February

February

வல்லுறவுக்குட்படுத்தியவரின் நாக்கை துண்டாடிய யுவதி

நீர்கொழும்பு தாகொன்ன பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற ஒருவர், அங்கு தனிமையிலிருந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய போது அந்த யுவதி அவரது நாக்கைக் கடித்து துண்டாடியுள்ளார். இதனையடுத்து மறுநாள் அவர் பொலிஸாரால் கைது செய்யபட்டு நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தாகொன்ன பிரண்ஷிப் கார்டன் பகுதியிலுள்ள தனது சகோதரனின் வீட்டுக்கு வந்த போதே இந்த யுவதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. வீட்டிலிருந்துவர்கள் எல்லோரும் வெளியே சென்று விடவே இந்த யுவதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவர் இந்த யுவதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் கொள்ளையிட முயற்சித்துள்ளார். எனினும் அவருக்கு எதுவுமே அகப்படவில்லை. இதையடுத்து அவன் அந்த யுவதியை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளான். இதன்போது அந்த யுவதி அவனது நாக்கை கடித்துத்துண்டாடி அதனை வெளியே துப்பிவிட்டார். நாக்கு இரண்டாகத் துண்டாடப்பட்ட ஆத்திரத்தில் அவன் அந்த யுவதியை கத்தியால் குத்த முற்பட்ட போது அந்த யுவதிக்கு கையில் காயங்களேற்பட்டுள்ளன.

இதற்கிடையில் அந்த யுவதி எழுப்பிய அவலக் குரல் கேட்டு அயலவர்கள் அங்கு வரவே துண்டாகிப்போன நாக்கையும் விட்டு விட்டு அவன் தப்பியோடி விட்டான். பின்னர் ஒருவாறு மினுவாங்கொடை ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவன் விபத்தில் நாக்கு துண்டாடப்பட்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளான். எனினும் அவர்கள் அவனை மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து அவன் தப்பி வீடு சென்ற போது ஞாயிற்றுக்கிழமை வியாங்கொடையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் துண்டாடப்பட்ட அவரது நாக்கையும் எடுத்து வந்த பொலிஸார் அவரை மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது

யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதை நிறுத்துமாறு ஐ.தே.கட்சி கோருகின்றது

logo_unp.jpgஐ.தே.கட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் யுத்தத்தினை நிறுத்துமாறு கேட்கவில்லை. யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதையே எதிர்க்கின்றோம். இவ்வாறு தெவித்தார் மத்திய மாகாண ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க. குண்டசாலைத் தொகுதியில் தம்பராவவில் நடைபெற்ற ஐ.தே.கட்சிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் எஸ்.பி. திஸாநாயக்க தமதுரையில்; மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வெற்றி பெற வேண்டும் மக்கள் சக்தி வெற்றி பெற வேண்டும். மத்திய மாகாணத்தில் தொழிலற்ற இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களின் வருமானத்தினை அதிகரிக்க வேண்டும். இளைஞர் சக்தியை நாட்டின் மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த மாகாணத்தினை ஆட்சி செய்தவர்கள் எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டு மூலதனம் பெறப்பட்டு உற்பத்திகள் அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் சக்தியை அதிகரித்தால் வேலைவாய்ப்பினை, வருமானத்தினை அதிகரிக்க முடியும்.

சகல மின் உற்பத்தி நிலையங்களும் மலையகத்திலிருந்த போதும் இதனால் ஈட்டப்படும் வருமானம் மலையகத்திற்குச் செலவிடப்படுவதில்லை. சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழர் பெருந்தோட்ட வருமானத்தினை மட்டும் நம்பி வாழமுடியாது. அவர்களிடம் வருமானத்தினை பெறக்கூடிய கைத்தொழில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அரசிடம் அதற்கான திட்டம் இல்லை. அரசோடு இணைந்துள்வர்களுக்கும் அதற்கான அறிவும் ஆற்றலும் இல்லை. எனவே தான் மலையகத்தில் இ.தொ.கா., ம.ம.மு. ஆகிவற்றை புறக்கணித்த தமிழர்கள் ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றனர். ஐ.தே.க.வை நீண்ட காலமாக ஆதரிக்கும் முஸ்லிம்களைக் கூட ஐ.தே.க.வை விட்டு பிரிக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கி எம்மிடமேயுள்ளது. மலையகத் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக் கொள்வோர் இம்முறை நிராகரிக்கப்படுவர். அரசாங்கம் கள்ளவாக்குகள் போட நினைக்கிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும் – பசில்

basil.jpgநாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும். அடுத்துவரும் காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிங்கிரிய தேர்தல் தொகுதிக்குட்பட்ட கல்வெவ பிரதேசத்தில் நூறு இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:-

கடந்த மூன்று வருடங்களில் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தத்திற்கு மத்தியில், மத்திய அரசினாலும், மாகாண அரசுகளினாலும் பாரியய அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கடந்த கால அரசுகள் மேற்கொண்ட தவறான வழி நடத்தல்களால் நாட்டில் யுத்த நிலைமை மோசமடைந்தது. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகள் பலம் பெற்றனர். வடக்கில் எமது படையினரால் கண்டுபிடிக்கப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் இவற்றை நிரூபிக்கின்றன.

