மன்னார் மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை மடுமாதாத் தேவாலயத்திற்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரியிருக்கும் பொலிஸார், இதற்கான விண்ணப்பப்படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன், மதவாச்சி சோதனைச்சாவடியிலிருந்து, மடுமாதாத் தேவாலயம்வரை பக்தர்கள் பயணிப்பதற்கான விசேட காலவரையறையை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, இம்மாதம் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையும், 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மடுத் தேவாலயத்திற்கு பக்தர்கள் செல்லமுடியுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடுமாதாத் திருவிழா இம்மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 15 ஆம் திகதி விண்ணேற்புத் திருவிழா நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.