August

August

புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்; கிளிநொச்சி அரச அதிபர் மீது தொடர்ந்தும் விசாரணை

ranjith-gunasekara.jpgபயங்கர வாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:- பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார் என்று தடுப்பு காவலில் உள்ள ஒரு புலி உறுப்பினர் தகவல்களை வழங்கினார்.
இதனை அடிப்படையாகக் கொண்டே பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பிலிருந்து வவுனியாவுக்குச் சென்று அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஷ¤ஹதாக்கள் தினம்

காத்தான்குடியில் பிரதி வருடந்தோறும் நடைபெற்று வரும் ஷ¤ஹதாக்கள் தினம் இன்று (3) அனுஷ்டிக்கப்படுகின்றது. 03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹ¤ஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது தொழுகையில் வைத்து 103 பேர் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர்.

இவற்றை நினைவு கூர்ந்து இவ் ஷ¤ஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷ¤ஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீராஜும் ஆப்பள்ளிவாசலில் இன்று காலை கதமுல குர் ஆன் பிரார்த்தனை என்பன நடைபெறவுள்ளன. ஷ¤ஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷ¤ஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் அதாவுட செனிவிரட்ன

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தையும் கொண்டுவந்து அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமிழ் மக்கள் துன்பப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக தொழில் மனிதவள அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல நகர ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசிய அமைச்சர் அதாவுட செனிவிரட்ன;

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிக்கு வரும்போது தமிழ் மக்களின் ஆதரவைக் கேட்பார்கள். தமிழ் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பி வாக்களிப்பார்கள். ஆனால், தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் ஐ.தே.கட்சியே. இது கடந்த கால வரலாறு. இன்று தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களும் இந்த நாட்டு மக்கள் என்று எல்லாம் கூறிவருகின்றனர்.

17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இன்று தீர்வு காணும்படி கேட்கின்றனர். இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணமானவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இன்று யுத்தம் முடிவுற்று தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டில் சகல இன மக்களும் இலங்கையர் என்று வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அந்த சூழ்நிலையை விரைவில் ஜனாதிபதி ஏற்படுத்துவார். கடந்த 35 வருடங்களாக இன மத பேதமின்றி நான் சேவையாற்றி வருகின்றேன். சகலரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்தால் நாடு முன்னேறும் என்றார்.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்னும் 5 தினங்களில் வாக்களிப்பு – 909 வேட்பாளர்கள் களத்தில்; 66 பேர் தெரிவு செய்யப்படுவர்

election_cast_ballots.jpgஊவா மாகாணசபை, யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தச் சபைகளுக்கு 66 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 909 பேர் போட்டியிடுகின்றனர்.

யாழ்.மாநகர சபை தேர்தலில் 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 174 பேர் போட்டியிடுகின்றனர். மாநகரசபையின் மொத்த வாக்காளர் தொகை 1,00,417 ஆகும். 67 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரசபை தேர்தலில் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 6 அரசியல் கட்சிகள், 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 135 பேர் போட்டியிடுகின்றனர். நகர சபையின் 24,626 பேர் 18 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் மொத்தமாக 8,75,456 வாக்காளர்கள் 814 நிலையங்களில் வாக்களிக்கவுள்ள நிலையில் 32 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 600 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 7 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 21 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 432 பேர் போட்டியிடுகின்றனர். 9 தொகுதிகளிலுள்ள 574,814 பேர் 507 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 9 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 168 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 தொகுதிகளைச் சேர்ந்த 3,00,642 பேர் 307 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபை மற்றும் யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 25,360 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊவாவில் 75 சதவீதமும் வவுனியா நகரசபை மற்றும் யாழ். மாநகரசபையில் 75 வீதமும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதை தாம் மதிப்பிட்டுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பு நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்ற நிலையில் தேர்தல் தினத்தில் இதே சூழ்நிலையை பாதுகாப்பதற்கு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தொடர்ந்து முன்வரவேண்டுமென கேட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 4,388 பேர் யாழ்.மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம்.நபீல் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் வாக்களிப்பதற்கு அங்கு 6 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இரு வாக்குச் சாவடிகளும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாஷருக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அம்மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் 29 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தெரிவித்ததுடன், இதில் தாக்குதல் சம்பவங்கள் 15 இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

15 சம்பவங்கள் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மொனராகலையில் 7, வவுனியாவில் 4, யாழ்ப்பாணத்தில் 3 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் சட்டவிதிகளை மீறிய சம்பவங்கள் 7 இடம் பெற்றுள்ள நிலையில் அச்சுறுத்தல் தொடர்பில் 3 சம்பவங்களை பதிவு செய்துள்ளோமெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் 1998 இல் இடம்பெற்றது. 1998 க்கு பின்னர் இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களும் 2003 வரை விசேட ஆணையாளரின் கீழ் இருந்தன.

