02

02

கரும்புலிகளின் இருமுகாம், பெருந்தொகை ஆயுதங்கள் – விசுவமடுவில் மீட்பு

_army.jpgவிசுவமடு கரும்புலிகளின் பாரிய இரு முகாம்கள், புலிகளின் 12 சடலங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களைத் தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல்களில் இதுவரை காலமும் இவ்வளவு பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்படவில்லையெனவும், இதுவே முதல் தடவையென்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

விசுவமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 12 சடலங்களையும் பெருந்தொகை ஆயுதங்களுடன் கரும்புலிகளது இரண்டு பாரிய முகாம்களையும் கைப்பற்றியுள்ளனர். கரும்புலிகளது முகாம்களுள் ஒன்று நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது இரண்டு மாடிகளைக் கொண்டதுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் மாளிகை போன்று அமைக்கப் பட்டிருந்ததாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில் கணனிகள் உட்பட பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் நவீன முறையில் அமைக்கப்பட்ட குளியலறை, சமையலறை என்பனவும் இருந்துள்ளன. அத்துடன் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுடன் உடற்பயிற்சி நிலையமும் இருந்துள்ளது. சத்தம் வெளியில் கேட்காதவாறான ஜெனரேட்டர் ஒன்றிலிருந்தே இந்த முகாமுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இங்கு தங்கியிருந்திருப்பாரென சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் ஊடக நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

இவையனைத்தையும் இராணுவத்தின் 58வது படையணியினரே கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கரும்புலிகளின் மற்றைய பாரிய முகாமிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

121 மில்லிமீற்றர் கொண்ட மூன்று நவீன எறிகணைகள், 18 ரி – 56 ரக துப்பாக்கிகள், 05 எம். பி. எம். ஜி, ஒரு ஸ்நிப்பர், 08 செயலிழக்கக்கூடிய ஆர். பி. ஜி.கள், 02 டேர்மோ பெரிக் ஆயுதங்கள், 20 பிஸ்டல் துப்பாக்கிகள், மூன்று ஆர். பி. ஜி. ஆயுதங்கள், 59 கிரனேற் கைக்குண்டுகள், 07 கிளேமோர்கள், ஒரு நவீன மாற்றங் களுடனான கிளேமோர், ஒரு ட்ரைபொட், புலிகளினால் உபயோகிக்கப்படும் ‘அருள்’ எனப்படும் 35 குண்டுகள், 100 டெட்ட னேட்டர்கள், ஒரு ரேடியோ செட், 8.9 வகையான மூவாயிரம் ரவைகள், 35 கேஸ் குண்டுகள், 08 ஹெல்மட், 02 80 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02, 82 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 35 இடைப்பையுடன் கூடிய பட்டிகள், பெருந்தொகையான கரும்புலிகளின் ஆடைகள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

பி.எம்.ஐ.சி.எச் பிரதேசம் நள்ளிரவு முதல் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம

ranjith-gunasekara.jpgஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாட்டில் மூன்றாவது தடவையாக நடத்தப்படும் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கவுள்ள ஐந்து நாள் அபிவிருத்திக் கண்காட்சிக்காக மண்டபம் உள்ளிட்ட அப்பகுதி முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களமும் முப்படையினரும் இணைந்து அதிதீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் சேவையாற்றி வரும் பொலிஸாருக்கும் மேலதிகமாக வெளியிடங்களிலிருக்கும் 1500 பொலிஸார் கண்காட்சி முடிவடையும் வரையான காலப்பகுதியில் கொழும்பில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை கருத்திற் கொண்டு பொலிஸாரும் முப்படையினரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே நான்கு கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கண்காட்சிக்குப் பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் இளங்ககோன் தெரிவித்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென விநியோகிக்கப்பட்ட விசேட அனுமதி அட்டைகளை கொண்டவர்கள் மட்டுமே இப்பகுதியினூடாக பிரவேசிக்க முடியும்.

அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாகவும் ஏனையோருக்கு கறுவாத் தோட்டப் பொலிஸாரினாலும் இவ்விசேட அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. பாதுகாப்பை கருத்திற்கொண்டு, கனத்தை சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, க்ரேகரி வீதியிலிருந்து க்ரேகரி எவன்யூ, க்ரேகரி வீதியிலிருந்து விஜேராம மாவத்தை, மவுட்லண்ட் வீதியிலிருந்து வித்யாமாவத்தை, பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, புள்ளர்ஸ் லேனில் இருந்து புள்ளர்ஸ் வீதி, மலலசேக்கர மாவத்தையிலிருந்து சரண வீதி சந்தி, ஜாவத்தை வீதியிலிருந்து புள்ளர்ஸ் வீதி வரையான பகுதிகள் எதிர்வரும் 04ம் திகதி முதல் 08ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்பதால் பொதுமக்கள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

பிரவேசத்துக்கான விசேட அனுமதி அட்டைகள் வழங்கப்பட்ட வாகனங்கள் சி. ஆர். மற்றும் எப்.சி. இலங்கை மன்றக் கல்லூரி வளாகம், மெயிட்லண்ட் பிளேஸ் ஆகிய இடங்களில் தமது வாகனங்களைத் தரித்து வைக்க முடியும். வெளியிடங்களிலிருந்து பஸ் மூலம் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள் தமது பஸ்களை விகாரமாதேவி பூங்காவுக்கு வெளியில் தரித்து வைக்க முடியும். எனையோர் ரஷ்ஷியன் பார்க், சரண மாவத்தை ஆகிய இடங்களில் வாகனங்களை தரிப்பிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளியேன் – ஜனாதிபதி

mahi-raja.jpg“ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். இப்படியான செயலுக்கு இற்றைவரை காரணமாக இருந்தவர்கள் விரைவில் கடலுக்குள் தூக்கிவிடுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதேநேரம்! “ஒரு இனம் இன்னொரு இனத்தை பணயக் கைதிகளாக வைத்திருக்கவும் நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன் தினம் முஸ்லிம்கள் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

தேர்தல்வரும் காலங்களில் எல்லாம் ஐ. தே. க. வினர் முஸ்லிம் மக்கள் தமது சமய கோட்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது வேறொரு அரசாங்கம் பதவிக்கு வந்தால் அவர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் அனைத்தையும் பிரித்து விடுவார்கள் என்ற கோசம் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்டதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முஸ்லிம்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவர்களது சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நான் நன்கு அறிந்து மதிப்பவன் என்ற வகையில் இவ்வாறு தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் உருவாக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த அனுபவம் எனக்குண்டு. அவர்கள் படும்துயரத்தையும் அண்மையில் நான் கண்டு அதற்கான எனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தேன். பலஸ்தீனத்தைப் போன்றே காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவத்தை எமக்கு இலகுவில் மறக்க முடியாது. பல்லாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு சொப்பிங்பேக்குடன் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வாழ்ந்தவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருந்து வருகின்றனர். இவர்களை நாம் மீண்டும் அவர்கள் வாழ்ந்த சொந்த மண்ணுக்கு திருப்பி அனுப்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்குரியதாகும். கிழக்கை நாங்கள் மீட்ட போது பல்லாண்டுகளாக அனைத்தின மக்களும் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்திக்காட்டினோம். இதனால் அங்கு இருக்கும் அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாக தமது மத வழிபாடுகளுக்குச் சென்று வர வழி செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. தே. க. தலைவர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நாற்பதாயிரம் முஸ்லிம்கள் புளிகளினால் மூதூரில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது நாம் அவர்களை நாற்பது நாட்களுக்குள் மீண்டும் அவர்களை சொந்த மண்ணில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினோம். இதன் பொருட்டு எம்மோடு உழைத்த அப்பிரதேசத்து அனைத்து முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் சேர்ந்து இந்த பணிகளை முன்னெடுத்தோம்.

புலிகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்கள் வெட்டப்பட்டும் கொத்தப்பட்டும் சுடப்பட்டும் உயிருக்காக இரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் எவ்வாறுதான் கல்வியைத் தொடர முடியும். மாற்றமாக இப்பிரதேசத்தில் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியதன் பொருட்டு இன்று சர்வதேச மட்டத்தில் பாராட்டக் கூடிய வகையில் கல்வியில் கிண்ணியா மாணவி ஒருவர் கலைப்பிரிவு பொதுப் பரீட்சையில் முதல் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது அரசாங்கம் அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளையும் வைத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ஈரான் தேசத்தின் ஜனாதிபதி அஹமதி நிஜாத்துடன் நான் உரையாடிய வேளையில் எமக்கு நாட்டுக்குத் தேவையான பெற்றோலியத்தை வட்டியில்லாமல் 7 மாதங்களுக்கு அதனைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்திருந்தார். அன்று அத்தகையதோர் உதவி எமக்குக் கிடைக்காது போயிருந்தால் நாம் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டிருப்போம். இதே போன்று உமா ஓயாவிற்கு மேலாக பாலமொன்றை நிர்மாணிக்க அந்தநாடு எமக்கு உதவி செய்ததையும், மேலும் கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நாம் 60,000 மில்லியன் ரூபாவை நாங்கள் ஒதுக்கி இப்பொழுது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீல. சு. கட்சியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்தை அக்கட்சி கல்வி அமைச்சராக்கியது. இதன் ஊடாக முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் பாரிய மறுமலர்ச்சியொன்று ஏற்பட்டமையை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய ஒரு பதவி வெற்றிடத்தை பெறுவதற்கு இப்பிரதேச மக்கள் தயாராக வேண்டும். கண்டி நகரில் முஸ்லிம் ஆண்களுக்கென சகல வளமும் கொண்ட ஆண்கள் பாடசாலையொன்றின் தேவையை நான் உணர்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் இருக்கின்றார். இதற்கான அனைத்து பிரயத்தனங்களையும் அரசு மேற்கொள்ளும்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதே வேளையில் வடக்கில் உள்ள மாணவர்கள் புத்தகப் பையில் துப்பாக்கிகளையும் கழுத்தில் சயனைட்டையும் மாட்டிக் கொண்டு புலிகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் நாங்கள் முல்லைத்தீவை மீட்டதும் அப்பிரதேச பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் அவலங்களை விரைவில் மாற்றிவிடுவோம்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

people-jaffna.jpgவன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ். குடாநாட்டு மக்கள் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். யாழ். குடாநாட்டின் 05 கல்வி வலயங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

யாழ். கச்சேரிக்கருகில் நேற்றுக் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணியில் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள், வர்த்தகர், மதகுருமார், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களென அனைத்து இன மக்களும் கலந்துகொண்டனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிப்படையவில்லை. வழமைபோல் கடைகள் யாவும் திறக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மூன்று மகஜர்களை கையளித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமாறு கோரி முதலாவது மகஜர் யாழ். அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று மக்கள் ஐ. நா. செயலாளரிடம் கையளிக்குமாறு கோரி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியிடம் இரண்டாவது மகஜரை கையளித்தனர். இறுதியாக இந்தியப் பிரதமரிடம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யு. என். டி. எச். ஆர். பிரதிநிதியிடம் மூன்றாவது மகஜர் கையளிக்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டோர், ‘அப்பாவி சிவிலியன்கள் விடுவிக்கப்பட வேண்டும்’, ‘சிவிலியன்களை விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என பல்வேறு கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு – தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது

assembly-tamil-nadu.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மனிக்பாம்’ பாடசாலை இன்று ஆரம்பம்

school2701.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு இன்று இரு தற்காலிக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்கள் இங்கு மீண்டும் தமது கல்வியை தொடர உள்ளனர்.

மனிக்பாமில் இரு தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்கள், சீருடைத் துணிகள், பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கு தேவையான தளபா டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

இரு பாடசாலைகளும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வவுனியா கல்வி வலயம் திட்ட மிட்டுள்ளது.

