17

17

எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

111111.jpgஅணிசேரா நாடுகளின் 16ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.
 
அணிசேரா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 118 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டுக்கு வருதை தந்திருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட 8 உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அணிசேரா அமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகிச் செல்பவரும் கியூபாவின் ஜனாதிபதியுமான ராஉல் கஸ்ட்ரோ,  லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல் கடாபி,  பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி,  தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸ{மா,  இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், மலேசியப் பிரதமர் அப்துல் ரஸாக் மற்றும் நேபாளப் பிரதமர் மாதேவ் குமார் ஆகிய உலக நாடுகளின் தலைவர்களுடனேயே ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்தினார்.

இச்சந்திப்புக்களின்போது இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றினார்.

எகிப்தின் ஷாம் அஷ்ஷெய்க் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவினர் கடந்த 14ஆம் திகதி எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த மாநாட்டில் பங்குபற்றிய இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியாவின் ஆடம்பர ஹோட்டல் குண்டுத் தாக்குதல்களில் 9 பேர் பலி

indoonisian_blast.jpgஇந்தோ னேஷியாவின் தலைநகரிலுள்ள இரு ஆடம்பர ஹோட்டல்களில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள ரிட்ஸ்-கர்ல்டன் மற்றும் மெர்ரியட் ஆகிய ஆடம்பர ஹோட்டல்களிலேயே இக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த குண்டுத் தாக்குதல்களில் 4 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சடலங்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தென் ஜகர்த்தா பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் ஐந்து நிமிட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மெர்ரியட் ஹோட்டலின் மீது கடந்த 2003ஆம் ஆண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதோடு இதில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதமற்ற நாட்டில் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் உரிமை சகலருக்கும் கிடைத்துள்ளது

anura_priyasarshana_yapasss.jpgபயங்கர வாதத்திலிருந்து நாடு விடுதலை பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் தமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் உரிமை தற்போது கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஊவா மாகாணத்தில் துரித அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சூரிய கிரகணத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

tsunami111.jpgசூரிய கிரகணம் காரணமாக எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை சுனாமி தாக்கும் அபாயமுள்ளதாக வெளியாகும் செய்தியை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முழுமையாக மறுத்துள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுவதை பல நாட்களுக்கு முன்னர் அறிவிக்கக்கூடிய விஞ்ஞான ரீதியான முறைமைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் உருவாகலாம் என பரவியுள்ள செய்தி காரணமாக மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சுனாமி குறித்தோ அதனுடன் தொடர்புடைய நிலநடுக்கம் குறித்தோ பல நாட்களுக்கு முன் அறிவிக்க முடியாது.

அவ்வாறான வதந்திகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை ஜப்பானை அண்மித்த பகுதிகளில் உருவாகும் நிலநடுக்கம் காரணமாக ஏற்படும் சுனாமியினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.

சூரியக்கிரகணம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பு சக்தியினால் நிலநடுக்கம் ஏற்படும் எனவும் அந்த நில நடுக்கம் ஜுலை மாதத்தில் 22 ஆம் திகதி தான் ஏற்படும் எனவும் விஞ்ஞான ரீதியில் அறிவிக்க முடியாது. அதனால் மக்கள் சுனாமி குறித்து அஞ்சத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி சுனாமி ஏற்படும் என இந்தியா உட்பட பல நாடுகளில் எதிர்வு கூறப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்ததே.

கதிர்காமத்துக்கு ரயில் – பஸ் இணைப்புச் சேவை

bus_ctb_logos.jpgகதிர் காமத்தில் இம்மாதம் நடைபெறும் வருடாந்த எஸல பெரகரவில் கலந்துகொள்ளச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி பஸ் – ரயில் இணைப்புச் சேவையொன்றை நடாத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இம்மாதம் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் இந்த இணைப்புச் சேவையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரையோர ரயில் சேவையைப் பயன்படுத்துவோருக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கதிர்காமம் வரையில் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக ரயில் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கதிர்காமம் செல்வதற்கான விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எகிப்து செல்ல முயற்சி: கட்டுநாயக்கவில் இரு புலி உறுப்பினர் கைது

_arrested.jpgஎகிப்து செல்வதற்காக தயாராகியிருந்த புலி பயங்கரவாதிகள் இருவரும் அவர்களுடன் இருந்த இன்னுமொருவரும் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (16)  கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் எகிப்து நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றுடனேயே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்தும் மற்றையவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அணிசேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்விருவரும் எகிப்து செல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டுமெனவும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களென்றும் இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் பலாலி ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்டவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்கயின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாண பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது.

எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் கடற்படை பலப்படுத்தப்படும் – புதிய கடற்படை தளபதி திஸர சமரசிங்க

thisara_samarasinghe_navycommander.jpgகடல் வழியைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்தார். கடற்படையை நவீன மயப்படுத்தி மேலும் பலப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்களினதும், இளைஞர்களினதும் மத்தியில் கடற்துறை சார்ந்த ஆர்வத்தையும், அறிவையும் மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், எமது நாட்டில் கடல்துறைசார் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை கடற்படையின் 16வது தளபதியாக புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க கடற்படைத் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

கடற்படைத் தளபதி இங்கு மேலும் உரையாற்றுகையில், எமது நாட்டில் இடம்பெற்று வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டி நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் பூரண பங்களிப்புக்களை வழங்கினோம். புலிகளுக்கான கடல்வழி விநியோகங்களை முற்றாக் கட்டுப்படுத்தி ஆயுதக் கப்பல்களை தாக்கியழித்து தப்பிச் செல்வதை தடுக்கும் விடயத்தில் கடற்படையினர் சாதனை படைத்தனர்.

தற்பொழுது பயங்கரவாதம் பூரணமாக தோற்கடிக்கப்பட்டுள்ளதால் கடற்பரப்பில் மாத்திரமின்றி நாடு முழுவதிலும் சிறந்ததும் அமைதியானதுமான சூழல் காணப்படுகின்றது. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் முப்படைகளினதும் அர்ப்பணிப்பால் ஏற்பட்டதாகும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளமையினால் நாடு முழுவதிலும் இருந்த மீன்பிடி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படுகிறது.

தற்பொழுது நாளுக்குநாள் மீன்பிடித்துறை மேம்பட்டு வருகின்றது. கடற்படையை மேலும் நவீன மயப்படுத்தவுள்ளதுடன் கடற்படை வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வளங்கவுள்ளோம். கடற்படையை மேம்படுத்த மிக நீண்ட கால பாரிய திட்டங்களை தீட்ட திட்டமிட்டுள்ளேன்.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் கடற்படையின் கப்பல்களை துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்க முடியாது. எமது கடமை அத்துடன் முடிந்து விடப்போவதில்லை. ஆழ் கடலிலும், நடுக்கடலிலும் கரையோரப் பகுதிகளிலும் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் கடற்படையினரும் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போதிலும் யார் கடலுக்குச் செல்கின்றார்கள்; யார் கரைக்கு மீண்டும் திரும்புகின்றார்கள் என்பதை கண்காணிக்கும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.  அதன் மூலம், சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்வதையும், ஏனைய நடவடிக்கைகள் உருவாகுவதையும் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தவிர்க்க முடியும். ஆரம்ப காலத்தில் கடலில் ஒரு படகு சென்றால் அது தீவிரவாதிகளின் கப்பலா, படகா என்ற சந்தேகம் எமக்கும் மீனவர்களுக்கும் ஏற்படும். தற்பொழுது அந்த நிலைமை மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றன.

200 கடல்மைல் பிரதேசத்திலுள்ள சகல வளங்களும் எமக்குச் சொந்தமானதாகும். தற்பொழுது அது 300 கடல்மை தொலைவாக அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு எமது தேவைக்கேற்ப கப்பல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கப்பல் இருக்கும் பட்சத்தில் கடற்படைத்துறை பூரணத்துவமடையும். தற்பொழுது எம்மிடம் அந்தக் கப்பல் இருந்த போதிலும் மேலதிக கப்பல் தேவைக்கேற்ப கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விமானத் தாங்கி கப்பல் தற்பொழுது எமது உடனடி தேவையல்ல.  ஆனால், எதிர்காலத்தில் அது பற்றி கூடிய கவனம் செலுத்தப்படலாம். தற்போதைக்கு விமானப்படையின் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்பொழுது எமக்குள்ள பொறுப்புக்களை விட எதிர்காலத்தில் எண்ணெய், அகழ்வு வாயு தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் எமது பங்களிப்பு மேலும் அதிகமாக தேவைப்படலாம் என்றார்.நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் முடியுமான சகல ஒத்துழைப்புகளை கடற்படை முழுமையாக வழங்கும் என்று தெரிவித்த அவர், தன்னை இந்த உயர் பதவிக்கு நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பட்டார்.

