முழு நாட்டினதும் ஜனாதிபதி என்ற வகையில் கிளிநொச்சி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது தமது பொறுப்பாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிளிநொச்சிக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுத்த பெருந்தொகைப் பணம் புலிகளுக்குத் தேவையான கட்டடங்களையும், பதுங்குக் குழிகளையும் நிர்மாணிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அங்கு இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் எதனையும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
ஒரு வழியால் நுழைந்து மற்றொரு வழியில் வெளியேறக் கூடிய பதுங்கு குழிகளைப் புலிகள் அமைத்திருக்கிறார்கள். நான் அவற்றை நேரில் பார்த்தேன்.
பாதை அபிவிருத்தியோ, மின்சார வசதியோ குடிதண்ணீர் விநியோகமோ, சனசமூக நிலையமோ எதுவுமே அமைக்கப்படவில்லை. எனவே, அந்தப் பகுதியில் அபிவிருத்தியை செய்ய வேண்டும். நான் ஒரு மாகாணத்தின் ஜனாதிபதி அல்ல; நாட்டின் ஜனாதிபதி ஆகவே அது என் கடமை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருடனான சந்திப்பொன்று நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு சங்கத்தின் கீதத்தைக் கொண்ட இறுவட்டு ஒன்றும் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
இன்று முக்கியமான ஒருநாள். இந்த நாட்டின் போக்குவரத்துத் துறையில் 5% அதிகமான பங்களிப்பைச் செய்கின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்று கூடியிருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 800 பேரை இங்குக் கொண்டு வந்திருந்தேன். கொழும்பில் பெரிய பெரிய ஆட்கள் இல்லாது போன போது நீங்கள் தான் கைகொடுக்கிறிர்கள். உங்கள் சேவையை மதித்துத்தான் நாம் இங்கு உங்களை அழைத்திருக்கின்றோம். கொழும்பில் ஒரு பாதுகாப்புப் படையினரைப் போன்று நீங்கள் செயற்படுகிறிர்கள். உங்களின் தொழில் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்பதை நிரூபித்திருகிறோம். அதனால்தான் உங்களையும் அழைத்துப் பேசி வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தோம். முன்னரைப் போல் தனி அறையில் தயாரிக்கப்படவில்லை. அன்று என்னைச் சந்தித்த முச்சகர வண்டி சாரதிகள், பெற்றோல் கேட்கவில்லை. நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்து நாட்டை மீட்குமாறு தான் கேட்டார்கள். அதனைச் செய்வதாக வாக்குறுதியளித்ததைப் போல், நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் இன்று சந்திக்கின்றேன்.
பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களைப் பயணமாக வைத்துக் கொண்டு சண்டை செய்கிறார்கள். இன்னும் சிறிய பகுதிதான் நாம் மீட்க வேண்டியுள்ளது. நாம் தமிழர்களுடன் சண்டையிடவில்லை. முஸ்லிம் மக்களுடனோ, அமைப்புகளுடனோ சண்டை செய்ய வில்லை. நாம் பயங்கரவாதிகளுடன் தான் போரிடுகிறோம். அந்த மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
ஆனால், புலிகளும், அவர்களது ஆதரவாளர்களும் உலகம் முழுவதும் சென்று, எமக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும், இராணுவன் தளபதியும் மக்களைக் கொல்வதாகக் கூறுகிறார்கள். உடனடியாக ஐ. நா. கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்கிறார்கள். உதவியை நிறுத்தச் சொல்கிறார்கள். இந்த நாட்டு மக்களைப் பட்டினி போடும் தேவை எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உண்டு. நாட்டை அபிவிருத்தி செய்ய கடன் கேட்டால், தமிழர்களைக் கொல்வதாகக் கூறுகிறார்கள். நாம் அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொல்லவும் இல்லை. மக்களைப் பாதுகாக்கவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வட பகுதியிலிருந்த சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் இன்று அகதி முகாம்களில் உள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்த வேண்டியது எனது கடமை.
யுத்தம் செய்தால், நாட்டில் அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்கள். நாம் யுத்தத்தை செய்து கொண்டு அபிவிருத்தியையும் முன்னெடுக்கின்றோம். அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையைப் 12 இலட்சமாக அதிகரித்துள்ளோம். இ. போ. ச. ஊழியர்களுக்கு முன்பு 6 மாதம் சம்பளம் வழங்கவில்லை. அதற்கெல்லாம் வாய் திறக்காமல் இருந்து விட்டு இப்போது போனஸ் தாமதம் என்றதும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். புத்தாண்டுக்கு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். யுத்தத்தை இரண்டொரு நாளைக்கு நிறுத்துங்கள் என்று படையினர் என்னிடம் கேட்டால், எப்படியிருக்கும். அவர்களுக்கு அம்மா, அப்பாவைப் பார்க்கவும், பெண்டாட்டி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க விடுமுறை எடுக்க முடியாது என்பதால் தான், நான் அவர்களிடத்துக்குச் சென்றேன். இனிமேல் கோரிக்கைகளை முன்வைக்கும் முன்னர் படையினரையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.