இதே வேளை வன்னியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்பதற்கென புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அரச அதிபர் கூறினார். எதிர்வரும் தினங்களில் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வர உள்ள மாணவர்களுக்கும் மனிக்பாம் பகுதியில் கல்வி கற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

வன்னியில் இருந்து மேலும் 85 ஆயிரம் மாணவர்களும் 2500 ஆசிரியர்களும் வவுனியாவுக்கு வருவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

சுதந்திர தின பிரதான விழா காலி முகத்திடலில் 4 ஆம் திகதி

flag_logo_sl.jpg61வது சுதந்திர தின விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 4ஆம் திகதி காலை காலி முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது.  ‘சமாதானத்தினூடாக சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலுக்கு வருகை தரவுள்ளதோடு பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்படுவதோடு விழா ஆரம்பமாகும். முப்படையினரால் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.

சுதந்திர தின விழாவில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை ‘பேண்ட்’ வாத்தியங்கள் என்பனவும் இடம்பெற உள்ளதோடு விமானப் படை மற்றும் கடற்படையினரின் கண்காட்சிகளும் இடம்பெறவுள்ளன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் முப்படையினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகள் 30 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழா மற்றும் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி என்பனவற்றை முன்னிட்டு கொழும்பிலுள்ள 20 பாடசாலைகள் 28 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி 4 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியின் முதல் நாள் பாதுகாப்பு தினமாகவும் இரண்டாவது நாள் கலாசார தினமாகவும் மூன்றாவது நாள் நலன்புரி தினமாகவும் நான்காவது நாள் அபிவிருத்தி தினமாகவும் இறுதிநாள் ஊடகவியலாளர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு கொழும்பில்

_hindi_victory.jpgகிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘விக்டரி’ என்னும் இந்தி திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு வெள்ளிகிழமையன்று கொழும்பில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 60 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த திரைப்படத்தில் தோன்றியுள்ளனர். இந்த திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் படத்தில் தோன்றிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

‘கூட்டமைப்பு எம்.பிகள் தலைமறைவாகும் நிலை’- சங்கரி: ‘தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இனியும் தொடரும்’ – சம்பந்தன்: ஐ. நா. உரிய முறையில் கடமைகளை மேற்கொள்ளவில்லை’ – ஜெயனந்தமூர்த்தி

sangari.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:- புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுக ளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது. புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்.
அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் – இரா.சம்பந்தன்

sampthan.jpg“விடுதலைப்புலிகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால்,விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும், இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்’. “லங்காதீப’ பத்திரிகைக்கு என்னைப் பேட்டிகண்ட செய்தியாளர் “விடுதலைப் புலிகள் தோல்வி கண்டுள்ளார்கள். இனி உங்கள் நிலை என்ன’ என்று கேட்டார். அதற்கு இவ்வாறே பதிலளித்தேன் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; “நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் காணி உரிமைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பிரபாகரன் பிறப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இலங்கைத் தமிழரின் அரசியல் மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுவந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் இந்த உரிமைப் போராட்டம் இனியும் தொடரும். இதில் மாற்றம் இல்லை’ என்றார்.

பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐ. நா. அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை – ஜெயனந்தமூர்த்தி

jeyanathamoorthy.jpgவன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழர் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காணப்படும் சர்வதேச அதிகாரம் மற்றும் பொறுப்புணர்ச்சி உரிய முறையில் வெளியிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட போதிலும் அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத ஓர் போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனச்சுத்திரிகப்பு அரசாங்கமொன்றின் கைப்பொம்மையாக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வன்னிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  எனினும், முக்கிய சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது தார்மீகப் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த இனச்சுத்திரிகரிப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச்சில்

ballot-box.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதியிலிருந்து 5 முதல் 7 வாரத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச் நடுப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார். மேல் மாகாண சபையின் பதவிக்காலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் மாகாண சபை கடந்த வாரம் கலைக்கப்பட்டது.