06

06

ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க முடியும்

ranil.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் அதிகாரப் பரவலாக்களை ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசின் சலுகைகளுக்காக வாக்குகளை வீணடிக்காது நீண்ட கால நன்மைக்காக ஐ.தே.க. வுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கோரினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து அரசு பலவற்றைக் கூறுகின்றது. தீர்வு தொடர்பில் புதிய அரசியலமைப்பை அரசு முன்னெடுத்தாலும் அது எழுத்தில் மட்டுமிருந்தால் எந்தப் பிரயோசனமுமில்லை. அத்துடன் அதனை தமிழ் மக்கள் ஏற்கப் போவது மில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதாள உலக கோஷ்டி முக்கிய புள்ளிகள் இருவர் சுட்டுக் கொலை – மாதிவெல, இரத்மலானை பகுதியில் சம்பவம்

பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருவர் மாதிவெல மற்றும் இரத்மலானை பிரதேசத்தில் நேற்றுக் காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்மி ரொஷான் என்று அழைக்கப்படும் 36 வயதுடைய கீர்த்தி குமார, பப்பா என்று அழைக்கப்படும் 32 வயதுடைய எம். ரிழ்வான் ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சமயமே இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

64-7836 என்ற இலக்க டொயோடா ரக காரில் ஆர்மி ரொஷானை மிரிஹான பொலிஸின் விசேட பிரிவு நிறுத்தி சோதனையிட்டுள்ளது. அதன் போது அவரது காரில் பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகளையும் பொலிஸார் மீட்டெடுத்ததையடுத்து அவரை கைது செய்த பொலிஸார், இவர் மறைத்து வைத்திருந்த மற்றைய ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்றுள்ளனர்.

இவருடன் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களை இலக்குவைத்து ரொஷான் கைக்குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் ரொஷான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த இரண்டு பொலிஸாரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்மி ரொஷான் பல்வேறு கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் முக்கியமாக தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இரத்மலானை பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஒரு பாதாள உலக குழுவை பிடிப்பதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

மாளிகாவத்தை பிரதேசத்தில் பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குழுவொன்றின் தலைவரான ரிழ்வான் என்பவரின் மறைவிடத்தை அண்மித்த பொலிஸார் அவரை பிடிக்க முற்பட்ட போது பொலிஸாரை ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என்று கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மகேஷ் பெரேரா தெரிவித்தார்.

மூதூர் 17 பணியாளர் படுகொலை; சர்வதேச விசாரணைக்கு மீண்டும் வலியுறுத்தல்

body1.jpgபிரெஞ்சு தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்று தேவை என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை நடுப்பகுதிவரை இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் எவரும் குற்றவாளியாகக் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இது கவலைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று வருடங்களாக நீதி வழங்கப்பட்டுள்ளது என்று சர்வதேச சமூகம் நம்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.”காட்சிப்படுத்துதல் முடிந்து விட்டது’ என்றும் தீவிரமான முறையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வும் கரிசனையுடைய அரசாங்கங்களும் கூறுவதற்கு இதுவே நேரம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டக் கொள்கை விடயங்களுக்கான பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் கூறியுள்ளார்.

இந்தப் பயங்கரமான குற்றச்செயல் தொடர்பாக நீதி வழங்குவதற்கு தன்னால் முடிந்த சகலவற்றையும் செய்வதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட பட்டினிக்கெதிரான செயற்பாட்டு அமைப்பின் பணியாளர் குடும்பங்கள் மேலும் உள ரீதியாக பாதிப்படைவதற்கான நடவடிக்கைகளுக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை ஏனையோர் மீது சுமத்த முயற்சிப்பதன் மூலம் இதனை மேற்கொள்வதாகவும் ரோஸ் கூறியுள்ளார்.

17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகின்றன. பொறுப்பானவர்கள் தொடர்பாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு நெருங்கிவரவில்லை

பதிலாக உள்ளூர் உரிமைகள் குழுக்களுக்கும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் பிரெஞ்சு அரசுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தினமும் 30 கொலை அச்சுறுத்தல்கள்

000-obama.jpgபராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருக்கான அச்சுறுத்தல்கள் 400 சத வீதமாக அதாவது ஒரு வருடத்தில் மூவாயிரமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதியின் இரகசிய சேவையில் நூலை எழுதிய ரொனால்ட் கெஸ்லர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இரகசிய சேவையின் சங்கேதக்குறியீடு “ரெனிகேட்’ என்பதாகும்.

அதில் ஒபாமாவுக்கான சில அச்சுறுத்தல்கள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ரென்னீசீயில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் சதி முயற்சி குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியுள்ளதாக டெய்லி ரெலிகிராப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி விற்பனைசெய்யும் நிலையத்தில் திருடி 88 கறுப்பின மக்களை சுட்டு, மேலும் 14 பேரை காயப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பின ஜனாதிபதியை படுகொலை செய்ய சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விடயத்தை இரகசிய சேவை மூடி மறைத்து விட்டது. ஏனெனில் இந்த விபரங்களை வெளியிடுவது இதே மாதிரியான குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று இரகசிய சேவை அஞ்சியதே இதற்கு காரணமென இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமான அச்சுறுத்தல்கள் நம்பத்தகுந்தவையற்றவையாகும். ஆனாலும் ஒவ்வொன்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவை தளமாக கொண்ட இஸ்லாமிய குழுவான அல் சாபாப் ஜனவரியில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வை குழப்பக்கூடுமென புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சவால்கிடைத்திருந்தது. இதனையடுத்து இரகசிய சேவையானது 94 பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு முகவரமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்தியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் அடங்கிய குழுக்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் நிலைகொண்டிருந்தன. அருகிலிருந்த கட்டிடங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.  ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின் அவருடைய இரு மகள்மாருக்கும் இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மலியாவுக்கு (11) ரேடியன்ஸ் என்ற சங்கேத குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மகள் சஸ்னாவுக்கு (8 வயது) ரோஸ்பட் என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரீநைசன்ஸ் என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் துணை ஜனாதிபதி ஜோபைடனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தாயாருக்கு இரகசியசேவையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளத்திலிருந்து 366 கிலோ வெடிமருந்துகள் மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி – 4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகளை விசேட பொலிஸ் குழு கைப்பற்றியுள்ளது. நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவில் வைத்து கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பெருந்தொகையான வெடிமருந்துகள் மீட்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்து வவுனியா நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவிலிருந்து 35 வயதுடைய விஜயன் என்று அழைக்கப் படும் கந்தைய்யா விஜயகுமார் என்பவரை கைது செய்த பொலிஸார் கடுமையான விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இந்த விசாரணையின் போது அவர் வழங்கிய தகவலின் படி கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த நபர் வழங்கிய தகவல்களின் படி பூந்தோட்டம் பிரதேசத்திலிருந்து 24 வயதுடைய கரன் என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சிவகரன் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.