பயங்கர வாதம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும்போது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்துக்கு கொண்டுவர அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் மீள்குடியமர்த்தப்படுவோரின் நன்மை கருதி அப்பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளையும் கடற்றொழில் நடவடிக்கைகளையும் முன்னெப்போதுமில்லாத அளவில் அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாட்டில் பொருளாதாரத்திலும் ஏற்றுமதி வர்த்தகத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் சமூக கலாசாரத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலிலும் ஒரு ஸ்திரமான நிலைக்கு நாம் வந்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.