2009

2009

நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி சேவை புரியுங்கள்!

president_wp.jpgதேர்தல் வாக்குறுதிகளுக்காக மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. மக்கள் இன்று அவர்களது வயிற்றை மாத்திரம் கருத்திற்கொண்டு வாக்களிப்பதில்லை. அவர்கள் நாட்டையே முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் நாட்டையும் அதேபோன்று மக்களையும் முதலில் நினைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

எமது அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதோடு நாடு சரியானதொரு பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர்கள் நம்புவதையே தேர்தல்களில் அடுத்தடுத்து கிடைத்துவரும் வெற்றிகள் காட்டுகின்றன.

கொழும்பு மாவட்டம் சிங்களவர்கள்,  தமிழர்கள்,  முஸ்லிம்கள் என பல்வேறு இனங்கள் வாழும் ஒரு பிரதேசமாகும். எனவே மேல் மாகாணசபையில் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கொழும்புக் கண்ணோட்டத்தில் மாத்திரம் பார்க்காமல் பரந்துபட்ட
எல்லா மக்களினதும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவ்வாறானதொரு மனப்பாங்கே இந்த வெற்றியில் மிகப்பெரும் சந்தோசத்தைக் கொண்டுவந்து தரும்.

தேர்தல் வெற்றிகள் என்பது பொறுப்புணர்வைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெற்றியோடு ஒருவன் ஏற்றுக்கொள்வது பொறுப்புணர்வையாகும். எனவே இந்தப் புதிய மாகாணசபை முன்னைய சபைகளை விடவும் கூடுதல் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.

நான் ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால் நாங்கள் இந்தத் தேர்தலில் எந்தவாக்குறுதிகளையும் ஒரு விஞ்ஞாபனமாக முன்வைக்க வில்லை. இருந்தும் மேல் மாகாண மக்கள் முன்னெப்போதுமில்லாதவகையில் எமக்கு வாக்களித்துள்ளனர்.

நாட்டுக்கான தேவையோடு ஒப்பிடுகின்றபோது ஏனைய எல்லாத்தேவைகளும் இராண்டாம் பட்சமானவையே. நாட்டை முதன்மைப்படுத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என்றவகையில் உங்கள் மீது ஒரு மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் நாட்டையும் அதேபோன்று மக்களையும் முதலில் நினைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடை!

mexican.jpgபன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என்பவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சி. பி. ரட்நாயக்க் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பன்றி இறைச்சியும், பன்றி இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தகரத்திலடைக்கப்பட்ட உணவு வகைகளின் இறக்குமதியும் கடந்த திங்கட்கிழமை முதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து,  சீனா போன்ற நாடுகளிலிருந்து பன்றி இறைச்சியும்,  பன்றி இறைச்சியை அடிப்ப டையாகக் கொண்ட தகரத்தில் அமைக்கப்பட்ட உணவுகளும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பன்றி இறைச்சி மாத்திரம் மாதாந்தம்  சுமார் 1700 கிலோ கிராம் இறக்குமதி செய்யப்படுகின்றது.

பன்றிக் காய்ச்சலின் எதிரொலியாக இவற்றின் இறக்கு மதி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுங்கப் பிரிவினருக்கும், விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

நேபாள பிரதமர் பிரச்சண்டா ராஜிநாமா

prachanda.jpgநேபாளப் பிரதமர் பதவியில் இருந்து பிரச்சண்டா இன்று ராஜிநாமா செய்தார். நேபாளத்தின் தலைமை இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ருக்மாங்கத கடாவல் (வயது 61) நீக்கப்படுவதாக பிரச்சண்டா நேற்று அறிவித்தார். புதிய தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் குல்பகதூர் கட்கா நியமிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஆனால், தன்னைப் பதவி நீக்கம் செய்யப் பிரதமருக்கு அதிகாரம் கிடையாது என்று கூறிய கடாவல், பிரதமரின் முடிவுக்கு எதிராக என்ன செய்வது என்பது குறித்து துணைத்தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரச்சண்டாவின் இந்த முடிவை ஏற்க முடியாது என்று அறிவித்த கூட்டணிக் கட்சிகள், அரசுக்கு வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால், அரசு கவிழ்வதுடன், இராணுவப் புரட்சியும் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக பிரச்சண்டா அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்திய ஆயுதம் சென்றால் தடுப்போம் : வைகோ

 vaiko00001.jpg“இந்தி யாவில் இருந்து தமிழினத்தை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் கொண்டு சென்றால் அதனை மதிமுக தடுத்து நிறுத்தும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து வல்லம் அண்ணா சிலை அருகே வைகோ பேசுகையில்,

“ஜெயலலிதா பிரதமராவதற்கு முழுமையான தகுதி பெற்றவர். அந்தப் பதவி மீது அவர் ஆசைப்படாமல் இருக்கலாம். ஈரோட்டில் பேசிய ஜெயலலிதா, இலங்கையில் தனித் தமிழீழம் அமைக்கப் பாடுபடுவேன் என்றார். பின்னர் இந்திய இராணுவத்தை அனுப்பி தனித் தமிழீழத்தை நிர்மாணிப்பேன் என்றார். அவர் இப்படிப் பேசியதால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நான் கூறவில்லை. அதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் ஜெயலலிதா தான் பிரதமராகத் தகுதியானவர் என்று கூறினேன்.