ஊவா மாகாண சபை மே 28 ஆம் திகதி கலைக்கப்பட்டது.

உபவேந்தராக சரத் நியமனம்

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழக புதிய உப வேந்தராக கலாநிதி சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தர் கலாநிதி சரத் அபேகோன் பேராதனை பல்கலைக்கழக பொறியியலாளர் துறை பீடாதிபதியாக நான்கரை வருடம் சேவை புரிந்த இவர் பல்கலைக்கழக ஆணைக்குழு அங்கத்தவருமாவார்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2010 ஏப்ரலில்: வி.உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgநாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தெகல்கா’ வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றி தொடர்பில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? உலகின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் புறநிலை அரசுகளில் இருந்து இது எந்த வகையில் வேறுபட்டு அமைகின்றது?

எமது முயற்சி வெற்றிபெறும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மிகக் கொடூரமான முறையில்  இலங்கை அரசு அடக்கி விட்டாலும்கூட, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு என்பவற்றுக்கான அவர்களின் வேட்கையை அடக்க முடியவில்லை.

இப்போது, இலங்கையில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதுடன் மட்டுமல்ல அவர்கள் தமது அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகள் கூடக் கிடையாது. அதனால் தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் முழுவதும் வெளியில் இருந்தே மேற்கொள்ளப்பட முடியும்.

நாங்கள் உருவாக்க முனைவது புறநிலை அரசு அல்ல. நாடு கடந்த அரசு ஒன்றையே நாம் உருவாக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாடும் (அதாவது நிலப்பரப்பும்) தேவை இல்லை. இந்த அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே தேர்வு செய்யப்படும்.

இதற்கு முன் எந்தவொரு இனக் குழுவும் இத்தகைய நாடு கடந்த அரசுகளை உருவாக்கியதில்லை. இந்தக் கருத்துருவாக்கமானது அரசியலுக்கும் அரசியல் தத்துவங்களுக்கும் எங்களின் பங்களிப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்களா? இந்திய அரசினதும் மாநில கட்சிகளினதும் ஆதரவைக் கோருவீர்களா?

நிச்சயமாக. நாங்கள் அவர்களின் ஆதரவைப் கோருவோம்.

முதலமைச்சர் மு.கருணாநிதியையும் ஏனைய தமிழ் தலைவர்களையும் சந்திப்பதற்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள எண்ணியிருக்கிறீர்களா?

கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், வைகோ, பாண்டியன் மற்றும் ஏனைய தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவதற்கு எண்ணியுள்ளோம். டில்லியிலும் தமிழ் நாட்டிலும் உள்ள கல்விமான்களையும் சமூகத் தலைவர்களையும் கூட சந்தித்துப் பேசுவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியமானது.

நீங்கள் முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை எப்போது நடத்தப் போகிறீர்கள்? எந்த முறையில் தேர்தல்கள் நடத்தப்படப் போகின்றன?

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மக்கள் எங்களைக் கேட்டிருக்கின்றனர். மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஈழத்தை அடைவதற்காக நீங்கள் கொண்டிருக்கக்கூடிய வழிகாட்டு வரைபடம் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தான். அதன் சட்டபூர்வ நிலை, புகழ் மற்றும் அனைத்துலக ஆதரவு காரணமாக அது அதிகார மையமாகும். சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையிலான நடுநிலை அதிகாரம் ஒன்றை அது உருவாக்கும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியுடன் வாழக்கூடிய அரசியல் ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு அது தனது பங்களிப்பை வழங்கும்.

இது தொடர்பில் எந்த நாட்டிடம் இருந்தாவது சாதகமான பிரதிபலிப்பு கிடைத்திருக்கிறதா?

