February

February

வன்னி மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா வருத்தம்

John_Holmes_UNஇலங்கையின் வடபகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமிடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று கவலை தெரிவித்திருக்கிறார்.

விசேட விஜயமாக புதன்கிழமை பின்னிரவு கொழும்பு வந்த சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று மதியம் இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தித்து வடக்கில் ஏற்பட்டுள்ள மனித நேய நெருக்கடிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சரும், ஐ. நா. பிரதி செயலாளர் நாயகமும் ஒன்றாக இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். ஊடவியலாளர்களிடம் கருத்துவெளியிட்ட சேர் ஹோம்ஸ், வடக்கில் மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா மிகவும் கவலையும், விசனமும் அடைந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து நடக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இக்கலந்துரையாடலின் போது முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களின் நிலைமை குறித்தும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களின் நிலைமை குறித்தும் விசேட கவனம் செலுத்தினோம். முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும் ஐ. நா. தொடர்ந்தும் மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கும். முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் கடல் மார்க்கமாக அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதையிட்டு நாம் பெரிதும் சந்தோஷப்படுகிறோம்.

அதேநேரம், வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவி, ஒத்துழை ப்புக்களை நல்குவதற்கு ஐ. நா. தயாராக விருக்கிறது. வட பகுதியை மீளக்கட்டி யெழுப்புவது என்பது இலேசான காரியமல்ல. அதனால் அரசாங்கத்துடன் இணைந்து அப்பகுதியை கட்டியெழுப்புவதற்கு ஐ. நா. திட்டமிட்டிருக்கிறது.

இதேவேளை முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்வதற்கு புலிகள் இயக்கத்தினர் இடமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறேன் என்றார்.

இச்சமயம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி செயலாளர் நாயகம், புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் நம்பிக்கை தரக்கூடியவையாக இல்லை. ஆயினும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இராணுவ நடவடிக்கை முடிவுற்றதும் இடம்பெயர்ந்து ள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் துரிதப்படுத்தப்படுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது என்றார்.

அமைச்சர் ரோஹித போகெல்லாகம

இச்செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் பாதிக்கப்படுவதை பெரிதும் குறைந்துள்ளோம். புலிகள் இயக்கத்தினர் சிறுவர்களை  பயன்படுத்துகின்றனர். சுமார் எழுபதினாயிரம் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாக தடுத்து வைத்துள்ளனர். அந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருவதைத் தடுத்து வருகின்றனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும் முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பாக ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன் என்றார்.

மக்கள் தொலைக்காட்சி மீது தடை விதிக்கப்படவில்லை – தகவல் திணைக்களத்தின் பணிப்பாளார்

makkaltv-1802.jpgதமிழகத் திலிருந்து செய்மதியூடாக உலகமெங்கும் ஒளிபரப்புச் செய்யப்படும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலங்கையில் தடை செய்யப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி சேவையிலும், அதன் இணையத் தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளார் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு எதிராக இலங்கையில் எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும், இவ்வாறான தகவல்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மக்கள் தொலைக்காட்சிக்கு பூரண தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதிவு செய்யப்பட்ட கேபிள் மற்றும் செய்மதி ஒளிபரப்பு நிறுவனங்கள் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சியை மீள் ஒளிபரப்புச் செய்வதில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டதாக கடந்த புதன் கிழமை ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சியை இலங்கையில் உள்ள பதிவு செய்யப்படாத செய்மதி அன்டனாக்களைப் பயன்படுத்துவோர் காணக்கூடியதாக அமைந்ததென அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கோருவது போர்நிறுத்தமே—இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் பதில்

nadesanltte.jpgஇலங்கை யின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவ தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள், தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும், சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன், இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக்கு விளங்கும் என்றும் கூறினார்.

”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன”, என்றார் நடேசன்.

