கதிர் காமத்தில் இம்மாதம் நடைபெறும் வருடாந்த எஸல பெரகரவில் கலந்துகொள்ளச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி பஸ் – ரயில் இணைப்புச் சேவையொன்றை நடாத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இம்மாதம் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் இந்த இணைப்புச் சேவையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரையோர ரயில் சேவையைப் பயன்படுத்துவோருக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கதிர்காமம் வரையில் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக ரயில் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கதிர்காமம் செல்வதற்கான விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
July
July
எகிப்து செல்வதற்காக தயாராகியிருந்த புலி பயங்கரவாதிகள் இருவரும் அவர்களுடன் இருந்த இன்னுமொருவரும் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (16) கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் எகிப்து நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றுடனேயே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்தும் மற்றையவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அணிசேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்விருவரும் எகிப்து செல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டுமெனவும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களென்றும் இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் பலாலி ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்டவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்கயின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாண பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது.
கடல் வழியைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்தார். கடற்படையை நவீன மயப்படுத்தி மேலும் பலப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களினதும், இளைஞர்களினதும் மத்தியில் கடற்துறை சார்ந்த ஆர்வத்தையும், அறிவையும் மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், எமது நாட்டில் கடல்துறைசார் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை கடற்படையின் 16வது தளபதியாக புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க கடற்படைத் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
கடற்படைத் தளபதி இங்கு மேலும் உரையாற்றுகையில், எமது நாட்டில் இடம்பெற்று வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டி நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் பூரண பங்களிப்புக்களை வழங்கினோம். புலிகளுக்கான கடல்வழி விநியோகங்களை முற்றாக் கட்டுப்படுத்தி ஆயுதக் கப்பல்களை தாக்கியழித்து தப்பிச் செல்வதை தடுக்கும் விடயத்தில் கடற்படையினர் சாதனை படைத்தனர்.
தற்பொழுது பயங்கரவாதம் பூரணமாக தோற்கடிக்கப்பட்டுள்ளதால் கடற்பரப்பில் மாத்திரமின்றி நாடு முழுவதிலும் சிறந்ததும் அமைதியானதுமான சூழல் காணப்படுகின்றது. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் முப்படைகளினதும் அர்ப்பணிப்பால் ஏற்பட்டதாகும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளமையினால் நாடு முழுவதிலும் இருந்த மீன்பிடி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படுகிறது.
தற்பொழுது நாளுக்குநாள் மீன்பிடித்துறை மேம்பட்டு வருகின்றது. கடற்படையை மேலும் நவீன மயப்படுத்தவுள்ளதுடன் கடற்படை வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வளங்கவுள்ளோம். கடற்படையை மேம்படுத்த மிக நீண்ட கால பாரிய திட்டங்களை தீட்ட திட்டமிட்டுள்ளேன்.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் கடற்படையின் கப்பல்களை துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்க முடியாது. எமது கடமை அத்துடன் முடிந்து விடப்போவதில்லை. ஆழ் கடலிலும், நடுக்கடலிலும் கரையோரப் பகுதிகளிலும் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் கடற்படையினரும் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போதிலும் யார் கடலுக்குச் செல்கின்றார்கள்; யார் கரைக்கு மீண்டும் திரும்புகின்றார்கள் என்பதை கண்காணிக்கும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன் மூலம், சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்வதையும், ஏனைய நடவடிக்கைகள் உருவாகுவதையும் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தவிர்க்க முடியும். ஆரம்ப காலத்தில் கடலில் ஒரு படகு சென்றால் அது தீவிரவாதிகளின் கப்பலா, படகா என்ற சந்தேகம் எமக்கும் மீனவர்களுக்கும் ஏற்படும். தற்பொழுது அந்த நிலைமை மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றன.
200 கடல்மைல் பிரதேசத்திலுள்ள சகல வளங்களும் எமக்குச் சொந்தமானதாகும். தற்பொழுது அது 300 கடல்மை தொலைவாக அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு எமது தேவைக்கேற்ப கப்பல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கப்பல் இருக்கும் பட்சத்தில் கடற்படைத்துறை பூரணத்துவமடையும். தற்பொழுது எம்மிடம் அந்தக் கப்பல் இருந்த போதிலும் மேலதிக கப்பல் தேவைக்கேற்ப கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விமானத் தாங்கி கப்பல் தற்பொழுது எமது உடனடி தேவையல்ல. ஆனால், எதிர்காலத்தில் அது பற்றி கூடிய கவனம் செலுத்தப்படலாம். தற்போதைக்கு விமானப்படையின் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்பொழுது எமக்குள்ள பொறுப்புக்களை விட எதிர்காலத்தில் எண்ணெய், அகழ்வு வாயு தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் எமது பங்களிப்பு மேலும் அதிகமாக தேவைப்படலாம் என்றார்.நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் முடியுமான சகல ஒத்துழைப்புகளை கடற்படை முழுமையாக வழங்கும் என்று தெரிவித்த அவர், தன்னை இந்த உயர் பதவிக்கு நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பட்டார்.
குருநாகல் மாவட்டத்தின் அம்பம்பொல மற்றும் குகுலாவ பிரதேசங்களில் நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 110 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 12.50 மணியளவில் வீசிய இந்தக் காற்று காரணமாக 110 வீடுகள், வைத்தியசாலை, நீர்வியோகம் மற்றும் பிரதான மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கையில் தற்பொழுது வடமேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காணப்படுவதாகவும் இந்தக் காலகட்டத்தில் திடீரென ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும் சுழல் காற்று காரணமாக இது போன்ற சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையப் பணிப்பாளர் எஸ். எச். காரியவசம் தெரிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பலபாகங்களில் திடீரென இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களும் திடீரென ஏற்படும் மாற்றத்தினால் சுழல் காற்று அவ்வப்போது உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்த அவர் பெரும் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
நேற்று அதிகாலை அம்பம்பொல மற்றும் குகுலாவ பிரதேசங்களில் திடீரென வீசிய காற்று சுழல் காற்றாக மாறி சுமார் 110 வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் அந்தப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலை, நீர் விநியோகங்கள் மற்றும் பிரதான மின் இணைப்புகளிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை நேற்று முன்தினம் காலை 6.30 சிலாபம் பிரதேசத்திலும் சுழல்காற்று வீசியுள்ளதாக தெரிவித்த காலநிலை அவதான நிலையம், அந்தப் பிரதேசத்திலுள்ள 50 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்தது.
பொது நலவாய நாட்டுத் தலைவர்களுடைய முதல் பெண்மணிகள் மாநாடு நேற்று முன்தினம் (15) எகிப்தில் ஆரம்பமானது. இலங்கை சார்பாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இந்த மாநாட்டில் பங்குபற்றினார். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பாரியார்களின் மாநாடு நடைபெற்றது. பொதுநலவாய நாட்டுப் பெண்களின் நலன் குறித்தும் உலக பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதப் பிரச்சினை, பெண்கள் மீதான அடக்குமுறை, சமூகப் பிரச்சினைகள் என்பவற்றில் பெண்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு உரையாற்றிய முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ: 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பமானது முதல் பல மோசமான சவால்களுக்கு முகம்கொடுக்க அங்கத்துவ நாடுகளுக்கு நேரிட்டதாகக் கூறினார்.
பொருளாதார, நிதி நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, உணவு நெருக்கடி, வரட்சி, சூறாவளி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இவற்றினால் பெண்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்த இந்த மாநாட்டில் உலகத் தலைவிகள் இணக்கப்பாட்டுக்கு வந்தது குறித்து பாராட்டு தெரிவித்த சிரந்தி ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மேற்படி பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தத்திற்கு முகம்கொடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் பெண் அமைப்புகள் முக்கிய பங்காற்றின. ஜனாதிபதி நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்துள்ள நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களையும் யுத்த பயிற்சி வழங்கப்பட்ட சிறுவர்களையும் புனரமைக்கவும் கல்வி புகட்டவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்கென ‘சிரிலிய செவன’ பாதுகாப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனூடாக அவர்களுக்கு கல்வி அறிவு வழங்கவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் உள்ளதாகவும் சொன்னார். மேற்படி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது குறித்து சிரந்தி ராஜபக்ஷ எகிப்திய ஜனாதிபதியின் பாரியாருக்கு நன்றி தெரிவித்தார்.
