2009

2009

புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும்: இந்தியா கோரிக்கை – ஏகாந்தி

pranab1032009.jpgயுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பயன்படுத்தி, இலங்கை அரசு யுத்தத்தை இடைநிறுத்த வேண்டும் என்றும், யுத்தப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இது விடயமாக பி.பி.ஸி. தமிழோசை கருத்துத் தெரிவிக்கையில், மோதல்களை இடைநிறுத்த வேண்டும் என்று இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைப்பது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்டிருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகே ரூ.4 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் மேலும் ஒரு அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய மின் நிலையத்துக்கு (28) அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்.பிரணாப் பேசுகையில், ”இலங்கையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கிறது. போர் பிராந்தியத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன” பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பது குறித்தும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரணாப் முகர்ஜி, அது, அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இல்லை என்பதை உணர்த்திலும் கூட, இலங்கை அரசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, யுத்தத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் கருத்து என்றும் தெரிவித்துள்ளார். 

Pranab_Mukherjee”எனவே, போர் பிராந்தியத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக் கொண்டுவருவது குறித்த நடைமுறைகளை இலங்கை அரசு உடனடியாக வகுக்க வேண்டும்” என்று இந்தியா கோரிக்கை விடுப்பதாக பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஏற்பாட்டுக்கு, விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் நிறுத்தப்படும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, போர்ப் பகுதியில் உள்ள பொதுமக்களை, மறுவாழ்வுக்கு உகந்த பகுதிகளுக்குக் கொண்டுவர வேண்டும். அங்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச உதவி அமைப்புக்கள் பணியாற்றவும், மருத்துவ மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கும் தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

வட இலங்கையில், உள்நாட்டில் புலம் பெயர்ந்த மக்களுக்கு அவசர மருத்துவக் குழுக்களையும், மருந்துகளையும் அனுப்புவதற்கு இந்தியா ஏற்பாடு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”அடுத்த கட்டமாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அதன் அரசியல் சட்டத்தின் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்று பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த உண்மையான கோரிக்கைக்கு, இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரும் செவிமடுப்பார்கள் என்று நம்புவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விளக்கம்.

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொருத்தமான  நம்பகத்தன்மை மிக்க  நடைமுறை ஒன்றை வகுக்குமாறு இலங்கை அரசைக் கோரியுள்ள இந்தியா, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கத்தான் தயார் என்றும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்துள்ள சாதகமான பதில்களைத் தொடர்ந்தே இந்தியா இந்த  வேண்டுகோளை விடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்குமாறு சர்வதேச சமூகம் விடுத்துள்ள வேண்டுகோள்கள் குறித்து ஆராயத் தயார்  என்ற தனது விருப்பத்தை விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் பின்னணியில்  நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் நகர்வுகளை சர்வதேச முகவர் அமைப்புகள் கண்காணிப்பது உட்பட்ட விடயங்கள் அடங்கியதாக  அந்த அகதிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பான நம்பகமான, பொருத்தமான நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு இலங்கை அரசையும் ஏனைய தொடர்புபட்ட அனைவரையும் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.”  என விஷ்ணு பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்தின் புனிதத்தை இரு தரப்புகளும் பேணவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பெரும் எணணிக்கையான மக்களைக் கடல் மற்றும் தரை வழியாகக் கொண்டு வருவதற்குரிய நடைமுறைகளை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  அனைத்து  ஒத்தாசைகளையும் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகவீனமுற்றுள்ள  காயமடைந்துள்ள  மக்களுக்கான மருத்துவ உதவிப் பொருள்கள் அவர்களுக்கு விரைந்து கிட்டுவதற்கான வகையில் அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் இந்தியா கலந்துரையாடி வருகின்றது”  என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் நிலைப்பாடு

இது குறித்து இச்செய்தி எழுதப்படும் நேரம்வரை இலங்கை அரசு எவ்வித உத்தியோகபூர்வமான அறிவித்தல்களையும் விடுக்கவில்லை.

“யுத்தம் தீர்வல்ல’ டில்லி கொழும்புக்கு தெரிவிப்பு
 
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதலுக்கிடையில் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் தலைவிதி குறித்து கவலைதெரிவித்திருக்கும் இந்தியா, பொது மக்கள் இழப்புகளை தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கிறது.
அத்துடன் இலங்கையின் சகல பிரஜைகளினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான அரசியல் தீர்வை வட இலங்கைக்கு முன்வைக்கும் முழுமையான ஜனநாயக நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஈ.அகமட் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்ற சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பின் நேற்றுநாடு திரும்பிய அகமட் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.

தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அகமட் சந்தித்திருந்தார்.

பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல என்பதை இலங்கைக்கு நாம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது, பொது மக்களின் பாதுகாப்புத் தொடர்பான இந்தியாவின் கரிசனையையும் தெரியப்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் இழப்புகள் குறித்து இலங்கை ஜனாதிபதியும் கவலையை வெளிப்படுத்தியதாகவும் பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விபரத்தையும் தெரிவித்ததாகவும் அகமட் கூறியுள்ளார்.