இந்த முயற்சிக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு மிக அத்தியாவசியமானது. ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்போது, எங்கள் முயற்சிக்கு ஜனநாயக நாடுகள் ஆதரவு தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்போதே சில நாடுகளில் இருந்து சாதகமான பிரதிபலிப்புக்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து தடுப்பு மருந்தேற்றும் திட்டம்

vaccine.jpgசிறப்பு சிறுவர் சுகாதார பிரசார திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் உள்ள 36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து நோய்க்கு எதிரான நிர்ப்பீடனம் செய்யப்படும். சுகாதார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுக்கும். இம்முயற்சியானது, கடந்த காலத்தில் வெகுவாக பரவிய சின்னமுத்து நோயானது, மேலும் பரந்தளவில் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள். வவுனியாவில் உள்ள 30 நிலையங்களில், ஏறக்குறைய 100 பொது சுகாதார மருத்துவதாதிகளும் 1200 தொண்டர்களும் இம் முயற்சியில் பங்கெடுக்கவுள்ளனர். இதற்காக பல வாரகாலமாக, நிர்ப்பீடன மருந்து வழங்கல்களை எற்பாடு செய்தல், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், தொண்டர்களை அணிதிரட்டுதல் என முன்னேற்ற நடவடிக்கைகள் பல மேற் கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை அரசாங்கமானது சிறுவர் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றது- இடம்பெயர்ந்தோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியுடன் உள்ளோம்’ என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல காந்தலியனகே தெரிவித்தார்.

சின்னமுத்துக்கு எதிராக நிர்ப்பீடனம் வழங்குவதுடன், சிறுவர்களை தாக்கும் பல நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், போஷாக்கின்மையை தடு க்கவுமென அவர்களுக்கு விற்றமின் ஏ மற்றும் பூச்சி மருந்து என்பனவும் வழங்கப்படவுள்ளன. அவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்தும் வழங்கப்படும்.

‘ஒரு அவசரநிலையின் போது, ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே அதிகம் பாதிப்படைவர். இம்முயற்சியினாது, பல உயிர்களைக் காக்கும்’, என ஐக்கிய நாடு கள் சிறுவர் நிதியத்தின் பதில் வதிவிடப் பிரதிநிதி டெசிரா ஜோன்ஸ்மா தெரிவித்தார். சுகாதார அமைச்சு, போஷாக்கு மற் றும் நோய் தொற்று பிரிவு உட்பட இம் முயற்சியில் ஈடுபட்ட ஏனைய பங்காளர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

சரணடைந்த சிறுவர்களுக்கென வவுனியாவில் இரு புதிய பாடசாலைகள் செப். 7 முதல் செயற்படும்

school-children000.jpgபுலிகள் இயக்கத்திலிரு ந்து படையினரிடம் சரண டைந்துள்ள சிறுவர்களுக்கென வவுனியா பூந்தோட்டத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் இயங்கவுள்ளன. வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு சங்க கட்டடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுள் 18 வயதுக்குட்பட்ட 250 சிறுவர் சிறுமியர்களுக்கென இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க ப்படவுள்ளன.

8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்புகள் இயங்கும் விதத்தில் ஒரு அதிபரின் கீழ் 15 ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கென ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் பாடசாலைகள் இயங்கும் விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்களும் அமைக்கப்படவுள்ளன.

வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட், யுனிசெப் பிரதிநிதிகள், படைத்தரப்பின் பொறுப்பதிகாரிகள் அடங்கிய குழுவினர் பூந்தோட்ட முகாமுக்குச் சென்று பார்வையிட்டனர்.

மேற்படி 250 மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்களை வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் நாளை திங்கட்கிழமை வழங்குகிறது. மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது என பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் சம்மாந்துறையில் கண்டுபிடிப்பு

ah1n1.jpgபன்றிக் காய்ச்சல் (AH1N1  வைரஸ்) நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவர் சம்மாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்மாந்துறை, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டு இவர் கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ஆர். நூர்தீன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரயாணிகள், குறித்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஐந்து பேர் பன்றிக் காய்ச்சல் தொற்றுடையவர்களென கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்ட அதே சமயம் குறித்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இவருடைய தகவல்களை கொண்டு விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.

இடம்பெயர் முகாம்களுக்கு மேலும் 15 மருத்துவர்கள் : சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

sri-lankan-doctors.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணியாற்றவென மேலும் 15 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஏற்கனவே 102 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும் அதற்கு மேலதிகமாக இந்த 15 மருத்துவர்களை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாம்களில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அங்குள்ள மக்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஒரு நாள் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மறுநாள் அங்கிருப்பதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற வேண்டிய நீரிழிவு உள்ளிட்ட நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே மேலதிக மருத்துவர்களை அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.