உலகத் தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பிரகடனம் இருளின் மத்தியில் வெளிச்சம் ஏற்பட்டதைப்போல் உள்ளது. இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக செய்தி வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசுடன் இணைந்து காங்கிரசும் படுகொலையை நடத்துகிறது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

பிரபாகரனை அழிப்பதற்காக ஆயுதம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் கோவையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதை பெரியார் தி.கவினரும் மதிமுகவினரும் தான் செய்தனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இலங்கை படுகொலைத் துயரங்களைக் குறுந்தகடாக வெளியிடக்கூடாது என்றும், துண்டு பிரசுரங்களாக கொடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது என்ன ஹிட்லர் நாடா?

குறுந்தகடு, துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதைப் பொலிஸார் தடுக்கலாம். அதனால் அதனை வீடு, வீடாக காலை 5.00 மணிக்குள் கொடுங்கள். பொலிஸாரும் அந்த குறுந்தகடை வாங்கிப் போட்டு பார்க்கட்டும். அப்போதுதான் இலங்கைத் தமிழர்களின் நிலை புரியும். இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக இந்தியாவில் இருந்து ஆயுதம் கொண்டு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும். அதற்கு என் முழு ஆதரவு உண்டு” என அவர் தெரிவித்தார்.

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

nilakannikal.jpgநிலக் கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மக்களை தங்களது சொந்தக் கிராமங்களில் மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தும் நோக்கில் குறித்த குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். துரித கதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம்

au.jpgதமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.

காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழப்பு

gun00.jpgமட்டக்களப்பு காத்தான்குடியில் மாமாவையும் அவரது சகோதரரையும் சுட்டுக்கொன்ற மருமகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜாமி அத்துல் ஜமாலியா அரபு கல்லூரியின் அதிபரான சேகு முகமது மீரான் முதின் (வயது 65) அவரது சகோதரரான சேகு முகமது மஜ்ஜின் (வயது 60) மற்றும் துப்பாக்கி தாரியான ஷாஜஹான்(வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மனைவியைப் பிரிந்து வாழும் மருமகன் இன்று காலை மாமனாரின் வீட்டுக்கு மதிலேறி குதித்து, அத்துமீறி நுழைந்து இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் மனைவியும் பிள்ளையும் வீட்டின் பின்புறமாக ஓடித் தப்பிச்சென்றுள்ளனர்

மாணவி தினுஷிக்கா கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால்

thinu.jpgகடத்திச் செல்லப்பட்டு பின் கப்பம் கோரப்பட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா என்ற மாணவியின் கொலையைக் கண்டித்து  இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது

மேல் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்; பிரசன்ன ரணதுங்க முதலமைச்சர்

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடங்கலான மேல் மாகாண அமைச்சர்கள் இன்று (04) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். அலரி மாளிகையில் நடைபெறும் இந்த வைபவத்தில் அமைச்சர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி அமோக வெற்றியீட்டியது. மேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சராக நியமிக்க ஐ. ம. சு. முன்னணி தீர்மானித்துள்ளதோடு நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களி லிருந்து தலா ஒருவரும் கொழும்பு மாவட்டத்திலி ருந்து இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் புதியவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறின.

புலிகளின் மற்றுமொரு மண்அணை தகர்ப்பு – 4 1/2 சதுர கி.மீ. புலிகள் முடக்கம்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்துக்குற்பட்ட பகுதியில் புலிகளின் மேலும் ஒரு மண்அணை நேற்றுக் காலை படையினரால் தகர்க்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஏனைய சிவிலியன்களும் படையினரை நோக்கி வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக்கடல் கடனீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணையே நேற்றுக் காலை இராணுவத்தின் 53ஆம் படையணியினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நான்கரை சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு க்குள்ளேயே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. வலைஞர்மடத்தின் தெற்கிலும் தென்கிழக்கிலும் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்றது. இதில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. மோதல்களின்போது நாளுக்குநாள் சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்து வரும் அதேவேளை பெரும் எண்ணிக்கையான புலிகளும் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்தின் 53ஆம் 57ஆம் 58ஆம் மற்றும் மூன்றாம் படையணியினர் முல்லைத்தீவில் சிவிலியன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை 500 மீற்றர் நீளமான மண்அணையை தகர்த்ததன் மூலம் மேலும் பெருமளவிலான சிவிலியன்கள் வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.