மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றதொன்றாக அமையுமெனவும் நாட்டில் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்றும் எந்த நிலையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்டி கெட்டம்பே பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து தெரிவித்ததாவது:
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கும் நோக்கில் அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக வரலாற்றுப் புகழ் மிக்க கண்டி மாநகரை நவீன நகராக்கவும் திட்டமிட்டுள்ளது.
தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி போன்று புனிதத் தலங்களைத் தாக்கிய சாபத்திற்குப் பிரபாகரன் நட்டஈடு செலுத்தும்; காலம் நெருங்கியுள்ளது. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புலிகள் இதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவர். இது நாட்டுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பெருவெற்றிபெறுவது உறுதி. இப்பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவு இதனை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது. இது எமது படையினர் நாட்டுக்கு வழங்கிய வெற்றிக்குப் பிரதி பலனாக மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் வெற்றியாகும். மத்திய மாகாண சபைத் தேர்தலில் நாம் தோல்வியுற்றால் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை என வெளியுலகுக்கு காட்ட பல சக்திகள் முயற்சிக்கின்றன. பல்வேறு சுழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருக்கும் புலிகளைப் பலப்படுத்துவதே இதன் நோக்கமாகிறது. இத்தகைய தருணத்தில் மக்கள் வழங்கும் வாக்குகள் நாட்டினதும் எதிர்காலச் சந்ததியினரினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அதிமுக்கியமான வாக்குகளாகும் என்பதை சகலரும் உணர வேண்டும். துர்ப்பாக்கிய யுகமொன்றைத் தவிர்த்து புதிய நவீன யுகமொன்றை உருவாக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் எதிர்வரும் 14ம் திகதி நீங்கள் வழங்கும் தீர்ப்பு மிக முக்கியமானதொன்றாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.