யுத்தம் முடிவடைந்து வரும் நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, புஸ்பதான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சுதந்திரத்திற்கான மேடை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டமொன்றில் பேசும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
இப்போது யுத்தம் முடிவடைந்து வருகிறது இந்த நிலையில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு யோசனையொன்றை பரிந்துரை செய்வதற்கென அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றன.
எனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது எம்மாதிரியான தீர்வு என்பதை தெளிவுபடுத்தி அரசாங்கம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.
எமது நாட்டிலுள்ள பிரச்சினையை பிறர் வந்து தீர்க்க முற்படுவதற்கு முன்னர் நாம் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ள நிலையில் எதற்காக மூடி மறைக்க வேண்டும்?
எனவே தீர்வு யோசனையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதை செய்யாததால்தான் பிறர் வந்து கொண்டிருக்கின்றனர். என்றும் கூறியிருக்கிறார்.