யுத்த வலயத்திலிருந்து வரும் மக்களுக்கான அவசர மருந்து உதவி அனுப்பிவைக்கப்படும் என்று கூறிய அகமட், பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைகோ குழு கைது.

vaiko-black-flag.jpgஅதேநேரம், நேற்று (28) தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் திறன் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தூத்துக்குடி வந்தநேரத்தில்  இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட்ட 185 பேர் நேற்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விழா நடைபெற்ற ஏ.பி.சி. மகளிர் கல்லூரி விளையாட்டுத் திடலுக்கு ஊர்வலமாகப் புறப்பட்ட நேரத்திலே அவர்களை காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ்,  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழீழநேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானதாஸ், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராசன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு உட்பட 185-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டுசென்று அடைக்கப்பட்டனர்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார்

18-01menon.jpgஅதேநேரம், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார் என்ற செய்தியையும் இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து போர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து இந்தியாவின் கவலையை அவர் இலங்கை அரசுக்குத் தெரிவிப்பார் எனவும் தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தொடரை தொடர்ந்து ராஜபக்சவை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பதாக திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் தனது பயணத்தை பிரணாப் முகர்ஜி ரத்து செய்து விட்டார். இதையடுத்து மேனன் கொழும்பு சென்று ராஜபக்சவை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் மாதம் முதல் யாழ். குடாநாட்டுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கப்படும் – வடபிராந்திய மின்சார சபை தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgயாழ். மாவட்டத்துக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தடையின்றி இருபத்துநான்கு மணித்தியாலமும் மின்சாரம் வழங்கக்கூடியதாக இருக்குமென வடபிராந்திய மின்சார சபை அலுவலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் மின்பாவனை அதிகரித்தமையால் கடந்த பதினெட்டு மாதங்களாக மாலை ஆறு மணிமுதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு குடாநாடு முழுவதும் சுழற்சிமுறையில் அமுல் செய்யப்பட்டுவந்த மின்தடை முற்றாக நீங்குமென மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு முப்பத்தைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் சீன நிறுவனமான “நோத்பவர்’ ஆறு மின் பிறப்பாக்கிகளில் மூன்று மின் பிறப்பாக்கிமூலம் பன்னிரெண்டு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்து வழங்குவதால், மின்தடை நீங்க வழியேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது, குடாநாட்டுக்கு பதினைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதால், இரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குடாநாட்டுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமானதாகவுள்ளது. இவற்றுக்கு மேலாக சுன்னாகத்திலுள்ள மின்சார சபை மூன்று மெகாவாட் மின்சாரத்தையும், காங்கேசன்துறையில் மூன்று மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்துவருகின்றன

மேலும் 252 பேர் திருகோணமலை வந்தடைந்தனர்

red-cr.jpgதிருகோண மலைக்கு வந்த நோயாளர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின அனுசரணையுடன் நோயாளாகள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் உட்பட 252 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட மேலும் நூறு பேர் பேருந்துகள் மூலம் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு இதுவரை 746 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு ஆறாவது தொகுதி நோயாளர்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஓரளவு சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளர்களை மன்னார் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மேலும் சில மனிதப் புதைகுழிகள்

bangaladesh.jpgவங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 70 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது.சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.

வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் தீபிடிப்பு; உடைமைகள் நாசம்

poonthotham.jpgவவுனியா பூந்தோட்ட அகதிகள் முகாம் நேற்றுக் காலை தீக்கிரையானது. திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அகதிகள் தங்கியிருந்த கொட்டில்கள் முற்றாக எரிந்ததுடன் மக்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ முகாம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தீவிபத்து காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். தீ பரவுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

1990 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பூந்தோட்ட முகாமில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களே உள்ளனர். காலை 10.30 மணியளவில் இத்தீவிபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள், காயமடைதல் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் மூலம் 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்

ship.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்குள் வந்துள்ள மக்களுக்கென 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் 40 மெ. தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரம்,  இன்று 50 மெ. தொன் அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார்.

படையினரால் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடியதாக, குழந்தைகளுக்கான பால்மா சுமார் 1000 பக்கற்களை மேலதிகமாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறினார். இதனை மற்றொரு கப்பலில் அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள மக்களுக்கென 40 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அதேநேரம், குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகளையும் அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இன்று கின் ஓஷியன் என்ற கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் கப்பலில் சீனி, மா, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் அடங்குகின்றன.

கின் ஓஷியன் கப்பல் இன்று புறப்பட்டு முல்லைத்தீவு கடல் பரப்புக்கு செல்கிறது. அங்கிருந்து படகுகள் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். உலக உணவு திட்டத்தினரின் அத்தியாவசிய பொருட்களுடனும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் பொருட்களுடனுமே கப்பல் புறப்படுகிறதென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

சார்க் பல்கலை 2010 இல் ஆரம்பம்; உணவு வங்கியும் தயார் நிலையில் – செயலாளர் நாயகம் ஷர்மா

saarc_flagss.jpgதெற்காசிய பிராந்திய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சார்க் உணவு வங்கி தற்போது தயாரான நிலையில் உள்ளதாக “சார்க்” அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.

