவை நல்ல விதையும் உரமுமே. அதைக் கொடுங்கள். அவன் தானாக நிமிர்ந்து காட்டுவான்.

கிழிந்து போன வலையுடன் கடலுக்குப் போனால் சுறா பிடிக்கலாமா. அவன் சும்மாதானே திரும்புவான். வேண்டிக் கொடுங்கள் நல்ல வலையை அவன் சுறாவல்ல திமிங்கிலமும் கொண்டு வருவான். அவனுக்குத் தேவை உங்கள் தேசியமல்ல. உங்கள் தேசியமும் சுயநிர்ணய உரிமையையும் விடுத்து அவர்களை முதலில் வாழவிடுங்கள்.

அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே.

முன்னைய பதிவு : மானாட மயிலாடா : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)

பொன்சேகா ஆதரிப்பு எதிரொலி! ஜே.வி.பிக்குள் பிளவு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதையடுத்து அக்கட்சிக்குள் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடம் எதிர்ப்பு தோன்ற ஆரம்பித்துள்ளதுடன் கடந்த 30ம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பங்கேற்கவில்லை.

அவர் திடீரென வெளிநாட்டுக்கு பயணமாகியதன் காரணமாகவே இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் பிரசார நடவடிக்கைகளை கூடிய வரை தவிர்த்துக் கொள்ளவே இவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து ராஜினாமா செய்துள்ள கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திருமதி பிரியங்கா கொதலாவல கட்சியின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளதையடுத்து மத்திய செயற்குழுவின் பல உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரட்நாயக்க, சுனில் ஹந்துங்ஹெட்டி ஆகியோரும் வெளிநாடு செல்ல தயாராகியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு ரணிலிடம் தீர்வில்லை – ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்கலாம் என்கிறார் அசாத் சாலி

sali.jpgசிறுபான்மை மக்களுக்கான எந்தத் தீர்வும் ஐக்கிய தேசிய கட்சியிடம் கிடையாதென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண முடியமென்றும்  ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ஆசாத் சாலி தெரிவித்தார். ‘தினகரன்’க்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே ஆசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1994ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஜே.ஆர், ஆர். பிரேமதாச ஆகியோர் மாத்திரமே சிறுபான்மையினருக்குச் சார்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார்” என்று தெரிவித்த ஆசாத் சாலி, ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அங்கத்தினர்களை மதிக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார். ஜனாதிபதிக்கும், சரத் பொன்சேகாவுக்குமிடயில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. என்றும் கூறினார்.

சிறுபான்மை மக்களுக்குத் தீர்வொன்றை முன்வைப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க நீண்டகாலம் கூறி வருகிறார். எந்தத் தீர்வும் நடைபெறவில்லை. அவரிடம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை!