மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம் உடன் பிறப்புக்கள் குறிப்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்கு வன்னி மண்ணில் மனிதப் பேரவலத்தில் அழிவின் விழிம்பில் வீழ்ந்து கிடப்பதை அறிவீர்கள். கடந்த ஐந்து மாதங்களுக்கிடையில் பெருமளவான எம்மின மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும், ஏவுகணைகள், எறிகணைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாகி மாண்டுவிட்டனர். இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகிக் குற்றுயிராய்க் கிடக்கின்றனர். பல இலட்சம் மக்கள் பலவந்தமாக இடம்பெயர வைக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்.
எம் தமிழ் பெண்கள் படுங்கொடுமைகளும் அவமானங்களும் சொல்லில் அடங்கா. இக்கொடிய நிலை தொடர்கின்றது. இது நாம் சொல்வது மட்டுமல்ல, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் வெளியீடுமாகும். உழைத்து வாழ்ந்த எம் மக்கள் இன்று உணவின்றி மருந்தின்றி ஓடாகிச் செத்து மடிகின்றனர். எஞ்சியோர் ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கையேந்தி நிற்கும் நிலை நீடிக்கிறது.
எங்கள் உழைப்பும் வரிப்பணமும் எம் தேசத்தையும், எம் மக்களையும் அரசியல் அடிமைகளாய் வைத்திடவும் அல்லது பூண்டோடு அழித்திடவும் இலங்கைச் சிங்கள அரசுக்கு இறுமாப்பைக் கொடுத்திருக்கிறது. சர்வதேச சமூகமே போரை நிறுத்தி விட்டுத் தமிழர் உயிர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். தமிழர் தம்மை ஆளும் அரசியல் உரிமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற பொழுதும் இலங்கை அரசு அதிகார ஆணவத்துடன் எம் தமிழ் இனத்தை அழித்து விட்டு, தமிழ் நிலத்தையெல்லாம் ஆக்கிரமித்துப் பௌத்த சிங்களக் கொடியைப் பறக்கவிடக் கங்கணங்கட்டி நிற்கிறது.
ஐந்து தசாப்தங்களுக்கு மேலான தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் பின்னரும் அரசியல் தீர்வுமின்றி உயிர் வாழும் உரிமையுமின்றி துடிதுடித்துச் சாகின்றார்கள். நாம் மட்டுமல்ல நாடே சீரழிக்கப்படுகின்றது. இத்தனை காலமும் எம் மக்கள் எத்தனை பெரிய அளப்பரிய தியாகங்களை செய்து விட்டார்கள். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா? இப்பயிரை கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?” எனச் செக்கிழுத்த சிதம்பரனார் பாரத விடுதலைக்காகச் சிறைக்குள் வீழ்ந்து கிடந்த போது பாரதியார் பாடிய திருவடிகள்தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு கொள்கைக்காக தமிழின விடுதலை என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாய் அலைந்து நிற்கின்றனர். அவர் தம் உறவுகள் அடிமைகளாய் சிறைக்கூடத்தினும் கொடிய அடக்குமுறைக் கூடாரங்களுள் வீழ்ந்து கிடக்கின்றனர். ஹிட்லர் காலத்து யூதச் சிறைக் கூடங்கள் போல இராணுவக் காவலும், காட்டிக் கொடுத்துப் பிழைப்போர் கூட்டங்களும் சூழ்ந்து நிற்கின்றனர்.
கையில் காசுமின்றி நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி உடுக்க மாற்றுத் துணியுமின்றிப் பட்டினியால் சாகும் எம் தமிழ் உறவுகளைக் காத்து நிற்கும் பொறுப்பு எமக்கு உண்டு. உங்கள் எதிர்கால வாழ்வுக்கும் விடிவுக்குமாக இராஜ தந்திர வழிகளில் சர்வதேச சமூகத்திடம் உதவி கேட்டு வருகிறோம்.
புலம்பெயர்ந்த எம் தமிழர் உதவிக் கரம் நீட்டி நிற்பதறிவோம்.
எம்மினத்தைக் கொன்று குவிப்பவர்களே உலகத்திடம் தமக்கு உதவி கேட்டு நிற்கின்றார்கள் எதற்காக? உங்கள் சொந்த இரத்த உறவுகளோ, நாங்களே தானும் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்குக்கூட அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு நாஸிசம் நாட்டில் பரவியுள்ளது.
எனவேதான் நாமெல்லாம் எம் மண்ணில் இராணுவமயச் சூழலில், திறந்த வெளி சிறைக் கைதிகளாய் இருந்தாலும், எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில் ஒரு பிடியையேனும் அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளுக்கு உதவி உயிர் கொடுப்போம். எம் தமிழ் மக்கள் விடிவுக்காக நாளும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்