15வது சார்க் உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரகாரம், பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.

“சார்க்” வெளி விவகார அமைச்சர்களின் 31வது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கலாநிதி ஷர்மா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பு – சிலோன் கொன்ரினன்ரல் ஹோட்டலில் நேற்று முன்தினம் அமர்வு ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கலாநிதி ஷர்மா, உச்சி மாநாட்டின் தீர்மானங்களுக்கு அமைய “சார்க்” பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அடுத்த ஆண்டிலிருந்து (2010) ஆரம்பமாகுமென்று தெரிவித்தார். இது தொடர்பில் அரசுகளுக்கிடையிலான செயற்பாட்டுக் குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வேறு இனங்காணப்பட்ட விடயங்களிலும் முன்னேற்ற கரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கலாநிதி ஷர்மா தெரிவித்தார். சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு நேற்று (28) மாலை நிறைவடைந்தது.

“வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு’

srilanka-students.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் 20,000 மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; வவுனியா மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடைய கல்விச் செயல்பாட்டிற்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையான கல்வி செயற்பாடுகள் நடைபெறவில்லை.

எட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாற்று திட்டங்களை ஏற்படுத்தினோம். ஆனாலும், திருப்திகரமான கல்விச் சூழல் காணப்படவில்லை. நிரந்தர மாணவர்கள், இடம் பெயர்ந்து வந்துள்ள மாணவர்கள், மெனிக்பாமில் குடியேற்றப்பட்ட மாணவர்கள் என மூன்று தரத்தையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். நலன்புரிநிலையங்களில் ஏழாயிரம் மாணவர்களும் 373 ஆசிரியர்களும் உள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்கள் நலன்புரி நிலையங்களைவிட்டு வெளியேற முடியாது. அவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்குரிய வேதனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

வலயக்கல்விப்பணிப்பாளர், நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள சிறுவர்களுக்குரிய கல்வி நடவடிக்கையில் “யுனிசெப்’ கவனம் செலுத்தியுள்ளது. நலன்புரி நிலையத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு சிறுவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கல்வி செயற்பாட்டிற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வசதிகளையும் யுனிசெப் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.

election_.jpgமேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேர்தலுக்கான காலம் நீடித்துள்ளதன் காரணமாக இந்த திகதியை மாற்ற வேண்டும் என தாம் தேர்தல்கள் செயலகத்திடம் கோரியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திகதியில் தேர்தலினை நடாத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திகதியினை மாற்றுவது தொடர்பில் ஐ.தே.க பொதுச் செயலாளர் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியினை ஒருபோதும் மாற்ற முடியாது எனத் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் தேர்தலுக்கான திகதியினை அறிவிக்கும்போது தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் முறைமையொன்றினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்துகிறது தேசிய சுதந்திர முன்னணி

wimal.jpgவிடுதலைப் புலிகளை நீண்டகாலத்துக்கு ஓரம்கட்டிவைத்திராமல் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவது படையினருக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்திவிடுமெனவும் ஏனெனில் பொதுமக்கள் மத்தியில் பதுங்கியிருந்து புலிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியம் இருப்பதாகவும் தேசிய சுதந்திரமுன்னணித் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மோதல்களுக்கிடையில் பொதுமக்கள் சிக்கி விடுவார்கள் என்பதற்காக அவர்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை இராணுவம் நிறுத்திவிடக்கூடாது. யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் இந்த யுத்த சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாமல் செலுத்தப்படும் விலையென கருதப்படவேண்டும்.புலிகளை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுவே தருணமாகும். இப்போது அவர்கள் 50 சதுரகிலோ மீற்றர் பரப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொதுமக்களின் இறப்புகளை தவிர்ப்பதற்காக தியாகங்களை செய்யும் நிர்ப்பந்தத்திற்குள் படையினர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த யுத்தம் விரைவில் முடித்துவைக்கப்படவேண்டும் என்று ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு விமல்வீரவன்ச கூறியுள்ளார்.

நடவடிக்கைகளுக்கு காலம் எடுப்பதால் சர்வதேச சக்திகள் தலையிட்டு புலிகளுக்கு புதிய மூச்சை அளிக்க வழிசமைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசும் புலிகளும் தற்காலிக மோதல்நிறுத்தத்துக்கு செல்லவேண்டுமென ஐ.நா.வும் அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருப்பதை விமர்சித்திருக்கும் தேசிய சுதந்திர முன்னணி அத்தகைய நடவடிக்கை புலிகள் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

தமது பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளிவர புலிகள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அதனால் யுத்த நிறுத்தம் இந்தத் தருணத்தில் நோக்கத்தை நிறைவேற்றாது என்றும் வீரவன்ச கூறியுள்ளார். அகப்பட்டுள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாகவும் இந்தியா விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்திருக்கும் விமல்வீரவன்ச அந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கான தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

அந்தமாதிரியான பொறிமுறைக்கான தேவை ஏற்படவில்லை. ஒரேதடை புலிகள்தான். அவர்களை தாம் அழிக்கவேண்டும் என்று வீரவன்ச தெரிவித்துள்ளார்