20

20

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் – 13வது இடத்தில் சோனியா

sonia1111.jpgஉலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 13வது இடமும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சாருக்கு 20வது இடமும் கிடைத்துள்ளது. ஜெர்னி சான்சலர் ஏஞ்செலா மெர்க்கல் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பெப்சிகோ நிறுவன தலைமை செயலதிகாரி இந்திரா நூயி 3வது இடத்தைப் பெற்றுள்ளார். பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஷீலா பெர் 2வது இடத்தில் இருக்கிறார்.

யாஹு நிறுவனத்தின் கரோல் பார்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளார். 100 பேர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சோனியா, சந்தாவைத் தவிர மற்றொருவர் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா. இவருக்கு கிடைத்துள்ள இடம் 91.

சோனியா காந்தி கடந்த முறை 21வது இடத்தில் இருந்தார். இந்த முறை கிடுகிடுவென உயர்ந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல கிரண் மஜூம்தார் 99வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு வந்துள்ளார்.கடந்த முறை 59வது இடத்தைப் பிடித்து அனைவரையும் வியக்க வைத்த உ.பி. முதல்வர் மாயாவதிக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை.

இப்பட்டியலில் ஹி்லாரி கிளிண்டனுக்கு 36வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் தலைவரான நான்சி பெலோசிக்கு 35வது இடம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவுக்கு கிடைத்துள்ள இடம் 40. ராணி எலிசபெத் 42வது இடத்தில் உள்ளார்.

இவர்கள் தவிர பில் கேட்ஸ் மனைவி மெலின்டா (34), ஓப்ரா வின்பிரே (41), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (78) ஆகியோரும் இப்பட்டியலில் இருக்கிறார்கள்.

ரணில் அவுஸ்திரேலியா பயணம்

ranil0111.jpgசர்வதேச ஜனநாயக சங்கத்தின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளார்.

ஆசிய ஜனநாயக சங்கத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் பதவியையும் வகிக்கின்றார்.

இவ்விஜயத்தின் போது சர்வதேச ஜனநாயக சங்கத் தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான ஜோன் ஹொவாட், ஆசிய ஜனநாயக சங்கச் செயலாளர் புரூஸ் எட்வர்ட் ஆகியோருடனான விசேட சந்திப்புகளில் ஈடுபடவிருப்பதாகவும் அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாவணி கழுத்தில் இறுகியதில் 13 வயது சிறுமி மரணம்

அணிந்திருந்த தாவணி கழுத்தில் இறுகியதில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று கம்பளை அம்பகமுவ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில் ஜெகநாதன் நந்துஜா (13 வயது) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாவணி அணிந்தபடி இச்சிறுமி நித்திரை செய்துள்ளார். நித்திரையின் போது எதிர்பாராதவிதமாக தாவணி கழுத்தில் இறுகியதில் இரவு 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமி கண்டி விஹாரமாதேவி கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் விக்கிப்பீடியா – முனைவர் மு. இளங்கோவன்

ilnco.jpgகலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுளன. இக்கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச்செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது. இம்முயற்சி உலகெங்கும் நடைபெற்று வருகிறது. பிரஞ்சுமொழியில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் அந்த நாட்டில் வழங்கிய பழைய கலைகளைப் பதிவு செய்தன. பிரான்சில் மக்கள் புரட்சி ஏற்படவும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்புரட்சி ஏற்படவும் கலைக்களஞ்சியங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகரவரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன. ஒரு பொருள் சார்ந்தும் துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் முயற்சி அறிவார்வம் நிறைந்த சமூகத்தில் இயல்பாகவே உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சியம் பல்லாண்டுகளுக்கு முன் வந்தாலும் அதனை மறுபதிப்பு செய்யும் ஆர்வம் நமக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்று இசைக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வழியாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பிரெஞ்சு மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட டெனிஸ் டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார். கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுவதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந்தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் சேவையாகவும் இது அமையும்.(விக்கிப்பீடியா மேற்கோள்)

