தமிழர்கள் இனிமேல் பொலிஸில் பதிவு செய்ய வேண்டியதில்லை – பசில் ராஜபக்ஷ

basil.jpgதமிழர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். பொலிஸ் மா அதிபர் இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஹட்டனில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் தலைமையில் நேற்று முன்தினம் ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விசேட விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட சந்திரசேகரன் மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும், மலையக மக்களின் இனத்துவ, தனித்துவத்தை நிலைநாட்டுவதிலும், தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

அமைச்சரவையில் இருந்து கொண்டு சந்திரசேகரனும், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவசரகால சட்டத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இவர்களை விசாரிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

இப்படி ஒரு சங்கடமான நிலைமை எமக்கு ஏற்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பாக சந்திரசேகரனுடன் பேசினார். அமைச்சர் தனது நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். மனசாட்சியின்படி நடக்க இடமளித்து மஹிந்த சிந்தனையில் மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உங்கள் தலைவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

அரசில் பங்குவகித்து அமைச்சராக இருந்தாலும் தமது நிலைப்பாட்டில் நின்று மனசாட்சியின்படி நடப்பதையிட்டு பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். உங்கள் தலைவர் மலையக மக்களின் மேம்பாடு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்தும் உரத்து குரல் எழுப்புபவர். கடந்த காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டு அரசாங்கம் என்றவகையில் உங்கள் கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களை உருவாக்குவதைப் பற்றி வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றி நடவடிக்கை எடுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து சட்டப்படியான தீர்மானங்களை எடுக்க செயற்பட்டு வருகின்றது.

தமிழர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். இனி பொலிஸ் பதிவினை தமிழர்கள் செய்யத் தேவையில்லை. பொலிஸ் மா அதிபர் இந்த பேச்சு முடிந்த பின்னர் உத்தியோகபூர்வமாக உங்களுக்கு இதனை அறிவிப்பார். 1988, 1989 கால கட்டத்தில் சிங்கள மக்களுக்கும் இந்த தொல்லை இருந்தது.

சிங்கள மக்களும் வெகுவாக சிரமப்பட்டார்கள். அப்போது மறித்து சோதனை செய்யும் போது கிளிநொச்சி அடையாள அட்டை அல்லது தமிழர்கள் என்றால் எவ்வித தடங்கலோ சோதனையோ இன்றி பயணித்தார்கள். பின்னர் இந்நிலைமை மாறி அன்று சிங்கள மக்கள் அனுபவித்த சங்கடங்களை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. அம்பாந்தோட்டை அடையாள அட்டை என்றால் இன்முகத்துடனான புன்சிரிப்பும் மேலதிகமாகவே கிடைத்தன.

ஒரு சிலர் ஜனாதிபதியின் ஊரா, உறவினரா? என்று ஒரு மரியாதையும் செலுத்தினர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பட்டியல் கிடைத்தவுடன் நீதியான விசாரணை இடம்பெற்று விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். மலையக மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் மலையக மக்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *