கடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களுள் 1658 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற தகவல் முற்றிலும் பிழையானதாகும். இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீகாந்தா எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
நான் சபையில் அமர்ந்திருக்காத நேரத்திலேயே ஸ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியே உள்ள தொலைக்காட்சி மூலம் இதனை அவதானித்த நான் உடனடியாக சபைக்குள் சென்று அதற்கான ஆதாரம் என்னவென அவரிடம் கோரினேன். தான் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றின் மூலம் அத்தகவலைப் பெற்றதாக அவர் கூறினார்.
புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களை ஊடகங்கள் எனக் கூற முடியாது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பாராளுமன்றத்துக்குள் இன்னும் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்ற விஷேட உரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