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணையத்தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (wikipedia) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (Wiki) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு “விரைவு’ என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (wiki)+ என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிப்பீடியா (wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு சனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர் பல மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. விக்கிப்பீடியா தொழில் நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்சு என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் அவர்களும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியை தொடங்கினர். ஜிம்மி வேல்சு முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிப்பீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்கவேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய,விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளி விவரங்களை இணைக்கலாம். இத்தகு வசதியுடைய விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தமிழ் முயற்சி 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கில இடைமுகத்துடன் வெற்றிடமாகவே முதல் பதிவு ஒரு சோதனை முயற்சியாக இருந்தது.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ்விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார்.இவர் இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

இந்திய மொழிகளில் தெலுங்கு(42,918), இந்தி(32,681), மணிப்புரி(23,414), மராத்தி(23211) என்ற அளவில் கட்டுரைகள் உள்ளன. தமிழில் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தரமுடையதாகவும், செறிவுடையதாகவும் உள்ளன. ஆனால் இந்தியாவின் பிறமொழிக் கலைக்களஞ்சியங்களில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவை தானியங்கி முறையில் எண்ணிக்கை மிகுத்துக்காட்டப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. அதுபோல் சிறு, சிறு குறிப்புகளும் கட்டுரைகளாகக் கணக்கிடப்பட்டுள்ளனவாம்.

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

தமிழ் விக்கியில் பலர் பங்களிப்பு செய்தாலும் குறிப்பிடத்தக்க சில முன்னோடிகளை நன்றியுடன் நினைவுகூர்வது பொருத்தமாகும். திருவாளர்கள் மயூரநாதன், சொ.இல.பாலசுந்தரராமன், நற்கீரன், இரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனகசிறீதரன், பேரா.செல்வக்குமார், பேராசிரியர் வி.கே,குறும்பன், கார்திக் பாலா, டானியல் பாண்டியன்,தேனி எம்.சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி (பட்டியல்நீளும்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பல்வேறு துறைகளில் பேரறிவு பெற்றவர்களாக விளங்குகின்றனர். தகவல் தொழில் நுட்ப அறிவு மிகுதியானவர்களாகவும் உள்ளனர். தமிழுக்கு உழைக்க வேண்டும் எனவும் தமிழ் உலகின் பிறமொழிகளுக்குத் தாழ்ந்தது இல்லை என நிறுவும் வேட்கை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். எனவே இவர்களின் முயற்சியில் பல துறை சார்ந்த கட்டுரைகள் தமிழில் மிகுந்துள்ளன. விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவதால் யாரும் எழுதலாம். குறிப்பிட்டவர்கள்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தப் பொருள் பற்றியும் எழுதலாம். எனவே இன்று தமிழ் விக்கியில் தகவல் தொழில்நுட்பம், கணினித்துறை, கணக்கு, மின்னியல், கட்டடக்கலை, உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற துறைகளில் இன்னும் மிகுதியான கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறை சார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம்,தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கட்டுரைகளாக இருப்பவை கலைக்களஞ்சியத்திலும் பாடல், பழமொழிகள் இவற்றை மூலம் என்ற விக்கி பகுதியிலும் பதிவு செய்யலாம்.

விக்கிப்பீடியாவில் தமிழ்ச்செய்திகளை எப்படி உள்ளிடுவது?

விக்கிப்பீடியாவில் செய்திகளை உள்ளிடப் பல வழிகள் உள்ளன. முதலில் நமக்கு என விக்கி பக்கத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும். நமக்கு என ஒரு கடவுச்சொல்லும் தருதல் வேண்டும். விக்கியின் முகப்புப் பக்கத்தில் நாம் உள்ளிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட்டால் அந்தச் சொல் பற்றி முன்பு விளக்கம் இருந்தால். அதனை விக்கி காட்டும். அதன் வழியாகச் சென்று புதிய விளக்கம் திருத்தம் செய்யலாம். பயனர் கணக்கு இல்லாமலும் ஒருவர் எழுதிய கட்டுரையைத் திருத்தலாம். அவ்வாறு செய்பவர்களின் கணிப்பொறி ஐ.பி.எண் விக்கியின் வரலாற்றுப்பகுதியில் பதிவாகும். எனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை உள்ளிட்டாலும், திருத்தங்கள் மேற்கொண்டாலும் அதன் துல்லியமான பதிவுகள் நம்மையறியாமலே பதிவாகிவிடும்.