புலி களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கந்தளாய் சேருவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் இளைஞர்கள் என்று தெரிவித்த அவர் கையடக்கத் தொலைபேசி, கணனி உட்பட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தங்களது கையடக்கத் தொலைபேசியில் புலிகளின் கீதங்களை பதிவு செய்துள்ளதுடன் புலிகள் தொடர்பான ஆவணங்களை கணனியில் வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்று 16ம்திகதி வியாழக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதி தொடங்கி புளொட் அமைப்பின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி வருடாவருடம் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த வகையில் வீரமக்கள் தினம் இடம்பெறும் தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் அஞ்சலிக் கூட்டங்களைத் தவிர புளொட் அமைப்பினரால் சிரமதானம், இரத்ததானம், அன்னதானம், தண்ணீர் பந்தல், நலன்புரி நடவடிக்கை என்பனவும் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 20வருட காலமாக மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தினத்தினை அனுஸ்டிப்பது மாத்திரமன்றி சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியருக்கான போட்டிப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி மாணவ மாணவியரை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றது. சுவிஸ்வாழ் புலம்பெயர் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
புளொட் அமைப்பினரால் ஜூலை 13முதல் ஜூலை 16வரை அனுஸ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் காரியாலயங்களிலும், கிளைக் காரியாலயங்களிலும் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 13ம் திகதிமுதல் இன்று 16ம் திகதிவரை நடைபெற்றுள்ளது. இந்த வகையில் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயத்திலும் கடந்த 13ம் திகதிமுதல் 16ம் திகதியான இன்றுவரையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தது.
வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான இன்றும் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு விசேட பூசை வழிபாடு இன்றுகாலை 8.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு புளொட் தலைமைக் காரியாலயத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் வீரமக்கள் தின சுவரொட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது.
கொட்டதெனிய கொள்ளைச் சம்ப வம் தொடர்பாக விசா ரணை நடத்துவதற்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.
சிறைச்சாலையிருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு இப்பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பிருப்ப தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே இக் கொள்ளையை திட்டமிடுவதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டிருக்க வேண்டு மெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்படி தகவல்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
அதேவேளை, பணத்தை வான் ஒன்றில் கொழும்புக்கு எடுத்து வந்த ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியிலுள்ள இலக்கங்கள் குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.
தப்பியோட முயற்சித்தவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்தும் மயக்க மருந்து, மிளகாய்த்தூள் பொட்டலம் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
கொட்டதெனியவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இப்பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலில் இருந்து கொழும்புக்கு இரு நிறுவனங்களின் 10 கோடி ரூபா பணம் வாகனமொன்றில் எடுத்து வரப்பட்டபோதே திட்டமிட்டகொள்ளைக் கும்பல் இதனை ஆயுதமுனையில் செய்துள்ளது. அப்போது, அவ்வழியாக பொலிஸ் வாகனமொன்று வந்துள்ளது. அதனைக் கண்டதும் இரு கொள்ளையர்கள் ஒன்றரைக்கோடி ரூபா பணத்தைக் கொண்ட பொதியை எடுத்துக்கொண்டு வாகனமொன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியபோது கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஏனைய நால்வரும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றுள்ளனர்.
பொலிஸார் இந்நால்வரையும் சுமார் 8 1/2 கோடி ரூபா பணத்துடன் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நிறுவனத்துக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் கொட்டதெனிய பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழ்வோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் பதினேழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 6242 பேர் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியதையடுத்து இவர்களுக்கு கொத்தணி வாக்குச்சாவடிகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் வாழும் 324 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டக்குளி சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பவிலியன் ஒவ் பிளசரணங்கர விளையாட்டு மைதானத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கம்பஹா மாவட்டத்தில் வாழும் 849 வாக்காளர்கள் வாக்களிக்க சென்பீற்றர்ஸ் முஸ்லிம் மகாவித்தியாலயம், தளுவ கொட்டுவ சென் அன்ரனிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
களுத்துறை மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 320 பேருக்கு கெனமுல்ல ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும். புத்தளம் மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 4550 பேருக்கு இம் மாவட்டத்தில் ஏழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவர்களுக்கு புளிச்சங்குளம் சமத்பாறுக் மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா பாத்திமா தேசியபாடசாலை, தில்லையடி மகாவித்தியாலயம் பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலப்பிட்டிய அலக்ஸா தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் நூற்றி இருபது வாக்காளர்களுக்கு இங்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகொல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் சிறார் பாடசாலை, நச்சன்டுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
இதேவேளை, குடாநாட்டில் தென்மராட்சி கைதடி, கொடிகாமம் நலன்புரி நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும். வெளி மாவட்டங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களில் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும்.
யாழ். மாவட்டத்தில் யாழ். மாநர சபை வாக்காளர் வாக்களிக்க எழுபது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.
![]()
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.
குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.
பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.
காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )
வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.
இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.
இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.
சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.
இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.
இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.
இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.
யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )
இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார்.
வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.
ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.