02

02

ஏ-9 இன்று முதல் தினமும் பஸ் சேவை

north-governor.jpgஏ-9  வீதியூடாக பயணிகள் பஸ் சேவை இன்று முதல் தினமும் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள சிங்கள மகா வித்தியாலய திடலிலிருந்து தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகள் வவுனியா நகரில் ரம்யா ஹவுஸ் பகுதியை வந்தடைந்ததும் அங்கிருந்து கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அனுமதி பெற்றவர்கள் தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகளில் பயணிக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.வவுனியாவுக்கு தினமும் செல்லும் 5 பஸ் வண்டிகளும் அதே தினம் யாழ். நகரை சென்றடையும் என யாழ். அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்தார்.

யாழ். நகருக்குள் மீண்டும் செல்பவர்கள் வவுனியா நகரிலுள்ள ரம்யா ஹவுஸ¤க்கு வரும் பட்சத்தில் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி புறப்படும் பஸ் வண்டிகளில் செல்ல முடியும் எனவும் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ஏ-9 பாதையூடாக மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்துச் சேவை இதுவரை நடத்தப்பட்டுவந்தது. ஐந்து வஸ் வண்டிகள் வீதம் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தன.

இதேவேளை, மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன. மதவாச்சிவரை வரும் யாத்திரிகர்களை பாதுகாப்பு நடைமுறைகளின் பின்னர் வேறு பஸ் வண்டிகள் மூலம் மடுத்தேவாலயம் வரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

(02-09-2009)”இந்தியாவுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் வவுனியா முகாம்களிலுள்ள அகதிகள்’

srilanka-refugees.jpg இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட தமிழர்கள் இப்போதும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் முன்னர் போன்று அல்லாமல் குறைந்தளவு அகதிகளாக வருவதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது. தற்போது அநேகமானவர்கள் விமானம் மூலம் வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 109 தமிழ் மக்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஜூனில் 142 பேரும் ஜூலையில் 89 பேரும் சென்றிருக்கின்றனர். 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் இந்தியாவுக்குப் பெருந்தொகையாகச் சென்றனர். கடல் மார்க்கமாகப் படகுகளில் மிக நெருக்கடியான பயணங்களை அவர்கள் மேற்கொண்டனர்.

இப்போது கொழும்புக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருவதாகவும் படகில் செல்வது இப்போது இலகுவானவிடயமாக இல்லாததால் விமானம் மூலம் வருவதாகவும் “ஒவ்வர்’ அமைப்பின் தலைவர் சீனா சந்திரஹாசன் கூறியுள்ளார். மே மாதம் 109 பேர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூனில் இந்தியா சென்ற 142 பேரில் 39 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூலையில் 10 பேர் படகில் சென்றனர். இதேவேளை, வவுனியாப் பகுதி முகாம்களில் உள்ள 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்களில் அநேகமானவர்கள் இந்தியாவுக்குச் சென்று புதிய வாழ்வை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பாக விசாரிப்பதாக சந்திரஹாசன் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்களில் கணிசமான தொகையினர் மத்தியில் இந்தியாவுக்கு வருவதற்கான எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ஆனால், புலிகளின் பகுதிகளில் இருந்த இந்த மக்களுக்கு இடமளிப்பது தொடர்பான விடயம் அரசியல் நிலைவரத்தில் தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 73,475 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ளனர். இதனை விட பலர் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

இந்தியாவுக்கு தமிழ் மக்கள் செல்வதற்கு விரும்பும் பிரதான காரணம் அவர்களுக்கு உள்ள அச்சமே என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி அகினோ காலமானார்

n13.jpgபிலிப் பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொராஷோன் அகினோ நேற்றுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 76 சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அகினோவின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் 10 நாட்கள் துக்கம் கடை பிடிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி குளோரியா மெகாபாக்ல் அரோயோ அறிவித்துள்ளார். அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர் பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்தில் ஆறு வாக்குச் சாவடிகள்!

election_fingercolur.jpgயாழ் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும்  மக்களில் 4388 பேர் யாழ். மாநகரசபைத் தேர்தலில்  வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம். நபீல் தெரிவித்துள்ளார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி,  பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம்,  கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர்பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா

chandrika.jpgநமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுபோது இலங்கையில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராதனையில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  1963 இல் மூடப்பட்ட சட்டத்துறை இந்த வருடம் முதல் மீண்டும் கலைப்பீடத்தில் ஒரு திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்டு முதல் வருட மாணவர்களாக 48 பேர் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டனர்.

இந்த 48 பேரில் 40 பேர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மடுத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

madhu_mary.jpgமன்னார் மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை மடுமாதாத் தேவாலயத்திற்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரியிருக்கும் பொலிஸார்,  இதற்கான விண்ணப்பப்படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
 
அத்துடன்,  மதவாச்சி சோதனைச்சாவடியிலிருந்து,  மடுமாதாத் தேவாலயம்வரை பக்தர்கள் பயணிப்பதற்கான விசேட காலவரையறையை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, இம்மாதம் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையும், 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மடுத் தேவாலயத்திற்கு பக்தர்கள் செல்லமுடியுமெனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடுமாதாத் திருவிழா இம்மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,  15 ஆம் திகதி விண்ணேற்புத் திருவிழா நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆபாசப்பட இணையத்தளங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம்

computer.jpgஆபாசப் படங்களைப் பிரசுரிக்கும் இணையத்தளங்களைக் காண்காணிப்பதற்காகக் குழுவொன்றை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நியமித்துள்ளது. ஆபாசப் படங்களைக் கொண்ட இணையத்தளங்கள் தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதற்குத் தொலைபேசி, இணையச் சேவைகளை வழங்கும் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்தவும் அவை இணங்கியுள்ளன. ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட 12 இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆபாசப் படங்களைக் காண்பிக்கும் இணையத்தளங்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த காரியப்பெரும வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பாகவும் இணையத்தளத்தில் அவர்களின் செயற்பாடு குறித்தும் அதிகளவு கவனத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

hand-phone.jpgபாடசா லைகளில் வகுப்பறை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியினைப் பாவிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தினை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே. சந்திரசேகரன் வேண்டுகோள் வித்துள்ளார். அண்மையில் மலையக கல்வி வளர்ச்சியில் எதிர்நோக்கப்படும் புதிய பிரச்சினைகள் என்ற தலைப்பில் அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; பிரிடோ நிறுவனத்தால் சிறுவர் கழக உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு அறிவூட்டல் நிகழ்வுகளின் போது வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியில் பேசுவது தங்களின் கல்விக்கு பெரிதும் தடையாக இருப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகள் வந்தால் சில ஆசிரியர்கள் அத்துடன் பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவதாக குறைகூறும் மாணவர்கள் இதனால் கல்வி பெறுவதற்கானதமது உரிமை மறுக்கப்படுவதாக் கூறிவருகிறார்கள். இந்த பின்னணியில் அண்மையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனும் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசிப் பாவனை மாணவர்களின்கல்வியை பாதிப்பதால் வகுப்பு நேரத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையை தடை செய்யப் போவதாக கூறியிருந்தார். இந்தத் தீர்மானத்துக்குப் பிரிடோ நிறுவனம் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன் இத்தடையை உடனடியாக உத்தியோகபூர்வமாக அமுல்நடத்துமாறு அமைச்சரிடம் கோரவிருக்கிறது.

கையடக்கத் தொலைபேசிகள் இன்று தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஆனால், பாட நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதோ அல்லது அவற்றிற்கு பதில் சொல்வதோ ஆசிரியரின் கருத்தூன்றிக் கற்பிக்கும் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மாணவரின் கவனத்தையும் திசை திருப்புகிறது. பல்லாண்டுகளாக பின்னடைவுக்குள்ளாகியிருந்த மலையக கல்வி பலசிரமங்களுக்கு மத்தியில் படிப்படியாக முன்னேற முயற்சிக்கும் அதேவேளையில் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப்பிரிவில் கல்வி வளர்ச்சி பின்னடைவை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்களும் சுட்டிக்காட்டுவதையும் கவனிக்க வேண்டும். இந்த பின்னணியில் ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசிப்பாவனை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.

பொதுவாக ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைக்களங்கள் என்பன நடைபெறும் போது கூட அவை முடிவடையும் வரை கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் பங்குபற்றுவோரிடம் கோருகிறார்கள். பல அரசு காரியாலயங்களுக்கு உள் நுழையும் போதும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அந்த கோரிக்கை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சாதாரண கூட்டங்களின் போது கூட இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது மாணவரும் ஆசிரியரும் ஒருமித்த கவனத்தோடு ஈடுபட வேண்டிய குறுகிய நேர பாடவேளையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை கூடாது என்ற கோரிக்கையை எவரும் அநீதியானது என கூற முடியாது.

ஆசிரியர் தங்கள் பாட வேளைக்குப் பின்னர் அல்லது இடைவேளைகளின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் கூட பாட வேளைக்குப்பின்னர் அவற்றிற்குப்பதில் அளிக்கக் கூடிய வசதியிருப்பதால் எதுவித பாதகமும் ஏற்பட வழியில்லை. இது விடயத்தில் ஆசிரியர்களே சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் வைத்திருக்க முன்வருவதே சிறந்தது. ஆசிரியர் இதை செய்யாத போது மாணவர்கள் அது தொடர்பாக அதிபருக்கோ அல்லது அதிகாரிக்கோ முறைப்பாடு செய்யும் நிலை ஏற்படும். இதேவேளையில் பாடநேரத்தில் ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பது ஒரு சமூக விரோதச்செயலாக கருதும் மனப்பாங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

எனினும், இது விடயத்தில் வெறும் நல்லெண்ணத்தால் மட்டும் மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாததால் மலையக சமூகத்தின் கல்விஅபிவிருத்தி நலன்கருதி வகுப்பு நேரத்தில் கையடக்க தொலைபேசிப் பாவனைக்கு உத்தியோகபூர்வ தடையை உடனடியாக கொண்டு வருமாறு பிரிடோ நிறுவனம் கல்வி அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறது. இது பின்தங்கிய சமூகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு விடுக்கப்படும் இந்த வேண்டுகோளை ஆசிரியர்களும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

மெனிக்பாம் முகாமில் இருக்கும் மக்கள் முதல் கட்டமாக மீள்குடியமர்த்தப்பட உள்ளனர்: றிசாட் பதியுதீன்

risadbadurudeen.jpg வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாம்களில் வசிக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் 5 ஆம் திகதி தமது சொந்த கிராமங்களில் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக, ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளதாக அமைச்ச்ர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 1445 பேரும்,யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுமே இம் மாதம் 5 ம் திகதி புதன்கிழமை, 60 பஸ் வண்டிகளில் வவுனியாவிலிருந்து சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.