நாம் தேடும் சொல்லுக்குரிய விளக்கம் அல்லது கட்டுரை இல்லை என்றால் இந்தத் தலைப்பில் கட்டுரை வரைய விருப்பமா என்ற ஒரு குறிப்பு இருக்கும். ஆம் என நாம் நினைத்தால் அங்குத் தோன்றும் அந்தப் பெட்டியில் கட்டுரைக்குரிய செய்தியை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுப் பக்கத்தைச் சேமிக்கவும் என்றால் நாம் எழுதிய கட்டுரை விக்கியில் இணைந்துவிடும்.இவ்வாறு வெளியிடும் முன்பாக இணைப்பு வழங்கவும், படங்கள்,அட்டவணைகள் இணைக்கவும் வசதிகள் உள்ளன. மேலும் நாம் தட்டச்சு இட்டதை வெளியிடுவதற்கு முன்பாக வடிவமைப்பு, எழுத்துப் பிழைகளைச் சோதித்துக்கொள்ளவும் முடியும். அங்குத் தோன்றும் பெட்டியில் உள்ள அடையாளக் குறிகளை அழுத்தி உரிய தேவைகளைப் பெறலாம்.

முதலில் பழகுபவர்கள் அங்கு உள்ள மணல்தொட்டியில் பழகிப் பின்னர் நம் பதிவுகளை முறையாக இடலாம். சிறு தவறுகளுடன் வெளியிட்டால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்று யாரும் தாழ்வுமனப்பான்மையடைய வேண்டாம். மூத்த பயனாளர்கள் நாம் செய்துள்ள தவறுகளைத் திருத்தி அந்தக் கட்டுரைகளை மிகச்சிறந்த கட்டுரைகளாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது.

விக்கியில் கட்டுரைகள் வரைபவர்கள் பல தரத்தினர். திறத்தினர். சிலர் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதுவார்கள். சிலர் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வரைவார்கள். சிலர் பிறர் வரைந்த கட்டுரைகளை அனுமதி பெற்று அல்லது பிறர் விருப்பத்திற்கு இணங்க விக்கியில் வெளியிடுவர். அவ்வாறு பிறர் கட்டுரை என்பதற்கு இணைப்பு வழங்கியோ அவர் பெயர் குறித்தோ பெருந்தன்மையாக நடந்துகொள்வர். பதிப்புரிமை விக்கியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் மாற்றவும் திருத்தவும் செய்வர். விக்கியின் கட்டுரைகள் தரமுடையனவாக இருந்தாலும் பார்வைக்கு,தகவல் அறிய உதவுமேயல்லால் ஆதாரப்பூர்வ சான்றாகக் காட்ட இயலாது.

விக்கியில் தமிழ்க் கட்டுரைகள் பல துறை சார்ந்து வெளிவருவதால் புதிய கலைச்சொற்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முன்பு ஒருவர் ஒரு கலைச்சொல்லை உருவாக்கினால் அந்தச் சொல் வெளியில் தெரிவதற்கும் பயன்பாட்டுக்கு வருவதற்கும் பலகாலம் ஆகும்.ஆனால் இன்று புதிய கலைச்சொற்கள் அறிமுகமானால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் இணையத்தில் உடன் நடந்து திருத்தம் தேவை என்றால் திருத்தத்துடன் அல்லது சரியான சொல் என்றால் உடன் வழக்கிற்கு வந்துவிடுகின்றன. அந்த வகையில் இற்றைப்படுத்தல், ஒருங்குகுறி, சுட்டி, மென்பொருள், வன்பொருள், குறுவட்டு, உலாவி, இணையம், வலைப்பூ, திரட்டி, பயனர், கடவுச்சொல் என்ற சொற்களைச் சான்றாகக் காட்டலாம்.

உயர்கல்வியில் தமிழ் நடைமுறைக்கு வரும்பொழுது மிகச்சிறந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர வாய்ப்பு உண்டுஅதுபோல் ஆட்சியிலும் அலுவலிலும் தமிழ் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது அனைவரின் பயன்பாட்டுக்கு உரியதாக விக்கி மாறும்.

