சிறுபான்மை மக்களிற்காக குரல் கொடுக்க கிழக்கு மாகாண சபையால் மாத்திரமே முடியும்- கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் நலன்களிற்காக குரல்கொடுக்க முடியும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாணத்துறை, கிராமிய மின்சார, நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் உதுமாலெவ்வை தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு திருத்தங்கள் செய்யப்பட்டு சபையில் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டால் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இதனை ஆதரிப்போம்.

தற்போதுள்ள இச்சட்ட மூலத்தை அங்கீகரிப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகம் செய்வதற்கு நாங்கள் தயாரில்லை.

தலைவர் அஷ்ரப், தலைவர் அதாஉல்லா ஆகியோர்களின் தலைமைத்துவங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆளும் கட்சியில் இருந்தவாறே எங்களது நிலைப்பாடுகளைத் தைரியமாக அறிவித்துள்ளோம்.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பில் நான்கு கட்சிகள் உள்ளன. இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மாத்திரமே இச்சட்ட மூலங்களை தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பர்.

இதுபோலவே முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *