பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருக்கான அச்சுறுத்தல்கள் 400 சத வீதமாக அதாவது ஒரு வருடத்தில் மூவாயிரமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதியின் இரகசிய சேவையில் நூலை எழுதிய ரொனால்ட் கெஸ்லர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இரகசிய சேவையின் சங்கேதக்குறியீடு “ரெனிகேட்’ என்பதாகும்.
அதில் ஒபாமாவுக்கான சில அச்சுறுத்தல்கள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ரென்னீசீயில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் சதி முயற்சி குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியுள்ளதாக டெய்லி ரெலிகிராப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி விற்பனைசெய்யும் நிலையத்தில் திருடி 88 கறுப்பின மக்களை சுட்டு, மேலும் 14 பேரை காயப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பின ஜனாதிபதியை படுகொலை செய்ய சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விடயத்தை இரகசிய சேவை மூடி மறைத்து விட்டது. ஏனெனில் இந்த விபரங்களை வெளியிடுவது இதே மாதிரியான குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று இரகசிய சேவை அஞ்சியதே இதற்கு காரணமென இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமான அச்சுறுத்தல்கள் நம்பத்தகுந்தவையற்றவையாகும். ஆனாலும் ஒவ்வொன்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளன.
சோமாலியாவை தளமாக கொண்ட இஸ்லாமிய குழுவான அல் சாபாப் ஜனவரியில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வை குழப்பக்கூடுமென புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சவால்கிடைத்திருந்தது. இதனையடுத்து இரகசிய சேவையானது 94 பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு முகவரமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்தியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள் அடங்கிய குழுக்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் நிலைகொண்டிருந்தன. அருகிலிருந்த கட்டிடங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன. ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின் அவருடைய இரு மகள்மாருக்கும் இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மலியாவுக்கு (11) ரேடியன்ஸ் என்ற சங்கேத குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மகள் சஸ்னாவுக்கு (8 வயது) ரோஸ்பட் என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.
ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரீநைசன்ஸ் என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் துணை ஜனாதிபதி ஜோபைடனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தாயாருக்கு இரகசியசேவையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.