கற்றவர்கள் விக்கியில் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டும் நம் கடமை என நினைக்க வேண்டாம். முன்பு எழுதிய கட்டுரைகளை நாம் திருத்தலாம். எழுத்துப்பிழை, தொடர்ப்பிழை,பொருட்பிழைகளைக் களையலாம். படங்கள், புள்ளி விவரங்களை இணைக்கலாம். விக்கியில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்களில் ஒரு பாடமாக அல்லது செய்முறைப் பயிற்சியாக மாற்றலாம்.

விக்கிப்பீடியா களஞ்சியமாக மட்டும் இல்லாமல் விக்சினரி என்ற பெயரில் அகரமுதலியாகவும் உள்ளது. விக்கி செய்திகள் என்ற பகுதியில் செய்திகளைக் காணலாம். விக்கி மேற்கோள் என்ற பகுதியில் சிறந்த மேற்கோள்களின் தொகுப்பு காணப்படும். விக்கிமூலம் என்ற பகுப்பில் பல்வேறு மூல ஆவணங்கள் இருக்கும். விக்கி மேப்பியா என்ற வசதியைப் பயன்படுத்திப் புவி அமைவிடம் விளக்கும் படங்களைக் காண முடியும். நாம் இருந்த இடத்திலேயே நாம் பார்க்க நினைக்கும் இடத்தைப் பார்த்துவிட முடியும். விக்கி கட்டற்றக் கலைக்களஞ்சியம் என்னும் தன் பெயருக்கு ஏற்ப கட்டற்ற தகவல்களைத் தாங்கி நிற்கிறது.

விக்கிக்கு எனச் சில நெறிமுறைகள் உள்ளன. கலைக்களஞ்சிய வடிவில் இருத்தல், கட்டுரைகள் நடுநிலையுடன் இருத்தல். கட்டற்ற உள்ளடக்கம், அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், இறுக்கமான சட்டத் திட்டங்கள் இல்லாமை என மயூரநாதன் இதனை நினைவுகூர்வார்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிப்பீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது. தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயிற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர். கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.

http://muelangovan.blogspot.com/

புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

t-n-govt-logo.jpgஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ் நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி 1967ஆம் ஆண்டின் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ்,  நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை ஆதரித்துப் பேசுதல்,  அத்தகைய இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களின் படங்கள், கொடிகள்,  இலச்சினைகள் என்பவற்றைப் பொது விளம்பரங்களில் உபயோகித்தல், அவற்றை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பித்தல்,  பிரசுரித்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றங்களாகும் என குறிபிடப்பட்டுள்ளது.

விடுதலைச் சிருத்தைகள் எனும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளனின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்தே தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் திருமாவளன்,  தமிழர்களுக்கு தனியான தாய்நாடு குறித்து தொடர்ந்தும் பேசி வருவதோடு புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமையையும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரண கிராமங்கள் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு இன்று விசேட போஷாக்கு திட்டம்

vaccine.jpgவவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி யுள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கு மென இன்று 20ம் திகதியும், நாளை 21ம் திகதியும் விசேட போஷாக்குத் திட்டம் செயற்படுத்தப்படவிருக்கின்றது.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய குடும்ப சுகாதாரப் பணியகம் இத்திட்டத்தை செயற்படுத்தவிருக்கின்றது.

வன்னியிலிருந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலைய ங்களும் 2500 கர்ப்பிணி பெண்களும், 40 ஆயிரம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்கியுள்ளனர்.

இவர்களின் போஷாக்கு நிலமையை மேம்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும்,. நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சின்ன முத்து, போலியோ நிர்பீடன மருந்துகளும், வயிற்றுப்புளுக்கான தடுப்பு மருந்துகளும் எற்கனவே பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இவற்றை பெற்றுக் கொடுப்பதில் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த விசேட போஷாக்குத் திட்டத்தை செயற்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்தாகவும் அவ்வதிகாரி கூறினார்.

ஆலய உற்சவத்தில் குளவிகள் கொட்டி 80 பேர் ஆஸ்பத்திரியில்

000images.jpgஆலய உற்சவமொன்றின் போது, குளவிகள் கொட்டியதில் 80 பேர் அப்புத்தளை மற்றும் தியத் தலாவை அரசினர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம், அப்புத்தளை தோட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குளவிகள் கொட்டியவர்களில் 20 பிள்ளைகளும், இரு பெண்களும் ஆபத்தான நிலையிலிருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆலய உற்சவத்தின் போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த போது, அடுப்பு புகையினாலேயே குளவிகள் கலைந்து அடியார்களைக் கொட்டியதாக தெரிய வருகின்றது.

திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்

botreeஆசிய நாடுகளில் அதிகளவிலான மக்கள் தமது வாழ்வை திருப்திகரமாக வாழுமிடங்களில் இலங்கை முதலிடத்திலுள்ளது.  நுகர்வோர் நடவடிக்கை தொடர்பாக ஆசிய பசுபிக் கிறே குழு விளம்பரக் கூட்டு வியாபார சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இலங்கை முன்னிலையில் உள்ளது. 16 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்படி தாய்வான் 28 சதவீதத்தை மட்டுமே பெற்று இறுதி நிலையிலுள்ளது.

இச்சங்கத்தின் 4 ஆவது வருடத்தில் ஆசிய பசுபிக் நாடுகளிலுள்ள 18 – 65 வயதுக்கிடைப்பட்டவர்கள் 8000 பேரிடம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்னஞ்சல்கள், நேர்காணல்கள் மூலம் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, சீனா மற்றும் இலங்கை ஆகியன 94 சதவீதத்தால் அதிகளவில் நம்பிக்கையுடைய மக்கள் வாழும் நாடுகளாக உள்ளன.

ஆனந்தசங்கரியின் வாகனம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் 1 வரை ஒத்திவைப்பு

court222.jpgதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் வாகனத்தை அவரிடம் திருப்பி ஒப்படைக்காது மறுத்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னிப் பிராந்தியக் கிளையின் நிர்வாகச் செயலாளர் வி.சகாயதேவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனது வாகனத்தை மோசடி செய்ததாக சகாயதேவன் மீது வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டி வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து சகாயதேவன் வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாக்கு மூலமும் பொலிஸாரால் பெறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை வவுனியா நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராசா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பினரின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வவுனியா நகரசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டதுடன், வி.சகாயதேவன் அதன் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாகனம் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான மாற்றங்கள் அனைத்தும் ஒரே தடவையில் -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

yappa.jpgஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் தேர்தல் விதிகளையோ அரசியல் அமைப் பையோ பகுதிபகுதியாக திருத்துவதற்கு அரசாங்கம் தயா ரில்லையென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் வழங்கவுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், எல்லாத் திருத்தங்களை ஒரே நேரத்தில் செய்வதற்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் தீர்வுக்காக தேசிய ஒருமைப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி எண்ணியுள்ளாரென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அதனை மக்களுக்கு சமர்ப்பித்து அதன் அடிப்படையில் தீர்வைக்கான முற்படுவதாகவும் அவர் கூறினார். நாரஹேன் பிட்டியிலுள்ள தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ள போதிலும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கூறிய அமைச்சர், அன்று அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. திடீரென அரசிலிருந்து விலகி அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியே அந்த ஒப்பந்தத்தை மீறி அரசி யலிலிருந்து விலகிக்கொண்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின்படி தனியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவோ அரசியல் ரீதியில் வேறு ஒரு கட்சிக்கும் உதவி செய்ய தேவையான வாக்குப் பலமோ தற்பொழுது இல்லாமல் போயுள்ளது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கின்றது. இந்நிலையில் பொதுவான மாற்றத்தை தவிர பகுதி பகுதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயாரில்லை.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு ஒன்றை நியமித்து தென்மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணா திலக்க எம்.பி.யின் கூற்று தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தோ சட்டதிட்டங்களை மாற்றியமைத்தோ தேர்தலை வெற்றி கொள்ள முடியாது. அதற்கு பதிலாக மக்கள் மத்தியில் சென்று மக்களின் மனதை வெல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவும், 1996ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தா வெற்றி கண்டனர் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். கிழக்கு மாகாணத்திலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்ற தேர்தல்களில் அரசுக்கு அதிகூடிய வெற்றிகள் கிடைத்ததாக தெரிவித்த அமைச்சர், ஊவாவை விட தென் மாகாண தேர்தலில் மக்களின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.