61வது சுதந்திர தின விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 4ஆம் திகதி காலை காலி முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது. ‘சமாதானத்தினூடாக சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலுக்கு வருகை தரவுள்ளதோடு பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்படுவதோடு விழா ஆரம்பமாகும். முப்படையினரால் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.
சுதந்திர தின விழாவில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை ‘பேண்ட்’ வாத்தியங்கள் என்பனவும் இடம்பெற உள்ளதோடு விமானப் படை மற்றும் கடற்படையினரின் கண்காட்சிகளும் இடம்பெறவுள்ளன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் முப்படையினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகள் 30 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழா மற்றும் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி என்பனவற்றை முன்னிட்டு கொழும்பிலுள்ள 20 பாடசாலைகள் 28 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி 4 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியின் முதல் நாள் பாதுகாப்பு தினமாகவும் இரண்டாவது நாள் கலாசார தினமாகவும் மூன்றாவது நாள் நலன்புரி தினமாகவும் நான்காவது நாள் அபிவிருத்தி தினமாகவும் இறுதிநாள் ஊடகவியலாளர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
palli
சுகந்திர தின விழாவுக்கு பாதுகாப்பு பலமாக தேவைபடுமாம். அப்பொ எதில் உங்களுக்கு சுகந்திரம் கிடைத்து விட்டதாக புலம்பல். அழுவதுக்கும்; சிரிப்பதுக்கும் கூட சுகந்திரமில்லாத நாடு இலங்கை.