இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணியாற்றவென மேலும் 15 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஏற்கனவே 102 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும் அதற்கு மேலதிகமாக இந்த 15 மருத்துவர்களை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முகாம்களில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அங்குள்ள மக்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஒரு நாள் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மறுநாள் அங்கிருப்பதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற வேண்டிய நீரிழிவு உள்ளிட்ட நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே மேலதிக மருத்துவர்களை அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.