புத்தளம் நகரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக கற்கை நிலைய பணிக்கென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் 20 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். கால்நடை வளத்துறை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த நிதியினை அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் தெரிவித்தார்.
இப்புனரமைப்புப் பணிக்கான நிதி புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கற்ற சமூகத்தை உருவாக்க எடுக்கப்படும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இத்திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நெறி புத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் பல்துறைகளில் முன்னேற்றம் காணுவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளதாக, பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் மேலும் கூறினார்