வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் கணிதம், வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் 06 மாதிரி வினாத்தாள்களை வழங்கியுள்ளதுடன், தனது இவ்வருடத்துக்கான நிவாரண செயற்றிட்டத்தை நிறைவு செய்து கொண்டது.
வன்னி மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்ற நீண்டகால அடிப்படையைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்ட செயற்பாடுகளை முன்னேடுக்கத் திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய எமது கல்வி நிவாரண செயற்றிட்ட உதவிகளைப் பெற்ற 507 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை எமக்கு மன நிறைவினையளித்தது. அதேநேரம், தரம் 5 மாணவர்களின் செயற்றிட்டத்தை ஆரம்பித்த வேளையில் 300 மாணவர்களை சித்தியடையச் செய்ய வைக்கும் இலக்கோடு தான் நாம் செயற்பட்டோம்.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும், அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் எமது கல்வி நிவாரண செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம்.
இந்த அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினைத் வகுத்தோம்.
எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்திற் கொண்டோம்.
01. நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை
02. யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை
03. சாதாரண தர பரீட்சை தரம் 10, 11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே, பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாட அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.
04. நிவாரணக் கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ, வசதிகளோ இல்லாதிருந்தமை.
05. புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட,
யுத்த சுழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.
இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக்கூடிய கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10, 11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும், மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக்கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம்.
எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் 5 ஐயும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.
மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும், பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.
அதேநேரம், மாதிரிவினாத்தாள்கள், அரசாங்க வினாத்தாள்கள், கையேடுகள் என 77 அலகுகளாக வகுத்து இவற்றின் அச்சீட்டுக்கான தனித்தனி அச்சீட்டு செலவு விபரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம்.
இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்களல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக் கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களில் ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.
எமது இத்திட்டத்துக்கு உதவிகள் வழங்கியவர்கள்
அகிலன் பவுண்டேஷன் (லண்டன்) 500 பவுண்கள்
கரன் சேவிர்ஸ் ஸ்ரேசன்ஸ் (லண்டன்) 500 பவுண்கள்
திரு பொன் சிவசுப்ரமணியம் (லண்டன்) 500 பவுண்கள்
தேசம்நெற் (லண்டன்) 500 பவுண்கள்
லண்டனிலிருந்து மொத்தம் 2000 பவுண்கள் கிடைத்தன.
கனடாவிலிருந்து (கனடாவில் திரு. Ahilan Navaratnam அவர்கள் எமது திட்டத்திற்கு தானாக முன்வந்து பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.)
Ahilan Navaratnam 500.00. CDN
Vijayakaran Thuraisingam 200.00. CDN
Jeyanandan Sinniah 100.00 CDN
Seenivasagam Navaratnam 100.00. CDN
N.Visuvalingam 50.00. CDN
Sriskandarajah Anandarajah 50.00. CDN
Velupillai Pramsothy 50.00. CDN
Aiyadurai Shanmuganathan 50.00. CDN
P.Arunasalam 50.00. CDN
R.Chandrarajan 20.00. CDN
V.Joganathan 20.00. CDN
Total – 1190.00. CDN
அனுப்புதல் செலவு 10.00 CDN
இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகை 1180.00 CDN
இலங்கை நாணயப்படி 129, 210.00 ரூபாய்களாகும்.
பிரித்தானிய நாணய அலகுப்படி 680 பவுண்களாகும்.
இத்திட்டத்திற்கு லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் கிடைத்த மொத்தத் தொகை 2680 பவுண்களாகும்.
இப்பணத்தொகையைக் கொண்டே நாம் 6290 மாணவர்களுக்குமான அச்சீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
எம்மால் அனுப்பப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களுக்கும் மொத்த அச்சீட்டுச் செலவு 2847 பவுண்கள்.
மீதமான 167 பவுண்களை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செலவீனங்களுக்கு மேலாக போக்குவரத்து, பொதியிடல் போன்ற செலவுகளையும் சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இது குறித்த பூரணமான கணக்கறிக்கை எமது செயற்றிட்டத்துக்கு பங்களிப்பு செய்தோருக்கு புத்தக வடிவில் அனுப்பப்படும். அக்கணக்கறிக்கையைப் பெற விரும்புவோர்கள் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு தங்களது முகவரிகளை அனுப்புமிடத்து தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 40
எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் நிறை 761 கிலோகிராம்கள்.
அதேநேரம், இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.
அக்கடிதங்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும், இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால், வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இதனால் பேராதனைப் பல்கலைக்கழக மற்றும் கண்டி பிரதேச புகழ்பெற்ற ஆசிரியர்களிடமிருந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் பெற்றுக் கொண்டோம். குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை சிந்தனைவட்டமே பொறுப்பேற்றுக் கொண்டது.
இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த எம்மவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. விசேடமாக பணமாகவன்றி தாம் ஏற்கனவே தயாரித்த மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகளையும்கூட தருவதற்கு இவர்கள் முன்வராமை இவ்விடத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமே.
நாம் வழங்கிய மாதிரிவினாத்தாள்களை பின்வரும் பெருந்தகைகள் எமக்குத் தயாரித்துத் தந்தனர்.
ஜனாப் யூ.எல்.எம். பஷீர் – வரலாறு ஆசிரிய ஆலோசகர்
திருமதி மஸீதா புன்னியாமீன் – பயிற்றப்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர்
ஜனாப் ஏ.எம். பாயிஸ் – பயிற்றப்பட்ட கணித ஆசிரியர்
செல்வி தஸ்மின் ரியால் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு
மேலும், எம்மால் வழங்காமல் கைவசமுள்ள மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் தயாரித்துத் தந்த பெருந்தகைகள்.
