நீர்கொழும்பு தாகொன்ன பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற ஒருவர், அங்கு தனிமையிலிருந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய போது அந்த யுவதி அவரது நாக்கைக் கடித்து துண்டாடியுள்ளார். இதனையடுத்து மறுநாள் அவர் பொலிஸாரால் கைது செய்யபட்டு நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு தாகொன்ன பிரண்ஷிப் கார்டன் பகுதியிலுள்ள தனது சகோதரனின் வீட்டுக்கு வந்த போதே இந்த யுவதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. வீட்டிலிருந்துவர்கள் எல்லோரும் வெளியே சென்று விடவே இந்த யுவதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவர் இந்த யுவதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் கொள்ளையிட முயற்சித்துள்ளார். எனினும் அவருக்கு எதுவுமே அகப்படவில்லை. இதையடுத்து அவன் அந்த யுவதியை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளான். இதன்போது அந்த யுவதி அவனது நாக்கை கடித்துத்துண்டாடி அதனை வெளியே துப்பிவிட்டார். நாக்கு இரண்டாகத் துண்டாடப்பட்ட ஆத்திரத்தில் அவன் அந்த யுவதியை கத்தியால் குத்த முற்பட்ட போது அந்த யுவதிக்கு கையில் காயங்களேற்பட்டுள்ளன.
இதற்கிடையில் அந்த யுவதி எழுப்பிய அவலக் குரல் கேட்டு அயலவர்கள் அங்கு வரவே துண்டாகிப்போன நாக்கையும் விட்டு விட்டு அவன் தப்பியோடி விட்டான். பின்னர் ஒருவாறு மினுவாங்கொடை ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவன் விபத்தில் நாக்கு துண்டாடப்பட்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளான். எனினும் அவர்கள் அவனை மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கிருந்து அவன் தப்பி வீடு சென்ற போது ஞாயிற்றுக்கிழமை வியாங்கொடையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் துண்டாடப்பட்ட அவரது நாக்கையும் எடுத்து வந்த பொலிஸார் அவரை மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது