கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அல் அக்ஸா கல்லூரியையும் அல் அக்ஸா கணிஷ்ட வித்தியாலயத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமெனக் கோரி கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவர் அமைப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டி ருக்கும் அல்-அக்ஸா கல்லூரியையும் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அல்-அக்ஸா கனிஷ்ட பாடசாலையையும் ஒன்றாக இணைப்பதனால் ஏற்படும் அனுகூலங்களையும் அவை பிரிந்து செயல்படுவதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் அம்மாணவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
1700 மாணவர்களைக் கொண்ட அல்-அக்ஸா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.4 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறையே இல்ல விளையாட்டுப் போட்டி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்கு அப்பால் உள்ள கரடுமுரடான எழிலரங்கு மைதானத்தில் நடத்தப்படும். அத்தோடு கல்லூரியில் காலை தேகப் பயிற்சியையும் உடற்கல்வி பாடத்துக்கு தேவையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
ஒரே காணிக்குள் இயங்கும் இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இணைவதன் மூலம் 40 மீற்றர் நீளமும் 60 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு பயிற்சி மைதானத்தை உருவாக்க முடியும்.