ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாட்டில் மூன்றாவது தடவையாக நடத்தப்படும் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கவுள்ள ஐந்து நாள் அபிவிருத்திக் கண்காட்சிக்காக மண்டபம் உள்ளிட்ட அப்பகுதி முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களமும் முப்படையினரும் இணைந்து அதிதீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் சேவையாற்றி வரும் பொலிஸாருக்கும் மேலதிகமாக வெளியிடங்களிலிருக்கும் 1500 பொலிஸார் கண்காட்சி முடிவடையும் வரையான காலப்பகுதியில் கொழும்பில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை கருத்திற் கொண்டு பொலிஸாரும் முப்படையினரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே நான்கு கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கண்காட்சிக்குப் பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் இளங்ககோன் தெரிவித்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென விநியோகிக்கப்பட்ட விசேட அனுமதி அட்டைகளை கொண்டவர்கள் மட்டுமே இப்பகுதியினூடாக பிரவேசிக்க முடியும்.
அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாகவும் ஏனையோருக்கு கறுவாத் தோட்டப் பொலிஸாரினாலும் இவ்விசேட அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. பாதுகாப்பை கருத்திற்கொண்டு, கனத்தை சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, க்ரேகரி வீதியிலிருந்து க்ரேகரி எவன்யூ, க்ரேகரி வீதியிலிருந்து விஜேராம மாவத்தை, மவுட்லண்ட் வீதியிலிருந்து வித்யாமாவத்தை, பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, புள்ளர்ஸ் லேனில் இருந்து புள்ளர்ஸ் வீதி, மலலசேக்கர மாவத்தையிலிருந்து சரண வீதி சந்தி, ஜாவத்தை வீதியிலிருந்து புள்ளர்ஸ் வீதி வரையான பகுதிகள் எதிர்வரும் 04ம் திகதி முதல் 08ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்பதால் பொதுமக்கள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
பிரவேசத்துக்கான விசேட அனுமதி அட்டைகள் வழங்கப்பட்ட வாகனங்கள் சி. ஆர். மற்றும் எப்.சி. இலங்கை மன்றக் கல்லூரி வளாகம், மெயிட்லண்ட் பிளேஸ் ஆகிய இடங்களில் தமது வாகனங்களைத் தரித்து வைக்க முடியும். வெளியிடங்களிலிருந்து பஸ் மூலம் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள் தமது பஸ்களை விகாரமாதேவி பூங்காவுக்கு வெளியில் தரித்து வைக்க முடியும். எனையோர் ரஷ்ஷியன் பார்க், சரண மாவத்தை ஆகிய இடங்களில் வாகனங்களை தரிப்பிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.