அம்பம்பொல பகுதியில் பலத்த காற்று; 110 வீடுகள் சேதம்

images.jpgகுருநாகல் மாவட்டத்தின் அம்பம்பொல மற்றும் குகுலாவ பிரதேசங்களில் நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 110 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 12.50 மணியளவில் வீசிய இந்தக் காற்று காரணமாக 110 வீடுகள், வைத்தியசாலை, நீர்வியோகம் மற்றும் பிரதான மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கையில் தற்பொழுது வடமேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காணப்படுவதாகவும் இந்தக் காலகட்டத்தில் திடீரென ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும் சுழல் காற்று காரணமாக இது போன்ற சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையப் பணிப்பாளர் எஸ். எச். காரியவசம் தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பலபாகங்களில் திடீரென இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களும் திடீரென ஏற்படும் மாற்றத்தினால் சுழல் காற்று அவ்வப்போது உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்த அவர் பெரும் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

நேற்று அதிகாலை அம்பம்பொல மற்றும் குகுலாவ பிரதேசங்களில் திடீரென வீசிய காற்று சுழல் காற்றாக மாறி சுமார் 110 வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் அந்தப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலை, நீர் விநியோகங்கள் மற்றும் பிரதான மின் இணைப்புகளிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை நேற்று முன்தினம் காலை 6.30 சிலாபம் பிரதேசத்திலும் சுழல்காற்று வீசியுள்ளதாக தெரிவித்த காலநிலை அவதான நிலையம், அந்தப் பிரதேசத்திலுள்ள 50 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்தது.

எகிப்தில் பொதுநலவாய முதல் பெண்மணிகள் மாநாடு சிரந்தி – ராஜபக்ஷ பங்கேற்பு

shi-raja.jpgபொது நலவாய நாட்டுத் தலைவர்களுடைய முதல் பெண்மணிகள் மாநாடு நேற்று முன்தினம் (15) எகிப்தில் ஆரம்பமானது. இலங்கை சார்பாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இந்த மாநாட்டில் பங்குபற்றினார். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பாரியார்களின் மாநாடு நடைபெற்றது. பொதுநலவாய நாட்டுப் பெண்களின் நலன் குறித்தும் உலக பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதப் பிரச்சினை, பெண்கள் மீதான அடக்குமுறை, சமூகப் பிரச்சினைகள் என்பவற்றில் பெண்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ: 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பமானது முதல் பல மோசமான சவால்களுக்கு முகம்கொடுக்க அங்கத்துவ நாடுகளுக்கு நேரிட்டதாகக் கூறினார்.

பொருளாதார, நிதி நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, உணவு நெருக்கடி, வரட்சி, சூறாவளி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இவற்றினால் பெண்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்த இந்த மாநாட்டில் உலகத் தலைவிகள் இணக்கப்பாட்டுக்கு வந்தது குறித்து பாராட்டு தெரிவித்த சிரந்தி ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மேற்படி பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தத்திற்கு முகம்கொடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் பெண் அமைப்புகள் முக்கிய பங்காற்றின. ஜனாதிபதி நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்துள்ள நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களையும் யுத்த பயிற்சி வழங்கப்பட்ட சிறுவர்களையும் புனரமைக்கவும் கல்வி புகட்டவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்கென ‘சிரிலிய செவன’ பாதுகாப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனூடாக அவர்களுக்கு கல்வி அறிவு வழங்கவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் உள்ளதாகவும் சொன்னார். மேற்படி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது குறித்து சிரந்தி ராஜபக்ஷ எகிப்திய ஜனாதிபதியின் பாரியாருக்கு நன்றி தெரிவித்தார்.

கந்தளாயில் மூன்று புலி சந்தேக நபர்கள் கைது

_arrested.jpgபுலி களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கந்தளாய் சேருவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் இளைஞர்கள் என்று தெரிவித்த அவர் கையடக்கத் தொலைபேசி, கணனி உட்பட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தங்களது கையடக்கத் தொலைபேசியில் புலிகளின் கீதங்களை பதிவு செய்துள்ளதுடன் புலிகள் தொடர்பான ஆவணங்களை கணனியில் வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.