குருநாகல் மாவட்டத்தின் அம்பம்பொல மற்றும் குகுலாவ பிரதேசங்களில் நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 110 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 12.50 மணியளவில் வீசிய இந்தக் காற்று காரணமாக 110 வீடுகள், வைத்தியசாலை, நீர்வியோகம் மற்றும் பிரதான மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கையில் தற்பொழுது வடமேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காணப்படுவதாகவும் இந்தக் காலகட்டத்தில் திடீரென ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும் சுழல் காற்று காரணமாக இது போன்ற சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையப் பணிப்பாளர் எஸ். எச். காரியவசம் தெரிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பலபாகங்களில் திடீரென இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களும் திடீரென ஏற்படும் மாற்றத்தினால் சுழல் காற்று அவ்வப்போது உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்த அவர் பெரும் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
நேற்று அதிகாலை அம்பம்பொல மற்றும் குகுலாவ பிரதேசங்களில் திடீரென வீசிய காற்று சுழல் காற்றாக மாறி சுமார் 110 வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் அந்தப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலை, நீர் விநியோகங்கள் மற்றும் பிரதான மின் இணைப்புகளிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை நேற்று முன்தினம் காலை 6.30 சிலாபம் பிரதேசத்திலும் சுழல்காற்று வீசியுள்ளதாக தெரிவித்த காலநிலை அவதான நிலையம், அந்தப் பிரதேசத்திலுள்ள 50 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்தது.