இந்நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருட வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியுத்த செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தம் முடிவடைந்து வருவதால் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படுவதைப் போன்று வட மாகாணத்திற்கும் விஷேடமான அபிவிருத்தி திட்டம் ஒன்று வகுக்கப்படும். அத்துடன் நாடு முழுவதற்கும் துரித அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு வளங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்து வதால் உற்பத்தி, தொழில் வாய்ப்பு துறைகளில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும் என அரசு எதிர்பார்க்கின்றது. கடந்த மூன்று வருட காலத்தில் யுத்த நிலைமைக்கு மத்தியிலும் அரசு மேற்கொண்ட அபிவிருத்தி முயற்சிகள் காரணமாக எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளதை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமையை அடுத்த சில வருடங்களில் மேலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது என்று கூறினார்.

அரச படைகளின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் எதிரமைப்புகளின் பேச்சாளராக ரவூப் ஹக்கீம் – றிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

risard.jpgஜனாதி பதியின் 4 வருடகால ஆட்சியில் வடக்கில் பெரும் நிலப்பரப்பினை மீட்டு அரசபடைகள் சரித்திரத்தில் தடம் பதித்துள்ளன. இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடும் எதிரமைப்புகளின் பேச்சாளராக ரவூப் ஹக்கீம் மாறியுள்ளார் என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் கடற்றொழில் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்புச் செயலாளராக எஸ். எஹ்யான் நியமிக்கபபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தில்லையடியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்;

ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் உருவாக்கமானது எமது நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகத்தின் விடிவுக்காகவே இருக்க வேண்டும் என்பதில் அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மிகவும் உறுதியாக இருந்தார். துரதிர்ஷ்டவசம், இன்று ரவூப் ஹக்கீம் இந்த முஸ்லிம் காங்கிரஸை, ஐ.தே.கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்து துரோகத்தனத்தை செய்து விட்டார். இந்த துரோகத் தனத்தின் மூலம் முஸ்லிம் சமூகமும் தற்போதைய அரசுக்கு எதிரானவர்கள் என்ற மாயையையும் பொய்ப் பிரசாரங்களையும் சில ஊடகங்கள் மூலம் முன்னெடுக்க முனைகின்றார்.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் வாழும் சமூகங்கள் ஜனாதிபதியினை நன்றிப் பெருக்குடன் பாராட்டும் போது ரவூப் ஹக்கீம் மட்டும் ஜனாதிபதியை விமர்சிக்கின்றார். எதிர்க்கட்சியில் அமர்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடிமைகளாக, அபிவிருத்திகள் இல்லாத சமூகமாக வைத்துக் கொண்டு சுயநல அரசியல் இலாபங்களை மட்டும் வைத்துச் சிந்திக்கின்ற ஒருவராக ரவூப் ஹக்கீம் இருப்பது சமூகத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

18 தேர்தலில் தொடர்ந்து தோல்வி கண்ட ஐ.தே.கட்சியின் முஸ்லிம் பிரிவாக ஸ்ரீ.ல.மு.கா. இன்று மாறிவிட்டது. இம்முறையும் வடமேல்,மத்திய மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்து 19 ஆவது முறையும் மக்களினால் ஒதுக்கப்படும்.

தேசத்தை மீட்டு அதில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தை மேற்கொள்ளும் படையினருக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்கும் தேவைக்கும் உரிமைக்கும் எதிராகச் செயற்படும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்ட சமூகத்துக்குத் துரோகமிழைத்தவர்களாகவே வரலாற்றில் பதியப்படுவர். அதிலிருந்து அவர்களை மீட்கும் போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில் எக்கட்சியிலாவது இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிட ஹக்கீம் முன்வருவாரா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், அவரை எதிர்த்துப் போட்டியிடும் மனநிலையை தான் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சுப்ரமணியசாமி சந்தேகம்

muthukumar-30011.jpgஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்த் நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.

“விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யு எஸ் ஜரோப்பிய ஒன்றியம் யப்பான் நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள்”

BBC NEWS: 03 FEB2009

விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யுஎஸ், ஜரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு இந்த யுத்தத்தையும் மனித அவலத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படி கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் மிக குறைந்தளவிலான தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தமது இறுதி யுத்தத்தை செய்யும் இவ்வேளையில் இலங்கை அரசு இலகுவாக இராணுவரீதியாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ள இந்த வேளையில் இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது கடைசித் துண்டு நிலத்தில் உள்ள 250 000 மக்களையும் போராளிகளையும் மனித அவலங்களிலிருந்து தவிர்க்கும்படி கேட்டுள்ளது. இந்த வேண்டுகோளில் அந்தப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மக்களின் கவனத்திலேயே இந்த மேற்குறிப்பிட்ட நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் இந்த நாடுகள் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அரசினால் அளிக்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமபடியும் இலங்கைத் தமிழர்க்கான இறுதியான அரசியல்த்தீர்வை எட்டும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள ஒரே ஒரு மருத்துவமனை கடந்த சில தினங்களாக பல தடவைகள் மோட்டார் தாக்குதலுக்குள்ளாகி பலர் இறந்துள்ள நிலையிலேயே இந்த கூட்டறிக்கை வெளிவந்துள்ளது.

இக் கூட்டறிக்கையில் இரு தரப்பினரம் சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து செயற்ப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கு தாம் பொது மக்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விலகிப்போகும்படி கேட்டுக் கொண்டதாயும் அவர்கள் அப்படிபோக முடியாததிற்கு தாம் பொறுப்பில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் தொடர்ந்து குறுகிய வண்ணமே உள்ளது. ஆயுதபாணிகள் வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதும், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என யுஎஸ் ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இந்த கூட்டறிக்கையில் முன்னைய பேச்சுவார்த்தகைளில் நோர்வே மத்தியஸ்த்தம் வகித்து செயற்ப்பட்டபோதிலும் அரசுக்கும் – புலிகளுக்குமிடையிலான பேச்சு வார்த்தை பயனளிக்காது போனதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

china-pm.jpgகடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பாக்தாத் சென்றபோது அவர் மீது செய்தியாளர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் வீசிய சம்பவம் உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள் லண்டனில், சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், வென் ஒரு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனுமதி கொடுக்கலாம் என்று ஆவேசமாக கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். ஆனால் வென் ஜியாபோ மீது ஷூ படவில்லை. வென் ஜியாபோ இருந்த மேடைக்கு முன்பாகவே விழுந்து விட்டது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பம்பலப்பட்டி – மருதானை ரயில் சேவை நிறுத்தம் – இணைப்பு பஸ்சேவை ஆரம்பம்

train.jpgசுதந்திர தின பிரதான வைபவங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுவதை முன்னிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து மருதானை வரையிலான ரயில் சேவை நேற்று நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது.  இன்றும் நாளையும் இந்த புதிய நடைமுறை அமுலில் இருக்கும் என்று கொழும்பு பிராந்தியத்திற்கு பொறு பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் தென் பகுதிக்குச் செல்பவர்கள் பம்பலப்பிட்டி வரைக்கும், பம்பலப்பிட்டி யிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள் மருதானை வரைக்கும் பயணம் செய்ய தேவையான இணைப்பு பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அதே புகையிரத பயணச் சீட்டை வைத்துக் கொண்டே இந்த பஸ் வண்டியில் இலவமாக சென்று வரமுடியும் என்றும் தெரிவித்தார்.

ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் குண்டை வெடிக்கச் செய்வதாக மிரட்டியவர் கைது

tinakaran.jpgஇலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டிய வாலிபரை கடலூர் போலீசார் கைது செய்தனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்து மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஈழம் மலரட்டும், மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்து என்று கோஷமிட்டபடி கல்லூரியின் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அவரை மடக்கிபிடிக்க முயன்றனர். அப்போது அவர், என்னை பிடிக்காதீர்கள் வெடிகுண்டு வைத்துள்ளேன் வெடித்துவிடும் என்று கையில் மஞ்சள் நிறத்தில் இருந்த ரிமோட் போன்ற கருவியை காண்பித்து பயமுறுத்தியுள்ளார். இதையடுத்து அலுவலகத்துக்குள் இருந்த பேராசிரியர்களும், ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றான்

ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், கையில் வைத்திருந்தது ரேடியோ, டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்க பயன்படும் `மல்டி மீட்டர்’ என்றும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், மல்டிமீட்டர் கருவியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் டெய்லர் என்றும், கடலூருக்கு அருகே உள்ள ரெட்டிச்சாவடி கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் தினகரன் என்றும் தெரியவந்தது.

ரி.எம்.வி.பி. அமைப்பின்; உறுப்பினர் சுட்டுக்கொலை

pistal.jpg
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் செங்கலிடி எல்லையில் வைத்து நேற்றையதினம் காலை 8.30 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செங்கலடி நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த புத்திரசிகாமணி மோகனதாசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவர் நேற்றுக் காலை சைக்கிள் ஒன்றில் தனது வீடுநோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.