தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பாரிய கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக திவயின உட்பட சில சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச பொலிஸ்துறையான இன்டர்போலின் உதவியுடன் சர்வதேச கடற்பரப்பிலிருந்து குறித்த கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்கும் திட்டத்தின் முதல் படியாக இந்தக் கப்பல்கள் தருவிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்று கப்பல்களின் பெறுமதி இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் மூன்று கப்பல்கள் இருக்கக் கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் இல்லாதொழித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதன் இந்தக் கப்பல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.