இலங்கைக்கு ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை பிற்பகல் வவுனியா சென்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை சந்தித்ததுடன் அவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களையும் பார்வையிட்டுள்ளனர். பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் பேர்னாட் குச்னர் ஆகியோர் நேற்றுக் காலை கொழும்பு வந்தனர். அங்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்தபின் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.
பிற்பகல் 2 மணியளவில் விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் செட்டிகுளம் வந்த இவர்களை மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் டிக்ஷன் சரத் சந்திர தேல பண்டா, வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மாவட்ட அரச அதிபர் திருமதி. சாள்ஸ் மற்றும் சிரேஷ்ட இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.
இருநாட்டு அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹணவும் வந்திருந்தார். செட்டிகுளம் மெனிக் பாம் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் வன்னியிலிருந்து வருகைதந்த 75,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர்.
இவர்கள் தங்கியிருக்கும் சில முகாம்களுக்குச் சென்ற இரு நாட்டு அமைச்சர்களும் அங்குள்ள வசதிகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது அவர்கள் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களது நிலைமைகள் குறித்தும் வன்னியில் அவர்கள் பட்ட துன்ப துயரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதன்பின் செட்டிகுளத்தில் பிரான்ஸின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கும் சென்ற இருநாட்டு அமைச்சர்களும் அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டனர். சுமார் இரு மணிநேரம் அங்கு தங்கியிருந்த இவர்கள் மாலை நான்கு மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு திரும்பினர்.