கடல் வழியைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்தார். கடற்படையை நவீன மயப்படுத்தி மேலும் பலப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களினதும், இளைஞர்களினதும் மத்தியில் கடற்துறை சார்ந்த ஆர்வத்தையும், அறிவையும் மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், எமது நாட்டில் கடல்துறைசார் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை கடற்படையின் 16வது தளபதியாக புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க கடற்படைத் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
கடற்படைத் தளபதி இங்கு மேலும் உரையாற்றுகையில், எமது நாட்டில் இடம்பெற்று வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டி நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் பூரண பங்களிப்புக்களை வழங்கினோம். புலிகளுக்கான கடல்வழி விநியோகங்களை முற்றாக் கட்டுப்படுத்தி ஆயுதக் கப்பல்களை தாக்கியழித்து தப்பிச் செல்வதை தடுக்கும் விடயத்தில் கடற்படையினர் சாதனை படைத்தனர்.
தற்பொழுது பயங்கரவாதம் பூரணமாக தோற்கடிக்கப்பட்டுள்ளதால் கடற்பரப்பில் மாத்திரமின்றி நாடு முழுவதிலும் சிறந்ததும் அமைதியானதுமான சூழல் காணப்படுகின்றது. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் முப்படைகளினதும் அர்ப்பணிப்பால் ஏற்பட்டதாகும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளமையினால் நாடு முழுவதிலும் இருந்த மீன்பிடி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படுகிறது.
தற்பொழுது நாளுக்குநாள் மீன்பிடித்துறை மேம்பட்டு வருகின்றது. கடற்படையை மேலும் நவீன மயப்படுத்தவுள்ளதுடன் கடற்படை வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வளங்கவுள்ளோம். கடற்படையை மேம்படுத்த மிக நீண்ட கால பாரிய திட்டங்களை தீட்ட திட்டமிட்டுள்ளேன்.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் கடற்படையின் கப்பல்களை துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்க முடியாது. எமது கடமை அத்துடன் முடிந்து விடப்போவதில்லை. ஆழ் கடலிலும், நடுக்கடலிலும் கரையோரப் பகுதிகளிலும் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் கடற்படையினரும் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போதிலும் யார் கடலுக்குச் செல்கின்றார்கள்; யார் கரைக்கு மீண்டும் திரும்புகின்றார்கள் என்பதை கண்காணிக்கும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன் மூலம், சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்வதையும், ஏனைய நடவடிக்கைகள் உருவாகுவதையும் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தவிர்க்க முடியும். ஆரம்ப காலத்தில் கடலில் ஒரு படகு சென்றால் அது தீவிரவாதிகளின் கப்பலா, படகா என்ற சந்தேகம் எமக்கும் மீனவர்களுக்கும் ஏற்படும். தற்பொழுது அந்த நிலைமை மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றன.
200 கடல்மைல் பிரதேசத்திலுள்ள சகல வளங்களும் எமக்குச் சொந்தமானதாகும். தற்பொழுது அது 300 கடல்மை தொலைவாக அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு எமது தேவைக்கேற்ப கப்பல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கப்பல் இருக்கும் பட்சத்தில் கடற்படைத்துறை பூரணத்துவமடையும். தற்பொழுது எம்மிடம் அந்தக் கப்பல் இருந்த போதிலும் மேலதிக கப்பல் தேவைக்கேற்ப கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விமானத் தாங்கி கப்பல் தற்பொழுது எமது உடனடி தேவையல்ல. ஆனால், எதிர்காலத்தில் அது பற்றி கூடிய கவனம் செலுத்தப்படலாம். தற்போதைக்கு விமானப்படையின் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்பொழுது எமக்குள்ள பொறுப்புக்களை விட எதிர்காலத்தில் எண்ணெய், அகழ்வு வாயு தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் எமது பங்களிப்பு மேலும் அதிகமாக தேவைப்படலாம் என்றார்.நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் முடியுமான சகல ஒத்துழைப்புகளை கடற்படை முழுமையாக வழங்கும் என்று தெரிவித்த அவர், தன்னை இந்த உயர் பதவிக்கு நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பட்டார்.