ஜனாப் யூ.எல்.எம். பஷீர்;
திருமதி மஸீதா புன்னியாமீன்;
செல்வி தஸ்மின் ரியால
ஜனாப் ஏ.எம். பாயிஸ்
திரு. சிவநாதன் (கல்விப் பணிப்பாளர்)
திருமதி. எம்.ஐ. நளீமா
திருமதி. எம்.ஐ.எஸ்.மும்தாஜ்
திருமதி. சாபிரா நஸார்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு
இவர்களுக்கு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் வன்னி முகாம் அகதிகள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
எமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்:
1. ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாத இறுதியில் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போனமை (இதற்கு மூல காரணம் ஆரம்பத்தில் எமக்கு நிதியுதவிகள் கிடைக்காமையே)
2. ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் முகாம்களில் இருந்த மாணவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டமை (இம்மாணவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டாலும்கூட எம்மால் அனுப்பப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் மீள்குடியேறிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.)
3. பிரதான காரணம் மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு எவ்விதமான நிதியுதவிகளும் எமக்குக் கிடைக்காமை.
எவ்வாறாயினும் ஓரளவுக்காகவது ஒரு சிறிய உதவியாவது வன்னி மாணவர்களுக்கு செய்யக் கிடைத்தமையை ஒரு பேறாகவே கருதுகின்றோம். இத்திட்டத்திற்கு எம்மால் ஒரு மாணவனுக்கு வழங்க முடியுமாக இருந்த தொகை 45 பென்ஸ்கள் மாத்திரமே.
எதிர்கால ஆலோசனைகள்:
தற்போது அரசாங்கம் செயற்பட்டுவரும் முறையில் அரசாங்கம் 2010 ஜனவரி 31க்கு முன்பு முகாம்களிலுள்ள அனைத்து அகதிகளையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. (டிசம்பர் விடுமுறைக்கு முன்பாக கிளிநொச்சி முல்லைத் தீவு பிரதேசங்களில் மேலும் பல பாடசாலைகள் திறக்கப்படலாம்)
பாடசாலைகளைத் திறப்பதால் மாத்திரம் அல்லது திறந்த பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மாத்திரம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துவிட மாட்டாது. விசேடமாக புலம்பெயர் தமிழர்களும், இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களும் வன்னி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவற்றையும் தமது செயற்றிட்டங்களில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
குறிப்பாக மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகவுள்ளன. போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய வளங்கள் இல்லை. உள்ள வளங்களைக் கொண்டே தற்போதைய கல்வி நிலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இத்தகைய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம். எமது அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து அகதிமுகாம்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு தரம் 05 பாடப்பரப்பை மையப்படுத்தி எம்மால் ஒரு நிறைவான வழிகாட்டலைக் காட்ட முடிந்தது. இதன் விளைவாக 507 மாணவர்கள் சித்தியடைந்தனர். 2010ஆம் ஆண்டில் நிவாரணக் கிராம மாணவர்கள் என்பதை விட மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்கள் என்றடிப்படையில் தரம் 05 புலமைப்பரிசில், க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம் போன்ற மூன்று அரசாங்கப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும். இது உங்கள் பொறுப்பு.
விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால், ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு. இது யதார்த்தம். எனவே பேசிப்பேசிக் காலத்தைக் கழிக்காமல் நிலையான திட்டமொன்றின் கீழ் இணையுமிடத்து வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியில்லாவிடில் அம்மாணவர்களின் கல்விநிலை இன்னும் சில ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததே.
அவ்வாறு ஏற்பட்டால் என்றோ ஒரு நாள் நாம் கைசேதப்பட வேண்டிய நிலை உருவாகும்.
விதி
//விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால் ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு.//
இது தான் விதி
chandran.raja
மிகமிகக் குறைவு புலம்பெயர் நாட்டிலில்லிருந்து கொண்டு பிறந்த நாட்டிற்கு நல்ல ஆக்பூர்வமான காரியங்களை செய்வது என்பது…!?.அப்படி செய்தால் ஏதாவது ஒரு ஆதாயத்தை எதிர்பார்கிறார்கள் என்பதே உண்மை.
lio
இத்திட்டத்திற்கு எம்மால் ஒரு மாணவனுக்கு வழங்க முடியுமாக இருந்த தொகை 45 பென்ஸ்கள் மாத்திரமே.//
ஒரு மாணவனுக்கு 5 பவுண்ஸ் கொடுத்து உதவ மனமில்லாதோர்களின் அமைப்புகள் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றக் கொடுக்கப் போராடுகிறார்களாம். பட்டப் பகலில் வெள்ளி காட்டுவார்கள் பார்த்துக் கொண்டிரு தமிழினமே…
Ahilan Navaratnam
மேற்படி திட்டத்தை தம்மால் இயன்றளவில் நடாத்திமுடித்த திருவாளர்கள் கலாநிதி புன்னியாமீன், ஜெயபாலன் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கொடுங்கோலர்களின் செயலால் தம் வாழ்வைத் துலைத்த எம் மாணவச் செல்வங்களுக்கு கல்விக்கு உதவி செய்வதற்க்கே எம்மால் முடியவில்லை என எண்ணும்போது மனம் வேதனை அடைவதுடன் வெட்கமும் குற்ற உணர்வும் ஏற்ப்படுகிறது. அழிப்பதற்க்கு அள்ளிக்கொடுத்தவர்களால் ஆக்கத்துக்கு கிள்ளிக்கொடுக்க முடியவில்லை. எம் நாட்டில் நடந்த போரில் அழிந்தவற்றுடன் மனிதநேயமும் அழிந்துவிட்டதா?