அரசாங்கத்தின் எந்த பதவிகளையும் பொறுப்பேற்பதில்லையென்று தான் கொடுத்த உறுதிமொழியை மீளப்பெறுவதற்காக திறைசேரியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.வி. ஜயசுந்தர சமர்ப்பித்த மனுவை ஏற்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முடிவு செய்தது. இது தொடர்பான விசாரணை ஓகஸ்ட் 3ம் திகதி எடுக்கப்படவுள்ளது.
கலாநிதி ஜயசுந்தரவின் மனு தொடர்பாக நேற்று ஆராய்ந்த உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பும்படி பணிப்புரை விடுத்தது. ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கலாநிதி ஜயசுந்தர சார்பில் ஆஜரானார்.
அரசாங்கத்தில் எந்தவித பதவிகளையும் ஏற்பதில்லையென திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.வி. ஜயசுந்தர 2008ம் ஆண்டு ஒக்டோபர் 16ம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கியிருந்தார். கலாநிதி ஜயசுந்தர தனது மனுவில் கூறியுள்ளதாவது;
தேசிய நலனைக் கருத்தில் கொண்டு திறைசேரி, மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளராக தன்னை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். என்றாலும் லங்கா மரையன் சேர்விஸ் லிமிட் நிறுவனம் தொடர்பான வழக்கொன்றால் அதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆகவே தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழியை மீளப்பெற ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நியமிக்கலாம். அந்த நியமனம் அமைச்சரவை கலைக்கப்படும் வரையில் செல்லும்படியாகும்.