15

15

சரத் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியிலிருந்து பிரியாவிடை

comd_last_.jpgஇலங் கையின் 18ஆவது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றார். புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்தே ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகிச் செல்கிறார். இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதனையடுத்து இராணுவத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்துக்குச் சென்று புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்புக்களைக் கையளித்ததுடன் உத்தியோகபூர்வ வைபவங்களின்போது தனது ஆடையில் சொருகிக்கொள்ளும் வாளையும் வழங்கினார். பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் அபிவிருத்திக்கும் புனரமைப்புக்கும் படையினரின் பூரண பங்களிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 12ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இப்புதிய நியமனத்தின்படி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்

21deva.jpgகடந்த இருபது வருடகால யுத்தத்தால் இழந்துள்ள அனைத்தையும் மீளப் பெற அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இலக்கை இலகுவாக எட்டிவிட முடியுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை குடாநாட்டில் வறிய குடும்பங்களை மேம்படுத்தும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா;

எமது மக்கள் கேட்கும் முன்பதாகவே உதவிகளைச் செய்து வரும் நாம் எமது மக்களை ஒருபோதும் கையேந்தும் நிலைக்குத் தள்ளமாட்டோம் என்றும் எனினும் தவறான தலைமைத்துவங்களினால் எமது மக்கள் அவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது தான் அந்நிலைமையில் இருந்து எமது மக்களை மீட்டெடுத்து வரும் நிலையில் மீண்டும் அம்மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிட சில தீய சக்திகள் வேஷம் போட்டுக் கொண்டு மக்கள் முன்வர எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பலரும் நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றியுள்ள சேவைகள் தொடர்பில் பாராட்டிப் பேசினர். நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற மேம்பாட்டுத் திட்டங்கள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூவரை மீனவர்கள் மீட்டனர்.

இலங்கையில் இருந்து தோணியில் புறப்பட்டு, நடுக்கடலில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழ் எழுத்தாளர் உட்பட மூவரை மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் அருகில் மூன்று பேர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலையடுத்து, கடலோர காவல்படையினர், கப்பல் படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த படையினர் கடற்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் ஐந்தாம் தீடை அருகே தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று பேரை மீனவர்கள் காப்பாற்றி, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, சுகந்தன், வவுனியாவை சேர்ந்த யோகராஜ் என்பது தெரியவந்தது. அவர்களில் திருநாவுக்கரசு, இலங்கையில் பல தமிழ் நூல்களை எழுதிய, எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். குடாவில் சகல பொருட்களையும் கொழும்பு விலையில் விற்பதற்கு ஏற்பாடு

யாழ்.  குடாநாட்டில் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல பொருட்களும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுத் தெரிவித்தார். சமூக சேவைகள், சமூக நலன்புரித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசாங்கம் இதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நல்லூர் பிரதேச செயலாளர் ப. செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்வைபவத்தின் போது நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த வியாபாரிகளை நாளை (இன்று) கொழும்பு க்கு வரவழைத்து முக்கிய கூட்டமொன்றை நடத்தவிருக்கின்றோம். இக்கூட்டத்தின் போது யாழ். குடாநாட்டில் சகல பொருட்களையும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கு யாழ். குடா நாட்டில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இப்போது பயங்கரவாதப் பிரச்சினை இல்லை. மக்கள் அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், வடபகுதி மக்கள் 24 மணி நேரமும் சுதந்திரமாகக் கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை

mahinda_raajapakse11.jpgஅணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இன்று எகிப்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எகிப்துக்குப் பயணமானதுடன் இன்று மாநாட்டில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் எகிப்தின் கைரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னே, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் எகிப்துக்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதுடன் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

118 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் 15 வது உச்சிமாநாடு 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை எகிப்தின் ஷாம் அல்ஷேக் நகரில் நடை பெறுகிறது. 12ம் திகதி இடம்பெற்ற வெளிவிவகார அமைச் சர்களுக்கான அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார்.

இன்று நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

“அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்குள் அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் நோக்கங்கள் சம்பந்தமாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளன.

அத்துடன் 2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் 14 வது உச்சிமாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வளர்ந்து வரும் மனித சமூகத்திற்குள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கிய அவர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மாற்றங்கள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள பாரிய வெற்றிகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1955ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய – ஆபிரிக்க மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 118 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 17 கண்காணிப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகள் அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெறுகின்றன. உலக சனத்தொகையில் ஐம்பது வீதத்தினர் இதில் உள்வாங்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீ.வி. ஜயசுந்தரவின் மனுவை விசாரிக்க உச்சமன்று தீர்மானம்

அரசாங்கத்தின் எந்த பதவிகளையும் பொறுப்பேற்பதில்லையென்று தான் கொடுத்த உறுதிமொழியை மீளப்பெறுவதற்காக திறைசேரியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.வி. ஜயசுந்தர சமர்ப்பித்த மனுவை ஏற்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முடிவு செய்தது. இது தொடர்பான விசாரணை ஓகஸ்ட் 3ம் திகதி எடுக்கப்படவுள்ளது.

கலாநிதி ஜயசுந்தரவின் மனு தொடர்பாக நேற்று ஆராய்ந்த உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பும்படி பணிப்புரை விடுத்தது. ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கலாநிதி ஜயசுந்தர சார்பில் ஆஜரானார்.

அரசாங்கத்தில் எந்தவித பதவிகளையும் ஏற்பதில்லையென திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.வி. ஜயசுந்தர 2008ம் ஆண்டு ஒக்டோபர் 16ம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கியிருந்தார். கலாநிதி ஜயசுந்தர தனது மனுவில் கூறியுள்ளதாவது;

தேசிய நலனைக் கருத்தில் கொண்டு திறைசேரி, மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளராக தன்னை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். என்றாலும் லங்கா மரையன் சேர்விஸ் லிமிட்  நிறுவனம் தொடர்பான வழக்கொன்றால் அதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆகவே தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழியை மீளப்பெற ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நியமிக்கலாம். அந்த நியமனம் அமைச்சரவை கலைக்கப்படும் வரையில் செல்லும்படியாகும்.

மீள்குடியேற்றத்தில் ஒரேமாதிரி செயற்பாடு: வடக்கு அரச அதிபர்களுக்கு பசில் பணிப்பு

basil-raja.jpgவட மாகாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் பங்குகொண்ட உயர்மட்ட மாநாடொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்ட இந்த மாநாட்டில், வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், கிளிநொச்சி அரச அதிபர் நா. வேதநாயகன், முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், மன்னார் அரச அதிபர் ஏ. நிக்கலஸ்பிள்ளை, ஆகியோரும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், மாகாண பிரதான செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகத் தமது திட்ட அறிக்கைகளை நேற்று சமர்ப்பித்துள்ளனர். எனினும், சகல அரச அதிபர் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான மீள்குடியேற்ற திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்குமாறு வடக்கு செயலணியின் தலைவர் பா. உ. பசில் ராஜபக்ஷ, அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலதிகமாக ஆராயவென, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தலைமையில் அடுத்த வாரம் வவுனியாவில் கூட்டமொன்றை நடத்துவதெனவும் நேற்றைய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் மூன்றாம் கட்டப் பணி விரைவில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அடுத்த வாரம் இறுதிக் கட்ட திட்ட அறிக்கையொன்றை வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் சமர்ப்பிக்கவுள்ளார்.

நலன்புரி நிலையங்களுக்கு எதிர்க்கட்சியினர் செல்ல அனுமதித்திருந்தால் சர்வதேச குற்றச்சாட்டு எழுந்திருக்காது

எதிர்க்கட்சியினரை இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களுக்கு அனுமதித்திருந்தால் அகதி முகாம்களை உரிய முறையில் பராமரிக்கவில்லையென்ற சர்வதேச குற்றச்சாட்டு எழுந்திருக்காதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

வவுனியா நலன்புரி நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லையென ஊடகங்கள், இணையத்தளங்கள் வழியாக அறிய முடிகின்றது. உரிய முறையில் பராமரிக்காததன் விளைவாகவே சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு எழுமெனத் தெரிந்தே எதிர்க்கட்சியினரை அனுமதிக்குமாறு ஜே.வி.பி. கோரியது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால் எமது கட்சியின் செந்தாரகை செயலணியூடாக நாம் உதவிகளை வழங்கியிருப்போம்.

இந்நிலையங்களில் உள்ளோருக்கு உணவு வழங்குவோர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஓரிரு நாட்ளுக்காக அல்ல 4 மாதங்களாக உணவுக்காக பணம் வழங்கப்படவில்லை. அகதிகளுக்கான ஒருநாள் சாப்பாடுக்கான தொகை 120 ரூபாவாகும். அப்படியானால் எவ்வளவு தூரம் நிறைவு செய்யப்பட்டதை தெரிந்து கொள்ள முடியும்.

அரசாங்கம் பேச்சு ஜாலங்களை விட்டு விட்டு செயலில் காட்டி மக்களை மக்களாக மதித்து சரிவர செயற்பட முற்பட வேண்டும். எமக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட அனுமதி தாருங்கள் என மீண்டும் கேட்கின்றோம் என்றார்.

விபத்தில் சிக்கிய மே.ஜெனரல் ஜகத் டயஸ் தேறி வருகிறார்

jegath-dias.jpgஹவ்லொக் டவுனில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதியும், ஜேர்மன் நாட்டுக்கான புதிய இலங் கைத் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தற்பொழுது தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப் பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்கம் தெரிவித்தார்.

இந்த வாகன விபத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டொக்டர், அவரது வலது கால் நேற்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜகத் டயஸ் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

ஹவ்லொக் டவுன், பொலிஸ் மைதானத்திற்கு அருகிலு ள்ள வீதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் காருடன் வான் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்தது.

இந்த சம்பவத்தில் காரில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரலும் வானில் சென்ற மூவரும் காயமடைந்தனர். மேஜர் ஜெனரலின் வலது காலில் பலத்த காயம் ஏற் பட்டது.