February

February

வன்னியில் காயமடைந்த 240 பொது மக்களுக்கு திருமலை ஆஸ்பத்திரியில் உடனடி சிகிச்சை!

ship-10022009.jpgவன்னியில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த 240 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல்மார்க்கமாக திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது. திருகோணமலை ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்துள்ளனர்! -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

lakshman_yapa_abeywardena.jpgமுல்லைத் தீவு மீதான மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரை அந்தப் பிரதேசத்திலுpருந்து 32 ஆயிரத்து 596 பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் ஆறாயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வருகின்றனர். மேலும் 30 அல்லது 40 ஆயிரம் பேர் மேலும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருகின்ற அனைவரையும் இரண்டு நாட்களில் மாதிரிக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தேடி வருகின்ற அப்பாவித் தமிழ் மக்களை இலக்குவைத்தே  புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர் இல்லாத போது வந்தவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் ஆதாரங்களுடன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று அறியக் கொடுத்தது. எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் அரசாங்கம் எந்த நாட்டினதும் எந்த அமைப்பினதும் எவ்வித நிதியுதவியும் இல்லாத நிலையில் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதவிகளை வழங்க வரும்பினால் அரசாங்கம் ஊடாக அதனை மேற்கொள்ளலாம்;.
புதுக்குடியிருப்பு வைத்திசாலையில் இருந்த 240 நோயாளர்களையும் உதவியாளர்களையும் யுத்த சூன்ய பகுதிக்கு அழைத்து வருமாறு செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் அந்த நோயாளர்களை மேற்குக்கு அழைத்துச் சென்றனர். செஞ்சிலுவை சங்கத்தினர் அவ்வாறு செய்துவிட்டார்கள் என விட்டுவிடாமல் அரசாங்கம் உடனடியாக அவர்களை கிரீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தது. இதற்காக நான்கு மணி நேர யுத்த நிறுத்துமும் கடைபிடிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஜனக பெரேராவின் கொலை தொடர்பான சந்தேக நபர் கைது

janaka.jpgஅநுராத புரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பொலிசார் சியாம்பலாகஸ்கட பகுதியில் வைத்து நேற்று அதிகாலை 5.15 மணியளவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மாங்குளத்தைச் சேர்ந்த அபுசாலி ஜாபிர் என்பவர் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரே அநுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி புதிய அலுவலகம் ஒன்றுக்கான திறப்பு விழா வைபங்கள் இடம்பெற்றிருந்த வேளையிலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் ஜனக பெரேரா மற்றும் அவரது மனைவி உட்பட 23பேர் கொல்லபட்டது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

புலிகளின் லெப்.கேணல் செந்தோழன் மரணம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப். கேணல் செந்தோழன் மரண மடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.  ஒளிப்படக் கலைப் போராளியும் பாடலாசிரியருமான லெப். கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன், தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறம்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அறுபதுக்கும் அதிகமான இசைப் பாடல்களைப் பாடியுள்ள இவர், தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்தியா தவறினால் ஐ.நா.வை நாடுவோம்’

srikantha.jpgஇலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.என்.ஸ்ரீகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இதனைத் தெரிவித்த அவர், இலங்கையில் சண்டையை நிறுத்த இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மத்திய அரசு இதனை மேற்கொள்ளத் தவறினால் ஐ.நா.மற்றும் வெளிநாடுகளை நாடி யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதைத் தவிர எமக்கு வேறு தெரிவு இல்லை என்றும் ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ.செய்திச் சேவை இதனைத் தெரிவித்தது.

வன்னி மருத்துவர்கள் வவுனியாவில் கடமை

nimal-siripala.jpgபுலிகளின் பிடியிலிருந்து வவுனியாவுக்குள் வரும் டாக்டர்கள், தாதியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுகள் அனைவரும் உடனடியாக சேவைக்கு உள்வாங்கப்படுவர்.