ஐநா மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

வெள்ளை மாளிகை முன் இன்று இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

white-house.jpgஇலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி அமெரிக்கா வாழ் இலங்கைத் தமிழர்கள் இன்று  வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தவுள்ளனர். “இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அழைப்பு’ என்ற அமைப்பே இந்தப் பேரணியையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் இடம்பெறும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச தொண்டர் அமைப்புகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் அரசால் வெளியேற்றப்பட்ட பின்னர் தமிழர்கள் அங்கு திட்டமிட்ட ரீதியில் தாக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வன்னியில் தற்போது தமிழ் மக்கள் கடும் ஷெல் தாக்குதலையும் விமானத் தாக்குதலையும் துப்பாக்கிச் சூடுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதன் மூலம் தினமும் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. வன்னியில் பெரும் உணவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக அமெரிக்கத் தமிழர்களும் அவர்களது நண்பர்களும் இன்று வாஷிங்டனில் கூடுவார்களெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது வன்னிப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள், உணவு வாகனத் தொடரணிகள் , மருந்துப் பொருட்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு செல்வதை இலங்கை அரசு முற்றாக மறுத்துள்ளதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இன்டியன் பத்திரிகை  தெரிவித்துள்ளது.

61 சிவிலியன்கள் நேற்று வருகை

civilians-1002-09.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்லிருந்து பாதுகாப்பு தேடி 61 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு வருகை தந்த 61 சிவிலியன்களும் ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனவரி மாதம் முதல் இதுவரை 35,817 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு தேடி வருகை தந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயர் ஸ்தானிகர் ஒருவர் இருக்கும் போது விசேட பிரதிநிதி எதற்கு! – ஜீ. எல். பீரிஸ்

glperisss.jpgஎந்த வொரு நாட்டைச் சேர்ந்த எந்தப் பிரமுகரும் இங்கு வரலாம் அதற்குத் தடையில்லை. அவர்களை அரசாங்கம் வரவேற்கத் தயாராக இருக்கிறது. எனினும் அவர்களின் வருகையின் நோக்கம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் உயர்ஸ்தானிகர் ஒருவர் இருக்கும் போது அதே நாட்டைச் சேர்ந்த விசேட பிரதிநிதி ஒருவரின் அவசியம் இல்லை. அவ்வாறு ஒருவரை நியமிப்பதாயின் அது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட வேண்டும்.

எவருக்கும் இங்கு வந்து சகல விடயங்களையும் பார்வையிடலாம். இங்கு எதுவும் மூடி மறைக்கப்படவில்லை . அனைத்தும் பகிரங்கமாகவே உள்ளன. எனினும் நாட்டின் அபிமானத்துக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பபு ஏற்படும் வகையிலான விசேட பிரதிநிதி நியமனங்களை அங்கீகரிக்க முடியாது.

யுத்தம் ஒன்றுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வரவேற்கத் தக்க வகையில் உள்ளது. மேல் மகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 14 வீதமாக கடந்த வருடம் அதிகரித்துள்ளது. இது சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒத்ததாக உள்ளது. முழு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி 6.4 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏற்றுமதித் துறையை முன்னேற்றம் அடையச் செய்ய அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் தேசிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையிலேயே ஏற்றுமதி அபிவிருத்திக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் சிறந்த வெற்றியை அளித்து வருவதாக அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் வெற்றி இறுமாப்பில் ஜே.வி.பி.யை அழிக்க நினைக்கக் கூடாது – ரணவீர பத்திரன எம்.பி.

sri-lanka-parliment.jpgமாகாண சபைத் தேர்தல்களில் வெற்றியீட்டிக் கொண்ட இறுமாப்பில் ஜே.வி.பி.யை அழித்து விடலாமென அரசு எண்ணி விடக் கூடாது. ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பி.க்கும் அரசியல் வேறுபாடிருந்தாலும் நாட்டு மக்களின் நலன்கருதிய செயற்பாடுகள், நிலைப்பாடுகள் நன்மையளிப்பனவாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோமென ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை குறித்த ஐ.தே.க.வின் நிலைப்பாடுகள் வரவேற்கக் கூடியவை, ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பி.க்குமிடையே அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், நாட்டு மக்களின் நலன் கருதிய செயற்பாடுகள் நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெற்று வருவதைப் பயன்படுத்தி தேர்தல்களை நடத்தி அதில் அரசு வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியானது அரசுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றி என்பதை விட படையினரின் வெற்றிக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். இந்த வெற்றியை வைத்துக் கொண்டு ஜே.வி.பி.யை ஓரம்கட்டி விடலாம் அல்லது அழித்து விடலாம் என்று அரசு நினைத்து விடக் கூடாது.

தேர்தல்களில் வெற்றி தோல்வி என்பது பொதுவான விடயம். பிரதேச சபை மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை வரையறுத்து ஜே.வி.பி. பற்றிக் கணக்குப் போடுவது அரசுக்கு ஏற்புடையதல்ல அவ்வாறு செய்ய அரசுக்கு அருகதையும் இல்லை. யுத்தம், தேர்தல், மிஹின் எயார் போன்றவற்றுக்கு நிதி வீண்விரயம் செய்யப்படுவதால் எமது நாட்டின் நிதி நிலைவரம் மோசமடைந்து செல்கின்றது. நாட்டிலுள்ள சகல இனத்தவரும் ஒரே மக்கள் என்ற நிலை ஏற்படாதவரையில் எதனையும் சாதித்துவிட முடியாது

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு ஹோம்ஸ் இன்று விஜயம்

John_Holmes_UNஇலங் கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ் இன்று 20 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கென வவுனியாவில் அமைக்க ப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் 13 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர்.

வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்கு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெளிவுபடுத்தவிருக்கிறார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறினார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ. நா. பிரதி செயலாளர் நாயகம் நாளை சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

முல்லைத்தீவு மீட்கப்பட்ட பின்பு நன்றி தெரிவித்தது போன்று மேல்மாகாணத்தில் தோல்வி கண்ட பின்பே ஜனநாயகமென ரணில் கூறுவார் – விமல் வீரவன்ச

wimal.jpgஎதிர்க் கட்சித் தலைவர் கிளிநொச்சிக்கு பின் முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்பே நன்றி தெரிவித்தது போன்று மேல் மாகாண சபைத் தேர்தலிலும் தோல்வி கண்டதன் பின்பே மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்து எம்மை தோல்வியடையச் செய்துள்ளனரென கூறுவாரென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் மாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும், பேசுகையில்;

2005 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பிரிவினை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றைத் தோற்கடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்கே வாக்களித்தனர். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசு தேர்தலை நடத்தியது. வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் மக்கள் நம்பிக்கை வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். அந்த நம்பிக்கை வீண்போகாது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மீட்கப்பட்ட நிலையில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிகமான விசுவாசத்தை வைத்து மக்கள் வாக்களித்து கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளான ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் யுத்தத்தை தடுப்பதற்கு வெளிநாட்டினருடனும் அதன் முகவர்களுடனும் சதிசெய்து ஊழல் மோசடி என பொய்களைக் கூறிய போதிலும் மக்கள் அதனை ஏற்காது கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் தொடர்பில் எஸ்.பி.திஸாநாயக்க தோல்வியை ஏற்பதாகக் கூறும் அதேநேரம் ஐ.தே.க. செயலாளர் முறையற்ற விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகக் கூறுகின்றார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்வதென்று தெரியாதுள்ளார்.

கிளிநொச்சி மீட்கப்பட்ட போது எதனையும் தெரிவிக்காது தேசியக் கொடியினை கட்சி பேதமின்றி உயர்த்தி வெற்றியையும் கொண்டாடாது முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்னரே நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேல்மாகாணத்தில் தோல்விகண்ட பின்னரே மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்துள்ளனர் எனக் கூறுவார். எமது தேசிய சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டு 9 மாதம் ஆகின்ற நிலையில் மத்திய மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட்டு எமது உறுப்பினர் 5 ஆவது இடத்தினை அடைந்துள்ளார். இந்நிலையில், 45 வருட கட்சியான ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. மேல்மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி மேலும் முன்நோக்கிச் செல்லும் என்றார்

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் மூன்று கைதிகள் சுட்டுக்கொலை

gun.jpgநீர்கொ ழும்பு சிறைச்சாலை வளாகத்தி ற்குள் நேற்றுக்காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறைக்கைதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

நேற்றுக் காலை 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற விசாரணைகள் முடிந்து கைதிகள் சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது இரு கைதிகளை இலக்கு வைத்து மற் றொரு கைதி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒரு கைதி ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய கைதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கைதிகள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவரை உடனடியாக சிறைச்சாலைக் காவலர்கள் மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது அந்த கைதி தன்னிடமிருந்த துப்பாகியைப் பயன்படுத்தி சிறைக்காவலர்களையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அவரை சிறைக்காவலர்கள் சுட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு நிலைவிய போதிலும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மூவரே இந்தச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவர்களில் கைதியால் சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் சகோதரர்கள் என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், கைதியின் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் பூரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேர குறிப்பிட்டார்.