சூரிய கிரகணம் காரணமாக எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை சுனாமி தாக்கும் அபாயமுள்ளதாக வெளியாகும் செய்தியை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முழுமையாக மறுத்துள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுவதை பல நாட்களுக்கு முன்னர் அறிவிக்கக்கூடிய விஞ்ஞான ரீதியான முறைமைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.
எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் உருவாகலாம் என பரவியுள்ள செய்தி காரணமாக மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சுனாமி குறித்தோ அதனுடன் தொடர்புடைய நிலநடுக்கம் குறித்தோ பல நாட்களுக்கு முன் அறிவிக்க முடியாது.
அவ்வாறான வதந்திகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை ஜப்பானை அண்மித்த பகுதிகளில் உருவாகும் நிலநடுக்கம் காரணமாக ஏற்படும் சுனாமியினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.
சூரியக்கிரகணம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பு சக்தியினால் நிலநடுக்கம் ஏற்படும் எனவும் அந்த நில நடுக்கம் ஜுலை மாதத்தில் 22 ஆம் திகதி தான் ஏற்படும் எனவும் விஞ்ஞான ரீதியில் அறிவிக்க முடியாது. அதனால் மக்கள் சுனாமி குறித்து அஞ்சத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி சுனாமி ஏற்படும் என இந்தியா உட்பட பல நாடுகளில் எதிர்வு கூறப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்ததே.