அவர்களது சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் அனைத்தும் தீர்க்கப்படுவதுடன் வவுனியா நலன்புரி நிலையங்களிலேயே சேவைக்கும் அமர்த்தப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

யாழ்.அவசரகால வைத்திய நிலையம் அமெரிக்க தூதரால் இன்று திறப்பு

யாழ். மாவட்டத்திற்கான அவசரகால வைத்தியசேவை நிலையமொன்று இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையம் யாழ்ப்பாணம் பண்ணை, சுகாதாரக் கிராமத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் திறந்து வைப்பார். இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், சர்வதேச மருத்துவ கழக வதிவிடப் பணிப்பாளர் டொனி வூட்யாட் ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.

இந்நிலையத்தை அமைப்பதற்கும், சகல வைத்திய உபகரணங்கள், வாகனங்களை ஐ.நா.திட்டப் பிரிவு, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச மருத்துவக் கழகம் ஆகியன வழங்கியுள்ளன.

இந்நிலைய திறப்பு விழாவுக்கு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமைதாங்குவார்.

தர்மரபுரம் தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நஷ்டஈடு! -அமைச்சர் றிஷாத் தகவல்

vishwamadu_bomb-01.jpgமுல்லைத் தீவு தர்மரபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கும் காயமடைந்தோருக்கும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்கவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் குடும்பஸ்தர் அல்லாத ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும் 18 வயதுக்குக் குறைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதமும் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோரின் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை  இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக காயமடைந்தோருக்கு முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. காயமடைந்தோரின் வைத்திய அறிக்கையின்படி இத்தொகை மேலும் அதிகரிக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

மக்களின் வாக்கு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்! – ஜனாதிபதி

mahinda20-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றதொன்றாக அமையுமெனவும் நாட்டில் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்றும் எந்த நிலையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்டி கெட்டம்பே பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து தெரிவித்ததாவது:

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கும் நோக்கில் அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக வரலாற்றுப் புகழ் மிக்க கண்டி மாநகரை நவீன நகராக்கவும் திட்டமிட்டுள்ளது.
தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி போன்று புனிதத் தலங்களைத் தாக்கிய சாபத்திற்குப் பிரபாகரன் நட்டஈடு செலுத்தும்; காலம் நெருங்கியுள்ளது. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புலிகள் இதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவர். இது நாட்டுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பெருவெற்றிபெறுவது உறுதி. இப்பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவு இதனை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது. இது எமது படையினர் நாட்டுக்கு வழங்கிய வெற்றிக்குப் பிரதி பலனாக மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் வெற்றியாகும். மத்திய மாகாண சபைத் தேர்தலில் நாம் தோல்வியுற்றால் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை என வெளியுலகுக்கு காட்ட பல சக்திகள் முயற்சிக்கின்றன. பல்வேறு சுழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் புலிகளைப் பலப்படுத்துவதே இதன் நோக்கமாகிறது. இத்தகைய தருணத்தில் மக்கள் வழங்கும் வாக்குகள் நாட்டினதும் எதிர்காலச் சந்ததியினரினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அதிமுக்கியமான வாக்குகளாகும் என்பதை சகலரும் உணர வேண்டும். துர்ப்பாக்கிய யுகமொன்றைத் தவிர்த்து புதிய நவீன யுகமொன்றை உருவாக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் எதிர்வரும் 14ம் திகதி நீங்கள் வழங்கும் தீர்ப்பு மிக முக்கியமானதொன்றாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மட்டு. நிவாரணம் வவுனியாவில் கையளிப்பு

aid-bati.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட ஏழுமில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரணப் பொருட்கள் நேற்று வவுனியா அரச களஞ்சியத்தில் வைத்து மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். திரு ஞானசம்பந்தரிடம் கையளிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் ஏ. ஜோர்ச்பிள்ளை உத்தியோகபூர்வமாக பொருட்களை கையளித்தார். ஏழு லொறிகளில் இந்தப் பொருட்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டன.